சிறையில் பிறந்த நாவல் ; லெனினை ஈர்த்தது

Posted by அகத்தீ Labels:





புரட்சிப் பெருநதி – 17


சிறையில் பிறந்த நாவல் ; லெனினை ஈர்த்தது





சிறையில் பிறந்த நாவல் ; லெனினை ஈர்த்தது




ஆயுதப்படை சூழந்து நிற்க அவர் தலைமீது
ஒரு வாள் அடித்து உடைக்கப்பட்டது.
காவலையும் மீறி திரண்டிருந்த மாணவர்களும்
இளைஞர்களும் செர்னி செவ்ஸ்கியை வாழ்த்தி
அவரை நோக்கி பூங்கொத்துகளை வீசினர்.

‘எந்த நேரத்திலும் போலீசார் என்னைக் கைது செய்யலாம் . சிறையிலடைக்கலாம் . எவ்வளவு காலம் சிறை வைப்பார்கள் ? கடவுளுக்கே வெளிச்சம் . இப்படித்தான் எனக்கு தோன்றுகிறது .இங்கு என் பணி அப்படி’திருமணத்திற்காக பெண் பார்க்கப் போன இடத்தில் இப்படித்தான் சொன்னார் அவர் . அந்தப் பெண்ணும் மனமுவந்து இசைவு சொன்னார்.

1853ல் இது நடந்தது . அவர்தான் நிக்கோலாய் காவ்ரிலோவிச் செர்னி செவ்ஸ்கி . அந்தப் பெண் ஓல்கா ஸோக்ரடோவ்னா வாஸ்லியீவா.செர்னி செவ்ஸ்கி ஒரு பாதிரியாரின் மகனாய் 1828 ல் ரஷ்யாவில் சாரட்டோ கிராமத்தில் பிறந்தார்.இறையியல் பள்ளியில் பயின்றார். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், லத்தாலி, இத்தாலி, கிரேக்கம், பழைய சல்வோனிக் முதலிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.அரபு ,ஹிப்ரூ மொழிகளையும் ஓரளவு கற்றார்.

பாதிரியாராக வேண்டும் என்கிற தந்தையின் கனவை நிராகரித்தார். செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலையில் பயிலும் போது எம் எல் மிக்கைல் நண்பரானார். இலக்கியமும் சமூகச் சிந்தனையும் உற்ற தோழராக்கியது. அவர் பின்னர் புரட்சிக் கவிஞரென புகழ்படைத்தவர் ஹெகல், பயாபர்க் போன்றோரை கற்றறிந்து நாத்திகரானார்.கல்விப் பணியில் ஈடுபட நினைத்தார். ஜாரின் கொடுங்கோன்மையை எதிர்ப்பவராக புரட்சிகர திசையில் நகரலானார்.

1853ல் திருமணத்துக்கு பின்னர் ஆசிரியப்பணி செய்து கொண்டே ‘யதார்த்தமும் கலையின் அழகியல் உறவுகளும்’ எனும் தலைப்பில் ஆய்வில் ஈடுபட்டார். ‘சமகாலம்’ எனப்படும் ‘ஸோவரெமெனிக்’  ஏட்டில் தொடர்ந்து இலக்கிய, தத்துவக் கட்டுரைகள் எழுதினார் .

1861 ஜார் அறிவித்த நிலச் சீர்திருத்தத்தை விமர்சித்து ‘முகவரியில்லா கடிதங்கள்’ எனும் தலைப்பில் கட்டுரைகள் தீட்டினார். ‘இது மாற்றங்களின் துவக்கமில்லையா?’ உட்பட செர்னி செவ்ஸ்கி எழுதிய கட்டுரைகள் ஆட்சியாளரை மிரளவைத்தது. பத்திரிகை முடக்கப்பட்டது. செர்னியும் கைது செய்யப்பட்டு செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் பால் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார்.

‘தணிக்கைசெய்யப்படும் கட்டுரைகள் மூலம்கூட அவரால் மெய்யான புரட்சிப் போராளிகளைப் பயிற்றுவிக்க முடிந்தது’ என லெனின் பின்னர் மதிப்பிட்டார்.கவிஞர் மிக்கைலோவ் 12 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக சைபீரியாவுக்கு கடத்தப்பட்டார்.

