சொல்.82

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .82 [ 27 /11/2018 ] பணம் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதே .அதனை ஈட்ட செய்யும் தொழிலில் முழு சிரத்தை காட்ட வேண்டும் என்பதும் மெய்யே !ஆனால் அது மட்டுமே வாழ்க்கைக்கு நிறைவைத் தராது . ஒரு சிலர் வேலை ,வேலை ,பணம் ,பணம் என ஓடிக்கொண்டே இருப்பர் . குழந்தையைக் கொஞ்ச நேரம் ஒதுக்கமாட்டார் ; ஒரு பாடலை விரும்பி ரசிக்கமாட்டார் ; ஒரு சினிமாவுக்கு நேரம் ஒதுக்கி குடும்பத்தோடு சென்று களிக்கமாட்டார் .வேலை ,பணம் ,சாப்பாடு ,தூக்கம் இரவில் கொஞ்சம் தாம்பத்யம் இதுவே வாழ்க்கை என இயந்திரமாய் ஓடிக்கொண்டே இருப்பார் .இவர் இழந்தது எவ்வளவு தெரியுமா ? மொத்த வாழ்க்கையும்தான் . கல்லாவிலே உடகார்ந்திருக்கும் வியாபாரி ஒருவர் சில்லறைச் சத்தைத்தை மட்டுமே ரசிப்பார் .அவர் எதிரே பூபாளத்திலோ ,மோகனத்திலோ நெஞ்சை உருக்கும் ஒரு பாடல் பாடினாலோ , கேட்கிறவர் கால்களை எல்லாம் தாளம் போடவைக்கும் பறை முழங்கினாலோ கூட அவர் கல்லாவுக்கு வெளியே கண்ணைத் திறக்கமாட்டார் .அப்படி சிலரைப் பார்த்திருக்கிறேன் . மின் ஊழியர் சங்கத்தில் பெரும் தலைவராய் இருந்த ,கம்யூனிஸ் தோழர் து .ஜானகிராமன் அவர் நாட்குறிப்பில் மாதம் ஒரிரு நாட்கள் மனைவியோடு சினிமா . வீட்டு நிகழ்வுகள் என குறித்திருப்பார் . பொதுவாய் அந்நாட்களில் யார் அழைத்தாலும் தவிர்த்து விடுவார் .வீட்டில் இருக்கும் போது காலையில் மனைவிக்கு சின்ன சின்ன உதவிகள் செய்வார் . குடும்ப வாழ்வும் பொதுவாழ்வும் எதிர் எதிரானது என்பதை ஒப்பமாட்டார் . நேர திட்டமிடலில்தான் நமக்கு திறமைக் குறைவு .அதை சரி செய்தாலே போதும் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் என்பார் . வாழ்க்கை என்பதை ஒருபோதும் சம்பாதிக்கும் இயந்திரமாக்கிவிடாதீர் ! சூரிய உதயத்தை ,மாலை செவ்வானத்தை ,பூவின் சிரிப்பை , நாலு பேரோடு கலகலப்பாய் பேசி மகிழ்வதை , சின்ன சின்ன உரசல்களை தவறவிடாதீர் !இழந்த நாலுகாசை மீண்டும் ஈட்டிவிடலாம் .இழந்த நாட்களை ஒரு போதும் திரும்பப் பெற முடியாது .வாழ்வதற்காகச் சம்பாதியுங்கள் சம்பாதிப்பதற்காக வாழாதீர் ! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment