தண்ணீர்… தண்ணீர் …

Posted by அகத்தீ Labels:

 


தண்ணீர்… தண்ணீர் …

 

”காலை எட்டு மணி சுகர் லெவல் குறையும் நேரம்  பல் தேய்க்காமல்” டீ பிஸ்கெட் சாப்பிட்டாச்சு …

அப்படியே ஒரு மணி நேரம் கழித்து டிபன்  ஹோட்டலில் ஆர்டர் பண்ணி வரவழைத்து சாப்பிட்டாசு ..

காலைக்கடன் முடிக்காமல் பாட்டில் குடிநீரில் முகம் கழுவி புறப்பட்டாச்சு ..”

இப்படி ஒரு செய்தியை பதிவிட்டாலே ‘ என்னாச்சு இவருக்கு ?’ என கேள்வி எழும் .

 

எங்கள் அடுக்ககத்தில் சனிக்கிழமை காலை எல்லோரும் சந்தித்த பிரச்சனையை என் பாணியில் சொன்னேன் அவ்வளவுதான்.

 

எங்கள் அடுக்ககத்தில் முதல் நாள் வெள்ளிக்கிழமை இரவே தண்ணீர் பிரச்சனை … காலைக்குள் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை… காலையில் கடும் நெருக்கடி சொட்டுத்தண்ணி இல்லை .. நான்கு கேன் தண்ணீர் விலைக்கு வாங்கித்தான் சனிக்கிழமை பொழுது ஓடியது … தண்ணீர் வாங்காவிடில் மேலே விவரித்த நிலைதான  ஏற்பட்டிருக்கும்.

 

அந்த அடுக்ககத்தில் வீடு வாங்கும் போது 2017 ல் பின்னால் ஏரி , சுற்றி சோளவயல் காற்றும் நீரும் சுற்றுச்சூழலும் ஈர்த்தன . பொதுவாய் பெங்களூரில் பல இடங்களில் அப்போதே தண்ணீர் பஞ்சம் . பின்னால் உள்ள ஏரி பெங்களூரின் மிகப் பழமையான ஏரிகளில் ஒன்று . இங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்காது என நம்பினோம்.

 

இங்கு வந்த பிறகு ஒரு நாள் ஏரியிலிருந்து துர்நாற்றம் … மெல்ல விசாரித்த போது அருகிலுள்ள ஒரு மருந்து தொழிற்சாலை தன் ரசாயணக் கழிவுகளை ஏரிக்கு திருப்பிவிட்டுவிட்டது . அதன் பின் அது தொடர்கதை ஆனது .அதிகார வர்க்கம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு குறட்டை விட்டது . விளைவு ஏரிக்கரை ஓரம் செழிதோங்கி நின்ற மரங்கள் பட்டுப் போயின ; கருப்பு நிறமானது .பசுமை தொலைந்தது .மீன்கள் செத்து மடிந்தன . குப்பைக் கழிவுகளின் தேக்கமாக ஏரி சிதிலமடைந்தது.

 

 

ஏரியைத் தூய்மைப்படுத்த கோரிக்கை எழுந்தது .தன்னார்வ அமைப்புகள் வழக்கு தொடுத்தன .அவர்கள் வழியில் போராடின . அவர்களின் கையெழுத்து இயக்கங்களில் நான் கொஞ்சம் பங்கேற்றேன் . ஒருவழியாக நீதிமன்றம் தலையிட , அரசு மற்றும்  தனியார் கூட்டுறவுடன்  ஏரியை மீட்டு புனரமைத்து  படகுத்துறையுடன் பூங்காவாக மாற்றுவதாக அறிவித்தது .

 

அந்தப் பகுதி சோளவயல்கள் காணாமல் போயின , சுற்றி அடுக்குமாடி வீடுகள் முளைத்தன . எங்கள் அடுக்ககத்தில் 450 அடி யில் நான்கு ஆழ்துளைக் கிணறு உண்டு .இப்போது சுற்றி சுற்றி 800 அடி / ஆயிரம் அடி பலர் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டிவிட்டனர்

 .  ஆழ்துளாய் கிணறுகளை இருபதடிக்கு ஒன்று போட்டால் பூமி தாங்குமா ? இதனைக் கட்டுப்படுத்த சட்ட வழிகாட்டல் உண்டா ? கண்காணிப்பு உண்டா ? டேங்கரில் தண்ணீர் விற்கும் கம்பெனிகள் நான்கு வந்தன 1500 அடி ஆழ்குழாய் போட்டு உறிஞ்சினர் . கட்டுப்படுத்துவது யார் ? எங்கள் அடுக்கக தண்ணீர் மட்டம் குறைய ஆரம்பித்தது .

 

ஏரி மீட்பு பணி துவங்கி விட்டது .மகிழ்ச்சி . ரசாயண கழிவு கலந்த நீர் வடிக்கப்பட்டுவிட்டது … பணிகள் துவங்கி விட்டன . ஏரி இப்போது மைதானமாக காட்சி அளிக்கிறது .. பணி முடிய ஓராண்டாகும் என்கின்றனர் ..மேலும் நீளலாம்…ஏரியை மீட்டால் போதும்….

 

ஏரி தண்ணீர் வற்றியதும் எங்கள் அடுக்கக குழாய் கண்ணீர் சிந்தத் துவங்கிவிட்டன . சுமார் நூறு குடித்தனங்களுக்கு டேங்கரில் தண்ணீர் எனில் என்ன ஆகும் ?  இன்னும் நூறு வீடுகள் காலியாக உள்ளன .அவற்றிலும் குடிவந்தால் என்ன ஆகும் ?நீர் நிபுணர்கள் ஆலோசனை ஆய்வு என தொடங்கி உள்ளனர் .. தற்காலிகமாக டேங்கரே கதி . மெயிண்டனன்ஸ் சார்ஜ் அதிகரிக்கலாம் . இது வளர்ச்சியின் சவால்தான் . ஆனால் எச்சரிக்கை .

 

நாங்கள் இங்கு வந்ததுதான் 2017 ஆனால் 2010 லேயே இங்கு பணி துவங்கி விட்டது . ஆழ்துளை கிணறுகள் கட்டுமானம் தொடங்கி இன்றுவரை தண்ணீர் தந்துள்ளன. இப்போது அவை சோர்ந்துவிட்டதோ !

 

இது ஓர் அடுக்ககப் பிரச்சனை மட்டுமல்ல ; போதிய திட்டமிடல் இன்றி வீங்கிப் பெருக்கும் புறநகர்கள் எல்லாம் சந்திக்கும் சவால் . வெள்ளமும் வறட்சியும் இயற்கையானவை .அதில் திட்டமிடலின்றி சிக்கிக் கொள்ளும் வீக்கம் வளர்ச்சியா ? அரசுகள் யோசித்து முறைப்படுத்த வேண்டாமா ?

 

பெங்களூர் இப்போதே போக்குவரத்து நெரிசல் மேலும் பலபகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு டேங்கர் லாரியே கதி  மழை வந்தால் திணறல் … வருங்காலம் மிகவும் சவாலாக இருக்கும் என எச்சரிக்கின்றனர் வல்லுநர்கள் . என்ன செய்யப் போகிறார்கள் ஆட்சியாளர்கள் ?

 

சுபொஅ.

02/08/25.


0 comments :

Post a Comment