செர்னி செவ்ஸ்கி நான்கு மாதம் பால் கோட்டையில் சிறைப்பட்ட காலத்தில் புகழ்பெற்ற ‘இனி என்ன செய்ய வேண்டும்?’ நாவலை எழுதினார்.இந்நாவல்தான் மாணவனாக இருந்த போது தன்னை செதுக்கியதாக லெனினே பலமுறை சொல்லியுள்ளார். புரட்சியின் முக்கிய திருப்பத்தில் லெனின் எழுதிய நூலின் தலைப்பே நாவலையொட்டி ‘என்ன செய்ய வேண்டும்’ என அமைந்தது இந்நாவ லின் மீதான ஈர்ப்பின் அடையாளம் எனலாம்.

நாவலை ஜாராட்சி தடை செய்தது. புரட்சிக்கு பிறகே அதிகார பூர்வமாய் மீண்டும் வெளிவந்தது.

மக்களின் அசமந்தத்தனம், கோழைத்தனம், லாபப்பேராசை இவற்றை இந்நாவல் பகடி செய்தது. புதிய ஜனநாயக உணர்வுமிக்க மக்களையும் காட்சிப் படுத்தியது. ‘ராக்மேட்டோவ்’ எனும் கதாபாத்திரம் ஒரு புரட்சிகரமான போராளி; அனைத்து சித்ரவதைகளையும் முகமலர்ச்சியோடு ஏற்பவன். சமூக நலனுக்கு சொந்த நலனை உட்படுத்துபவன். காந்தமாய் ஈர்த்த பாத்திரம் அது.

செர்னி செவ்ஸ்கியும் ஒரு பாத்திரமாகி தாராளவாதிக்கும் பிற்போக்குவாதிக்கும் எதிராய் தத்துவ சமர் புரிவார்.சிறைவாசத்தில் சில வரலாற்று நூல்களை மொழி பெயர்த்தார் .

29 சிறுகதைகள் எழுதினார். இருளடர்ந்த சிறையிலும் அவரது எழுத்துகள் ஒளியுமிழ்ந்தன.1864 மே 19ல் பொதுமக்கள் பார்க்கும் இடத்தில் ஆயுதப்படை சூழந்து நிற்க அவர் தலைமீது ஒரு வாள் அடித்து உடைக்கப்பட்டது. காவலையும் மீறி திரண்டிருந்த மாணவர்களும் இளைஞர்களும் செர்னி செவ்ஸ்கியை வாழ்த்தி அவரை நோக்கி பூங்கொத்துகளை வீசினர்.

1864 மே 20 ல் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டார். பயணம் உடல் நிலையை கெடுத்தது .மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது தோழன் மிக்கைலோவை சந்தித்தார்.அவர் கடும் நோயால் பீடிக்கப்பட்டிருந்தார். சில காலத்திற்குப் பின் அவர் இறந்த செய்தியே கிடைத்தது.

செர்னி மருத்துவத்துக்கு பின் கட்டாய உழைப்புக்காக சுரங்கத்துக்கு அனுப்பப்பட்டார்.செர்னிக்கு ஏழாண்டு காவல் முடிந்தும் பொது மன்னிப்பு மறுக்கப்பட்டு மேலும் 12 ஆண்டு கடுங்காவல் விதிக்கப்பட்டு வில்யூயின் சிறையில் அடைக்கப்பட்டார் . ப்ரோலோக் நாவல், ஒரு பெண்ணின் கதை: தி டிசண்டட் ஆப் பார்ப்பரோஸா என்ற கதையின் மூன்று அத்தியாயங்கள், முடிவில்லாத நாடகம் உள்ளிட்ட நாடகங்கள் மற்றும் சில படைப்புகளை சாதுரியமாக 1871ல் தன் மனைவிக்கு அனுப்பிவைத்தார் .
1857 ஆம் ஆண்டு சீர்திருத்த நடவடிக்கைகளை பின்னணியாக வைத்து சைபீரிய சிறைவாசத்தின் போது செர்னி எழுதிய புகழ் பெற்ற படைப்பே , ‘ப்ரோலோக்’ . முதல் பாகம் லண்டனில் வெளியிடப்பட்டது. இதரவை அவர் மறைவுக்குப் பின்னரே வெளிவந்தது.1883ல் சைபீரியாவிலிருந்து இர்குட்ஸுக்கு கொண்டுவரப்பட்டார். அங்கு மனைவியையும் குழந்தைகளையும் சந்தித்தார். சிறுவயதில் பிரிந்தது; இப்போது அலெக்சாண்டருக்கு 29 வயது –மிக்கைலுக்கு 25 வயது .

