செல்க 2020 … வருக 2021

Posted by அகத்தீ Labels:

 



செல்க 2020 … வருக 2021

 

 

பிறப்புச் செய்தியோ

இறப்புச் செய்தியோ

இல்லா நாளொன்றில்லை

 

நாட்களின் தொகுப்பாய்

வாரம் இருக்கையில்

மாதம் இருக்கையில்

அதுவும் அப்படித்தானே

 

ஒவ்வொரு ஆண்டும்

முடிவும் தொடக்கமும்

இந்த ஐந்தொகையோடுதான்

 

நன்றும் தீதும் கலந்ததே வாழ்வு

பெற்றதும் இழந்ததும் பெருங்கணக்காகும்

வழக்கம் போலும் வழக்கம் தவறியும்

நடந்திடும் நல்லதும் கெட்டதும்

 

 “முன்னைப் போல் இப்போது இல்லை”

காலந்தோறும் இதே வார்த்தை

தாத்தா /பாட்டி சொன்னார்

அப்பா /அம்மா சொன்னார்

நானும் சொன்னேன்

நாளை என் மகனும் /மகளும் சொல்வார்

பேரனும் பேத்தியும்கூட

இப்படியே காலம் நகரும்

 

முன்னேறியபடியே – ஆம்

முன்னேறியபடியே …

காலம் நகரத்தான் செய்யும்

ஆனால்

யாருக்கானது முன்னேற்றம்

கேள்வி தொடரத்தான் செய்யும்..

 

சிக்கி முக்கி கல்லோடு

திருப்தி அடைந்திருந்தால்…

மரவுரியோடும் மண்பாண்டத்தோடும்

மனநிறைவு கொண்டிருந்தால்… ?????

திருப்தி என்பது வளர்ச்சியின் எதிரி

தேடலே நம்மை முந்தித்தள்ளும்

 

 “துப்பாக்கிகள்

கிருமிகள்

எஃகு”

வரலாற்றை முடுக்கிய விசைகள்

என்பார்

ஜாரெட் டைமண்ட்

 

தொற்றுநோய்கள் அழிவைத் தந்தன

ஆட்டம் போட்டன ஆயினும்

அதனை வெல்லும் மருத்துவத்தையும்

மனிதகுலமே கண்டெடுத்தது

 

மார்க்சியம் ஞான தீபமேற்றி

காலத்தை வசப்படுத்த

தொடங்கிய போர் இன்னும் முடியவில்லை

 

மானுட சக்திக்கு ஈடாய்

மாற்றொன்றில்லை தோழா!

சாதி வெறி, மதவெறி சாகும்

சரித்திரப் பெருநதி ஓடும்!

 

செல்க 2020

வருக 2021

வருக ! வருக !

 

சுபொஅ.

 

குறிப்பு :

“துப்பாக்கிகள் – கிருமிகள் -எஃகு”

ஜாரெட் டைமண்ட் எழுதிய நூல் .

 


எது முக்கியம் ?

Posted by அகத்தீ Labels:

 


எது முக்கியம் ?

 

 


 

தலையே ! தலையே !

மேலே இருக்கும் முடியைவிட

உள்ளே இருக்கும் மூளையா முக்கியம் ?

 

கண்ணே ! கண்ணே !

புருவத்தின் ஒப்பனையைவிட

பார்வையா முக்கியம் ?

 

காதே ! காதே !

ஜால்ரா ஓசையைவிட

போராட்ட முழக்கமா முக்கியம் ?

 

வாயே ! வாயே !

மந்திர உச்சாடணத்தைவிட

கேள்வி கேட்பதா முக்கியம் ?

 

முகமே ! முகமே !

முகமூடி அணிவதைவிட

ரெளத்திரம் பழகலா முக்கியம் ?

 

கையே ! காலே !

தொழுது அடிபணிவதைவிட

போரிட அணிவகுப்பதா முக்கியம் ?

 

உயிரே ! உடலே !

கூனிக்குறுகி குற்றேவல் புரிவதைவிட

மனிதனாய் எழுவதா முக்கியம் ?

 

மனிதா ! மனிதா !

சொரணையற்று சங்கியாய் இருப்பதைவிட

சுயமரியாதையோடு வீழ்வதே மேல் !

 

சுபொஅ.

