தூத்துக்குடியின் வலியும் காயங்களும் …..

Posted by அகத்தீ Labels:

 

 

 


தூத்துக்குடியின் வலியும் காயங்களும்  …..

 

[ முஹம்மது யூசுப் தன் புதிய நாவல் “ நுழைவுவாயிலை” எப்போதோ எனக்கு அனுப்பி விட்டார். ஆயினும் காய்ச்சல் ,சளி , உறவினர் இல்லத் திருமண அலைச்சல் என நாட்கள் நகர வாசிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை .  வெள்ளிக் கிழமைதான் வாசிக்கத் துவங்கினேன் .சனிக் கிழமை வாசித்து முடித்துவிட்டேன். இரண்டு நாட்கள் மனதில் அசைபோட்டேன். இன்று எழுதுகிறேன் .]

 

 “எதுலயும் எமோஷன்ஸ் தேடக்கூடாது ,அதுக்கு பதிலா ரீசன்ஸ் தேடணும் .இந்த அகமனச் சிக்கல் கதை எழுதுற எல்லாரும் ரீடரை அழவச்சி நல்ல புக்குன்னு பேர் வாங்கிரனும்னு  பிளான் பண்ணி எமோசன்ஸை எழுத்தில பரப்புறாங்க அதுல போய் நம்ம ஆளுங்களும் விழுந்திடுறாங்க எதுலயும் ரீசன்ஸ்தான் தேடணும் ..”

 

இப்படி ஷெரிப் பாய் இந்நாவலில் இறுதிப் பகுதியில் பேசுகிறார் .பார்வையை அம்மை நோயால் இழந்தவர் நாவல் நெடுக புதிய பார்வையை வழங்கிக்கொண்டே இருக்கிறார்.

 

அவரே மீண்டும் சொல்கிறார் ,” ஆனா அவன் பேசுறது எழுதறது எல்லாம் பார்த்தா அப்படித் தெரியல . தத்துவம் ,பண்பாடு ,தொன்மம் ,கலாச்சாரம் ,வரலாறு ,அரசியல் அப்படி படிக்கிறவனாகத்தான் தெரிகிறான் படிக்கட்டும் படிக்கட்டும் தொந்தரவு பண்ணாத…”

 

இவற்றை வாசித்த போது இவை எல்லாமே முஹம்மது யூசுப்பின் சுயவாக்குமூலமாகத் தெரிவது எனக்கு மட்டும்தானா ?

 

“ எழுதட்டும், எழுதட்டும்! நாமும் வாசித்துப் பழகுவோம்!” என எனக்கும் சொல்லத் தோன்றுகிறது .

 

ஏனெனின் அவர் எழுத்தின் செல்நெறியும் அதுவாகத்தானே இருக்கிறது . ஆம் பரந்த வாசிப்பும் கனமான தகவல்களுமே இவர் எழுத்து நெடுக பலமாக உள்ளன . முந்தைய நாவல்களின் மீதான விமர்சனங்களை உள்வாங்கி இந்நாவலில் ஓரளவு தகவல் திணிப்பைக் குறைத்துள்ளார் ஆயினும் சமூகத்தை இயக்கும் வலுத்த கைகளின் வரலாற்றுத் தடத்தை வணிகத் தடத்தை இந்நூலிலும்  சுட்டியுள்ளார் .

 

 “இங்க பால் காய்ப்பு வீடு ,எங்க இருக்கு” என்ற கேள்வியோடு தொடங்கிய நாவல் ; “இங்க ஒரு துஷ்டி வீடு .சிரில்ன்னு ஒரு பையன் இறந்திட்டான்.வீடு எங்க இருக்குன்னு சொல்ல முடியுமா “ என முடிகிறது . அதற்குள் எவ்வளவு செய்திகள்! அப்பப்பா …

 

லிஸ்டன் , செல்வம் ,மார்க்கஸ் ,கருத்தபிள்ளை ,ஷெரிப்பாய்  இவர்களின் குடும்ப உறவுகள் ,வர்த்தக உறவுகள் மதம் ,சாதி ,பண்பாடு ,சாதி மதச் சண்டைகள் , அந்த சண்டைகளின் மூலம் விளைவுகள் என பெரும் பரப்புக்குள் நாவல் நீந்திக்கொண்டே இருக்கிறது . தூத்துக்குடியின் உள்ளும் புறமும் ஸ்கேன் செய்யப்பட்டு காட்சிப் படுத்தப் படுகிறது .

 

தூத்துக்குடியின் வளர்ச்சியையும் அதன் பின்னே உள்ள உந்து சக்திகளையும் தனக்கே உரிய கோணத்தில் படம்பிடிக்கிறார் . செவத்தையா புரமா ? சிவத்தையா புரமா ? வெறும் கேள்வி அல்ல .மதவெறுப்பின் விதை . கன்னியாகுமரியா கன்னிமேரி மாவட்டமா என மண்டைக்காட்டு கலவரத்துக்கு முன்பு நடந்த சர்ச்சையை நினைவு படுத்துகிறது.