பிறகு ஓல்காவுக்கு அனுப்பப்பட்டார். ‘வாழ்க்கைப் போராட்டத்தின் பயன் பற்றிய சித்தாந்தம்’ எனும் கட்டுரையை 1888 ல் வெளியிட்டார். 1860 புரட்சியின் முக்கிய வீரர்களான நெக்ரஸோவ், டோப்ரோலியூபோவ் நினைவலைகளை எழுதினார். ‘டோப்ரோ லியூபோவின் வாழ்க்கை வரலாற்றுக்கான விபரங்கள்’ நூலை வெளியிட முயன்றார். ஆனால், இந்நூல் செர்னி மறைவுக்குப் பிறகு 1890ல் வெளியிடப்பட்டது.

உடல்நிலை சீர்கெட்டது. உறவினர்கள், நண்பர்கள் முயற்சியால் 24 ஆண்டு சிறைவாசத்துக்கு பின்னர் 1889ல் சொந்த ஊரில் இருக்க அனுமதிக்கப்பட்டார், நான்கே மாதங்களில் 1889 அக்டோபர் 17 ஆம் நாள் மரணமடைந்தார்.இறுதிச் சடங்கில் இரங்கல் கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது; எனினும் மக்கள் வெள்ளம் அந்த கிராமத்தை மூழ்கடித்தது.புரட்சி வெற்றி பெறும் வரை செர்னி செவ்ஸ்கி என்ற பெயரையும் அவரது படைப்புகளையும் ‘அபாயகரமானதாகவே’ ஆட்சியாளர்கள் கருதினர்.

‘செர்னி செவ்ஸ்கி உண்மையில் தலை சிறந்த எழுத்தாளர். 1850 முதல் 1888 வரையிலான காலகட்டத்தில் ஒருங்கிணைந்த தத்துவார்த்த பொருள் முதல்வாதத்தின் தரத்தை அவரால் மட்டுமே கட்டிக்காக்க முடிந்தது. நியோகாண்டின்கள், நேர்நிலைவாதிகள், அனார்க்கிஸ்டுகள்,குழப்பவாதிகள் போன்றோரின் இழிவான முட்டாள்தனங்களை வெறுத்தொதுக்கியவர் செர்னி செவ்ஸ்கியே’ என்றார் லெனின்.

‘இனி என்ன செய்ய வேண்டும்’ நாவல் புரட்சிக்கு இளைஞர்களைச் செதுக்கிக்கொண்டே இருந்தது.
புரட்சி தொடரும்…
நன்றி : தீக்கதிர் , 27/2/2017



theivatham maranam

Posted by அகத்தீ Labels:



தெய்வம் மரணம்

சு.பொ.அகத்தியலிங்கம்.


தெய்வம் இறந்த செய்தி
பரவிய கணம் தொட்டு
புதிது புதிதாய் கேள்விகள்
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன .

சதி செய்து கொன்றதாய்
ஒரு செய்தி தீயாய் பரவுகிறது


இயற்கைச் சாவென
சாதிக்க அறிக்கை மேல் அறிக்கை

விசாரணைக்குழு அமைத்தாலாவது
மெய் விளங்குமென
ஒரு சாரார் கருத்து சொல்கின்றனர்

தற்கொலை செய்து கொண்டதாய்
அறிவித்துவிடுலாமா என
தீவிரமாய் யோசிப்பதாகவும் தகவல்

இதற்கிடையில்
தெய்வமே குற்றவாளி என
நியாயத்தீர்ப்பு உறுதிசெய்தது

அது முதல்
அனைத்து குற்றவாளிகளும்
தெயவங்களென அழைக்கப்படலாயின !