 

 


உங்கள் கண்ணீரில்

Posted by அகத்தீ Labels:

 


உங்கள் கண்ணீரில்




உங்கள் கண்ணீரில்
உப்பில்லை
ஈரமில்லை
வருத்தமில்லை
ஆனாலும் நீங்கள்
அழுகிறீர்கள் ! – அது

கார்ப்பரேட் அழுகை
விவசாயிகளின் மீதான
கரிசனத்தால் நீங்கள்
அழவில்லை !
போராட்ட நெருப்பை
அணைக்க அழுகிறீர் !
மன்னிக்கவும்
அழுவதுபோல் நடிக்கிறீர் !
உங்கள் அழுகை தொழுகை
எல்லாமும் மகாநடிப்பே !

மோடிஷா !
உங்களை நான் மட்டுமல்ல
ராமன் ,சிவன் ,முருகன் ,துர்க்கா
அல்லா ,ஏசு ,சீக்கிய குரு நானக் ,
சத்புருஷர் ,மகாவீர்
உட்பட எந்தக் கடவுளும்
கடவுளின் தூதரும்
நம்பமாட்டோம் !

போராடும் விவசாயிகளே!
உங்களுக்கே
எங்கள் ஆசீர்வாதங்கள்!!!!

ஏனெனில்
நாங்கள் இருப்பதே
உழைப்பாளிகள்
வியர்வையில்தானே!

சுபொஅ. 

உயிர்ச் சரடு ……. ….. ……

Posted by அகத்தீ Labels:

 


உயிர்ச் சரடு ……. ….. ……

 

இயற்கையின் கொடும் சீற்றங்கள்

கடும் தொற்று நோய்கள்

 

உயிர் கொல்லும் பஞ்சங்கள்

கொடுங்கோலரின் அடக்குமுறைகள்

 

கொன்றழிக்கும் யுத்தங்கள்

மத ,இன ,சாதி மூர்க்க மோதல்கள்

 

லாபவெறி தலைக்கேறிய சுரண்டல் பேயாட்சிகள்

மனிதத்தை ,பசுமையை காவு கேட்கும் மூடச் சுயநலம்

 

அனைத்தையும் தாண்டித் தாண்டி பயணிக்கும்

மானுடத்தின் உயிர்ச் சரடு எது ?

 

வாழ்வின் மீதான காதலும் போராட்டமுமே !அன்பெனும்

ஆணிவேரில்தான் மானுடத்தின் சாதனைகள் அனைத்தும் .

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

பூர்வீகத்தைத் தேடி ஓர் பயணம் .

Posted by அகத்தீ Labels:

 

பூர்வீகத்தைத் தேடி ஓர் பயணம் .

 

என் பூர்வீகம் எது ? உன் பூர்வீகம் எது ?

 

நீயோ நானோ பூர்வீகம் எனக் கொண்டாடுவதுதான் உண்மையா ?

 

இக்கேள்வி எம்முள் நீண்டகாலமாய் அலைமோதுகிறது .ஆகவே என் பூர்வீகத்தைத் தேடி என் நினைவுக்கு எட்டியவரை பயணம் செய்கிறேன் . என் சொந்தக் கதையினூடே எது பூர்வீகம் என்பதை ஒற்றைச் சூத்திரத்தால் தீர்மானிக்க முடியாது என கண்டுகொண்டேன் . அதைச் சொல்லுகிறேன்.

 

பொதுவாய் முப்பாட்டனில் இருந்து பூர்வீகத்தை தொடங்கலாம் எனினும் என் முப்பாட்டன்கள் குறித்த நினைவு எதுவும் எம் ஞாபக அடுக்கில் பதியவே இல்லை .  தாத்தா ,ஆச்சி வரைதான் நினைவலைகள் தொட்டுத் தொட்டுத் திரும்புகின்றன .

 

அட்டணம்பட்டி,

சுசீந்திரம் ,

புத்தேரி ,

வீமநகரி [நெடுமங்காடு]

என்கிற நான்கு ஊர்களுக்கும் எனக்கும் ஏதோ ஓர்  தொடர்பு இருக்கிறது . அதன் எல்லை எவ்வளவு ? வேர் எவ்வளவு ? இவற்றை அலசி அசைபோடத் துவங்குகிறேன் .

 

அட்டணம்பட்டி :

தேனிமாவட்டம் பெரியகுளம் போகிறவழியில் வைகை நதிப் பாசணதில் செழிக்கும் ஊர் அட்டணம்பட்டி .

என் அப்பா பொன்னப்ப பிள்ளையின் அப்பா நாராயண பிள்ளையின் ஊர் அட்டணம் பட்டி . என் தந்தை வழி தாத்தா ஊர் . சிறுவயதில் ஓரிரு வேளை அங்கு சென்றிருக்கிறேன் . என் சின்னாச்சி அதுதான் என் தாத்தாவின் இரண்டாவது மனைவி குஞ்சரத்தம்மாள் தந்த வேர்க்கடலையும் தின்பண்டங்களும் மட்டுமே நினைவில் இருக்கிறது . அவரை அட்டணம்பட்டி ஆச்சி என்றே அழைத்ததும் நினைவில் உள்ளது .

