பண்டிகைகள் மனிதர்களின் கூட்டுவாழ்க்கையின் வெளிப்பாடு. இயல்பாய் முகிழ்த்தவை. பருவகாலமாறுதல்கள்,வேட்டையில்வெற்றி,விளைச்சல்,மகப்பேறு,துக்கம்,மகிழ்ச்சி,என எல்லாவற்றையும் அன்றைய மனிதர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். அவையே காலகதியில் பண்டிகைகளாக தோற்றம் கொண்டன. பண்ட உற்பத்தி பெருகப் பெருக விற்பனை யுத்திகள் தேவைப்பட்டன. பண்டிகைகள் அதற்குக் களமாயின. பண மறுசுழற்சிக்கு பண்டிகைகள் வாகனமாயின. பண்டிகைகளின் கூட்டுக்கொண்டாட்டம் என்பது பண்டங்களோடு பிணைக்கப்பட்டது. வர்த்தக நோக்கை நிறைவேற்றாத பண்டிகைகள் மெல்ல விடை பெறலாயின. புதிய பண்டிகைகள் வலம்வரலாயின.
சமயங்கள் தோற்றிவிக்கப்பட்டபோது அவை மக்கள் மனதில் எளிதில் சிம்மாசனம் போட்டு அமர பண்பாட்டுநிகழ்வுகள் அவர்களுக்குத் தேவைப்பட்டன. பண்டிகைகளை சமயவாதிகள் தன்வயப்படுத்தலானார்கள் .பண்டிகைகள் மீது பொய்மைப்புராணங்கள் திணிக்கப்பட்டன.. பண்டிகைகள் சடங்குகளாக உருமாற்றப்பட்டன. வர்த்தகநோக்கும் உடன்சேர பண்டிகைகள் தன் இயல்பில் திரியலாயிற்று. பண்டவிற்பனையும் பணசுழற்சியுமே பண்டிகைகளின் இருத்தலை உறுதிசெய்வன ஆயிற்று. இதன் பொருட்டு புவிசார் சூழலில் உருவான பல விழாக்கள் பண்டிகைகள் காலதேச எல்லைகளை ஒருபுறம் தாண்டின. மறுபுறம் சாதி,மத,பிரதேச,இன,தேச வரப்புகள் பண்டிகைக்குள்ளும் வேலிகள் கட்டின. ஆச்சாரங்கள் மேலோங்க சகோதரத்துவம் பலியிடப்பட்டது.
மிக அண்மையில் யுத்தத்திற்கு எதிராக உருவமைக்கப்பட்ட காதலர்தினம் கூட வர்த்தகநெடியில் தீய்ந்து கருகலாயிற்று. தனிமனிதரின் பிறந்த நாள், திருமணநாள் கொண்டாட்டங்களும் சமூகபடிநிலைக்கு ஏற்ப உயர்வுதாழ்வை பறைசாற்றலாயின. மனிதகுல மகிழ்வுக்காக முகிழ்த்த பண்டிகைகள் சடங்காக,சுமையாக,பணத்திமிரின் சாட்சியாக பலவிதமாக சிதைந்தாலும் அவற்றின் தேவையை மனிதகுலம் இழந்துவிடவில்லை. எனவே தொடர்கின்றன. இனியும் தொடரும். இதன் இடத்தை இன்னொன்று பிடிக்காத வரை;ஆயிரம் குறைகளை அறிவு கூறினாலும் பொதுபுத்தியில் உறைந்துபோயுள்ள பண்டிகைக்கொண்டாட்டங்கள் நிலைக்கும். நீடிக்கும். ஆகவே பண்டிகைகளை புறக்கணிப்பதல்ல புத்தாக்கம் செய்வதே நம்பணி. இது சுலபமல்ல...ஆயினும் முயல்வோம். எல்லோருக்கும் வாழ்த்துகள்.
-சு.பொ.அகத்தியலிங்கம்
ஓய்வெனப்படுவது யாதெனில்...............