அரசர்
தெய்வம்
குற்றவாளி
யாருக்கு முதல் மரியாதை
இப்போதைய குழப்பம் இதுதான்

குழப்பம்
சிற்றரசுக்கு மட்டுமல்ல
பேரரசுக்கும்தான் .

காட்டை அழித்தாலும்
நாட்டை அழித்தாலும்
இம்மூவர் கூட்டை
உடைக்க முடியாதாம் !

கொடுமை கொடுமையின்னு
கோயிலுக்கு போனால்
அங்கேயும்
அரசரும்
குற்றவாளியும்
தெய்வமும்
ஒரே ஆட்டமாம் !

சிறை
கோயில்
ஆட்சி
வழிபாடு
வார்த்தைகளில்
என்ன இருக்கிறது?

சர்வம் அதி ‘காரம்’
பணம் பலம் பதவி

இவை எதுவும் புரியவில்லையா ?
நீ பக்தனே !
ஐயமில்லை !!



பாஸ்டில் சிறை தகர்ப்பு; பசிக் கலகங்கள்…

Posted by அகத்தீ Labels:



புரட்சிப் பெருநதி-16
பாஸ்டில் சிறை தகர்ப்பு; பசிக் கலகங்கள்
கிராக்குஸ், பாசூப்பைச் சுற்றி ஒரு புரட்சியாளர் குழு உருவாயிருந்தது.
இவர்களது சமூகப் பொருளாதாரப் பார்வைதான்
19ம், 20ம் நூற்றாண்டுகளின்
சோஷலிச இயக்கங்களுக்கு அடித்தளமானது  


 பிரெஞ்சுப் புரட்சியை எழுதுவதெனில் எனக்குச் சிரமமாக இருக்கிறது . காரணம் போதிய விஷயமின்மை அல்ல; ஏராளமான விஷயங்கள் குவிந்திருப்பதே என்றார் நேரு.

பிரான்ஸில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மன்னராட்சிதான். வெர்செய்ல்ஸில் அமைந்த 14 ஆம் லூயியின் இரு அரண்மனைகளும் சர்வாதிகாரத்தின் குறியீடானது . 15 மற்றும் 16 ஆம் லூயிகளும் அவ்வாறே.
1688
முதல் 1783வரை பிரான்சும் பிரிட்டனும் ஐந்து போர்களில் ஈடுபட்டன. அரசு கஜானா காலியானது. மக்கள் மீது அரசு கடும் சுமையை ஏற்றியது.

மக்கள் மூன்று எஸ்டேட்டாக (Three Estates) பிரிக்கப்பட்டிருந்தனர். அரச குடும்பம், பெரும் நிலக் கிழார்கள் முதல் எஸ்டேட் -ரோமன் கத்தோலிக்க குருக்கள், அதிகாரிகள் இரண்டாம் எஸ்டேட் -சிறு வணிகர்கள், விவசாயிகள், உழைப்பாளிகள் மூன்றாம் எஸ்டேட். சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால், மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

மெஸ்லியரின் மரணசாசனத்தை சுருக்கி வால்டேர் வெளியிட்டார்; மேலும் வால்டேரின் வீரியமிக்க எழுத்துக்கள் கிறுத்துவ மதசபையை , பிரபுக்களைத் தாக்கின. ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம் எதேச்சதிகாரத்தை எதிர்த்தது; சமத்துவக் குரலை எழுப்பியது. தத்துவவியலாளர் மாண்டெஸ்கியூ சட்ட வடிவிலான அரசாங்கம் வேண்டுமென்றார் .
வால்டேர், ரூஸோ, தஆலம்பேர் உதவியுடன் ஒரு கலைக்களஞ்சியத்தை 1751 ல் தீதரே தயாரித்தார். அது அறிவியல், தொழில், விவசாயம், கலைகள் இவற்றின் பிரச்சனைகளைப் பேசியது; மதபீடத்தை தாக்கி தீதரே எழுதியதும் இடம் பெற்றது . கலைக் களஞ்சியத்தின் முதல் தொகுதியை மதபீடம் எரித்தது. ஆயினும் மீண்டும் வெளிவந்தது . மதபீடத்தை எதிர்த்தாலும் மதத்தை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் எழுத்துக்களும் உரையும் சிந்தனையைக் கூரேற்றின ; சுதந்திரம் , சமத்துவம்,சகோதரத்துவம் எனும் லட்சியப் பதாகையை உயர்த்திப் பிடித்தன.