 

என் ஆச்சி காமாட்சி என் தாத்தாவின் நான்காவது மனைவி . திருமணத்தின் போது என் தாத்தாவுக்கு அறுபது வயதாம் .என் ஆச்சிக்கு பதினாறு வயதாம் . அந்த ஆச்சி வாழ்ந்ததெல்லாம் குமரி மாவட்டம் புத்தேரியே !

 

அட்டணம்பட்டியோடு வேறெந்த சின்ன வயது நினைவுகளும் இல்லை .அங்கு வாழ்ந்ததும் இல்லை . ஓரிரு முறை சென்று வந்தது மட்டுமே !

 

நான் வாலிபர் சங்கம் ,கட்சி என ஊர் சுற்றக் கிளம்பிய போது அட்டணம்பட்டிக்கு சில நிகழ்ச்சிகளுக்குச் சென்றுள்ளேன் .

 

வைரமுத்துவின் “ மூன்றாம் உலக யுத்தம் “ நாவலை வாசித்த போதே அட்டணம் பட்டியின் தெருக்களில் நடந்தேன் .அதன் கிராமிய வாசத்தை நுகர்ந்தேன்.

 

என் மகனுக்கும் மகளுக்கும் பக்கத்து முடிதிருத்தகத்தில் மொட்டை அடித்தோமே தவிர அது ஒரு குடும்ப நிகழ்வாக ஆனதில்லை . ஆயின் மகள் வழி பேரன் மற்றும் பேத்திக்கு மருமகன் குடும்ப வழி திருப்பதியில் மொட்டை போட்டனர் .

 

மகன் வழி பேரன் ,பேத்திக்கு எங்கு மொட்டை போடுவது ? குலதெய்வம் கோவிலில்தான் மொட்டை போடணும் இது என் சம்பந்தி விருப்பம் .ஆகவே குலதெய்வம் தேடி அட்டணம்பட்டி போனோம் . இப்படி இரண்டு முறை அந்த ஊர் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலோடு உறவாடியுள்ளேன்.

 

என் தாத்தா நாராயண பிள்ளை அந்தக் கோயிலில் பூசாரியாகவோ ,அறங்காவலராகவோ இருந்துள்ளதாக என் அம்மா சொல்லியிருக்கிறார் .

 

அதற்கு மேல் எந்த விபரமும் எனக்குத் தெரியாது . தெரிந்து கொள்ள நான் ஆசைப்பட்டதும் இல்லை . அந்த ஊரோடு வேறெந்தத் தொடர்பும் எனக்கோ என் குடும்பத்தினருக்கோ இல்லவே இல்லை .

 

இந்த அட்டணம்பட்டியை நானோ என் பிள்ளைகளும் பேரன் பேத்திகளுமோ எப்படி தங்கள் பூர்வீகம் எனக் கொண்டாட முடியும் ?

 

சுசீந்திரம் :

குமரி மாவட்டம் அகஸ்தீஸரம் வட்டத்தில் கன்னியாகுமரிக்கு போகிற வழியில் பஃறுளி ஆறு எனப்படும் பழையாற்றின் கரையில் அமைந்துள்ள ஊர் சுசீந்திரம்.

 

என் அம்மா தங்கம்மாவின் ஊர் .நான் பிறந்தது . வளர்ந்தது .பத்தாம் வகுப்பு வரை படித்தது எல்லாம் அங்குதான் . அம்மாவழி ஆச்சி சிவஞான வடிவு , மாமா , அத்தை என உறவாடி மகிழ்ந்ததும் அங்குதான் .

 

நான்கு ரத வீதி ,கோயில் ,குளம் ,ஆறு எல்லாம் எம்முள் இன்னும் பசுமை பூத்து நிற்கும் ஊர் சுசீந்திரம் . சிவதாணுமாலயப் பெருமாள் எனும் தாணுமாலையன் கோயில் என்னுள் ஆழப்பதிந்தது . நான் நாத்திகனாக பெரிதும் காரணமானதும் இக்கோயிலே ! இவ்வூரின் ஆறும் குளமும் என் சிறுவயதோடு பின்னிப் பிணைந்தது அல்லவா ?

 

நான் ஐந்தாம் வகுப்புவரை படித்த யுபிஎஸ் அரசு பள்ளியும் , பத்தாம் வகுப்புவரை படித்த எஸ் எம் எஸ் எம் உய்ர்நிலைப் பள்ளியும் என்னை செதுக்கிய பட்டறைகளாகும்.