பிறந்தநாளின் அகத்தேடல் ---15 ஜூன் 1953
(2011 ஜூன் 15 ஆம் நாள் வாழ்த்துகள்)
இன்று(ஜூன் 15 ) எனக்கு ஐம்பத்தெட்டு வயது நிறைகிறது. வாழ்த்திய
நெஞ்சங்களுக்கு நன்றி. இதற்கு முன் எந்தப் பிறந்தநாளின்போதும் என்னைத்
தொற்றிக்கொள்ளாத பரபரப்பு இன்று ஏன்?
குடும்ப மரபின்படி என் முதல் பிறந்த நாளைக் கோயிலில் கொண்டாடி
இருக்கிறார்கள்.பின்னர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் பிறந்த
நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அது நடந்ததாம். இதுவும் செவிவழிச்
செய்தியே.நினைவு தெரிந்து நான் பிறந்த நாள் கொண்டாடியதில்லை.பத்தாம்
வகுப்பு படிக்கும் போது பிறந்த தேதியை ஆசிரியர் கேட்க சொல்லத்தெரியாமல்
அசடு வழிந்தது நினைவிருக்கிறது.தொழிற் பயிற்சி நிலையத்தில்(ஐ டி ஐ ) சேர
விண்ணப்பிக்கும்போது படிவத்தில் அந்தப் பகுதியை பூர்த்தி செய்ய எஸ் எஸ்
எல் சி சர்ட்டிபிகட்டை பார்த்துத்தான் எழுதினேன்.பிறந்த நாளுக்கு
அதற்குமேல் முக்கியத்துவம் அன்றநாட்களில் இருந்ததில்லை.
திருமணத்திற்குப் பிறகு வந்த முதல் பிறந்த நாளில் காலையில் மனைவி
வாழ்த்துச் சொன்னதும்- புது சட்டை வேட்டி பரிசளித்ததும்- வீட்டில்
பாயாசம் செய்ததும்- புது அனுபவமாக இருந்தது. மனைவியின் பிறந்த நாளை அன்று
மிகுந்த அக்கறையோடு கேட்டறிந்தேன்.அவள் பிறந்த நாளன்று வாழ்த்துச் சொல்ல
வேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டது.முதல் நாள்வரை அந்த ஞாபகம் இருந்ததும்,
ஆனால் பிறந்த நாளன்று மறந்துவிட்டதும்-இரவில் அவள் நினைவுபடுத்தும்போது
சுருக்கென்று குத்தியதும்- பிறந்தநாள் கொண்டாடுவதைக் கிண்டலடித்து
சமாளித்ததும்- ஒவ்வொன்றாய் நெஞ்சில் நிழலாடுகிறது.ஏறத்தாழ கடந்த
இருபத்தொண்பது வருடங்களாக இதே கதைதான்..கடந்த சில வருடங்கள் முன்புவரை
என் பிறந்த நாளையும் யாராவது நினைவூட்டாமல் நான் உணர்ந்ததே இல்லை.
பிள்ளைகளின் பிறந்த நாளை ஞாபகம் வைத்திருந்து வாழ்த்துச் சொன்னதோ
பரிசளித்ததோ அபூர்வம். ஆயினும் மனைவி இதனை ஈடுகட்டிவிடுவதால் பிரச்சனை
ஏற்பட்டதில்லை.பேரனின் பிறந்த நாளே உணர்வுபூர்வமாக வாழ்த்தும் மரபை
என்னுள் ஊற்றெடுக்கச் செய்தது.கடந்த சில ஆண்டுகளாக அலுவலச் சூழலாலும்
,முகநூல் தொடர்பாலும் பிறந்த நாள் முக்கியத்துவம்
பெறத்துவங்கிவிட்டது,ஆனாலும் என் பிறந்த நாளுக்கென்று யாருக்கும் இதுவரை
ஒரு சாக்லேட்கூட வாங்கிக் கொடுத்ததே இல்லை.ஆயினும் முகநூல் நண்பர்களுக்கு
வாழ்த்துச் சொல்லும் வழக்கம் இப்போது எனது அன்றாட கணினிப்பணியின்
பாகமாகிவிட்டது.