1614
க்கு பிறகு 19.5.1789 அன்று 16 ஆம் லூயி பேராயத்தை வெர்செயில்ஸில் கூட்டினான். கூட்டம் துவங்கியதும் மன்னன் தன் அதிகாரச் சின்னமாய் தலையில் துணியைக் கட்டினான். மூன்றாம் எஸ்டேட் மக்கள் வழக்கம் போல் மண்டியிட்டு பணியாமல் தலையில் துணிகட்டி சுயமரியாதையை நாட்டினர். புதிய வரிகளை ஏற்க மறுத்து தேசிய அசெம்பிளியை உருவாக்குவதாக மக்கள் அறிவித்தனர். மன்னர் வெகுண்டார்.

அரசன் மூன்று எஸ்டேட்டையும் தனித்தனியே கூட்டிட முயன்றான். மக்கள் எதிர்த்தனர். கூட்ட அரங்கை மன்னன் பூட்டிவைத்தான். மக்கள் அருகிலுள்ள டென்னிஸ் மைதானத்தில் கூடி தேசியஅசெம்பிளியைப்பிரகடனப்படுத்தினர் .அரசுக்கு பல நிபந்தனைகளை விதித்தனர். மோதல் முற்றியது. வரிக்கொள்கையை எதிர்த்த நிதி அமைச்சர் நெக்கரை மன்னன் பதவி நீக்கம் செய்தான். ராணுவத்தைக் குவித்து மக்களைக் மிரட்டினான்.

அதிகாரத்தின் குறியீடாக இருந்த -100 அடி உயரமும் 80 அடி அகழியும் கொண்ட பாஸ்டில் சிறையை நோக்கி1789 ஜூலை 14 இல் பாரீஸ் நகரில் மக்கள் திரண்டனர். ஹோட்டல் திஸ்லா வேலிட்டில் கைப்பற்றப்பட்ட பீரங்கியை மக்கள் இழுத்துவந்தனர் .மோதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். சிறை தகர்க்கப்பட்டது. அங்கிருந்த ஆயுதங்கள் மக்கள் கைக்கு மாறின. கலவரம் பரவியது.

1789
ஆண்டில் கடைசி ஆறு மாதம் மட்டிலும் 250 பத்திரிகைகள் வெளியிடப்பட்டன. ரோபஸ்பியர் தலைமையில் ஜாக்கோபின் கிளப், டாண்டன், ஹெபர்ட் இடம் பெற்ற கோர்டிலேயர் கிளப் கிராண்டோன் தலைமையிலான குழு , ஜான் போல் மாராவின் மக்கள் நண்பன் கிளப், சகோதரக் கழகம் மனித உரிமைக் கழகம் என பலதும் செயல்படலாயின.

வேலை நிறுத்தங்கள், பசிக்கலகங்கள் எழுந்தன. முன்னாள் நடிகையான க்ளேர் லாகூம் தலைமையில் பெண்கள் உணவுகேட்டு அணிவகுத்தனர் .டி ஜான் நகரில் பட்டினியால் பரிதவித்தோர் ரொட்டி கேட்டு திரண்ட போது லூயி மன்னனும் அவன் மனைவியும் புல்லைத் தின்னுங்கள் என ஆணவத்தோடு பதில் சொன்னார்கள்.
மக்களின் எழுச்சி 1790 இல் மன்னனை சில சீர்திருத்தங்களுக்கு உந்தித்தள்ளியது. நாடு 83 கம்யூன்களாகப் பிரிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு வழிவகுத்தது. மதகுருக்கள், நிலப்பிரபுக்களைக் கட்டுப்படுத்த முயன்றது. தொழிலாளர்களை நசுக்கியது. உரிமையற்றவராக்கியது. இதனால் தொழிலாளர்கள் திரண்டனர். துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளிகள் இறந்தனர். மோதல் தொடர்ந்தது.