 

என் அக்காவுக்கு என் அப்பா தன் தாயார் பெயரும் அட்டணம்பட்டி அம்மன் நினைவுமாக காமாட்சி என பெயர் சூட்டினாலும் வீட்டில் சரஸ்வதி என்றே அழைத்தனர் .எனக்கு என் அம்மாவின் அப்பா பெயர் அகஸ்த்திலிங்கம் எனச் சூட்டினர்  ஆயினும் என் அப்பா தான் பிறந்த புத்தேரி யோகீஸ்வரன் கோயில் நினைவாக யோகீஸ்வரன் என்றே அழைத்தனர் . என் அண்ணன் நாராயணன் .தம்பி ஐயப்பன் . இது போக என் உடன் பிறந்த மேலும் மூன்று பேர் சிசு மரணமாகிவிட்டனர் .

 

பிறந்தது முதல் பதினைந்து வருடங்கள் என் உணர்வோடு கலந்தது சுசீந்திரமே !

 

அன்று குமரிமாவட்டத்தில் நாஞ்சில் நாட்டில் “மக்க வழி” எனும் தந்தை மைய சமூக அமைப்பும், “மருமக்க வழி” என்கிற தாய் மையச் சமூக அமைப்பும் நிலவின .இரண்டுக்கும் மோதல் இருந்தன . கவிமணி தேசியவிநாயம் பிள்ளை மருமக்கவழியை எதிர்ப்பதில் முன்நின்றார் . அவர் எழுதிய  “மருமக்கள்வழி மாண்மியம்” எனும் நூல் இதனைச் சொல்லும் .

 

எங்கள் குடும்பம் சொத்துவழி மக்கவழி சார்ந்தது என சொல்லிக் கொண்டாலும் பண்பாட்டு வழி மருமக்கவழியே மேலோங்கி இருந்தது . நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை எங்க குடும்பம் என் தாய்மாமா வீட்டின் ஓர் பகுதியில்தான் குடியிருந்தது . என் அப்பா பிறந்த புத்தேரிக்கு தீபாவளி ,பொங்கல் ,பள்ளி விடுமுறைக்கு செல்வதோடு சரி ! என் அப்பா கடை வைத்திருந்ததும் , திருடு கொடுத்ததும் , நட்டப்பட்டதும் எல்லாம் சுசீந்திரமே .அதாவது என் அம்மா ஊரில்தான் .

 

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது என் குடும்பம் வாழ்வுதேடி ; கெட்டும் பட்டணம் போ என சென்னைக்கு குடி பெயர்ந்தது . நான் பத்தாம் வகுப்பின் கடைசி பருவத்தை என் அக்கா காமாட்சி வீட்டில் – அவளை திருமணம் செய்து கொடுத்திருந்த தேரூரில் இருந்தே கடந்தேன் .

 

பெரியாரும் திராவிடர் கழகமும் சுசீந்திரத்தில் இருந்தபோதே என்னுள் புகுந்துவிட்டது .ஆனால் வடிவம் பெறவில்லை.

 

பதினொராம் வகுப்புக்கு சென்னைக்கு வந்தேன் . குரோம்பேட்டை லட்சுமிபுரத்திலிருந்து என் சென்னை வாழ்க்கை துவங்கியது . சென்னைக்கு வந்த பிறகு ஊர் பெயரை  ‘சு’ என் பெயரின் முன்பு இணைத்து , பெயரில் இருந்த ’ஸ்’ என்கிற வடமொழிக்கும் ,பெயரின் கடைசி வாலாய் இருந்த சாதிக்கும் விடை கொடுத்துவிட்டு சு.பொ.அகத்தியலிங்கம் என என்னை நானே அறிமுகம் செய்யலானேன். 

 

நான் பதினோராம் வகுப்பு படிக்கும் போது முதல்வர் அண்ணா இறக்கிறார் . அந்த ஆண்டு பள்ளி ஆண்டு மலரில் “ அண்ணா அமரரானது குறித்து ஆற்றாது அரற்றியவை.” எனும் கட்டுரையே  பிரசுரமான என் முதல் எழுத்து . அப்போது லட்சுமிபுரத்தில் அண்ணா நற்பணி மன்றம் துவக்கினோ. நான் துணைச் செயலாளர் ஆனேன். சு .பொ.அகத்தியலிங்கம் என எனக்கு பெயர் சூட்டிக் கொண்டதும் அப்போதே !