மதச்சார்பற்ற-மனதை மிகவும் நெருங்கவைக்கிற-பிறந்த நாள் கொண்டாட்ட மரபு
நன்று ,ஆயினும் அது ஆடம்பரமாகவோ கைமீறிய செலவாகவோ
மாறிவிடக்கூடாது.நெஞ்சார வாழ்த்தினால் போதுமே. இதுவே இப்போதைய என்
மனோநிலை.
பொதுவாக இப்படி பல சிந்தனைகள் என்னுள் ஓடினாலும்,இந்த முறை என் பிறந்த
நாளுக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது.நான் பொதுவாழ்வுக்கு வராமல்
நண்பர்கள் வற்புறுத்தியபடி தொழிற்பயிற்சி ஆசிரியராக( ஐ டி ஐ
இன்ஸ்ட்ரக்டர்) போயிருந்தால்(அதற்குரிய தகுதியும் எனக்கு இருந்தது
வாய்ப்பும் எனக்கு வந்தது)இன்று நான் பணி ஓய்வு பெற்றிருப்பேன்.அல்லது
பெஸ்ட் அண்ட் கிராம்ப்டன் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றி இருந்தால்
எப்போதோ வீதிக்கு வந்திருப்பேன். ஆம், அந்த ஆலையை சில ஆண்டுகளுக்கு
முன்பே மூடிவிட்டார்கள்.பொதுவாழ்வில் இருப்பதால் எனக்கு ஓய்வு உண்டா?
இல்லையா?இன்றைக்கு என்நெஞ்சில் சுழன்றடிக்கும் கேள்வி இதுதான்.
எதற்கு ஓய்வு? ஏன் ஓய்வு? எதிலிருந்து ஓய்வு?எப்போதிலிருந்து ஓய்வு?உடல்
தளர்ந்துவிட்டதா? உள்ளம் சோர்ந்துவிட்டதா?வாழ்வின் தேவைகள்
நிறைவாகிவிட்டதா?இலக்கை எட்டியாயிற்றா?மனம் சாந்தியாகிவிட்டதா?இப்படி பல
கேள்விகளை எனக்கு நானே எழுப்பிப் பார்க்கிறேன்.ஒரு புறம் பளிச்சென்று சில
பதில்கள் கிடைக்கின்றன.மறுபுறம் சில குழப்பங்கள் மிஞ்சுகின்றன.இது
குறித்து அண்மைக்காலமாக நான் நிறையவே யோசித்திருக்கிறேன்..பணச்சிக்
கலைத்
தவிர குடும்பத்துக்குள் பெரிய சிக்கல் ஏதுமில்லை-இன்னும் சொல்லப்போனால்
இணக்கமான குடும்பமே.2013க்குள் பண நெருக்கடியிலிருந்தும் மீண்டுவிடுவேன்.
உடலைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவே இதுவரை
உணர்கிறேன்.உள்ளத்தைப் பொறுத்தவரை அப்படிச் சொல்ல இயலவில்லை.குறிப்பாக
பணிச்சூழல் மனநிறைவைத் தரவில்லை.பொதுவாழ்விலும் ஏதோ ஒரு வெறுமை
சூழ்ந்துள்ளதை என்னாலும் மறைக்கமுடியவில்லை-சுற்றியுள்ளோ
ரும்
அவதானிக்கின்றனர்.அதன் தொடர் விளைவாக சில தீர்மானங்களுக்கு
வந்துள்ளேன்.இது சரியா? தவறா? காலம்தான் தீர்ப்பெழுதும்.
என்னைப் பொறுத்தவரை ஓய்வு எல்லோருக்கும் தேவை.ஆனால், ஓய்வெனப்படுவது
சும்மா இருப்பதல்ல ; மனதிற்கு மகிழ்வுதரும் தொண்டொன்றில் தன்னைக்
கரைத்துக்கொள்வதே.பதவி,பொறுப்பு எதனையும் நாடாமல் இளைஞர்களுக்கு
தோள்கொடுப்பது. துணை நிற்பது.வருவாயை எதிர்பார்ப்பதும்
எதிர்பார்க்காததும் அவரவர் குடும்பச் சூழல் சார்ந்தது.சிலரின் தலைமைப்
பண்பும் அறிவுத்திறனும் அனுபவஞானமும் வலுவாக இருக்கக்கூடும்.குறிப்பிட்ட
அந்த அமைப்புக்கோ நிறுவனத்துக்கோ அத்தகையவர்களின் தேவை இருக்கக்கூடும் ;
அச்சூழலில் விதிவிலக்காக அவர்கள் நீடிப்பது தவிர்க்க
முடியாததாகும்.ஆயினும் அது பொது விதியாகிவிடகூடாது. அது விதிவிலக்கே.
