#துரும்பையேனும் கிள்ளிப்போடு

Posted by அகத்தீ Labels:





#துரும்பையேனும் கிள்ளிப்போடு

காலையிலிருந்து
கணினியை வெறித்து பார்த்தபடி
உட்கார்ந்திருக்கிறேன்.
எதையும்
எழுதத் தோன்றவில்லை .

எதிரே இருக்கும்
புத்தக அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்டும்
கலைந்தும் கிடக்கும் புத்தகங்கள்
என்னை கேலி செய்கிறதா ?

பரணில்
தூசிபடிந்து கிடக்கும் புத்தகங்கள்
என் மீது காறித் துப்புகிறதா ?

காந்தி கொலை தொடங்கி
இன்றுவரை
தலைநகர் டெல்லியில்
கோட்சேக்களின் வெறியாட்டம்
ஓய்ந்தபாடில்லை.


சிம்மாசனம் தந்த மமதை
குரங்கு கை பூமாலையாய்
மனிதமும் அரசியல் சட்டமும் …

பலியானவர்களின் எண்ணிக்கையை
இயந்திரமாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறது
விலைபோன ஊடகங்கள்.


உயிரை ,உடமையை இழந்த
எம் சோதரர் துயரமும் அச்சமும்
எம் ஈரல்குலையை நடுங்கச் செய்கிறது .

முகநூலில் ஒரு பதிவு
கோவத்தில் ஒரு கவிதை
வேறு என்ன செய்துவிட முடியும்
என்னால் ?

ஆற்றாமை சுட்டெரிக்கிறது
பெருங்குரலெடுத்து
அழத் தோன்றுகிறது ..

மவுனமாய் இருப்பதைவிட
முனகுவது மேலல்லவா ?
முனகுவதைவிட சற்று
உரக்கப் பேசுதல் மேலல்லவா ?

சும்மா இருப்பதைவிட
எதையாவது செய்
முனகு
அழு
பிதற்று
கூச்சலிடு
பேசு
எழுது
போராடு !!!

ஒல்லும் வகையெல்லாம்
பாசிசத்துக்கு எதிராய்
துரும்பையேனும் கிள்ளிப் போடு !!

சிறு துளி பெருவெள்ளமாகும்
சிறு பொறி காட்டுத் தீயாகும் !!!

சு.பொ.அகத்தியலிங்கம்.



#மானுடம் வேரில்தான்

Posted by அகத்தீ Labels:



#மானுடம் வேரில்தான்

இளைஞர் முழக்கம் வெளிவரத் துவங்கிய சில நாளில் தோழர் தி.க.சி என்னை அழைத்தார் .நானும் அவரும் சென்னை மெரினா கடற்கரையில் சந்தித்தோம் . இதழை தொடர்ந்து நடத்துவது குறித்து  சில யோசனைகளைச் சொன்னார் .  சுண்டலைக் கொறித்தப்டி எங்கள் உரையாடல் எங்கெங்கோ நகர்ந்தது .

அவர் உரையாடலின் ஊடே சொன்னார் , “ ஒரு முறை கடற்கரையில் வைத்து புதுமைப் பித்தன் சொன்னார் , என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் சென்னை மண் நம்ம உடம்பில ஒட்டாது …”

எங்கள் பேச்சு அதை ஒட்டியும் நீண்டது.

அண்மையில் சிஐடியு அகில இந்திய மாநாட்டுப் பேரணியின் போது ஒரு மூத்த தோழரோடு தீக்கதிர் அலுவலகத்தில் உரையாட நேர்ந்தது.

 “ தோழா ! இப்போ சென்னை வாசம்தானா ?” எனக் கேட்டேன்.

அவர் சொன்னார் , “ இது ஊரா , இங்கே எந்திரங்கள் மட்டும்தான் இருக்கு ,எங்கே மனுஷன் இருக்கான் ? கட்சி அலுவலகங்களில் உயிரைக் காணோம் ,தோழமை வெறும் சொல்லாயிருக்கு….”