 

கவிதை எழுதத் தொடங்கிய போது மேலும் மாறி சு.பொ.அலி என மாறினேன் . வாலிபர் சங்கத்தில் செயல்படத் துவங்கி முழுநேர கட்சி ஊழியரானபோது மீண்டும் சு.பொ.அகத்தியலிங்கம் ஆனேன் . அப்போது அலி என்ற பெயரோடு வாலிபர் சங்கச் செயலாளராக இருப்பது சரியாக இருக்காது கேலிக்கு வழிசெய்யும் என தோழர்கள் வி.பி.சிந்தனும் பி.ஆர் .பரமேஸ்வரனும் சொல்ல நான் ஏற்றேன் .

 

சு.பொ.அகத்தியலிங்கம் என்பதில் முதலாவதாக உள்ள  “சு” என் வாழ்வின் முற்பகுதியில் என் உணர்வோடும் உதிரத்தோடும் சுசீந்திரம் கலந்ததின் வெளிப்பாடுதான் .

 

நாங்கள் சென்னை வந்த பிறகு சுசீந்திரத்தோடு ஆன உறவு முழுவதுமாக வெட்டப்பட்டுவிட்டது . நல்லது கெட்டது எதற்கும் போனதில்லை .டூரிஸ்ட் போல் மனைவி பிள்ளைகளோடு நாலய்ந்து முறை போனதைத் தவிர .

 

ஆயினும் , இந்த சுசீந்திரமே என் பிள்ளைகளுக்கும் ,பேரன் ,பேத்திகளுக்கும் பூர்வீகம் எனச் சொல்ல முடியுமோ ? இதுவே என் கேள்வி .

 

புத்தேரி :

 

தேரூரில் பிறந்த கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை , மணம் முடித்ததும் வாழ்ந்ததும் புத்தேரி . அந்தப் புத்தேரிதான் என் அப்பா பிறந்த ஊர் .என் ஆச்சி காமாட்சி அம்மாளின் ஊர் .

 

இளமையில் கணவனை இழந்து  தன் வாழ்க்கை ,இரண்டு பிள்ளைகள் , கொஞ்சம் நிலம் , ஒரு வீடு இவற்றை உறவினரின் கொள்ளிக்கண் பார்வையிலிருந்து காக்க அவர் பட்டபாடு பெரும்பாடு . கணவன் மற்றும் உறவினர் மீதான வெறுப்பு  சாதி ,மதம் ,கடவுள் மீதான ஒவ்வாமையாய்ப் படர்ந்தது .

 

அவர் வீடு ஊரின் கடைக்கோடியாகவும் அதனை அடுத்து நாவிதர் ,வண்ணார் ,இதரர் வாழும் பகுதியாவும் அமைந்து போனது .அவரும் தம் சாதி சனத்தை விட பிற உழைக்கும் மக்களையே நம்பினார் . அவரே நிலத்தை உழுது பயிரிட இது எளிதாக்கியது .தக்க காவலும் ஆனது . உறவினர் மத்தியில் பஜாரி ,வாயாடி என பெயர் .ஆனால் என் பார்வையில் பெண்ணியப் போராளியே !

 

அங்கு நான் வசிக்கவில்லை ஆனால் அடிக்கடி போகும் ஊர் . ஆறு வாய்க்கால் .குளம் ,யோகீஸ்வரன் கோயில் எல்லாம் எனக்கு பிடிக்கும் .

 

சுசீந்திரம் தாணுமலையன் கோயில் சிற்பம் கொஞ்சும் ; இசை கொஞ்சும் ; ஆனால் போத்தி எனப்படும் பார்ப்பனர்களின் ஆதிக்கமும் கெடுபிடியும் அந்த கோயிலை சுற்றி சுற்றி வந்த என்னுள் வெறுப்பையும் நாத்திகத் தேடலையும் உசுப்பின . அதற்கு நேர்மாறாக யோகீஸ்வரன் கோயில் பங்குனிக்கு பங்குனி கொடையின் போது மட்டுமே மண்ணால் பூசி மெழுகி கோபுரமும் உச்சியில் சாமியும் எழும் .பூசாரியும் ஐயர் அல்ல .கோயிலை தொட்டு தொட்டு ஓடி ஆடி விளையாட முடியும் .இதனால் அந்த யோகீஸ்வரர் கொஞ்சம் நெஞ்சுக்கு நெருக்கமாய்ப் போனார் .

 

வீட்டில் என்னை யோகீஸ்வரன் என்றே அழைப்பர் .சுசீந்திரத்தில் வாழ்ந்தவரை நண்பர்களிடமும் அப்பெயரும் புழங்கும் . இந்த ஞாபகத்தின் மிச்ச சொச்சமாய் என் மகன் சங்கரை என் அம்மா [அவன் ஆச்சி] யோகி என்று அழைக்க அதுவும் பழகிப்போனது .இப்போதும் அவனை யோகி என்றே வீட்டில் அழைக்கிறோம் .