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கிளைமாக்ஸாக நாவலில் கையாளப் பட்டிருந்தாலும் அதன் வேரைத் தேடிய பயணமாகத்தான் நாவல் அமைந்துள்ளது . லிஸ்டன் தன் தந்தை மாரிதாஸை துப்பாக்கிச் சூட்டிலும் மகன் சிரிலை மதவெறியர் கொடுங்கரத்திலும் பலிகொடுத்துவிட்டு நிற்கும் கோரம் தனிமனித தவறுகளால் நிகழவில்லை .கொலைக்கரங்கள் எது என்பதுதான் முஹம்மது யூசுப்பின் தேடலாக நுழைவாயிலில் உள்ளது எனில் மிகை அல்ல .

 

செல்வம் ,தங்கபாண்டி ,கருத்தபிள்ளை , மதவெறியரோ சாதிவெறியரோ அல்ல ஆயின் சமூகச் சூழல் அவர்களுக்குள்ளும் நிகழ்த்தும் ஆட்டமும் மாற்றமும் இயல்பாக பதிவாகியுள்ளன .மாசணமும்கூட சூழ்நிலையின் கைதிதான். மதவெறி எப்படி தனிமனித கோபதாபங்களை சாதுரியமாய் காய்நகர்த்தி கொலைகளத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது என்பதை நாவல் தன் போக்கில் பதிவு செய்துள்ளது .

 

பொதுவாய் இந்நாவலில் பெண் கதாபாத்திரங்கள் வெறும் குடும்பப் பெண்களாகவே வந்து போவதாய் படுகிறது .மாசணத்தின் மனைவி பகவதி ,செல்வம் வீட்டு பெண்கள் சற்று லேசான ஆறுதல் . மதவெறியும் சாதிவெறியும் வர்த்தக லாபவேட்டைக்காகாகத் தூண்டப்படும் ஓர் நகரத்தில் வலுவான பெண்களை ஏன் சித்தரிக்கவில்லை என்பது என் கேள்வி . இந்நாவலின் களமான இந்து கிறுத்துவ நாடார் மற்றும் மீனவப் பெண்கள் மிகவும் துணிச்சல் மிக்கவர்களாயிற்றே .குமரிமாவட்ட அனுபவத்தோடு இதனைச் சொல்கிறேன்.

 

இந்நாவல் துறைமுக நகர் சார்ந்து இயங்குவதால் அதன் வர்த்தகம் , அதன் நெளிவு சுழிவு ,ஆதிக்கம் ,கழுத்தறுப்பு ,போட்டி எல்லாம் கதாபாத்திரங்கள் வழி நம்மிடம் சொல்லப்பட்டுவிடுகிறது . இங்கே நம்பிக்கையின் இடம் மிக முக்கியமாகிவிடுகிறது .

 

“லிஸ்டா! எங்க இருக்க ,கடைக்கு வா ,என் தங்கச்சி மவன் டிரக் வித்திட்டு திரியுறான்னு உங்க வீட்ல சொன்னியாமே ,விட்டா நார்கோடிக்கு போன் போட்டு சொல்லுவ போல இருக்கு ,விசுவாசமா இருப்பேன்னு வேலைக்கு சேர்த்தா என் குடும்பத்து மேலேயே பீய அள்ளி வீசி இருக்க.கடைக்கு வா மொதல்ல” என்றது மார்க்கஸ் மொதலாளியின் காட்டமான குரல் .

 

முதலாளிகள் மீதான விசுவாசம் ,மதத்தின் மீதான விசுவாசம் ,சாதி விசுவாசம் எல்லாம் மக்களை என்னபாடு படுத்துகிறது ; லாபவெறி இவற்றில் நீந்திக் களிக்கிறது என்பதை தூத்துக்குடி வாழ்வோடு பேசும் நாவலே இது .இந்தியா முழுவதும் நடந்த சாதி ,மத கலவரங்களின் உள் நுழைந்து தேடினால் அங்கே வர்த்தக லாபவெறியும் தொழில் போட்டியும் கூடாரமடித்து உட்கார்ந்திருக்கும் . தூத்துக்குடியும் விலக்கு அல்ல .நாவலும் அதைத்தான் பேசுகிறது .

 

உள்ளமாரி , மாமாரி என்கிற உள்கதையோடு சிப்பியையையும் அதனுள் முத்துவையும் கண்டெடுத்த தொன்மக்கதையை ஷெரிப் பாய் வழி நமக்கு கடத்தி இருக்கிறார் முஹம்மது யூசுப் .அருமை .

 

காதலும் காமமும் ஊடாடும் நெய்தல் ,மருதம் நிலம் சார்ந்த புனைவில் அதற்குரிய இடம் எங்கே முஹம்மது யூசுப் எனக் கேட்டுவைப்போம்.

 

ஈழத்தமிழ்ர் பிரச்சனை , எம்ஜிஆர் அரசியல் , தூத்துக்குடிக்கும் இலங்கைக்குமான தொடர்பு எல்லாவற்றையும் யூசுப் அவருக்கே உரித்தான கோணத்தில் கதையோடு பிசைந்துள்ளார் . கிறுத்துவர்களின் பங்களிப்பு குறித்து பேசும் போது சந்தேகபடுவது பிழையல்ல ; எந்த அந்நியருக்கும் உள் நோக்கம் நிச்சயம் இருக்கும் . அதேவேளை தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிறுத்துவர்களின் பங்களிப்புக்கு உரிய இடம் கொடுக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து .முன்பும் இவர் நாவல் விமர்சனத்தின் போதும் இதைச் சுட்டியுள்ளேன்.

 

கப்பலில் ஆர்டர் கிடைக்க மதுப்புட்டிகளும் லஞ்சமும் மட்டும் அல்ல ; சில வரலாற்றுத் தகவல்களும் கூட தேவைப்படுகிறது என்பதைச் சொல்லும் அத்தியாயம் ; வெள்ளைக்காரரோ எவரோ ஒவ்வொருவருக்கும் அவரவரின் மூதாதையர்களைத் தேடும் வரலாற்று ஆர்வத்தை சுட்டிச் செல்கிறது .

 

நெய்தலும் மருதமும் காலப்போக்கில் வளர்சியினூடே எப்படி திரிந்து சுற்றுச்சூழல் சவாலாய் மாறுகிறது என்பது ஊடும்பாவுமான செய்தி . இங்கே சுற்றுசூழல் மாசுமடுதல் இயற்கையோடு நில்லாமல் மனித மனங்களிலும் நிகழுவதை முஹம்மது யூசுப் சொல்லுகிறார். தூத்துகுடியின் புவியியல் ,பொருளாதாரம் , திமுக ,அதிமுக , பிஜேபி , மீனவர் துயரம் அவர்களின் தேவை எல்லாம் நாவலில் பின்னிக் கிடக்கிறது .இங்கு யூசுப் பேசும் அரசியலில் முழுமையாய் உடன் படாதவர்களும்கூட ஓர் உண்மையை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

 

“ஸ்டெர்லைட்டு சேட்டு கம்பேனி , உப்பு சேட்டு கம்பேனி , பருப்பு சேட்டு கம்பேனி , அவுரி சேட்டு கம்பேனி .சீ ஃபுட் எக்ஸ்போர்டும் சேட்டுதான், ஹார்பர் சேட்டுதான் , ஊரை சுற்றி நிக்கிற விண்ட் மில் காத்தாடி கம்பேனியும் சேட்டுதான் ,ஊரே ஜெகஜோதியாய் அமர்க்களமாய் இருக்கு” என்று சிரித்தான் சிரில் .

 

இந்த சிரில்தான் மதவெறியர் ஏவிய கொலைக்கரத்தில் பலியானான் . விபத்து என மகுடம் சூட்டப்பட்டது .சூத்திரக் கயிறு குஜராத்தில் . இவன் தாத்தா மாரிதாஸ் கொலையின் சூத்திரக் கயிறும் குஜராத்துதான்.

 

இது முக்கியமான செய்திதான் .ஆயின் இங்கு வடவர் எதிர்ப்பு என்பது வெறுமே கூலிக்காரனை எதிர்ப்பதாகவும் தெலுங்கர் எதிர்ப்பாகவும் மட்டுமே மடை மாற்றம் செய்யப்படுவது  குறித்த விழிப்புணர்வும் தேவை .

 

 “இதற்கு முன் நான்கு நாவல்களை[ மணல் பூத்த காடு , கடற்காகம் , தட்டப்பாறை , அரம்பை] எழுதி முடித்ததும் ‘அப்பாடா’ எதையோ அடைந்துவிட்டோம் என்ற சந்தோஷம் மனதில் தோன்றும் . இது பிறந்த ஊரைப் பற்றிய அலசும் கதை என்பதால் மிகவும் இறுக்கமாக அமர்ந்திருக்கிறேன். எனக்கு என்ன சொல்லவென்று தெரியவில்லை.” என முஹம்மது யூசுப் முன்னுரையில் சொல்லியிருக்கிறார் .  எந்தப் பக்கம் தொட்டாலும் தீப்பிடிக்கும் உள்ளூர் சூழல் இவரை பல இடங்களில் அடக்கி வாசிக்க வைத்திருக்கிறதோ என எனக்கும் பட்டது .ஆயினும் அந்த பொறுப்புணர்ச்சியும் தேவைதானே !

 

நுழைவாயிலில் நுழைந்து தூத்துகுடியின் சமூக அரசியல் தனிமனித வாழ்வை தரிசிப்பீர் !

 

மும்பையில் இருக்கும் “ GATEWAY OF INDIA” போல் தூத்துக்குடியிலும் “ GATEWAY OF TAMILNADU” என ஓர் கடலோர நுழைவு வளையம் தேவை என முஹம்மது யூசுப் முன்மொழிவதை நாம் வழிமொழிவோம்.