உடல் உழைப்பாளிகளுக்கு ஓய்வு வயது 58 ஆக இருக்கிறது. மாநில அரசு
ஊழியர்களுக்கும் இதுவே விதி. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வு வயது 60 ;
விஞ்ஞானிகள் போன்ற அறிவுத்துறையினருக்கு ஒய்வு வயது 65.ஆனால் பொது
வாழ்வுக்கு இப்படி வயதுவரம்பு இல்லாதிருப்பது சரியா?அதிலும் அரசியலில்
ஐம்பது அறுபதுக்கு மேல்தான் பதவி வாய்க்கிறது..அப்படியானால் அவர்களுக்கு
ஓய்வே கிடையாதா?விவாதத்திற்குரியது...
ஆனாலும் தவிர்க்க முடியாதவர்கள் தவிர மற்றவர்கள் பதவி
பொறுப்புகளிலிருந்து விலகி வழிவிடும் மரபு துளிர்க்க
வேண்டும்.வெளியிலிருந்து கொண்டே ஆலோசனகள் வழங்கலாம் -தொண்டாற்றலாம் -
எழுதலாம்- பேசலாம்- பிறரைப் பயிற்றுவிக்கலாம்-ஆம் இதற்கு இதயம்
விசாலமாகவேண்டும்.
என் தகுதியை திறமையை நான் நன்கு அறிந்துள்ளேன்.விதிவிலக்கு பெறுமளவுக்கு
பெருந்தகுதி எதுவும் எனக்கு இருப்பதாக நான் கருதவில்லை.எனவே நான்
விரைவில் ஓய்வுபெற விழைகிறேன்.முன்னர் என் இச்சையினால்
பிறந்தேனில்லை..முதல் இறுதி என் வசத்தில் இல்லை..நான் ஒரு அமைப்பின்
அங்கம். நானாக ஒரு முடிவுக்குவருவது எளிதல்ல..ஆயினும் இந்த பிறந்த நாளில்
எனது உரத்த சிந்தனை ஓய்வைப்பற்றியதே..அதனை பகீரங்கமாகப் பகிர்ந்து
கொள்வதுகூட அமைப்பு ரீதியாக சரியில்லைதான்..ஆயினும் என்னுள் தகிக்கும்
உணர்வினை ஏதேனுமொரு வகையில் கொட்டிவிட்டேன்..அவ்வளவுதான்
ஓய்வே இன்று என் விருப்பமாக உள்ளது.ஓய்வெனப்படுவது யாதெனில் யாருக்கும்
எந்த இடைஞ்சலுமின்றி -பதவி பொறுப்புகள் எதுவுமின்றி- எழுத்துப் பணியில்
இயன்றவரை கரைந்துபோகவே விரும்புகிறேன்.கைகூடுமா
ஓய்வெனப்படுவது யாதெனில்
ஊரு முழுக்க உறவு
மூச்சு முட்டப் பகை
உதறவும் முடியாது
அணைக்கவும் முடியாது
விசித்திரமான சிலந்திவலை
உனக்குத்தான்
எத்தனை எத்தனை
அடையாளங்கள்
நீயே
மகன்/மகள்
நீயே
தந்தை/தாய்
மாமா/அத்தை
அக்கா/அண்ணன்
தம்பி/தங்கை
இன்னுமுள்ள
எல்லா உறவுகளும்
நீயாயும் இருக்கிறாய்
உனக்கும் இருக்கிறது
ஆனாலும்
உனக்காக யார்
எப்போதும்
தொக்கிநிற்கும் கேள்வி
தாய்தந்தை உறவும்
ஒரு எல்லையோடு சரி
கடைசிவரை
ஒட்டிக்கொண்டிருக்கும்
உறவுச் சங்கிலி
கணவன் மனைவி
அதிலும்
எத்தனை விரிசல்கள்
கவிதையில்
உபதேசத்தில்
