சொல்.86

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .86 [ 1 /12/2018 ] என்னோடு நடை பயிற்சியில் ஓர் நண்பர் அடிக்கடி பங்கேற்பார் .அவர் தெலுங்கர் .நீண்டகாலம் தமிழ்நாட்டில் வேலைபார்த்ததால் தமிழும் அவருக்குத் தெரியும் .தெலுங்கு போலவே தமிழையும் பேசுவார் .அவர் என்னோடு நடை பயிற்சியில் பங்கேற்கிறபோதும் பாதி வழியில் உள்ள சாய்பாபா கோவில் வரையே வருவார் .சாய்பாபா கோவிலுக்கு அவர் செல்ல ;நான் நடை பயிற்சி தொடர்வேன் . அவர் ஒரு நாளும் என்னை கோவிலுக்கு அழைத்ததில்லை .நானும் அவர் கோவிலுக்கு போவதை கேள்வி கேட்பதில்லை .சில நாள் திரும்பிவரும் போது என்னோடு இணைவார் .அவர் மனைவியும் சில நாள் வருவதுண்டு . அப்போதும் இப்படித்தான் . ஒரு நாள் நடைபயிற்சி முடித்து திரும்பும் போது என்னோடு இருவரும் வந்தனர் .அன்று சனிக்கிழமை .நாளை எந்த சர்ச்க்குப் போவீர்கள் என அந்த சகோதரி கேட்க நான் சொல்லும் முன் அவர் கணவர் சொன்னார் . “ சார் ! சர்ச் ,மசூதி ,கோவில் எதுக்கும் போகமாட்டார் .அவர் ஓர் சோஷியல் ஒர்க்கர் .” இதனைக் கேட்டதும் அந்த சகோதரி சொன்னார் , “ அதுவும் சரிதான் . நாம கோவில் கோவில்னு அலைஞ்சு என்னத்தக் கண்டோம் .வேறு போக்கிடம் இல்லாமல் கோயிலே கதின்னு கிடக்கோம்…” அந்த சகோதரி வெடித்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்தவை . மெய்தானே ! பெரும்பாலான முதியோர்களின் வலியை ,மகிழ்ச்சியைப் பங்குபோடவும் வழியற்ற குடும்ப இறுக்கம் .முதியோர்களுக்கு மாலை நேர சரணாலயமாக கோவில்கள் மாறிப்போய்விட்டன . இது ஆன்மீகத்தின் வெற்றி அல்ல ;சமூக நலனில் நாம் காட்டும் அக்கறையின்மையின் எதிரொலி . கடவுள் நம்பிக்கையின் ஆணிவேர் சுயபாதுகாப்பின்மைதான் .மார்க்ஸ் சொன்னது வெறும் வார்த்தை அல்ல .அனுபவ நிஜம் . சகோதரியின் வார்த்தையே அதற்கு சான்று .சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் போது கடவுள் நம்பிக்கையும் ஆட்டம் காணும் .இதைச் சொல்லுவதால் இப்போது நாத்திகப் பிரச்சாரம் வேண்டாம் என்பதல்ல . சமூகப் புரிதலோடு பக்குவமாய்ச் செய்ய வேண்டும் என்பதே ! Su Po Agathiyalingam

சொல்.85

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .85 [ 30 /11/2018 ] நுனிப்புல் மேய்வது என்றொரு சொல்வழக்கு உண்டு. நம்மில் பலர் அந்த ரகமே .மேலோட்டமாய் பார்த்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல் கதை அளப்பதில் நம்மை யாரும் மிஞ்ச முடியாது .எல்லோரும் எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கவும் முடியாது ; அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஆனால் ஒன்றை அரைகுறையாய் தெரிந்துவிட்டு அது குறித்த நிபுணர் போல் பேசக்கூடாது . ஒரு சம்பவம் பற்று தலைப்புச் செய்தியைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி அலசுவது மிக ஆபத்தானது . எடுத்துக்காட்டாக , “ கள்ளக்காதலுக்கு இடையூறாய் இருந்த கணவனை வெட்டிக் கொண்ற மனைவி .” இச்ச்செய்தி உண்மையா ? பொய்யா ? என்ன நடந்தது ? போலீஸ் தரப்பு சொன்னதைத் தவிர வேறு ஏதும் தெரியுமா ? ஆனாலும் அப்பெண்ணை புழுதிவாரி தூற்றிவிடுகிறோம் . கள்ளக்காதல் என்ற வார்த்தையே எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்தோமா ? அடுத்து இன்னொரு செய்தி . “ கள்ளக்காதலனோடு கையும் களவுமாய் பிடிபட்ட மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் .” இங்கும் அதே கேள்விகளே . செத்தது ஆணாக இருப்பினும் ,பெண்ணாக இருப்பினும் கூசாமல் “கள்ளக்காதல்” என்கிற ஒற்றைச் சொல்லில் அனைத்து பழியையும் பெண் மீதே சுமத்திவிடுவது எவ்விதத்தில் நியாயம் . போலீஸ் வழக்கை எளிதாக முடிக்க , உண்மைக் குற்றவாளியை தப்பவிட ,இப்படி கதை கட்டிவிட்டால் போதும் எல்லோரும் நம்பிவிடுவர் .ஏனெனில் இங்கு ஆணாதிக்க சமூக உளவியல் மேலோங்கி உள்ளது . இவ்வாறு ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் நூற்றுக்கு தொண்ணூறு யாரையோ காப்பாற்ற வலிந்து புனையப்பட்ட பொய் வழக்கே . எளியவருக்கு நீதியும் மறுக்கப்படும்தானே ! தலைப்புச் செய்தியை பார்த்தோ ,அல்லது முகநூலில் வரும் ஓரிரு வரிகளை வைத்தோ அனைத்தையும் அறிந்ததாய் காட்டிக்கொள்ள முயலுவது மகாபேதமை .முழுதாய் தெரிய முயலுங்கள் அல்லது கொஞ்சம் காத்திருங்கள் இன்னொரு பக்க விவாதமும் வரட்டும் . நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியாகவும் இருக்கலாம் ; பிழையாகவும் இருக்கலாம் .நுனிப்புல் மேயாமல் கொஞ்சம் மெனக்கெட்டு உண்மையைத் தேடலாமே ! Su Po Agathiyalingam

சொல்.84

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .84 [ 29 /11/2018 ] தோற்றத்தையும் மிடுக்கையும் தொடர்ந்து காப்பாற்றுவது தேவையாக இருக்கிறது .ஆள் பாதி ஆடை பாதி என்பது மட்டுமல்ல மீசை ,மற்றும் தலைக்கு சாயம் பூசுதல் உள்ளிட்டவை நமக்கே ஒரு நம்பிக்கையைத் தரும் .எனவே நான் தொடர்ந்து முடிக்கு கருப்புச் சாயம் பூசுகிறேன் என ஒருவர் அண்மையில் பதிவிட்டிருந்தார் . அவர் பார்வையோ செயலோ தவறன்று . தாரளாமாகச் செய்யலாம் .நான் என் முடிக்கு சாயம் பூசுவதில்லை . இந்த முதிய தோற்றமும் கம்பீரமே எனக் கருதுகிறேன் .இதுவும் பிழையில்லை . குழந்தைப் பருவம் ,மாணவப் பருவம் ,வாலிபப் பருவம் ,நடுத்தர வயது என ஒவ்வொன்றும் கம்பீரமே .அதே போல்தாம் முதுமையும் . எல்லா பருவத்தையும் போல் முதுமையும் அதற்குரிய குறை நிறைகளோடு அமைவதே .அதனை அதன் இயல்போடு ஏற்பதே எப்போதும் இனிது .வலிந்து இளமையை அதற்குள் திணிக்க வேண்டாமே ! ஆனால் இயன்றவரை உங்கள் சிந்தனையை அப்டேட்டட்டாக புதுப்பித்துக் கொண்டே இருங்கள் .அதற்காக புதியன தேடித் தேடி படித்துக் கொண்டே இருங்கள் .அது உங்களின் மதிப்பையும் மரியாதையும் உயர்த்தும் .இளைஞர்களுக்கு வழிவிட்டும் , கைகொடுத்து தூக்கிவிட்டும் மகிழுங்கள் அது உங்கள் முதுமைக்கு அழகு சேர்க்கும் . உங்கள் தோள் மீது சாய்ந்து தங்கள் வேதனைகளைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும் ; உங்களிடம் எதையும் மனம் திறந்து பேசி ஆலோசனைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை உங்களால் உருவாக்க முடிந்தால் உங்கள் முதுமை பொருள் பொதிந்ததாகும் . உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசுங்கள் அல்லது பூசாமலிருங்கள் .அது தனிப்பட்ட விருப்பம் .ஆனால் அழகும் அர்த்தமும் மிக்க முதுமைக்கு உங்களை நீங்களே தயார் படுத்துவது எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியம் . Su Po Agathiyalingam