 

நாவலில் ஒரு இடத்தில் ஷெரிப்பாய்  மூலம் முஹமதுயூசுப் சொல்வதோடு நூல் அறிமுகத்தை நிறைவு செய்வோம்,

 

 “நபி பிறந்த வீடு சவூதி அரேபியால மெக்கால இன்னமும் இருக்கு. அதை லைப்ரரியா மாத்திட்டாங்க. உலகத்தில வேற எந்த சமயம் சார்ந்த தலைவருக்கும் மொதல்ல அவரு பிறந்த வீடுன்னு ஒன்னு கண்டுபிடிக்கப்பட்டிருக்கான்னு தெரியல. அப்படியே வீடு இருந்தாலும் அது லைப்ரரியா மாறி இருக்க வாய்ப்பே இல்ல. இதுல இருந்து என்ன தெரியுது? முஸ்லீம்ஸ் படிக்கனும், வாசிக்கனும் புத்தகம் சார்ந்து இயங்கனும் இஸ்லாமிய வாழ்வியல் சார்ந்த எல்லாத்தையும் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம் நாட்டாரியல் வழக்காருன்னு ஒன்னு விடாம பதிவு செய்யணும். பழமைங்கிறது இந்த நிலத்துல முன்னாடி இருந்த உன்னோட அடையாளம் அதை மறந்திராத.”

 

நுழைவாயில்  [நாவல்] , ஆசிரியர் : முஹம்மது யூசுப் ,

வெளியீடு :யாவரும் பப்ளிஷர்ஸ், தொடர்புக்கு :9042461472 /9841643380

editor@yaavarum.com , www.yaavarum.com பக்கங்கள் :460 . விலை : ரூ.560/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/2/2022.

 

 

 

 


தறுதலைத்தனம் என்பது உணர் !

Posted by அகத்தீ Labels:

 


தறுதலைத்தனம் என்பது உணர் !

 

 

நீ

அணிந்திருக்கும் உடையில்

நீ

உண்ணும் உணவில்

நீ

குடியிருக்கும் வீட்டில்

நீ

வாழும் வாழ்க்கையில்

நீ

புழங்கும் பண்ட பாத்திரங்களில்

நீ

அனுபவிக்கும் நவீன வசதிகளில்

 

உலகத் தொழிலாளியின்

வியர்வை வாசத்தை

உன்னால் உணரமுடியவில்லையா ?

 

சரி ! உன் மூளை வளர்ச்சி அவ்வளவுதான்

ஆனாலும் புனித ஆத்மா என

உன்னைச் சொல்லிக் கொள்பவனே !

 

பார்ப்பனிய வியர்வையிலே

மட்டுமே உருவான ஒன்றையேனும்

உன்னால் சுட்ட முடியுமா உன்னால்…

 

தலித்தோ சூத்திரரோ

கறுப்பரோ வெள்ளையரோ

இந்துவோ முஸ்லீமோ கிறுத்துவரோ

தமிழரோ இந்திக்காரரோ இங்கிலீஷ்காரரோ

அவரோ இவரோ எவரோ

ஒவ்வொருவர் வியர்வையும்

ஒவ்வொருவர் ரத்தமும்

ஒவ்வொருவர் அறிவும்

இல்லாமல் உன் வாழ்வில்

ஒரு நொடிகூட நகராது !

 

ஒவ்வொரு பொருளிலும்

ஒவ்வொரு செயலிலும்

கூட்டு உழைப்புதான்

சாதி மத இன கலப்புத்தான் …

இந்த பொதுமையை உணராத

தலைக்கனம் பிடித்த உன் தனித்துவம்

தறுதலைத்தனம் என்பது உணர் !

 

சுபொஅ.

23/2/2023.

 

 

 


காதல் … காதல் [ 2]

Posted by அகத்தீ Labels:

 

காதல் … காதல் [ 2]
காதல் சார்ந்து நானும் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். நான் எழுதிய“ காதலென்னும் உயிர்விசை” எனும் சிறு வெளியீட்டை . 2015 ல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வெளியிட்டுள்ளது . இங்கே சில பழையன மீள் இணைப்பு . ஆர்வம் உள்ளோர் உள் நுழைக !

முன்னிலும் மேம்பட்ட காதலும்….

Posted by அகத்தீ Labels:

 

காதல்… காதல் ..[3]

முன்னிலும் மேம்பட்ட காதலும்….

 


கிராமத்தைத் தாண்டாத வாழ்வு . வேளாண்மை, நெசவு,கைதொழில் வணிகம் போன்ற சில துறைகளைச் சுற்றியே உழைப்பும் பிழைப்பும். அதிகபட்சமாகப் போனால் முப்பது நாற்பது கி.மீ சுற்றளவுக்குள் கொள்வன ,கொடுப்பன ,உறவு, நட்பு, பிழைப்பு எல்லாம் . அன்றைய வாழ்வும் காதலும் பண்பாடும் அந்த வட்டத்துக்குள் மட்டுமே செக்குமாடாய் சுற்றிச் சுற்றி வந்தன .