பட்டுத்தெறிக்கும்
விசாலமனது
சொந்தவெளியில்
தொலந்துபோனது
சொந்தங்கள்
சுகமாவதும் சுவையாவதும்
போதா காலவினை அல்ல
புழங்கும் காசு நிலையால்
உனக்காக யாருமில்லை
ஓயாமல் புலம்புகிறாய்
யாருக்காகவேனும்
இருக்கிறாயா நீ
உன்னோடு
உறவுகளுக்குப் பிரச்சினையா
உறவுகளோடு
உனக்குப் பிரச்சினையா
நீ கொஞ்ச நேரம்
அந்தப்பக்கம்
நின்றுபார்
சிக்கலின் முடிச்சு
தானாய் அவிழும்
ஆனாலும்
வீம்பும் பிடிவாதமும்
ஈரக்கம்பளியாய் அழுத்த
அகம்பாவ மழையில்
அணு தினமும் அலைகிறாய்
அணுவேனும் அகத்தில்
உணர்ந்தாயில்லை
சொந்தங்களின்
சுழல்வட்டத்திற்கு
வெளியே
சற்றே எட்டிப்பார்
விரிந்துகிடக்கிறது
வானமும் பூமியும்..
-சு.பொ.அகத்தியலிங்கம்
அகத்தேடல்-4
கருப்பை வாசமும்
மண்வாசமும்
கல்லறை வரை
புழுதிவிளையாடிய
நினைவுகளை
அசைபோட்டபடி கழியும்
முதுமை
பெயர்
பிறந்த தேதி
பிறந்த ஊர்
மூன்றின் அடையாளங்களும்
உன்னோடு ஒட்டிக்கொள்ளும்
இறுதிவரை
வாழ்க்கைச் சூறாவளியில்
பிடுங்கி எங்கோ வீசப்பட்டாலும்
வேரோடு ஒட்டிவந்த
ஊரடிமண்
சொல்லிகொண்டே இருக்கும்
பிறப்பின் முகவரியை
திருமணத்தில்
திடீர்பயணத்தில்
திருவிழாக்கூட்டத்தில்
சந்தித்தவர்கள் மூலம்
சேகரித்த
ஊர்ச்செய்திகளை
இணையருக்கும்
சந்ததிக்கும்
சொல்லும்பொழுது
கண்ணில் மின்னிடும்
சந்தோஷம்
உலமயமும்
நுகர்வுவெறியும்
புரட்டிபோட்டது
உன் பண்பாட்டை
ஆயினும்
நாக்கின் ருசியும்
மொழியின் சாயலும்
முடிச்சுப்போட்டது
ஊரோடு உன்னை
உலகையே
வலம்வரினும்
உள்ளூர் தெருவில்
காலாற நடக்கும்
சுகமே தனிதான்
ஆனாலும்
ஊரும் சேரியும்
ஒற்றை அடையாளமாய்
இல்லாத
நாள்பட்ட ரணத்தை
உணரும்
ஒவ்வொரு தருணமும்
எனக்கே
பிடிக்காமல் போகிறதே
என் ஊர்...
-சு.பொ.அகத்தியலிங்கம்.
ஞாபக்கேணியின்
அடியாழத்தில்
நேற்றின்
நினைவுகள்.
கல்லெறிந்த குளத்தில்
கரைதொடும் அலைகள்
அற்ப ஆயுளெனினும்
ஸ்பரிசம் இனிது.
இன்னாரின் மகனென/மகளென
தெருவோர் சுட்ட
மிடுக்குடன் திரிந்த
நாட்கள் இனிது
அது
கவலையறியா
பிஞ்சு அடையாளம்
இன்னாரின்
மனைவி/கணவர்
தாய்/தந்தைஇவரென
விரல்கள் சுட்ட
கர்வம் மிகுந்தது
அது
பருவப்பசியால்
ஈட்டிய அடையாளம்
முகத்தின் சுருக்கம்
முகவரியாக
இனிக்கும் பழமாய்
தாத்தா/பாட்டி
அவரவர்
வாழ்க்கை சிறுவெளியில்
அதுவன்றோ
முழுமையின் அடையாளம்.