மனிதர்கள் சுதந்திரமாகப் பிறக்கிறார்கள், சுதந்திரம், சமத்துவம் உரிமை கொண்டவர்களாக வாழ்கிறார்கள் என்கிற புகழ்பெற்ற வாசகங்களுடன், தனியுடைமையைப் பாதுகாத்துக் கொண்டே, எல்லோருக்கும் வாக்குரிமையோடு ஒரு முதலாளித்துவ சுதந்திரத்தை பிரான்ஸ் 1792 செப்டம்பர் 20 நாள் உறுதி செய்தது.
ஆதிக்கப் போட்டியில் ஜேக்கோபின், கிராண்டோன் என மாறி மாறி கில்லட்டினுக்கு இரையாக்கினர். அரசியல் கொந்தளிப்பும் விறுவிறுப்புமாய் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. 1799 ல் நெப்போலியன் போனாபட் அரியணை ஏற வழிவகுத்தது.

வரலாற்றாசிரியர் கிறிஸ் ஹார்மன் கூறுகிறார், உலக வரலாற்றில் புரட்சியின் ஒட்டுமொத்த தாக்கத்தை மிகச்சரியாகப் பார்க்கும் வரலாறுகள், பாரீஸின் அதிநெருக்கடியான ஏழைகள் வாழும் பகுதிகளில் அதன் குறுகிய தெருக்களில் நடந்தவற்றைக் குறைத்துக் கூறும் அபாயம் உள்ளது. இந்த இடங்களில்தான் மக்கள் தம் செக்ஷன்களில் மாரா, ஹெபர்ட் ஆகியோரின் எழுத்துக்களை மணிக்கணக்கில் படித்து விவாதித்தனர். உணவுப் பதுக்கல்காரர்களை வேட்டையாடினர். அரச விசுவாசிகளைத் தேடினர். ஈட்டிகளைத் தீட்டிக்கொண்டு பாஸ்டில் சிறை நோக்கி அணிவகுத்தனர். அரசியலமைப்பு சட்டரீதியான முடியாட்சிக்கு பதிலாக கிராண்டோன்களையும் கிராண்டோன்களுக்கு பதிலாக ஜோக்கோபின்களையும் பதவியிலமர்த்தி எழுச்சிகளுக்கு திரண்டனர். ஆயிரக்கணக்கில் போர்முனைக்கு சென்றனர் .கிராமங்களில் புரட்சியைப்பரப்பினர்.

மேலும்; 1796 ல் கொல்லப்பட்ட கிராக்குஸ், பாசூப்பைச் சுற்றி ஒரு புரட்சியாளர் குழு உருவாயிருந்தது. இவர்களது சமூகப் பொருளாதாரப் பார்வைதான் 19ம், 20ம் நூற்றாண்டுகளின் சோஷலிச இயக்கங்களுக்கு அடித்தளமானது என்றார்.

பிரெஞ்சு புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும், வரலாற்றை படிக்கும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமானதென்றே கருதுகின்றனர். இந்தப் புரட்சி பூர்ஷ்வா ஜனநாயகம். பூர்ஷ்வா சுதந்திரத்திற்கு அடித்தளம் இட்டது என்றார் லெனின்.

பிரெஞ்சு புரட்சி ஒரு பூர்ஷ்வா புரட்சி என்பதில் ஐயமில்லை. அதனுடைய தன்மை பூர்ஷ்வா அடிப்படையில்அமைந்ததால், உழைக்கும் மக்களை அது சுரண்டலிலிருந்து விடுவிக்கவில்லை என்று தெளிவாக சொன்னார் மார்க்ஸ்.

பிரெஞ்சு தேசியகீதத்தின் சில கனல் வரிகள்

எங்களின் வாளும் கேடயமும்
சுதந்திரமே
இதற்குமுன்
கொடுங்கோலர்களின்
எல்லா ஆயுதங்களும்
பயனற்றவையே !
நன்றி : தீக்கதிர் ,20/2/2017.

புரட்சி தொடரும்