இந்த உரையாடல் என்னை வெகுவாகப் பாடாய்ப் படுத்தியது .தூக்கத்தைத் தின்றது . என் நினைவுச் சுழலில் ஏதேதோ வந்து போனது . நான் வாலிபர் சங்கப் பொறுப்பில் இருந்த போது தமிழகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன் .எல்லோரோடும் நெருங்கிப் பழகி இருக்கிறேன் . எனக்கும் சில அபிப்பிராயங்கள் உண்டு .

பொதுவாய் சென்னையும் வடமாவட்டங்களும் ஒரு வித்தியாசமான பண்பாட்டோடு இருக்கும் , மதுரை சுற்று வட்டாரம் இன்னொரு ரகம் , நெல்லை தூத்துக்குடி தனி , குமரி முற்றிலும் வேறுபட்டிருக்கும் , கோவையும் மேற்கு மாவட்டங்களும் அது ஒரு ரகம் , தஞ்சை மண்டலம்  இன்னொரு ரகம் . தமிழ் நாடு ஒற்றைப் பண்பாடல்ல ; அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஒவ்வொன்றிலும் உயர்ந்த சில நல்ல அம்சங்களும் இருக்கும் ; ஏனையோருக்கு ஒவ்வாத சில கூறுகளும் இருக்கும் . இதை அளவிடுவதில் கூட அவரவர் அளவுகோல் மாறுபட்டே இருக்கும் .

தோழர் ஏ.நல்லசிவன் கட்சி மாநிலச் செயலாளராக இருந்தபோது ஒரு முறை நான் கோவமாக சண்டை போட்டேன் . அவர் என்னை அழைத்து வைத்து சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார் . அது அவர் இயல்பு . என் கோபம் தனிந்தது . சூழல் கலகலப்பானது . அவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார் ,

 “ இந்த நாஞ்சில் நாட்டுகாரங்களுக்கு ஏன் மூக்கு மேலேயே கோபம் இருக்கு ? நீங்க சென்னையில இருந்தாலும் இன்னும் நாஞ்சில் வாசம் போகலையே..”

 “ தெரியலை…” என்றேன்.

அவர் சொன்னார், “ குமரி மாவட்டத்தில நிலப்பிரபுத்துவம் பெருசா இல்லை ,சிறு உடைமையாளர் , சுயதொழில் செய்வோர் ,கல்வி பெற்றோர் , அதிகம் ரப்பர்லாம்கூட எஸ்டேட் தொழிலாயிடிச்சி …அதுனால கொஞ்சம் சுயம் அதிகமாயிருக்கலாமோ … நீங்கதான் ஆராய்ச்சி பண்ணனும்னு …. “

அவர் போகிற போக்கில் சொன்னாலும் சமூகப் பொருளாதார நிலைமைக்கும் பண்பாட்டு சூழலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை யோசிக்க வைத்தது .

நெல்லை இலக்கியவாதிகளுக்குள் இருக்கும் நெருக்கம் பிற மாவட்ட இலக்கிய வாதிகளுக்குள் இருப்பதில்லையே என நான் யோசித்ததுண்டு . கரிசல் இலக்கிய வட்டம் போல் வடமாவட்ட செம்மண் இலக்கிய வட்டம் தழைக்கவில்லையே ஏன் ?

மதுரை வட்டாரத்தில் கட்சித் தோழர்களுக்கு இடையேகூட உறுவுமுறை விழிச்சொல் புழக்கம் அதிகம் இருப்பது ஏன் ? இப்போது அங்கும் அது மறைந்து வருகிறது .

கட்சிக்குள்ளும் தோழமை ஒரு போல் இருப்பதில்லை . மேலே மண்டலம் மண்டலாமாய் நான் சுட்டியது இங்கும் பிரதிபலிக்கும் .மண்ணின் வேர் கொண்ட இயல்பு சீக்கிரம் மாறிவிடாது .

சரி ! சென்னைக்கு வருவோம் .இங்கே வாழ்வோரில் பெரும்பாலோர் பிற மாவட்டங்களில் இருந்து வந்தேறிகளே . பிழைக்கப் போன இடத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பதே இயல்பு . அது சென்னையில் வேரில் ஒட்டிய இயல்பல்ல . வளர்ச்சியில் தோன்றிய பெருநகர வாழ்வின் கூறு . அது கட்சியிலும் பெரிதும் பிரதிபலிக்காமலா இருக்கும் ? அதுவும் கட்சியில் சென்னையின் பூர்வகுடியினர் மிகச் சொற்பமாய் இருக்கையில் கட்சி பெருநகர எந்திரவாழ்வின் கூறாகத்தானே இருக்கும் . அது மட்டுமே சென்னை அல்ல.