சொல் .83

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .83 [ 28 /11/2018 ] “அவன் கிடக்கிறான் குடிகாரன் ,எனக்கு இரண்டு மொந்தை ஊற்று” என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல நாட்டு நடப்பும்கூட .மதுவை வாழ்வில் தொட்டதே இல்லை என்போர் அபூர்வம் . எப்போதேனும் கொண்டாட்டத்தில் கொஞ்சம் போதை ஏற்றுவோர் ஒரு ரகம் .வேலைச் சூழலிலின் கடுமை காரணமாக கொஞ்சம் மதுவை நாடுவோர் இன்னொரு ரகம் . குடிப்பதற்காகவே நட்பு வட்டம் உருவாக்கிக் கொள்வோர் இன்னொரு ரகம் .சோகம் ,மகிழ்ச்சி என காரணம் சொல்லி குடிப்போர் இன்னொரு ரகம் . குடியில் மூழ்கி வீழந்து கிடப்போர் இன்னொரு ரகம் . எல்லோரையும் ஒற்றைச் சொல்லாய் குடிகாரர் என ஒதுக்குதல் தகாது .அது தீர்வுக்கும் உதவாது . மது வாசமே இல்லா சமூகம் என கனவு காணலாம் .பேசலாம் . ஆயின் அது வெறும் கனவாக பேச்சாகவே இன்றல்ல என்றும் இருக்கும் . ஆக மதுவுக்கு எதிராய் விழிப்புணர்வை விடாது உயர்த்திப் பிடித்தல் மட்டுமே சாத்தியம் . அதே சமயம் மதுவுக்கு அடிமையானோரை மதுநோயராய்ப் பிரித்து அறியவும் உரிய சிகிட்சை அளிக்கவும் நாம் பயில வேண்டும் . ஒருவர் குடிக்கிறார் என்பதாலேயே அவரைக் கெட்டவராகச் சித்தரித்து அவரை குடும்பத்திலும் இதர இடங்களிலும் புறக்கணிப்பதும் ; அவருக்கு உரிய நியாயங்களைக்கூட கொஞ்சமும் உறுத்தலின்றி நிராகரிப்பதும் அவரை மீட்டெடுக்க ஒரு போதும் பயன்படாது . கடும் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை எப்படி அணுகுவோமொ அப்படி குடிநோயில் வீழ்ந்தோரை அணுகிட குடும்பத்தாருக்கே பயிற்சி தேவை . “இனி குடித்தால் வீட்டுப்படி ஏறாதே!” என மிரட்டுவது அவரை மதுக்கடையையோ அல்லது தெரு முனைகளையோ சரணடையவே உந்தித்தள்ளும் . தூங்கும் போது ஒரு பெக் குடித்துவீட்டு தூங்க வீட்டில் பிரச்சனை இல்லை எனில் தேவையற்ற அவப்பெயரை அவர் தேட வேண்டி இருக்காது .மேட்டுக்குடியிலும் இப்பிரச்சன்னையை அமுக்கமாகக் கையாண்டு விடுவர் .அடித்தட்டிலும் இதனை சமாளித்துவிடுவர் .இந்த இரண்டுக் கெட்டான் நிலையில் உள்ளோரே பெரிதும் சிக்கலாக்கி விடுகின்றனர் . எல்லோரும் குடியுங்கள் என்பதல்ல எம் வாதம் .குடிநோயில் வீழாமல் ஒவ்வொருவரையும் காக்க சமூகப் பார்வை சற்று விசாலப்பட வேண்டும் என்பதே எம் வேண்டுகோள். குடிநோய்க்கு யாரையும் தள்ளிவிடாதீர் ! Su Po Agathiyalingam

சொல்.82

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .82 [ 27 /11/2018 ] பணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதே .அதனை ஈட்ட செய்யும் தொழிலில் முழு சிரத்தை காட்ட வேண்டும் என்பதும் மெய்யே !ஆனால் அது மட்டுமே வாழ்க்கைக்கு நிறைவைத் தராது . ஒரு சிலர் வேலை ,வேலை ,பணம் ,பணம் என ஓடிக்கொண்டே இருப்பர் . குழந்தையைக் கொஞ்ச நேரம் ஒதுக்கமாட்டார் ; ஒரு பாடலை விரும்பி ரசிக்கமாட்டார் ; ஒரு சினிமாவுக்கு நேரம் ஒதுக்கி குடும்பத்தோடு சென்று களிக்கமாட்டார் .வேலை ,பணம் ,சாப்பாடு ,தூக்கம் இரவில் கொஞ்சம் தாம்பத்யம் இதுவே வாழ்க்கை என இயந்திரமாய் ஓடிக்கொண்டே இருப்பார் .இவர் இழந்தது எவ்வளவு தெரியுமா ? மொத்த வாழ்க்கையும்தான் . கல்லாவிலே உடகார்ந்திருக்கும் வியாபாரி ஒருவர் சில்லறைச் சத்தைத்தை மட்டுமே ரசிப்பார் .அவர் எதிரே பூபாளத்திலோ ,மோகனத்திலோ நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் பாடினாலோ , கேட்கிறவர் கால்களை எல்லாம் தாளம் போடவைக்கும் பறை முழங்கினாலோ கூட அவர் கல்லாவுக்கு வெளியே கண்ணைத் திறக்கமாட்டார் .அப்படி சிலரைப் பார்த்திருக்கிறேன் . மின் ஊழியர் சங்கத்தில் பெரும் தலைவராய் இருந்த ,கம்யூனிஸ் தோழர் து .ஜானகிராமன் அவர் நாட்குறிப்பில் மாதம் ஒரிரு நாட்கள் மனைவியோடு சினிமா . வீட்டு நிகழ்வுகள் என குறித்திருப்பார் . பொதுவாய் அந்நாட்களில் யார் அழைத்தாலும் தவிர்த்து விடுவார் .வீட்டில் இருக்கும் போது காலையில் மனைவிக்கு சின்ன சின்ன உதவிகள் செய்வார் . குடும்ப வாழ்வும் பொதுவாழ்வும் எதிர் எதிரானது என்பதை ஒப்பமாட்டார் . நேர திட்டமிடலில்தான் நமக்கு திறமைக் குறைவு .அதை சரி செய்தாலே போதும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்பார் . வாழ்க்கை என்பதை ஒருபோதும் சம்பாதிக்கும் இயந்திரமாக்கிவிடாதீர் ! சூரிய உதயத்தை ,மாலை செவ்வானத்தை ,பூவின் சிரிப்பை , நாலு பேரோடு கலகலப்பாய் பேசி மகிழ்வதை , சின்ன சின்ன உரசல்களை தவறவிடாதீர் !இழந்த நாலுகாசை மீண்டும் ஈட்டிவிடலாம் .இழந்த நாட்களை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது .வாழ்வதற்காகச் சம்பாதியுங்கள் சம்பாதிப்பதற்காக வாழாதீர் ! Su Po Agathiyalingam

சொல்.81

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .81 [ 26 /11/2018 ] சின்ன சின்ன மகிழ்ச்சியும் ,சின்ன சின்ன காயமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை .ஒவ்வொரு நாளும் இவற்றை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும் .எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையில் சுவராசியம் அடங்கி இருக்கிறது . பயணத்தின் போது எதிர் வரிசையில் அம்மாவின் தோளில் சாய்ந்தபடி அந்த பிஞ்சு பூவாய் விரிக்கும் புன்னகை பெருமகிழ்ச்சி . அலைபேசியில் எதிர்பாரா விதமாய் வந்து நலம் விசாரித்த பால்ய சிநேகிதன் தந்த மகிழ்ச்சி . பஸ்ஸைக் கோட்டைவிட்டுவிட்டு அலுவலகம் செல்ல தவித்து நிற்கையில் தானாக முன் வந்து ஸ்கூட்டரில் லிப்ட் கொடுத்து உதவிய நம் தெருக்காரர் தந்த திடீர் மகிழ்ச்சி .இப்படி ஏதேனும் சந்தோஷத் துளிகள் இன்றி எந்தவொரு நாளும் நகர்வதில்லை . வீட்டில் ஏதோ ஒரு அவசரத்தில் கோபத்தில் வீசிய ஒற்றைச் சொல்லின் உறுத்தல் .வீட்டில் ,அலுவலகத்தில் ,நண்பரிடையே ,உறவுகளிடையே ,சமூக ஊடாட்டத்தில் அன்றாடம் ஏற்படும் சின்னச் சின்ன உரசலின் காயங்கள் இல்லாமல் யாரெனும் நாட்களைக் கடத்தியதுண்டோ ? சின்ன சின்ன மகிழ்ச்சியை ரசிக்கவும் சுவைக்கவும் பெறுகிற பயிற்சியில்தான் இனிமையின் இழைகள் பின்னிக் கிடக்கின்றன .ஆயினும் அதில் மட்டுமே மயங்கிவிட்டால் வாழ்வின் மெய்யான விடுதலையை இனங்காணத் தவறிவிடுவோம் மின்மினி வெளிச்சத்தையே கடவுளின் பெரும் கருணையெனச் சொல்லிச் சொல்லி வாழ்வில் ஆழ அகலங்களை தரிசிக்கவிடாமல் தடுத்துவிடுவார்கள் . மின்மினியை ரசிக்கவும் சூரியனை உதிக்கச் செய்யவும் முயலுவதே வாழ்க்கையாகும் . அதேபோல் சின்ன சின்ன காயங்களை ஊதிப் புறந்தள்ளத் தெரியாவிடில் வாழ்க்கை நரகமாகிவிடும் . ஆயினும் சில காயங்கள் லேசாக இருப்பதுபோல் இருப்பினும் பெரும் பாதிப்பை உருவாக்கிவிடும் .ஆகவே எதைப் புறந்தள்ள வேண்டும் ,எதை எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்பது வாழ்வில் பெரும் பயிற்சியாகும் . காயமோ சந்தோஷமோ சின்னதோ பெரிதோ அதனை எடைபோட்டு எதிர்கொள்ளும் பயிற்சியை பள்ளியிலோ கல்லூரியிலோ கற்க முடியாது . அனுபவ நெருப்பில் புடம் போட்டுத்தான் தேற வேண்டும் ! Su Po Agathiyalingam

சொல்.80

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .80 [ 25 /11/2018 ]
சாவு வீட்டிற்கு துக்கம் கேட்க வருகிறவர் ஒவ்வொருவர் உள்மனதிலும் என்ன ஓடுகிறது என்பதை படம் பிடிக்க ஏதேனும் கருவி இருக்குமானால் எவ்வளவு இயந்திரத்தனமாய் நாம் இயங்கிறோம் என்பது புரியும் . இப்படி ஒரு முறை நான் சொன்ன போது விவாதம் அதைச் சுற்றி சூடுபிடித்துது .

மெய்தான் துக்கம் கேட்பது ஒரு சடங்கு . இன்னும் சொல்லப் போனால் கல்யாணத்துக்கு நல்லதுகளுக்கு போகாவிடிலும் இழப்புக்கு போகாமல் இருக்க முடியாது என்கிற சமூக நிர்ப்பந்தமும் ,சில சம்பிரதாயங்களுமே பலரை உடனே அங்கு விரட்டுகிறது .கடனை வாங்கியேனும் சில செய்முறைகளைச் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது .

மரணத்தை சடங்காக்காமல் ,சம்பிரதாயக் கட்டுக்குள் சுழலாமல் மெய்யான இழப்பின் வலியை உள்ளன்போடு பங்கு போடும் காலத்தை நோக்கி எப்போது நகரப் போகிறோம் ? மரணத்திலிருந்து யாரும் தப்ப முடியாது .சிலருக்கு அது அகால மரணமாகிவிடும் . சிலருக்கு கனிந்து உதிர்வதாய் இருக்கும் . எல்லா வலியும் ஒன்றல்ல .

திருமணத்தைப் போலவே மாணத்தையும் சாதி ,மதக் கட்டிலிருந்து விடுவித்து மனிதாபிமானத்தோடு அணுகுகிற ஒரு புதிய பண்பாட்டைச் செதுக்குவது அவ்வளவு சலபமல்லதான்.ஆயினும் காலம் அதை நோக்கி நம்மை துரத்துவதை அறிவீர் !

ஆறுதல் சொல்வதும் ,அரவணைப்பதும் மனிதப் பண்பு அதனை ஒரு போதும் இழந்துவிட முடியாது ஆயினும் அங்கே தலைதூக்கும் அர்த்தமற்ற சடங்கு ,சம்பிரதாயம் ,நிர்ப்பந்தம் ,செலவு இவை தவிர்க்கப்பட வேண்டுமா ? வேண்டாமா ? கொஞ்சம் யோசித்தால் நியாயம் விளங்கும் .
Su Po Agathiyalingam



சொல்.79

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .79 [ 24 /11/2018 ]
ஒருவர் என்னிடம் குகை மனிதர்கள் எந்த வகை உணவு உண்டார்கள் ; நோயற்று இருந்தனர் என ஒரு விரிவுரை நிகழ்த்திவிட்டு நாமும் அதுபோல் உண்டால் நோயற்று வாழலாம் என முடித்தார் .நான் சொன்னேன் , “ அந்த குகை மனிதர் போல் உணவுக்கு தினசரி நாலய்ந்து மைல் காடு ,மலை ,மழை ,வெயில் என சுற்றித் திரிவோம் .பின்னர் அது போல் உண்போம் .” என்றேன் . அவருக்கு கோபம் வந்துவிட்டது .

பின்னர் எங்களுக்குள் பெரும் விவாதம் நடந்தது .இன்று மனித குலம் பல்வேறு காய்,கனி ,கீரை வகைகள் ,தானியவகைகள் , விதவிதமான விலங்குகள் ,பறவைகள் ,கடல் உயிரிகள் என புலால் வகைகள் , அவித்தல் ,பொரித்தல் ,வறுத்தல் , சுட்டல் என விதவிதமான சமையல் பாணிகள் , சுவைகள்  இவை எதுவும் ஒரு இரவில் ஒருவரால் ஒரு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டதல்ல . எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ,எத்தனை சோதனை முயற்சிகள் ,எவ்வளவு உயிரிழப்புகள் .. முதலில் அந்த வரலாற்றை அறியுங்கள் .ஒரு கீரை ,ஒரு கனி ,ஒரு விலங்கு உண்ணத் தகுதியானதா இல்லையா என்பதை உண்டு , நோயில் விழுந்தோ ,உயிரிழந்தோ மனித குலம் அனுபவித்து கண்ட  கதை நெடிது .

இன்று திடீரென சில ரட்சகர்கள் அவதரித்து ,அதை சாப்பிடாதே ,இதைச் சாப்பிடாதே ,இப்படி சாப்பிடு ,அப்படி சாப்பிடு  முன்னோர் முட்டாள்களா , பாரம்பரியம் ,பண்பாடு ,புடலங்காய் ,புண்ணாக்கு என வித்தாரமாய் பேசுகிறார்கள் . அது கதையில் வரும் கத்திரிக்காய் கறி சமைக்க உதவாது .

இன்றைய உணவுப் பழக்கத்தில் சில பிழைகள் இருக்கலாம் ,ஆனால் மொத்தமும் பிழை அல்ல . அந்தந்த புவியியல் , தடபவெப்பம் , விளைச்சல் ,தேவை , வாங்கும் சக்தி என எண்ணற்ற அம்சங்களோடு வளர்ந்திருக்கும் இன்றைய உணவுப் பழக்கத்தை நிராகரிப்பதெல்லாம் சில நாள் கூத்தே .

நிதானமாக சமூக அறிவியல் நோக்கோடு ஒருங்கிணைந்த பார்வையை உருவாக்க முயலாமல் ஆளுக்கொரு பக்கம் இழுப்பதே இன்றைக்கு மிக ஆபத்தான போக்கு !நம் உணவு ,நம் உரிமை  அதில் தலையிட எவனுக்கும் இல்லை அதிகாரம் !!!
Su Po Agathiyalingam



சொல்.78

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .78 [ 23 /11/2018 ]

பேச்சுத் துணை இல்லாத தனிமை எவ்வளவு கொடுமை என்பதை முதியோர்களைக் கேட்டுப்பாருங்கள் . ரயிலில் பயணம் செய்யும் போது மாலை வேளைகளில் ரயில்வே பிளாட்பாரப் பெஞ்சில் நாலய்ந்து முதியோர்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம் .மகிழ்ச்சியான அந்தப் பொழுதுக்காக பகல் முழுவதும் அவர்கள் வீட்டுக்குள்ளோ திண்ணையிலோ காத்துக்கிடப்பார்கள் .பெண்களுக்கு அந்த வாய்ப்பும் குறைவு.கிட்டத்தட்ட இல்லை.

குழந்தைகள் உலகம் போன்றதே முதியோர் உலகம் .இரண்டும் தனித்துவமானது .ஞாபக சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் அவர்கள் ; வாழ்வில் ஏதோ ஒரு காலகட்ட நினைவோடு தேங்கிப் போவதும் , திரும்பத் திரும்ப அதையே பேசிக்கொண்டிருப்பதும் வாடிக்கை .கேட்பவர்களுக்குச் சலிப்பாக இருக்கும் .ஆனால் அதுவே அவர்களுக்கு சந்தோஷம் தரும் என்பதை அறிவோமா ?

பிறந்த ஊரையோ ,பணி செய்த ஊரையோ விட்டுவிட்டு பிள்ளைகளோடு மொழி தெரியாத வெளிமாநிலத்திலோ வெளிநாட்டிலோ வாழநேரிடும் முதியோர் துயரம் தனி . பேச்சு சதந்திரம் மட்டுமல்ல ,நடமாட்ட சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டுவிடும் .அவர்களுக்கு புத்தகக் காதல் இருப்பின் கொஞ்சம் பிழைப்பர் .இல்லையேல் தொலைகாட்சிப் பெட்டியே கதி .அங்கும் ரிமோட்டு பேரப்பிள்ளைகள் கையில் . இப்போது அலைபேசியே அவர்களுக்கு வரம் . விரும்பிய யாரிடமேனும் பேசிக்கொண்டோ , எதையேனும் பார்த்துக் கொண்டோ பொழுதை நகர்த்தலாம் .அறிவியல் தொழில் நுட்பத்திற்கு நன்றி !

எப்படி பொதுவெளி மறுக்கப்பட்ட பெண்கள் கோயில் ,சடங்கு ,சம்பிரதாயம் எனும் நுகத்தடியில் பூட்டப்பட்டு ஒரு செக்குமாட்டு வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தப் படுகிறார்களோ , அதேபோல் ஆன்மீக ஈடுபாட்டில் முதியோர்களும் பிணைக்கப் படுகிறார்கள். பாலின வேறுபாடின்றி முதியோர்களின் அனுபவமும் திறமையும் விருப்ப ஈடுபாடும் அறிந்து ஆக்கபூர்வ வழியில் செலுத்த நம் சமூகம் எப்போது பக்குவப்படும் ?

இன்று மக்கள் தொகையில் இளைஞர் அதிகம் .இளைஞர் இந்தியா என மகிழ்கிறோம் .இன்னும் இருபதே வருடங்களில் நிலைமை தலைகீழாகும் .  “முதியோர் இந்தியா” ஆகிவிடும் .ஆய்வுகள் அப்படித்தான் சொல்கின்றன . எனவே இப்போதே நாளைக்காக விழிப்பீர் இளைஞர்களே! முதியோர்கள் பக்கம் உங்கள் காதுகளை கொஞ்சம் சாய்ப்பீர்! !
Su Po Agathiyalingam



சொல்.77

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .77 [ 22 /11/2018 ]
 “போதும் என்ற மனமே பொன் செயும் மருந்து” என அடிக்கடி நாம் சொல்கிறோம் .அவருக்கு எவ்வளவு கொடுத்தாலும் , செய்தாலும் திருப்தியே வராது ,அவர் இயல்பு அப்படி என சிலரைப் பற்றித் தீர்ப்பு எழுதுகிறோம் .