 

எங்கள் குடும்பத்தில் யோகி இப்படி தொடர்கிறார் . இது புத்தேரி தந்த உணர்வின் தொடர்ச்சிதானே !

 

குடும்பம் எனில் சொத்துப் பிரச்சனையும் இருக்கவே செய்யும்தானே .சொத்து சித்தப்பா கைக்குப் போனது  உறவு சற்று சிதலம் அடைந்தது  சென்னைக்கு வந்த பின் தொடர்பற்றுப் போனது .

 

இந்த புத்தேரியை எங்கள் பூர்வீகம் எனச் சொல்ல இயலுமோ ?

 

வீமநகரி [ நெடுமங்காடு]

திருவனந்தபுரம் அருகில் வீமநகரி இருப்பதாய் கேள்வி .இங்குதான் அகஸ்திலிங்கத்துக்கு கோயிலும் உள்ளதாம் . நான் போனதும் இல்லை .பார்த்ததும் இல்லை.

 

என் அம்மாவின் அப்பா ஊர் . நான் சென்ற ஞாபகம் இல்லை . என் தாத்தா மீசைக்காரர் அகஸ்திலிங்கம் பிள்ளை பிழைக்க வந்த ஊர் சுசீந்திரம் .மணமுடித்ததும் இங்குதான் .ஆனால் ஊரார் அழைக்கும் பெயர் மட்டும் வீமநெரிக்காரர் . வீமநெரிக் குடும்பம்.

 

இந்த வீமநகரியோடு எந்தத் தொடர்பும் போக்குவரத்தும் எமக்கு இல்லை ; அங்குள்ள ஓர் கோயிலில் உறைந்த சாமியின் பெயரே எனக்கும் தொடர்கிறது என்பது தவிர வேறெந்தத் தொடர்பும் இல்லை .

 

ஆக இந்த வீமநகரி எனக்கு பூர்வீகம் எனச் சொல்லக் கூடுமோ ?

 

 

இப்போது பெருங்கேள்வி என் பூர்வீகம் எது ?

 

சென்னை வந்த பிறகு குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் ,அப்புறம் பழவந்தங்கலில் 1981 வரை , திருமணத்திற்குப் பின் பெரம்பூர் எனக் கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் அதாவது வாழ்வின் மையமான காலம் முழுவதும் சென்னைவாசியே ! ஆக ,சென்னை என்னோடு இரண்டறக் கலந்தது அதிகம் .

 

1998 முதல் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப் பேட்டை அருகே திரூரில் சுமார் பதினைந்து வருடம் , இப்போது 2013 முதல் பெங்களூரில்

 

இப்போது யோசிக்கிறேன் என் பூர்வீகம் எது ?

 

இறந்தவர்க்கு திதி கொடுக்கும் போது தந்தைவழி எழுதலைமுறை ஆண் மூதாதையர்  பெயர்களைக் கேட்க வேண்டுமாம் .அது அவர்களின் பூர்வீகத்தை உறுதி செய்யவாம்  கிட்டதட்ட யாருக்கும் இப்படி ஏழுதலைமுறை தெரிய வாய்ப்பில்லை .எனவே ஐயர் ஒன்றிரண்டை கேட்டுவிட்டு அவர் மனம் போல் கதைவிட்டு சமாளிப்பார் . முக்கியமான ஒரு செய்தி தாய்வழி பூர்வீகம் கேட்கப்படாது .ஏனெனில் பெண்ணுக்கு சுயம் கிடையாது .கணவனின் சார்பு மட்டுமே என்பது மநு அநீதி .

 

ஆக ,பூர்வீகம் என்பது தந்தை வழி மட்டுமே என்பது எவ்வளவு அநீதியானது .சமூகநீதிக்கும் பாலின சமத்துவத்துக்கும் எதிரானது என்பது சொல்லாமல் விளங்கும் .

 

நான் என் பூர்வீகத் தேடலில் விரும்பியோ விரும்பாமலோ இரு பக்கமும் சென்று வந்து விட்டேன் .

 

நான் மணமுடித்த கலாவதி திண்டுக்கல்லில் பிறந்தவர்  தந்தை திருச்சியைச் சார்ந்தவர் . அவர்களின் பூர்வீகம் நெருக்க நெருக்கமாக வாழ்ந்தனர் . அங்கு முந்தைய தலைமுறையின் கொள்வினை கொடுப்பினை மிகவும் உள்ளடக்கியே இருந்தன . எனவே ஓரளவு அவர் பூர்வீகம் மூன்றுதலைமுறை அடையாளம் காட்டக்கூடியதாய் இருந்தது .ஆயின் சாதிச் சிமிழுக்குள் அடங்கிடும் என்பதே சோகம் .