மீனவர் குப்பமும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் சேரி / குடிசைப் பகுதியும் தான் சென்னையின் சொந்த வாசம் . அங்கு எல்லையற்ற பேரன்பைக் காணலாம் . எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தோள் கொடுக்கும் நல்லியல்பு சென்னைக்கு உரியது . ஆபத்து நேரத்தில் ஓடோடி வரும் உயர் குணம் அங்கு வேர் கொண்டிருக்கும் .தருமமிகு சென்னை என்பது மெய்யே . இருப்பவன் செய்வதல்ல தருமம் .இல்லாதவன் இருப்பதை பங்கு போட்டு பசித்தவனுக்கு தருவதே தருமத்தின் உச்சம் .இதை சென்னை மற்றும் வட மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்களிடம் காணலாம் . திருவள்ளூர் அருகில் செவ்வாய் பேட்டை ரயில் நிலையத்தின் அருகே திரூரில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாய்  வாழ்ந்தேன் . ஒடுக்கப்பட்ட மக்களின் எல்லையற்ற பேரன்பை அனுபவித்தேன் .

ஆயின் ஒன்று , எங்கே போயினும் அது எந்த மாவட்டம் /ஊர் ஆயினும் ஒடுக்கப்பட்ட மக்களின் நிபந்தனையற்ற தோழமை அன்பும் , நடுத்தர மக்களின் மரியாதை நிமித்தமான தோழமையும் வேறு வேறுதான் .

மானுடம் எங்கும் வேரில்தான் குடிகொண்டுள்ளது .சரிதானே!!

[ இங்கு நான் சென்னவை அனைத்தும் என் அனுபவம் மற்றும் சொந்த உளவியலின் அடிப்படையிலாலானது.அவரவருக்கு வெவ்வேறு அனுபவம் இருக்கக்கூடும் . அதன்படி உணர்க !]

சு.பொ.அகத்தியலிங்கம்.
பிப்ரவரி ,5 / 2020 




அவர்களை ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?

Posted by அகத்தீ Labels:





அவர்களை  ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?



அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


கரசேவை எனும் திவ்ய நாமம் வேறு அதற்கு
இடிப்பதும் அழிப்பதுமே அவர்களின் திருப்பணி
யாக குண்டத்தில்கூட அனைத்தையும்
எரிக்கவும் பாழாக்கவும்தானே செய்கின்றனர்
அதுவும் ஊரான் வீட்டு நெய்யில்….


அதிகாரத்தை அவர்களிடம் கொடுத்தால்
அவர்கள் தெரிந்ததைத்தானே செய்வார்கள்
நிதித்துறை ,நீதித்துறை ,கல்வித்துறை
வேளாண்மை , தொழில் ,இன்னபிறவற்றை
எதையும் இடித்து நொறுக்கவே
அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்


ஆக்கும் கடவுள் பிரம்மனுக்கே கோயில் இல்லை
உழைப்பாளி உனக்கா மரியாதை தருவார் ?
அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


 பழைய இந்தியாவை நொறுக்குவது
புதிய இந்தியாவைக் கட்டவா ? இல்லை .
நீ அப்படி நம்பினால் மூடன்


விபத்து நடக்கும் போது
பேரழிவின் போது
உதவுவதற்கு சிலர் ஓடோடி வருவர்
எரிகிற வீட்டில் புடுங்கினது ஆதாயம் என
கொள்ளையடிக்க களமிறங்கும் ஒரு கூட்டம்
துணை இருக்கும் காவல் துறை ,அதிகாரம்
அனுபவத்தில் பார்த்ததில்லையா ?


பேரழிவின் விழிம்பில் தேசம் திணறுகிறது
அம்பானி ,அதானி தேசத்தை சூறையாட
மோடிஷா அதிகாரம் வெண்சாமரம் வீசுகிறது
அவர்களை
ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
அவர்களுக்கு
இடிப்பதற்குத்தானே பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது .


சுபொஅ.