வாழ்க்கையில் பேராசை கொள்ளாமல் ,நுகர்வு வெறியில் மூழ்காமல் போதுமென திருப்தியோடு வாழப்பழகுவது அவசியத் தேவையே . குடும்ப வாழ்வில் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்கவும் ,இருப்பதைக் கொண்டு திருப்தியாய் வாழப் பழகுவது ஒரு குறிப்பிட்ட எல்லைவரை அவசியமே .ஆனால் அங்கேயே முடங்கிப்போவதுதான் ஆபத்து .

போதுமென்ற மனமும் ,திருப்தி மனோபாவமும் வளர்ச்சியின் முக்கிய தடைகல் என்பர் .ஆம் , மேம்பட்ட வாழ்க்கையைக் கனவு காண்பதும் , அதற்காக முயற்சி செய்வதும் மட்டுமே முன்னோட்டு உந்தித்தள்ளும் கிரியா ஊக்கியாகும் .

“ஆண்டவன் இன்றைக்கு ஏதோ கஞ்சி கொடுத்திருக்கிறான் ,குந்தக் குடிசை கொடுத்திருக்கிறான் அதற்கு நன்றி சொல்லி திருப்தியாய் வாழ்வோம்.” என ஆன்மீகவாதிகள் சொல்வது சமூக ஏற்ற தாழ்வை – அதன் காரணங்களை – தீர்வை யோசிக்க விடாமல் முடக்கும் மயக்கு வார்த்தைகளே !

மரவுரியோடும் ,மரப் பொந்தோடும் ,சிக்கிமுக்கிக் கல்லோடும் மனித குலம் திருப்தி கொண்டிருக்குமானால் ; இன்றைக்கு நாம் அனுபவிக்கிற எதுவும் கிடைத்திருக்காது .ஆசைப் படுவதும் .அதனைக் கனவு காண்பதும் ,அதனை அடையப் போராடுவதுமே மனித இயல்பு . பேராசை கூடாது என்கிற அர்த்தத்தில் திருப்தி என்பது சரி .ஆனால் அது தேங்கிய குட்டையில் நீச்சலடிப்பதாய் ஆகிவிடக்கூடாது .
Su Po Agathiyalingam



சொல்.76

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .76 [ 21 /11/2018 ]

சாலை விதிகளை மதிப்பதும் . பணியிட பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவதும் தவிர்க்கக் கூடாத கடமை .பொதுவாக இவற்றில் நாம் காட்டுகிற அலட்சியம் சகிக்கமுடியாத அளவு உள்ளது . தண்டவாளத்தை கடக்க அந்த இடம் உகந்தது அல்ல என ஒரு தடுப்பு சுவர் கட்டியிருந்தால் அதில் சுரங்கம் அமைத்தோ எகிறிகுதித்தோ தாண்டி நம் வீரத்தைக் காட்டுவோம் .விபத்தை வாங்குவோம் .

சாலை விதிகளை நாம் மதிக்கிற லட்சணத்தை எல்லோரும் அறிவர் .சாலை விதி என்பது பயணத்திற்கு தடையோ இடையூறோ அல்ல ஒரு ஒழுங்கு .அதைப் பற்றி ஒழுகின் பெருமளவு விபத்தைத் தவிர்க்கலாம் .

தண்டனைக்குப் பயந்து சாலை விதிகளை பின் பற்றுவது வேறு ; சுய ஒழுங்காக ஒரு பண்பட்ட மனிதனாக பின்பற்றுவது இன்னொன்று .முன்னதுக்கே முணுமுணுப்போரிடம் பின்னதை எப்படி எதிர் பார்ப்பது ?

நான் கறார் பேர்வழி .சாலை விதியில் இம்மியும் பிசகமாட்டேன் என்பது சரி .ஆனால் எதிரே வருகிறவர் எதையும் மதிக்காமல் வரும் போது நீ மட்டும் விதியில் கெட்டியாக ஒட்டி நின்றால் உன் தலைவிதி தலைகீழாகிவிடுமே ! விபத்து என்பது நாம் மீறுவதாலும் நிகழும் ,நாம் ஒழுங்காக இருந்தாலும் எதிரில் வருவோர் பிசகினும் விபத்தாகும் . ஆகவே விதிகளை மதிப்பதும் தேவை ; நெருக்கடி நேரத்தில் சற்று மீறலும் தேவை .விதிகளை மதிப்பதும் மீறுவதும் பாதுகாப்புக்காகவே இருக்க வேண்டும் .

சாலை பாதுகாப்பு விதிகள் என்பது வாகன ஓட்டிகளும் ,பாதசாரிகளும் மட்டுமே பின்பற்ற வேண்டிய ஒன்றென எண்ணல் தீது ; சாலை பராமரிப்பு , ஆக்கிரமிப்பு அகற்றல் , வரைமுறையற்ற வாகனப் பெருக்கம் ,பொதுப்போக்குவரத்துக் குறைபாடு ,முறையான இதர ஏற்பாடுகள் அனைத்தும் உள்ளடக்கியதே .இதில் அரசு காட்டும் அக்கறையின்மையே சாலை பாதுகாப்பின் முதல் வைரி .

சமூகப் பொறுப்போடு சாலை பாதுகாப்பு குறித்த உரையாடலை எப்போது தொடங்கப் போகிறோம் ? இப்போது அரசு செய்யும் பிரச்சாரம் அனைத்தும் ஒரு பக்கப்பார்வை அன்றோ !
Su Po Agathiyalingam



புதுநாற்றா முளைக்கோணும் …

Posted by அகத்தீ Labels:




புதுநாற்றா முளைக்கோணும் …


ஆண்டுக் கொரு இழவென்றால்
அழுது அழுது தொலச்சிடுவேன் !
அன்றாடம் இழவென்றால்
தொண்டக் குழியிலும் ஈரமில்ல..

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


சாதிவெஷம் தலக்கேறி
ஆணவக் கொலையாகும்
நாதியற்ற ஜீவனுக்கு
நாள்தோறும் அழுவேனோ ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


மதம்பிடிச்  சலைகின்ற
அதிகார திமிராலே
சதியாலே சாவோருக்கு
அழுதழுது ஓய்வேனோ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


இயற்கையும் பழிவாங்க
புயலுக்கும் மழைக்கும்
பொசுக்கென போனோருக்காய்
அழுது தொலைப்பேனோ ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


விழுந்த தென்னைக்கா
அழிந்த நெல்லுக்கா
இடிந்த குடிசைக்கா
எத்தனைக்கு நானும் அழ …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


நெஞ்சில் மிதிக்கிற வெலவாசிக்கும்
படிச்ச பிள்ள வேலயின்றி
பித்துபிடிச்சு நிப்பதுக்கும்
அழுதபடி வாழ்வேனோ ?

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]


சக்கரையா பேசும் சர்க்காரு
சாமனியன் அடிமடிய புடுங்குது !
உடுத்திருக்கும் கோவணதையும்
உருவ அல்லோ பார்க்குது !

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

மத்தியில ஆளுகிற
மந்திரிங்க மொத்தபேரும்
அம்பானி அதானி
பங்காளியாப் போனாங்க …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

பொணத்தையும் நக்கித் தின்னும்
புத்திகெட்ட அடிமைக
சென்னக் கோட்டயில
ஜடமாய் இருக்காங்க …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

ஏழ பாளங்க என்ன பண்ணித் தொலைக்கிறது
பூச்சி மருந்த குடிக்கணுமோ
நாண்டுகிட்டு சாகணுமோ
நாடாள்வோரா நாக்கழுக சொல்லுங்க …

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

வம்பா பொணமாகி வாழ்வ முடிக்காம
கம்பா நிமிரோணும் கையரிவா துக்கோணும்
நாதியற்று செத்து நாறிக் கிடக்காம
போராடி விழுந்து புதுநாற்றா முளைக்கோணும் !!

[ஆண்டுக் கொரு இழவென்றால் ]

சு.பொ.அகத்தியலிங்கம்.











சொல்.75

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .75 [ 20 /11/2018 ]
அவர் பெரிய ஈகோ பேர்வழி , இவருக்கு ஈகோ ரொம்ப ஜாஸ்தி  என பலரைப் பற்றி நாம் விமர்சிக்கிற ஒவ்வொரு நொடியிலும் நம் ஈகோ அம்மணமாய் ஆட்டம் போடுவதை அறியாமல் இருக்கிறோம் .

ஈகோ எனப்படும் அகந்தை ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சிக்கல் .தனக்கு ஈகோ எல்லாம் கிடையாது என ஒவ்வொருவரும் சொல்லிக் கொள்வர் .ஆனால் ஈகோ இல்லாத மனிதர் கிட்டத்தட்ட இல்லை . மத்தியதர மக்களிடம் அதிகம் தலைதூக்கும் .அடித்தட்டு உழைப்பாளிகளிடம்  சொற்பமாய் தலைநீட்டும் .பொதுவாய் ஒருவரிடம் அது ஓங்கி ஆட்டுவிக்கும் , இன்னொருவரிடம் அவ்வப்போது தலைதூக்கும் . அவ்வளவே!

ஈகோவை தவிர்க்க நிறைய உபதேசங்கள் கேட்டுச் சலித்துவிட்டோம்.தியானம் ,யோகா , ஆன்மீகம் இவையே ஈகோவுக்கு ஆகச் சிறந்த மருந்தெனச் சொல்லி விற்பர் .நடைமுறையில் அது எவ்விதத்திலும் ஈகோவைக் கட்டுப்படுத்தவில்லை என்பதை சாமியார்களும் ,மதவெறியர்களும் ஆன்மீக அன்பர்களும் தினம் தினம் ஒவ்வொரு செயலிலும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் .

உளவியல் நிபுணர்களின் கவுன்சிலிங்கூட பலன் தருவதாய் தோற்றம் காட்டி மறைகிறது . முற்போக்காளர் ,புரட்சியாளர் இடையிலேகூட ஈகோ பெரும் சவால்தான் . கியூபாவின் பெரும் தலைவர் தோழர் ஃபிடல் காஸ்டிரோ வழங்கிய ஒரு நெடிய நேர்காணலில் இதனை பகீரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார் .

அப்படியாயின் இது தீர்வற்ற பிரச்சனையா ? இல்லை . தேங்குகிற குட்டையில் நாற்றம் அதிகம் இருக்கும் . ஓடுகிற தண்ணிக்கு சூதகம் இல்லை . ஒரு இலக்கை நோக்கி அர்ப்பணிப்போடு இயங்கும் போது ஈகோ பெரிய அளவு தலைநீட்டாது ,அப்படியே நீட்டிடினும் எதிரிலிருக்கும் சவால் அதனை மட்டுப்படுத்திவிடும் .

தனி நபர் வாழ்விலும் ஒரு இலக்கை நோக்கி ஓடும் போது . இயல்பாகவே கவனம் அதைநோக்கி குவிமையப்படும் போது ஈகோ கொஞ்சம் அடக்கி வாசிக்கும் . எல்லோருக்கும் சம வாய்ப்பும் சமூக சமநிலையும் மிக்க புதிய சமூகம் பிறக்கும் வரை ஈகோவுக்கு எதிராக நீங்களும் நானும் போராடிக்கொண்டேதான் இருக்க வேண்டும் .குளிக்க குளிக்க மீண்டும் மீண்டும் அழுக்கு சேரத்தான் செய்யும் ,மீண்டும் குளிக்கத்தான் வேண்டும் .ஈகோவுக்கும் அதேதான் .
Su Po Agathiyalingam



சொல்.74

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .74 [ 19 /11/2018 ]

இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்யப் போனால் ஒரு நண்பரை இழப்போம் .அவர் எதிரியாகிவிடுவார் .இரண்டு எதிரிகளுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனையில் தலையிட்டு சமரசம் செய்யப் போனால் ஒருவர் நண்பராகிவிடுவார் . இப்படி அலைபேசியில் உரையாடும் போது ஒரு தோழர் சொன்னார் .எவ்வளவு அர்த்தச் செறிவும் அனுபவ கசப்பும் அடங்கிய உண்மை .

எல்லோருமே தன் தரப்பு மட்டுமே நியாயம் என்று கருதுவது இயல்பு . மூன்றாம் நபர் பார்வையில் அவ்வாறு இருக்க வாய்ப்பு இல்லை .ஆனால் அது ஒரு பக்க சார்பாகவே ஒரு சாரர் கருதுவர்  .ஏனெனில் ஒன்று பிர்ச்சனையின் முழு உண்மையையும் யாரும் ஒரு போதும் சொல்வதில்லை .அவரவருக்கு சாதகமானதை மட்டுமே சொல்வர் .இரண்டாவதாக ,முற்றி வெடிக்கும் பிரச்சனை என்பது உடனடிக் காரணம் ஆனால் அதற்கு முன்பே ஏதோ புரிதல் கோளாறும் ,அணுகுமுறைக் குளறுபடிகளும் அதனால் ஊறிப்போயிருக்கும் கசப்புமே ஒரு பிரச்சனையில் வெடிக்கும்.மூன்றாவதாக சமரசம் செய்துவைக்க முயலுவோர் மனதிலும் இருவர் குறித்த முன் மதிப்பீடும் ,அவரது பார்வைக் கோணமும் இருக்கும் .

ஆக எந்த சமரசமும் ஒருவரை மகிழ்விக்கும் இன்னொருவரை கோபப்படவே வைக்கும் .பிரச்சனை தற்காலிகமாக தீர்ந்தாலும் நீறு பூத்த நெருப்பாய் உள்ளுக்குள் புகைந்து கொண்டே இருக்கும் . சுயவிமர்சனம் என்பதே இதிலிருந்து மீள முக்கிய ஆயுதம் . அகத்தாய்வு எனவும் இதனைச் சொல்லலாம் .

முதலில் தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டு ,பின்னரே அடுத்தவரை விமர்சனம் செய்ய வேண்டும் . கம்யூனிஸ்டு கட்சி கிளைகளில் ஆண்டுக்கொரு முறை உறுப்பினர் புதுப்பித்தலின் போதும் இம்முறை கட்டாயம் கைக்கொள்ளப்படும் . ஆயினும் வெறும் சடங்கு பூர்வமாக இதைச் செய்வதே பெரும்பாலும் நடைமுறையாக உள்ளதால்தான் பிரச்சனை முற்றி கோஷ்டியாகிறது .

நிறுவனமோ .குடும்பமோ ,இயக்கமோ .தனிநபரோ அகத்தாய்வில் தன்னை திருத்த பிழைகளை பகீரங்கமாக ஒப்புக் கொள்வதும் முதற்படி . இதனை உபதேசிப்பது எளிது .அமலாக்கம் அப்படி அல்ல . என்னிடம் ,உங்களிடம் ,நம்மிடம் உள்ள ஈகோவே பெரும் தடைக்கல் .
Su Po Agathiyalingam



சொல்.73

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .73 [ 18 /11/2018 ]

 “பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது” என்றொரு சொலவடை நம்மிடம் புழக்கத்தில் உண்டு . வாழ்க்கையில் பல நேரம் நாம் ஒரு நோக்கத்தோடு திட்டமிடும் செயல்கள் நேர் எதிர் விளைவை உருவாக்கிவிடுவது உண்டு .நம் திட்டமிடலில் கோளாறு இருந்திருக்கலாம் , நம் இலக்கே பிழையாக இருந்திருக்கலாம் ,நம் திறமைக் குறைவு காரணமாக இருந்திருக்கலாம் இப்படி ஏதோ ஒரு காரணம் சார்ந்து நம் செயலில் விளைவு நம் விருப்பத்துக்கு எதிராய்ப் போயிருக்கலாம் . இப்போது என்ன செய்வது என்பதே கேள்வி .

ஒன்று குரங்கை ஏற்க மனது பக்குவப்பட வேண்டும் அல்லது மீண்டும் பிள்ளையார் பிடிக்க முயல வேண்டும் .முன்னது எளிதானது ஆனால் தவறானது ,பின்னது சவாலானது ஆனால் சரியானது  .இடிந்து போய் ஆட்டையை கலைப்பதையும் சிலர் செய்யக்கூடும் .ஆக ஒவ்வொரு தோல்வியும் நமக்கு சில வாசல்களை நமக்குத் திறக்கிறது .எந்த வாசலைத் திறக்கிறீர்கள் என்பதில்தான் உங்கள் சாமர்த்தியமும் உறுதியும் அடங்கி இருக்கிறது .சுற்றி சுற்றி வந்த இடம் எது ? மன உறுதி ,ஊக்கம் இவையே  வெற்றியின் சாவி .

 “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் /உள்ளத் தனையது உயர்வு.”என்பது குறள் தண்ணீரின் அளவுதான் அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதரின் வாழ்க்கையின் உயர்வு அவர் மனத்தில் கொண்டுள்ள ஊக்கத்தின் அளவே இருக்கும் என்பர் உரையாசிரியர் .

எல்லாம் சரி ! தண்ணீரின் அளவை எது தீர்மானிக்கும் . குளத்தின் ஆழம் ,கரையின் உறுதி ,வெள்ளம் வரும் வாய்க்கால் ,பெய்யும் மழை இன்னும் பல .  ‘வெள்ளத்தனைய’ என வள்ளுவர் சொன்னதுக்கு இவ்வளவு ஆழ்ந்த பொருளிருப்பதை அறியாதவரை ; நாம் பிடிக்கிற பிள்ளையார் குரங்காகத்தான் மாறும் .

ஆகவே சரியான சமூகப் பார்வையோடு உங்களின் திட்டமிடலும் செயலும் இணையும் போது மட்டுமே இலக்கை நோக்கிய அடிவைப்பு உறுதியானதாக மாறும் .உள்ளத்து ஊக்கம் எனப்படுவதே சமூக ஞானத்தோடு செதுக்கப்பெறுவதே என்பதை நாம் புரிந்தால் நம் தலைமுறை விழிக்கும் !
Su Po Agathiyalingam



சொல்.72

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .72 [ 16 /11/2018 ]
எதுவாயினும் வீட்டிலுள்ள அனைவரையும் கூட்டிப் பேசுவதும் ; முடிவெடுப்பதும் மிகவும் ஆரோக்கியமான நடைமுறை .ஆயின் கிட்டத்தட்ட நம் சமூக வாழ்வில் இங்ஙனம் நடக்கும் குடும்பங்களைப் பார்ப்பதே அபூர்வம் .குடும்பத் தலைவரின் சொல்லுக்கு மறு பேச்சின்றி ஒப்புக் கொள்வதே சிறந்த குடும்ப வாழ்வின் இலக்கணம் என நமக்கு சொல்லிச் சொல்லி வளர்த்திருக்கிறார்கள் .

ஆக ,குடும்ப ஜனநாயகம் என்ற சொல்லே குடும்பத்தில் குழப்பத்தை விளைவிக்கும் ஒரு வில்லனாகவே பார்க்கப்படுகிறது . அதுவும “ பெண்ணுக்கு என்ன உலக ஞானம் இருக்கும் ,, நாட்டு நடப்புத் தெரியுமா ,.. ஆம்பளைதான் அனைத்தும் அறிந்தவன் , நாலு யோசித்துத்தான் முடிவெடுப்பான் .அதற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தாலே மகிழ்ச்சி பொங்கும் .” இப்படித்தான் பொதுபுத்தியில் காலங்காலமாய் உறைந்து போயுள்ளது .இதை வழித்தெறிவது அவ்வளவு சுலபமல்ல .ஆனாலும் அதற்கான உரையாடலை இப்போதே துவங்கியாக வேண்டும் . வேறுவழியில்லை .