 

ஆயின் இன்று வேலை நிரந்தரமில்லை ,வாழ்விடம் நிரந்தரமில்லை , ஓடிக்கொண்டே இருக்கிறோம் . மாவட்டம் மாவட்டமாய் – மாநிலம் மாநிலமாய் – நாடு நாடாய் ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் உணவு உடை பழக்க வழக்கம் எல்லாம் அசுர வேகத்தில் மாறிக் கொண்டே இருக்கின்றன. .தேவை ,விருப்பம் ,ஆசை ,கனவு ,இலட்சியம் எல்லாம் விரிந்துகொண்டே போகின்றன . இன்றைய வாழ்வும் காதலும் நேற்றையப் போல அப்படியே தொடருமோ ?

 

 

வாழ்நிலை நம் சிந்தனையில் எதிரொலிக்காதா ? நம் வாழ்வும் காதலும் அதற்கொப்ப தன்னை தகவமைத்துக் கொள்ளாதா ? இன்னும் எந்த யுகத்தில் இருந்து கொண்டு பண்பாட்டு விழுமியம் என கதைக்கிறீர்கள் ? பண்பாடும் காலச்சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை எனில் தூக்கி எறியப்படும் அல்லவா ?

 

மேலே குறிப்பிடுபவை அனைத்தும் சில நாட்கள் முன்பு நடை பயிற்சியின்யூடே மூத்த குடிமக்களாகிய நாங்கள் சிலர் உரையாடிய போது வெளிப்பட்டவற்றின் சாரம் . வழக்கமாக எங்கள் உரையாடலில் அரசியலும் சொந்த சோகமுமே அடைத்திருக்கும் . அன்றைக்கு காதலும் வாழ்வும் பேசு பொருளாயின .காரணம் காதலர் தினச் செய்திகளே !

 

வீட்டுக்கு வந்த பின்னும் என்னுள் அந்த உரையாடல் சார்ந்த சிந்தனை நீண்டது .  “கம்யூனிஸ்ட் அறிக்கை”யில் சொல்லப்பட்ட வரிகளை மீண்டும் வாசித்தேன்.

 

 “ இதுநாள் வரையில் ,மரியாதைக்கு உரியதாக இருந்த ,பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த ,வாழ்க்கை தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது . அது மருத்துவரையும் , வழக்குரைஞரையும் ,மதகுருவையும் ,கவிஞரையும் விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி உழைப்பாளர்களாய் மாற்றிவிட்டது .

 

முதலாளித்துவ வர்க்கம் ,குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத் திரையைக் கிழித்தெறிந்துவிட்டது .குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது .”

 

 “சரி ! அப்படி எனில் காரல் மார்க்ஸ் ஏன் காதலித்தார் ? குடும்பமாக ஏன் வாழ்ந்தார் ? ”என உரையாடலில் உறவினர் ஒருவர் என்னிடம் குறுக்குசால் ஓட்டியது நினைவுக்கு வந்தது .

 

குதர்க்க வினாக்களுக்கு நாமும் குதர்க்கமாகவே பதில் சொல்லிவிடலாம் .ஆயினும் பொறுப்போடு சொல்வதே நம் மரபல்லவா ? முதலாளித்துவம் இப்படிச் செய்கிறது என்கிற பிரஞ்ஞை உள்ள ஒருவர் அதனை எதிர்த்து நிற்பதும் வாழ்வதும் இயல்புதானே.ஓர் லட்சியத்தை வரித்துக் கொண்டவர்கள் அப்படி வாழ்ந்துகாட்டவும் போரிடத்தானே செய்வார்கள் ; பக்திமான்கள் நிறைந்த வீட்டிலிருந்து தோன்றிய பகுத்தறிவாளர் போல .

 

 

ஒரு கருத்து மக்களைக் கவ்விப் பிடிக்கும் போது அது மாபெரும் இயற்பியல் சக்தியாகிவிடுமல்லவா ? இதைச் சொன்னதும் அவர்தானே ! காதலும் வாழ்வும் அப்படித்தான். மார்கஸ்சும் எங்கெல்ஸும் விதிவிலக்கல்ல அவர்களும் விதிவிலக்கல்ல.

 

காதல் ,குடும்பம் போன்ற கருத்துகள் வானத்திலிருந்து குதிக்கவில்லை . கடவுளோ மதமோ அருளியது அல்ல .வரலாற்றின் நிகழ்வுப் போக்கில் வளர்ந்தவை “குடும்பம் –தனிச் சொத்து –அரசு ஆகியவற்றின் தோற்றம்” குறித்து பி.எங்கெல்ஸ் எழுதிய நூல் இன்றைக்கு வாசிக்க வேண்டிய முக்கிய நூல்.

 

முந்தைய சமூகத்தின் முந்தைய தலைமுறையின் கருத்தும் பண்பாடும் பல தலைமுறை தொடரும் . ஆயின் அப்படியே மாறாமல் தொடருமா என்பதுதான் கேள்வி.