நோய்வாய் படாமல்
பாயில்கிடந்துழலாமல்
சட்டென வருவதோ
கல்யாணச்சாவு
நைந்து நசிந்து நாறி
கிடந்து இழிந்து
நொந்து வெந்து
முடியும் வாழ்வை
என்னென்று சொல்ல
எது எப்படியோ
வந்ததும் செல்வதும்-உன்
வசத்தில் இல்லை
வாழ்ந்ததில்-நீ
பதிந்த அடையாளம் எது?
அகத்தாய்வோ
அகத்தேடலோ
காட்டுமோ
உன்
அடையாளத்தை?
-சு.பொ.அகத்தியலிங்கம்.
நி
ரப்பமுடியா
வெற்றிடம் ஏதுமில்லை
நிரம்பியதும் வெளியேறியதும்
ஒன்றாகவும் இருக்கலாம்
வேறாகவும் இருக்கலாம்
ஒவ்வொன்றிலும்
முந்தையதின் எச்சமும் உண்டு
மூண்டெழும் புதியதும் உண்டு
அடையாளத்தை
நிலைநிறுத்த
வாழ்வோடு நடக்குது
மல்லுக்கட்டு
வென்றது எது? வீழ்ந்தது எது?
எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்
பிறப்பா?
உறவா?
குடும்பமா?
புழுதி விளையாடிய தெருவா?
இளமை கழிந்த
ஊரா?நட்பா?
வித்தை பயின்ற இடமா?
தேமலாய் தொடரும்
சாதியா?
தொப்புள்கொடிவழி வந்த
மொழியா?
எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்
மண்டையில் உறைந்த
மதமா?
மனதுக்கு உகந்த
மாநிலமா?
போராடிப்பெற்ற
தேசமா?
போராட்ட வாழ்வின்
வர்க்கமா?
எதை
அடையாளம் என்கிறாய்?
சொல்
இயற்கையாய் அமைந்த
பாலினமா?
இணையேதும் இல்லா
மானுடமா?
படித்தபடிப்பும்
பெற்ற காயங்களும்
துடைத்தெறிந்ததா?
துலங்க வைத்ததா?
அடையாளங்களை
ஆழங்காணமுடியா
அடையாளச் சிக்கலில்
அகப்பட்டு உழலும் வேளை
அகத்தேடல் காட்டும்பாதை...
-சு.பொ.அகத்தியலிங்கம்.
நீ
இல்லாதுபோனால்
அந்த இடம்
சூன்யமாகிவிடாது..
வேறோன்று
நிரப்பிவிடும்.
காலச்சூறாவளியில்
உன் தடயமும்
காணாமல் போய்விடும்.
நேற்றின் சுவடுகளைத்
தடவிப் பார்க்கலாம்
தழுவமுடியாது
நாளைக் கனவுகளில்
மிதந்து திரியலாம்
கரைந்து போக இயலாது
இன்றின்
யதார்த்த்ச் சூட்டில்
பாதம் கொப்பளிக்க
நடந்தாக வேண்டும்
பொய்கலவாத
உண்மையோ
மெய்கலவாத
பொய்யோ
எங்ஙணும் இல்லை
செம்புகலவாமல்
தங்கம்
நகையாவதில்லை
மேனிக்கு
எழிற்சேர்ப்பதில்லை
உன்
வாழ்வின் எச்சங்களை
வரலாறு பதிந்துகொள்ளட்டும்
நொடிகளில்
மரணம்
கதவைத் தட்டலாம்
நொடிகளுக்கிடையேயும்
வாழ்க்கையுண்டு
நீ
வாழும்போது
பிறர் புன்னகைக்கட்டும்
உன்
மரணத்தின்போது
அண்டைவீட்டாரின்
ஒரு துளி கண்ணீர்
அடையாளம் காட்டட்டும்
நீ
இல்லாதுபோனால்
அந்த இடம்
சூன்யமாகிவிடாது..
-சு.பொ.அகத்தியலிங்கம்