இங்கேதான் பிரச்சனை .முதலாவதாக எந்தப் பிரச்சனையை எடுத்தாலும் எல்லோரும் ஒரே போல் தெளிவாக இருப்பார்களோ ? மாட்டார்கள் .ஏனெனில் சமூகத்தோடு உள்ள உறவும் , வாய்ப்பும், ஊடாட்டமும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும் போது பார்வையும் மாறுபடத்தான் செய்யும் . அடுத்து எல்லோரும் பிரச்சனையை பரந்த மனதோடு எல்லோரும் அணுகுவார்களா ? அதிலும் ஒவ்வொரு பிரச்சனையிலும் ஒவ்வொருவரோடும் உள்ள விருப்பும் வெறுப்பும் சேர்ந்தே வினையாற்றும் . ஆக ,ஒத்த கருத்தோடு எல்லோரும் ஒரு முடிவெடுக்க இயலுமா ? சுலபமே அல்ல . என்ன செய்வது ?

அவசரமாக அன்றே முடிவெடுக்க வேண்டியவை தவிர மற்றவைகளை பற்றி ஒரே நாளில் ஏன் முடிவெடுக்க வேண்டும் . பிரச்சனையை முன்வைத்து அவரவர் கருத்தைச் சொல்லிவிடுங்கள் . முடிவெடுப்பதை மட்டும் தள்ளி போடுங்கள் .
வீட்டுக்குள் ஆளுக்கு ஆள் விவாதிப்பார்கள் .நல்லதும் கெட்டதும் வெளிப்படும் .ஒவ்வொருவரும்  அடுத்தவர் கோணத்திலும் ஒரு முறை யோசித்துப் பாருங்கள் . நிச்சயம் இங்கே ஆறின கஞ்சி பழங்கஞ்சியாக  அல்ல பக்குவப்பட்ட முடிவாக முகிழ்க்கும் !

நாட்டில் ஜனநாயகமே இன்னும் சரியாக வளரவில்லை .குடும்பத்தில் பூத்தா குலுங்கும் ? பொறுமையோடு விதையுங்கள் . நீர் பாய்ச்சுங்கள்  . உரம் போடுங்கள் .நிச்சயம் வருங்காலத்தில் மெல்ல பயன் தரத் துவங்கும் .
 Su Po Agathiyalingam



சொல்.71

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .71 [ 12 /11/2018 ]
பிறந்த ஊர் ,படித்த ஊர் ,வளர்ந்த ஊர் ,பணிபுரிந்த ஊர்கள் ,ஓய்வு பெற்ற ஊர் ,இப்போது வாழ்கிற ஊர் . மரணம் தழுவும் ஊர் எல்லாம் வெவ்வேறாக இருப்பதே இன்றைக்கு பலரின் வாழ்க்கை அனுபவமாக மாறிப் போயுள்ளது .இப்போது நீ எந்த ஊர்க்காரன் என்பதற்கு என்ன பதில் சொல்வது ? பெருங் கேள்வியே !

போகிற போக்கைப் பார்த்தால் மேலே ஊர் எனப் போட்டிருக்கும் இடத்தில் எல்லாம் நாடு எனப் போடும் காலமே வந்துவிடுமோ ? இன்றும்  ‘அவன் வந்தேறி இவன் வந்தேறி’ எனப் பேசித்திரியும் சிலரைப் பார்த்து சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை .

இப்படி ஊர் ஊராய் நாடு நாடாய் பந்தடாப்படும் வாழ்க்கையில் பண்பாடும் பாரம்பரியமும் மட்டும் அப்படியே ஆடாமல் அசையாமல் குத்துக்கல்லாய் தலைமுறை தலைமுறையாய் தொடருமோ ? நாம் பிறந்த ஊரும் நேற்று இருந்தது போலவா இன்றும் இருக்கிறது .நாளையும் இப்படியேதான் இருக்குமா ?

தனிமனிதர் வாழ்விலும் சமூகத்திலும் பழக்க வழக்கம் , பண்பாடு எல்லாம் கலந்துகொண்டும் மாறிக்கொண்டும்தான் இருக்கும் . வரலாறு நெடுக அப்படித்தான் இருந்தது .ஆயினும் அது மெதுவாய் நத்தையைப்போல் நகர்ந்து கொண்டிருந்தது ,இப்போதைய சூழல் சூறாவழியாய்த் தூக்கிப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது .

நீங்களோ நானோ எந்த ஒரு சமூகமோ இதிலிருந்து தப்பிக்கவே முடியாது . ஆயினும் எதை எங்கு போனாலும் சுமந்து சென்று அடுத்தவருக்கு பெருமையாய்க் காட்ட வேண்டும் ; ஈர்க்க வேண்டும் என்பதில்தான் நம் பண்பாட்டு அளவுகோல் இறுதியில் தொக்கி நிற்கிறது .

போகிற இடமெல்லாம் சாதியத்தை ,பாலின ஒடுக்குமுறையை , மூடத்தனங்களை ,மதவெறி சம்பிரதாயங்களை ,கேள்விமுறையற்று சரண்டைவதை சுமந்து செல்லுகிற எவரும் மனிதப் பிறவி என்பதன் பொருளைச் சிதைத்துச் சீரழித்தவரே ஆவர் .

மனிதராய் வாழ்ந்திட மனதை விசாலமாக்க வேண்டிய காலம் .அறிவை ஆழ உழ வேண்டிய காலம் . நுனிப்புல் மேய்ந்து பழம்பஞ்சாங்கக் கதை பேசி திரிந்தால் வரலாறு மன்னிக்காது .தண்டிக்கும் .
Su Po Agathiyalingam



சொல்.70

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .70 [ 11 /11/2018 ]
 அவர் வாயைத் திறந்தால் பொய்தான் .பொய்யைத் தவிர அவருக்கு வேறெதுவும் பேசத் தெரியாது .இப்படி ஒரு சிலரை அர்ச்சிக்கிறோம் . அவர் சத்திய புத்திரன் .அவர்  சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் . வாழும் அரிச்சந்திரன் அவர் . இப்படி சிலரை சிலாகிக்கிறோம் .

முழு உண்மை .முழுப் பொய் என்பதெல்லாம் சும்மா பேச்சுக்குத்தான் . உண்மை அப்படி அல்ல . நீங்கள் உண்மையைச் சொல்வதாயினும் அப்படியே சொன்னால் யாரும் நம்ப மாட்டார் .ஏற்கவும்மாட்டார் .கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்தே சொல்லும் போதுதான் அந்த உண்மைக்கும் உயிர் வரும் .

ஏனெனில் நீங்கள் அறிந்தது மட்டுமே உண்மை அல்ல ; அது உண்மையின் ஒரு பக்கம் மட்டுமே ! உண்மையின் மறுபக்கத்தை நீங்கள் தேடி இருக்கமாட்டீர்கள் . யோசித்திருக்கவும் மாட்டீர்கள் .எல்லா உண்மையையும் எல்லா இடத்திலும் பேசிவிடவும் முடியாது . நீதி மன்றத்தில் சத்தியம் செய்யும் போதுகூட எல்லா உண்மையையும் சொல்லுகிறேன் என்றா சத்தியம் செய்கிறோம் .இல்லையே  “ நான் சொல்வதெல்லாம் உண்மை .உண்மையைத் தவிர வேறில்லை .” அப்படி எனில் சொல்லப்படாத உண்மையும் உண்டுதானே !

பொய் சொல்வதற்கு துணிச்சல் மட்டுமல்ல நிறைய கற்பனையும் ஞாபக சக்தியும் வேண்டும் .ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்க வேண்டும் .பொதுவாகச் சொல்வார்கள் “ கடன் வாங்குங்கள் ஞாபக சக்தி அதிகருக்கும் . ஆம் கடன் வாங்கும் போது சொன்ன பொய் , கடனைக் கட்டாமல் தொடர்ந்து சொல்லுகிற பொய் எல்லாம் ஒன்றோடு ஒன்றுப் பொருந்திப் போக வேண்டும் . ஆகவே சொல்லும் ஒவ்வொரு பொய்யையும் ஞாபகம் வைத்தாக வேண்டும் .”
எல்லா பொய்யையும் நுணுகி ஆராய்ந்தால் அது ஏதோ உண்மையின் ஒரு சிறுகூறின் மீதே பொய்யும் கட்டமைக்கப்பட்டிருக்கும் . ஆக உண்மை கலவாத பொய்யோ .பொய் கலவாத உண்மையோ ஒரு போதும் இல்லை .அதன் விகித்தாச்சாரமே பொய் .மெய் என்பதை இறுதியில்  முடிவு செய்யும் .

நான் சொல்வது வாழ்க்கையில் நாம் பேசும் உண்மை /பொய் குறித்ததே . சில அரசியல் வாதிகள் பேசும் பொய் உலகின் எந்த சூத்திரத்திலும் அடங்காதென்பது தனிக்கதை !!!!
Su Po Agathiyalingam



சொல்.69.

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .69 [ 11 /11/2018 ]
 “சார் ! வாஸ்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க ?” என ஒருத்தர் என் வாயைக் கிளறினார் .