 

உங்களின் குடும்பத்தையே உற்றுப் பாருங்கள்! தாத்தாக்கள் பாட்டிகள் பெரியப்பாக்கள் சித்தப்பாக்கள் என பெரும் குடும்பமாய் இருந்த நிலையா  உங்கள் அப்பா அம்மா காலத்திலும் இருந்தது ? இல்லையே ! தினசரி குறைந்தது ஐம்பது அறுபது பேருக்கு சமைக்கும் குடும்ப  வாழ்வா தொடர்ந்தது ? இல்லையே ! அப்பா அம்மா மகன் மருகள் பேரப்பிள்ளைகள் என்கிற ஒரு குறுகிய வட்டமே நம் அப்பா தலைமுறைக் கூட்டுக் குடும்பம் ஆயிற்று.இன்று தனித் தனி அலகுகளாய் குடும்பம் . அதுவும் நிற்க உட்கார நேரமின்றி ஓடிக் கொண்டே இருக்கும் வாழ்க்கைச் சூழல் .

 

கூட்டுக் குடும்பத்திலும் காதல் இருந்தது வாழ்வு இருந்தது ஆனால் பெண்கள் வாய் மூடி மவுனச் சுமை தாங்கியாய் ,கைத்த உணர்ச்சிகளும் கர்ப்பம் தரிக்கும் என்கிற விதியின் விளையாட்டுப் பொம்மைகளாய் இருந்தனர் .விதியை மீறி காதலை வாழ்வை சமத்துவமாய் சுவைக்க முனைந்தோரும் இருந்தனர் .ஆனால் அது போராட்ட வாழ்வாகவே இருந்தது .அங்கே காதல் அதனை உறுதியாக எதிர்கொள்ள துணைநின்றது . இந்த முரண்பாடுதான் வாழ்க்கை .

 

ஆதிக் காதலின் சுதந்திர வெளி பின்னர் அமையவில்லை . காதலை செல்வமும் ஆதிக்கமும் நசுக்கியது – விரட்டியது – விரட்டிக் கொண்டிருக்கிறது .மதம் ,சாதி ,இனம் ,வர்க்கம் ,பண்பாடு எல்லாம் செல்வம் ஆதிக்கம் ஆகியவற்றின் கூட்டாளிகளாகி காதலைக் குதறின . காதலை வாழ்வை மீட்க பெரும் போராட்டம் தேவைப்படுகிறது .

 

முன்னிலும் மேம்பட்ட காதலும் வாழ்வும்தான் இன்றைய இளைய தலைமுறையின் தேடல் . இங்கே ஆணும் பெண்ணும் சம பங்காளியாய் எச்சூழலிலும் தன் சுயத்தை இழக்காதவர்களாய் வாழத் தலைப் படுகிறார்கள். மதம் ,சாதி ,இனம் ,பண்பாட்டு தளைகளை மீறி கைகோர்த்து பயணிக்க முனைகின்றனர் .

 

இந்தப் போராட்டத்தில் சிலர் வழுக்கி விழுகிறார்கள் .சிலர் மல்லுக்கட்டு கிறார்கள். இது தவிர்க்க இயலாத வாழ்க்கைப் போர் ; அடிபட்டு விழுந்து எழுந்து காயங்கள் சிராய்ப்புகளுடன் கற்றுத் தேற வேண்டும். வேறு வழியே இல்லை .மெய்யான காதலும் மெய்யான வாழ்க்கையுமே நம் இலக்கு .அதற்குப் போராடித்தான் ஆகவேண்டும்…

 

இன்றைய இளைய தலைமுறை காதல் என்பது ….

 

 “யாயும்  ஞாயும்  யாரா  கியரோ?

எந்தையும்  நுந்தையும்  எம்முறைக்  கேளிர்?

யானும்  நீயும்  எவ்வழி  அறிதும்?

செம்புலப்  பெயல்நீர்  போல

அன்புடை  நெஞ்சம்  தாம்கலந்  தனவே!"

குறுந்தொகைப் பாடலை உளம் கொள்வோம்!

கூண்டுக் கிளியாய் சிறகை இழக்கவும் மாட்டோம்!

அவரவர் வெளியில் உயரே உயரே பறப்போம்!

அன்பின் நதியில் நீராடி மகிழ்வோம் !

எங்கள் காதலும் புதிது ! வாழ்வும் பதிது !

புதுயுகத்தின் நெடுங்கணக்கைத் தொடங்குவோம் !!

 

குறிப்பு : மாட்டைக் கட்டிப் பிடிக்கும் மூளையைத் தொலைத்த சங்கிகளுக்கும் சனாதனிகளுக்கும் உணர்ச்சியும் அறிவும் கிடையாததால் அவர்களுக்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை .

 

சுபொஅ.

10/2/2023.

 

 

 

 


 


கோட்சே யார் ? அவனை இயக்கியது எது ?

Posted by அகத்தீ Labels:

 


கோட்சே யார் ? அவனை இயக்கியது எது ?