 

என் பெயரின் தலை எழுத்து இன்ஷியல் அப்பா பெயரே . ஆனால் என் மகள் ,மகன் இருவருக்கும்  “அ.க” என தந்தை ,தாய் என இருவர் இன்ஷியலும் பிறப்புச் சான்றிதழிலேயே பதிவாகிவிட்டது .

 

சரி ! பூர்வீகச் சிக்கலுக்கு வருவோம் .

 

என்னால் இரண்டு தலைமுறைக்கு மேல் தேட முடியவில்லை . முப்பாட்டன் தெரியவில்லை எழு தலைமுறை இரு வழி கொடி வழி அறிய வில்லை . இதுதான் யதார்த்தம் .

 

என் மகள் சாதி மறுப்பு காதல் திருமணம் .மருமகன் தாய் மொழியும் வேறு .மகனும் சாதி மறுப்புத் திருமணம் . ஆக உறவு , தொடர்பு , வேர் எல்லாம் பரந்து விரிந்து போகிறது .

 

என் பேரப் பிள்ளைகளுக்கு எது பூர்வீகம் ?

 

மிகச் சிக்கலான கேள்வி . மதத் தூய்மை ,சாதித் தூய்மை ,இனத் தூய்மை என்பதெல்லாம் பொருளற்ற சொல்லாடல் .

 

நாம் வாழும் காலத்தில் பேசும் மொழி சார்ந்து அடையாளப் படுத்தலாம் .அவ்வளவே . சாதி ,மதம் தேவை இல்லை .

 

பேசும் மொழியால் தமிழன் ,வாழும் நாட்டால் இப்போது இந்தியன் .நாளை என்ன ஆகுமோ ? யாரறிவார் ?

 

உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித்தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார்  அனத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு ; மனித அறிவுத்தேடலின் முழுக்கதை “ நூலாசிரியர் பில் பிரைசன். 

 

 நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்? 

 

வாழும் போது சாதி ,மத வெறி குடுவையில் வீழாமலும் , இனவெறி பொறியில் சிக்காமலும் பேசும் மொழியால் தமிழன் வாழும் நாட்டால் இந்தியன்  செய்யும் தொழிலால் உழைக்கும் வர்க்கம் என அறிவுபூர்வமாக உணர்ந்து வாழ்ந்தால் நாம் மனித குலத்துக்கு சேவகம் செய்தவராவோம். பூர்வீகம் குறித்த தேடல் சாதி ,மதம் ,இனம் என ஏதேனும் வலையில் சிக்கிக் கொள்ளக் கூடாது .அதற்கான வாய்ப்பதிகம். ஆக .விழிப்போடிருப்போம்.

 

 

 

 

என் இரண்டரை வயது பேத்தி “ சுபொ தோழர் … சுபொ தோழர்… தோழர்,,” என அழைக்கிறாள் .

 

என் பூர்வீகம் பிடிபட்டுவிட்டது .

 

சுபொஅகத்தியலிங்கம்.

 

[ என் பிள்ளைகள் இதனை உணர்ந்து தங்கள் கிளைவழியையும் இணைத்து எழுதி வைத்தால் நாளைய தலைமுறை சாதி ,மத ,இன வெறியை துறந்து வாழலாம் . அம்புடுத்தான்….. ]

 

 

 

 

 

பலப்பல வண்ணங்களில்

Posted by அகத்தீ

 


பலப்பல வண்ணங்களில் பூக்கள் சிரித்தன

வண்ணத்துப்பூச்சிகள் சிறடித்தன

பூங்கா நடுவே குட்டிபிசாசுகள்

ஆடி , ஓடி , ஏறிக் குதித்து விளையாடின

கூச்சல், மகிழ்ச்சி, கலகலப்பு

 

 

அங்கே ஐம்பது குட்டிப் பிசாசுகள்

ஆனால் ஒருப்போல் இல்லை

ஆண் ,பெண் ,கறுப்பு ,சிவப்பு ,மாநிறம்

சுரண்ட முடி , செம்பட்டைத் தலை ,

ஒழுகின மூக்கு , திக்குவாய் , சூம்பிய கால்

குட்டிப்பிசாசுகள் காய்விட்டன , பழம்விட்டன

எல்லாம் நொடிக்கு நொடி மாறின

ஒரு போதும் வெறுக்கவில்லை

 

 

அங்கே ஓர் மனித சங்கி வந்தார்

 “ நீ ஓரம் உட்கார் ! நீ அவனோடு சேராதே !