 “வீடு கட்டுவதற்காக ஆதியில் சில நெறி முறைகளை உருவாக்கி இருக்கலாம் .அவை அன்றையப் புரிதல் ,தேவையை ஒட்டி எழுந்திருக்கலாம். அவற்றில் பல உருவான இடத்தின் தட்ப வெப்பம் சார்ந்தும் பருவ சுழற்சி சார்ந்தும் வாழ்க்கை பழக்க வழக்கங்கள் சார்ந்தும் உருவாக்கப் பட்டிருக்கலாம் ; ஆனால் அவை இன்றும் எங்கும் அப்படியே பொருந்தும் என்பதும் ; வாழ்க்கை செழிப்பிற்கோ துன்ப துயரங்களுக்கோ அதுவே காரணம் என்பதும் வடிகட்டிய மூடத்தனம் என்பதன்றி வேறென்ன ?”

வீட்டில் கழிப்பறை என்பதோ , படுக்கை அறையோடு இணைந்த கழிப்பறை என்பதோ பண்டைய வாழ்வில் யோசித்திருக்கவே முடியாத ஒன்றல்லவா ? அடுக்களை என்பது விறகடுப்பின் தேவையை ஒட்டி ஜன்னல் எதுமின்றி இருட்டாய் ஒதுக்குப் புறமாய் இருப்பது அன்றையத் தேவை ,இன்று எரிவாயு பயன்படுத்தும் சூழலில் காற்றோட்டமாய் ,விபத்து எனில் உடன் தப்ப உகந்ததாய் முன்பக்கம் அமைவதே பொருத்தமானது .

நிறைய இடவசதியும் மக்கள் தொகை குறைவாகவும் இருந்த அப்போதைய வாஸ்து அது சார்ந்துதானே இருக்கும் .இன்று பெரும் மக்கள் தொகை .எல்லோருக்கும் வீடு எனில் அடுக்ககங்களே சாத்தியம் .ஆக இன்றைய தேவையும் வாய்ப்பும் அதற்குத் தகுந்தாற் போல் மாறித்தான் ஆகவேண்டும் .இங்கு இதை இப்படி மாற்றிவை அப்படி மாற்றி வை என்பதெல்லாம் இடவசதி ,தேவை பற்றிய ஞானமின்றி செய்யப்படும் வாஸ்து மூடத்தனமே !

அதெல்லாம் இருக்கட்டும் !  ‘பெட்ரூம்’ , ‘பிரைவேஸி’ என்றெல்லாம் நுனிநாக்கில் பேசுவோரே ! ஏழைகளுக்கு அரசு ஒதுக்கும் வீட்டில் ஒற்றை அறையில் கணவன் ,மனைவி ,வயதுக்கு வந்த பெண் ,பிள்ளை ,அப்பா ,அம்மா எல்லோரும் இடித்துக்கொண்டு படுக்க வேண்டும் .நீங்கள் சொன்ன எதுவும் அவர்களுக்கு இல்லையா அல்லது மனித மாண்பே அவர்களுக்கு மறுக்கப்படுவதேன் ? வாஸ்து /வீட்டு பிளான் எதுவாயினும் வர்க்கம் ,வர்ணம் ,சாதி எல்லாம் மூக்கை நுழைக்கத்தானே செய்கிறது என்னத்தச் சொல்ல?
Su Po Agathiyalingam



சொல்.68

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .68 [ 10 /11/2018 ]
சிரிப்பு ஓர் யோகா ,மருத்துவம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அது மெய்யே !அழுகையும் அப்படித்தானே எனில் ஏற்கத் தயங்குவர் .ஆயின் அதுவும் மெய்யே !இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே !

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது சரியே ! வாய்விட்டு அழுதால் மனசு லேசாகும் என்பதும் சரியே ! சிரிப்பும் அழுகையும் மனித உளநலனுக்கு அவசியமான இரண்டு வடிகால்கள் . ஆனால் இரண்டையும் இரு பாலருக்கும் உரியதாகப் பார்க்கும் சமூக உளவியல் உளதா ? ஐயமே!

பொம்பள சிரிச்சா போச்சு ,புகையில விரிச்சா போச்சு என பழமொழி சொல்லியே வாயை மூடிவிடுவர் . பொம்பள சிரிக்கிற சத்தம் வெளியே கேட்கக்கூடாதென இப்போதும் சொல்லும் ஆணாதிக்க மனிதர் உண்டு . பெண்ணின் சிரிப்புக்கு விதவிதமாய் சாயம் பூசத் தயங்காத நாடு இது . திரெளபதி சிரித்ததால்தான் மகாபாரத யுத்தம் என்று கதைவிடுவோர் உண்டு . ஆக சிரிப்பை ஆணுக்கு உரியதாக கிட்டத்தட்ட வகைப்படுத்திவிட்ட சமூகம் பெண்ணுக்கு என்ன தந்தது ?

நீ ஆம்பளயா லட்சணமா இரு ! பொம்பள மாதிரி கண்ணக் கசக்காதே . இதில் ஆண் அழக்கூடாது என்று மட்டும் சொல்லவில்லை .அழுகை பெண்ணுக்குரிய இழிந்த குணம் எனவும் சித்தரிக்கப்படுகிறது . பொதுவாய் வாய்விட்டு அழுவது பெண்ணின் இயல்பு போலவும் அமுக்கமாய் அழுவதே ஆணின் இயல்பு போலவும் ஒருவித மயக்கம் விதைக்கப்பட்டுள்ளது .

ஆணோ பெண்ணோ வாய்விட்டு சிரிப்பதும் ; வாய்விட்டு அழுவதும் இயல்பானது .தேவையானது . இதில் பாலின பேதம் கற்பித்தல் மடமை .மனதில் தேக்கிவைக்கப்பட்ட உணர்ச்சி பதட்டத்தை விசிறிவிடும் , இரத்தக் கொதிப்பை அதிகரிக்கும் .

ஆனால் எங்கு சிரிப்பது ,எங்கு அழுவது ,எதற்குச் சிரிப்பது ,எதற்கு அழுவது என்பதில்தான் வாழ்வியல் நுட்பம் அடங்கி இருக்கிறது . சிரிக்கக்கூடாத இடத்தில் சிரிப்பதும் ,அழக்கூடாத இடத்தில் அழுவதும் நம்மை பலகீனராக்கிவிடும் . சிரிப்பும் அழுகையும் ஆரோக்கியமான உணர்ச்சிகளே ; அது நம் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை .
Su Po Agathiyalingam



சொல்.67

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .67 [ 9 /11/2018 ]
ஆடம்பரம் தவிர்ப்பீர் . இந்த உபதேசத்தைக் காலங் காலாமாகக் கேட்டு வருகிறோம் . எது ஆடம்பரம் ? நேற்றின் ஆடம்பரம் இன்றின் தேவையாகிவிட்டதே ! ஆடம்பரத்தின் அளவுகோல்தான் எது ?

வானொலிப் பெட்டியும் கல்லுவீடும் நெல்லுச் சோறும் ஆடம்பரமாக இருந்த காலம் ஒன்று உண்டு . பிளாக் அண்ட ஒயிட் டிவி ,கலர் டிவி ,சாதா மொபைல் ,ஐ போண் ,லேப் டாப் ஒவ்வொன்றும் ஆடம்பரமாயிருந்து பின் அத்தியாவசியமாய் மாறிப்போனதே ! எப்படி ஆடம்பரத்தைத் தீர்மானிப்பது ?

ஆடம்பரத்தில் அளவுகோல் ஆளுக்கு ஆள் , ஊருக்கு ஊர் ,காலத்துக்கு காலம் ,மாறிக்கொண்டே இருக்கும் .வர்க்கம் ,வர்ணம் ,சாதி ,வயது ,பாலினம் ,கிராமம் ,நகரம் ,நவீன கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் ஆடம்பரம் எதுவென கட்டடளை இடுமே !வரையறையை மாற்றிக் கொண்டே இருக்குமே !

முன்பு டிமாண்ட அண்ட் சப்ளை என்கிற ரீதியில் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டது .அப்போது ஆடம்பரம் என்பதின் பொருள் வேறு .இப்போது முதலாளி எதை உற்பத்தி செய்கிறானோ அதனை வாங்கிக் குவிக்கும் நுகர்வோராக வெகுமக்களை கட்டமைக்கிறது .தொலைகாட்சியும் இதர ஊடகங்களும் 24 x 7 மணி நேரமும் அதற்கே சேவை செய்கிறது . ‘நுகர்வெனும் பெரும்பசி’யில் மனிதகுலம் சிக்கித் தவிக்கிறது .இப்போது ஆடம்பரம் என்பதன் பொருளே வேறு .

எது தேவை ? எதற்குத் தேவை ? ஏன் தேவை ? பணத்திற்கான வாசல் எது ? இப்படியான கேள்விகளூடேதான் ஒவ்வொருவரும் எது ஆடம்பரம் என்பதை முடிவு செய்ய இயலும் . “ இது இல்லாவிட்டால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடும் ? சமாளிக்கவே முடியாதா ?” இக்கேள்வியே ஆடம்பரத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான கேள்வி .

வட்டிக்கு வாங்கி பட்டாசு வெடிப்பது ஆடம்பரம் . மாறிடும் உலகோடு தன்னை புத்தாக்கம் செய்ய முனைவது ஆடம்பரமாகிடுமா ? ஆடம்பரம் என்பதின் எல்லை காலம் தோறும் மாறும் .நீளும் .ஆயினும் , நுகர்வெனும் பெரும் பூதத்தின் வாய் கரும்பாய் அரைபடாது வாழப்பழகுவதே அறிவுடைமை !!!
Su Po Agathiyalingam



Posted by அகத்தீ


சொல் ..66

Posted by அகத்தீ Labels:


தினம் ஒரு சொல் .66 [ 8 /11/2018 ]

 “இரண்டு நாளா வயிற்று வலி…” என சொன்னதும் , “ சார் ! வயிற்று வலின்னு சும்மா இருந்திடக்கூடாது … இப்படித்தான் என் மச்சான் அசால்ட்டா விட்டான் …கேன்சர் முற்றி ஆயுளே முடிஞ்சு போச்சு …” இப்படி மிரட்டலோடு உடனே ஸ்பெஷலிஸ்டை சந்திக்க ஆலோசனை சொல்லி முகவரியும் தருவார் சில பேர் .