 

 ” கோட்சே என்பவன் தனிமனிதல்ல . அவனுக்கும் அவன் செய்த கொலைக்கும் பின்னால் ஒரு மிகக்கொடூரமான மனிதவிரோதத் தத்துவம் இருக்கிறது.அதனை புரிந்து கொள்ள வைப்பதே இந்நூலின் மிக முக்கியமான நோக்கமாகும்.”என்கிறார் திரேந்திர கே ஜா .

 

அவர் எழுதிய “ நாதுராம் கோட்சே : உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும் “ நூலை வாசித்து முடித்த பின் நூலாசிரியர் நோக்கம் வீண் போகவில்லை என உறுதியாகச் சொல்கிறேன். இ.பா.சிந்தன் ஆற்றொழுக்கு நடையில் தமிழில் தந்துள்ளார். வாழ்த்துகள் .

 

இராமச்சந்திர விநாயக் கோட்சே என இயற்பெயர் கொண்ட நாது [ மூக்குத்திக்காரன்] என வீட்டாரால் அழைக்கப்பட்ட நாதுராம் கோட்சே என்கிற சித்பவன் பார்ப்பான் யார் ? அவன் ஏன் காந்தியைக் கொன்றான் ? அவனை இயக்கிய தீய சக்தி எது ? அவனை ஆட்கொண்டு கொலைகாரனாக்கிய நச்சு தத்துவம் எது ? அவனுக்கும் ஆர் எஸ் எஸ் க்கும் உள்ள தொடர்பு என்ன ? அவனுக்கும் இந்து மகாசபைக்கும் உள்ள தொடர்பு என்ன ? அவனுக்கும் இந்து ராஷ்ட்டிர தளத்திற்குமான தொடர்பு யாது ?அவனுக்கும் சாவர்க்கருக்கும் இடையிலான உறவு எத்தகையது ?இவைகளுக்கு இடையேயான உறவின் மையப் புள்ளி யாது ? ஆப்தே அவனோடு சேர்ந்தது எப்படி ? கோட்சேவின் நீதிமன்ற வாக்கு மூலம் அவனின் தயாரிப்பா ,வழக்கறிஞர் தயாரிப்பா ? அவன் சொன்ன பொய்களும் பொய்களின் பின்னால் இருக்கும் உண்மைகளும் யாவை ? ஆர் எஸ் எஸ் சும் , சாவர்க்கரும் அவரின் இந்து மகா சபையும் கோட்சே செய்த கொலைக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என நாடகமாடியது ஏன் ? பார்பன மேலாண்மை ராஜ்யமே இந்துராஷ்டிரம் என்கிற கருத்தியலை சாதுரியமாக இந்து என்கிற முகமூடிக்குள் மறைத்து நஞ்சை விதைக்கும் ஹெட்கேவர் ,கோல்வார்கர் , சாவர்க்கர் வகையறாக்களின் மெய்யான கனவு எது ? காந்தி அவர்கள் கனவுக்கு எதிரியும் தடையும் என அவர்கள் கருத நேர்ந்தது எப்படி ? நாதுராம் என்கிற பயந்தாங்கொள்ளி பெரும் கொலைகாரனாக மாற ஆர் எஸ் எஸ் தத்துவ விஷம் எப்படி உதவி இருக்கிறது ?

 

இப்படி உங்களுக்கும் எனக்கும் வரும் ஐயங்களுக்கு வெறும் கதையாக அல்ல ஆதாரபூர்வமாக விடை சொல்லி இருக்கிறது இந்நூல் .

 

இன்றும் காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தராக போற்றும் சங்கிகள் உலவுகிறார்கள் .உள்ளுக்குள் புகழ்ந்து வெளியில் சொல்ல முடியாமல் நடிக்கிற  சங்கி அறிவிஜீவிகள் உண்டு .ஆர் எஸ் எஸ் ஐயும் சாவர்க்கரையும் தேசபக்தராக போற்றிவிட்டு கோட்சே மட்டுமே கொலை செய்தான் என கதையளக்கும் பேர்வழிகள் உண்டு . இவர்களுக்கெல்லாம் தக்க பதிலடியாய் இருப்பது இந்நூல் .ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் வாசித்தாக வேண்டும்.

 

பொதுவாக நான் நூலறிமுகம் செய்யும் போது சில பத்திகளை மேற்கோள் காட்டுவேன் ஆனால் இந்நூலுக்கு அப்படிச் செய்யவில்லை ஏனெனில் ஒவ்வொரு பத்தியும் மிக முக்கியமாகவே எனக்குப் படுகிறது .எனவே நீங்களே வாசித்து நான் சொன்னது உண்மை என உணர்க .கோட்சே கதாநாயகனும் அல்ல ; வில்லனும் அல்ல ; ஆர் எஸ் எஸ் விஷத் தொட்டியில் புழுத்த விஷ ஜந்து  என்பதே இந்நூல் உணர்த்தும் உண்மை .