சாதாரண பிரச்சனைக்குக் கூட ஸ்பெஷலிஸ்டைப் பார்ப்பதும் ; டாக்டர் சொல்லாவிட்டாலும் கூட அந்த டெஸ்ட் பார்ப்பமோ இந்த டெஸ்ட் பார்ப்போமா என அலப்பறை செய்வது இப்போது பேஷனாகிவிட்டது .

உலகில் எந்த நாட்டிலும் எடுத்தவுடன் ஸ்பெஷலிஸ்டை பார்க்க மாட்டார்கள் .பார்க்கவும் முடியாது . குடும்ப டாக்டர் எனப்படும் பொது மருத்துவர் முதற்கட்ட சிகிட்சை அளித்தபின்னரே ,அவர் சிபாரிசு அடிப்படையில் மட்டுமே ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க முடியும் .

 “அது சரி ! இங்கு இவருக்கும் அவருக்குமே அண்டர் ஸ்டேண்டிங்கில் கமிஷன் வியாபாரம்லா நடக்குது…” என நீங்கள் சொல்வது சரிதான் .ஆயினும் நம் மொத்தக் குடும்பமும் ஒரே டாக்டரிடம் நீண்டநாள் அனைத்துக்கும் சிகிட்சை பெறும்போது .அவருக்கு நம்மைப் பற்றிய முழு ஞானம் இருக்கும் , நமக்கும் நம்பிக்கை இருக்கும் .இச்சூழலில் நீங்கள் சொன்னது போல் நடக்கும் வாய்ப்பு குறைவுதானே !முதலில் குடும்ப டாக்டரிடம் யோசனை பெறும் பழக்கத்தை வளர்ப்போம் .

என் வீட்டருகே உள்ள ஒருவரின் மனைவி திடீரென உடல் நலிவுற்ற போது டாக்டரிடம் அழைத்துப் போக நான் உதவினேன் . டாக்டரிடம் அவர் கணவர் இதுவரை அப்பெண் பெற்ற சிகிட்சைகள் ,சாப்பிட்ட மாத்திரைகள் குறித்து ஒரு குறிப்பு நோட்டுப் புத்தகத்தைத் தந்தார் . புதிய டாக்டர் எனினும் சரியாக வழிகாட்ட அது உதவியது .

இப்படி  ‘மருத்துவ ஜாதகம்’ எழுதி வைக்கும் பழக்கம் பல நாடுகளில் பண்பாடாகவும் பயிற்சியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது . நம் வாழ்வில் பைசாவுக்கு பிரயோசனம் இல்லாததும் ; திருமணத்தில் மட்டும் அளவுக்கு அதிகமாக மூக்கை நுழைத்துக் கெடுப்பதுமான ஜாதகத்தை ஜோதிடர் மூலம் எழுதித் தொலைக்கிறோம் .அதற்குப் பதில்  ‘மருத்துவ ஜாதகம்’ எழுதிவைக்கும் பயிற்சியை எப்போது பெறப்போகிறோம் ?

Su Po Agathiyalingam


சொல்.65

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .65 [ 7 /11/2018 ]

நம் வீட்டிற்கு திடீரென்று நாலய்ந்து விருந்தினர் வந்துவிட்டால் , உதடு  ‘வாங்க வாங்க’ என வரவேற்றாலும் மனசுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் அலை மோதும் . அவர்களுக்கு என்ன உண்ணத் தருவது , எத்தனை நாள் தங்குவார்கள் , நாம் ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் என்ன ஆகும் , சொல்லாமல் கொள்ளாமல் படையெடுத்து வந்ததின் காரணம் என்னவாக இருக்கும் இப்படி பல கேள்விகள் .

பட்டென்று கேட்கவும் முடியாது . தள்ளவும் முடியாது . பெரும் தவிப்புதான். .ஆனாலும் முகத்தில் எந்தக் குழப்பத்தையும் காட்டாமல் இன்முகம் காட்டி நடித்தாக வேண்டும் .எல்லோருக்கும் இந்த அனுபவம் ஏதோ ஒரு விதத்தில் இருக்கும் .

எவ்வளவு நெருங்கிய உறவினராக ,நண்பராக இருப்பினும் செல்லுவதற்கு முன்பே அவர்கள் அந்த நாளில் இருப்பார்களா ,நம் வருகைக்கு அந்த நாள் வசதியாக இருக்குமா , எதற்கு வருகிறோம் ,எத்தனை நாள் தங்க வேண்டி இருக்கும் என்பதை பேச்சுவாக்கில் சொல்லிவிடுவது நல்லது அல்லவா ?

நம் வருகை அவர்களுக்கு சுமையாக இருக்குமா மகிழ்வாக இருக்குமா என்பதை ஓரளவு கணித்து திட்டமிட்டு செல்வதே நல்லது . திடீரெனப் போய் அவர்களையும் கஷ்டப்படுத்தி ,நீங்களும் காயப்பட்டு ,உறவிலும் முறுகல் ஏற்பட்டு வருந்துவதைவிட முன்பே குறிப்பறிந்து போதல் நல்லதல்லவா ?

விருந்தோம்பல் உயரிய பண்புதான் ,ஆனால் இன்றைய இயந்திரமாகிவிட்ட வாழ்க்கைச் சூழலில் , வீட்டின் இடவசதி ,பணிச்சூழல் , ஏனைய நெருக்கடிகள் ஒவ்வொருவர் கழுத்தையும் நெரித்துக் கொண்டிருப்பதை மறந்துவிடக் கூடாது .

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் என நம் முன்னோர்கள் அனுபவித்துச் சொன்னது சரியே ! இன்றைக்கு இருப்பத்தி நாலுமணி நேரம் என்பதுகூட அதிகமே ! எல்லாவற்றிலும் நிச்சயம் விதிவிலக்குகள் உண்டு ஆயினும் அதை விதியாகக் கொள்ளக்கூடாது அல்லவா ?
Su Po Agathiyalingam





















































































































































































சொல்.64

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .64 [ 6 /11/2018 ]

ஒவ்வொருவர் வீட்டிலும் அலமாரியில் பலவிதமான மாத்திரைகள் குவிந்திருக்கும் .அவற்றுள் காலாவதியானது நிறையவே இருக்கும் . அவற்றின் விலையைக் கணக்கிட்டுப் பார்த்தால் நாம் எவ்வளவு காசை விரயம் செய்திருப்போம் என்பதை உணர முடியும் .

உடல் நிலை பாதிக்கப்பட்டதும் மருத்துவமனைக்கு ஓடுகிறோம் .டாக்டர் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு மருந்து எழுதுகிறார் .நாமும் அப்படியே வாங்கிவிடுகிறோம் .மறுநாளே குணமாக வேண்டும் என எதிர்பார்க்கிறோம் . பொறுமை இல்லை .மீண்டும் டாக்டரிடம் ஓடுகிறோம் .அவர் வேறு மாத்திரை எழுதித் தருகிறார் .அதையும் மொத்தமாக வாங்குகிறோம் . முதலில் எழுதிய அதே மாத்திரைதான் வேறு கம்பெனி மாத்திரை அவ்வளவே .மறுநாள் உடல் நலம் தேறிவிடுகிறது . மாத்திரையை நிறுத்தி விடுகிறோம் .

டாக்டர் எழுதினாலும் ஒவ்வொரு நாளுக்கு உரியதை மட்டும் வாங்கினால் போதாதா ? எல்லா ஊரிலும் மருந்துக் கடை உண்டு . அதே கம்பெனி மாத்திரை கிடைக்காவிடிலும் வேறு கம்பெனி மாத்திரை கிடைக்கும் .மருந்தின் வேதியல் பெயர் எழுதினால் இப்படி மாற்றி வாங்குவதில் பிரச்சனை இருக்காது . அப்படி வேதியல் பெயர்தான் எழுத வேண்டும் என்கிற அரசாணை உண்டு .அமலாவதுவே பிரச்சனை .ஒரு வேளை இப்படி வேதியல் பெயர் எழுதினால் டாக்டர் இரண்டாம் நாள் எழுதியதும் பழைய மாத்திரையே என்பது அறிவோம்.

நிரந்தரமாகச் சாப்பிட வேண்டிய மாத்திரை எனிலும் மொத்தமாக வாங்க வேண்டாம் .வாரந்தோறும் வாங்கினால் போதுமே .சில வேளை திடீரென நிலைமை மாறி வேறு மாத்திரை தேவைப்படலாம் அல்லவா ? ஆகவே வாங்கிக் குவிக்க வேண்டாம். 


சுவிட்சு போட்டா லைட் எரிவதோ அணைவதோ போல் காய்ச்சலுலோ வலியோ உடனடியாக நிற்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் பெரும் தவறே .படிப்படியாய் குறைவதே மிகச்சரி !

டேவிட் வெர்னர் எழுதிய “டாக்டர் இல்லா இடத்தில்…” நூல் வாசித்தறிவதும் மிக நன்று .எளிய கைவைத்தியம் , நாட்டு மருந்துகள் தெரிந்து வைத்திருப்பதும் நல்லது .நாட்டு மருந்து , பாராசெக்டமல் போன்ற அடிப்படை மருந்துகள் கைவசம் இருப்பதும் நல்லது .

தேவையற்ற மருந்துக் குப்பைகள் வீட்டில் சேர்வது நல்லதல்ல . முயன்றால் தவிர்க்கலாம் .அதையும் மீறிச் சேருவதை அவ்வப்போது சாக்கடையில் வீசுவீர் !
Su Po Agathiyalingam