 

கடந்த சில வருடங்களாக இந்துத்துவா குறித்தும் ,காந்தி குறித்தும் ,காந்தி கொலை குறித்தும் ,ஆர் எஸ் எஸ் குறித்தும் , மதவெறி குறித்தும் ,குஜராத் ,மும்பை உள்ளிட்ட இந்துத்துவ வெறியாட்டங்கள் குறித்தும் ஏராளமான நூல்கள் தமிழுக்கு வந்து சேர்ந்துள்ளன .அவை பெரிதும் வரவேற்கப்படுகின்றன .இடதுசாரிகளாலும் பெரியாரிய அம்பேத்கரிய இயக்கங்களாலும்தான் இது சாத்தியமாகிறது என்கிற உண்மை சங்கிகளுக்கு எரிச்சலூட்டுகிறது . ஆகவேதான் புத்தகக் காட்சி எனில் அவர்களின் நவதுவாரங்களும் பற்றி எரிகிறது .

 

இந்த நூலும் சரி  நான் படித்த பிற நூல்களும் சொல்லும் அடிப்படையான செய்தி என்ன தெரியுமா ? பார்ப்பனா மேலாண்மையை ஏற்கும் பார்ப்பன பணியா நலன் பேணும் அரசே இந்த இந்துத்துவ கூட்டத்தின் பெருங்கனவு,வர்ணாஸ்ரமும் மதுதர்மமுமே அவர்கள் இலக்கு .

 

அவர்கள் பேசும் இந்துத்துவா என்பது பார்ப்பன பணியா நலனே . சூத்திரன் ,தலித் ,பிறமதத்தவர் எல்லாம் அவர்களுக்குத் தொண்டூழியம் செய்யப் பிறந்தவரே. இந்து என பொதுவாய்ச் சொல்வது ஓர் ஏமாற்று நாடகமே .

 

பெரியார் தொண்டால் தமிழ்நாடு உணர்ந்த அளவுகூட பிற மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்படவில்லை .[ தமிழ் நாட்டிலும் இப்போது சனாதனக் குரல் கேட்கத் துவங்கியுள்ளது .இந்நூற்களை இன்னும் வலுவாய்க் கொண்டு செல்ல வேண்டும்]கேரளாவில் சமூக சீர்திருத்த இயக்கம் வேர்கொண்டது அதனை பின்னர் கம்யூனிஸ இயக்கம் சுவீகரித்துக் கொண்டது . ஆனால் மற்ற மாநிலங்களில் இது நடைபெற வில்லை .இடதுசாரிகள் போதிய கவனம் செலுத்தத் தவறிய இடமும் இதுவே .

 

அந்த வகையில் நேற்றைய இடதுசாரிகளைவிட இன்றைய இடதுசாரி இளைஞர்கள் அதுகுறித்து அதிகம் வாசிப்பது பேசுவது எழுதுவது  நம்பிக்கை ஊட்டுகிறது .

 

இந்த விழிப்புணர்வின் ஓர் பகுதியே இந்நூலை வாசிப்பதுமாகும்.

 

இந்த நூலை தமிழுக்கு கொணர்ந்து சேர்த்த இ .பா/சிந்தனுக்கும் ,எதிர் வெளியீட்டிற்கும் என் பாராட்டுகள் .இ.பா.சிந்தனை பார்க்கும் போது ,

“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.” [திருக்குறள் : 68] எனும் வள்ளுவன் வாக்கே நினைவுக்கு வருகிறது ! வாழ்த்துகள் மகனே !

 

 

நாதுராம் கோட்சே : உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்,

ஆசிரியர் : திரேந்திர கே.ஜா, தமிழாக்கம் : இ.பா.சிந்தன்,

எதிர் வெளியீடு , 96 .நியூ ஸ்கீம் ரோடு ,பொள்ளாச்சி – 642002.

04259 226012 / 99425 11302.

பக்கங்கள் : 400 , விலை : ரூ.500/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

 

 


அமிர்த காலம் .

Posted by அகத்தீ Labels:

 


அமிர்த காலம் .

 

பாற்கடலை

அசுரர்கள்

வியர்வை

சொட்டச்சொட்டக்

கடைந்தனர் .

 

தேவர்கள்

காவிக்கொடி நிழலில்

  ‘அச்சாதீன்’ பாடி

கண்டு களித்திருந்தனர்.

 

நிர்மலமாய் சிவனார்

நொடிக்கொரு

உடை அணிந்து

தலைமையேற்று

வழிகாட்டிக் கொண்டிருந்தார்.

 

திரண்ட அமிர்தத்தை

திரட்டி எடுத்து

தேவர்கள்

வாயில் ஊட்டிவிட்டார்

சிவனார் .

 

கக்கிய நஞ்சை

வழித்துண்ணுமாறு

அசுரர்களுக்கு

அருளாசி வழங்கினார்

சிவனார்.

 

அமிர்த காலமென

சிவனாரும் தேவர்களும்

குதூகலிக்க

கலிகாலமென

அசுரர்கள்

கண்ணீர்விட்டனர் .

 

சுபொஅ.

2/2/2023.