அவன் உனக்கு சமம் அல்ல ! நீ மட்டுமே மேலானவன் !”

குட்டிப் பிசாசுகளைக் கூறுப்போட்டார்.

 

 

 

வெற்றிக் களிப்புடன் வாசலைத் திறந்தார்

ஒற்றைக் காலை வெளியே வைத்தார்

 

 

குட்டிப் பிசாசுகள் ஒன்றாய்ச் சேர்ந்து

குலவையிட்டன .. கும்மாளமிட்டன

மனிதனைவிட பிசாசுகள் மேல் !!!

 

 

சுபொஅ.

 

[ இது ஓர் உண்மை நிகழ்வுசார் புனைவு ]

 


வேறென்ன வேண்டும் எனக்கு ?

Posted by அகத்தீ

 


#CommunistPartyAt100 #கம்யூனிசம்100

 

மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும்

வறட்டுத் தத்துவம் அல்ல

கம்யூனிசம் .

 

மண்ணின் தத்துவத்தோடும்

வரலாற்றோடும் பின்னிப் பிணைந்த

அறிவியல் பார்வை .

 

 

அறிவுஜீவிகளின் மயிர்பிளக்கும்

விவாதங்களில் கருக்கொண்டதல்ல

கம்யூனிஸ்ட் கட்சி !

 

மாளா மானுட அன்பும்

வர்க்கப் போரும் வர்ணப் போரும்

இணைந்த நம்பிக்கை !

 

சாதி ,சடங்கு ,மதம் ,மூடத்தனம்

ஏமாற்று ,வஞ்சகம் மிகுந்த

சாலையில் சாகசப் பயணம் !

 

இராயிரம் ஆண்டு அடைந்த அழுக்கை

ஒற்றைச் சலவையில் போக்கும்

மாயஜாலம் ஏதுமில்லை !

 

டிரம்பும் மோடியும் கார்ப்பரேட்டும் சங்கியும்

கம்யூனிச பூதமென அலறி அரற்ற

உழைக்கும் மக்களின் ஓங்காரச் சிரிப்பு !

 

 

நூறாண்டு ஆச்சே இன்னுமா என்போரே

வரலாற்றில் இது ஓர் துளி – இது

வைரம் பாய்ந்த போராட்டப் பயிர்

 

 

எதிர்ப்பினூடே ஓங்கி உயரும் !

மானுடத்தின் புன்னகை மலர

மார்க்சியம் மட்டுமே மாமருந்து !!!

 

அவசரகாலந்தொட்டு எம் மரணம்வரை

லட்சியப் பயணத்தில் நானும் ஓர் அங்கம் !

வேறென்ன வேண்டும் எனக்கு ?

 

சுபொஅ.

கொள்கை சார்ந்து வாழ்வது பெரும் போராட்டம் .

Posted by அகத்தீ

 

 கொள்கை சார்ந்து வாழ்வது பெரும் போராட்டம் .


கொள்கை சார்ந்து வாழ்வது பெரும் போராட்டம் . அது எல்லோருக்கும் இயலாது . நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பானது .

அதிலும் அரசியலை முழுநேரமாய் வரிந்து கொள்வோர்க்கு இறுதிவரை கொள்கைவழி நிற்பது என்பது ஒவ்வொரு நாளும் போராட்டமே !
வாழ்க்கைப் பாட்டிற்கு வேறு ஏதேனும் தொழில் செய்து கொண்டே ; பகுதியாய் அரசியலில் தலை நீட்டுவோர் ஓர் ரகம் . அவர்களில் பெரும் பாலோர் தம் தொழிலுக்கு பாதகம் இல்லாமல் தம் அரசியல் ஈடுபாட்டை வரையறுத்துக் கொள்வர் . ஓரளவு சுயமரியாதையை அவர்களால் பேணிக் கொள்ள இயலும் . கட்சிப் பதவிகளில் பெரிய ஆர்வம் காட்டாமலிருப்பது இவர்களுக்கு கூடுதல் பலமாகும் . ஆயின் பதவி ஆசை பாடாய்ப் படுத்திவிடும் . விளைவு இழப்புகளை சந்திப்பர் . எதிர் நிலைக்கும் போவர் .
எந்தத் தொழில் செய்யினும் தங்கள் அனுபவத்துக்கு ஏற்ப அடுத்த கட்ட உயர்வை எட்டுவது இயல்பு . அரசியலில் இந்த எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் . ஆயின் நடைமுறை அவ்வளவு எளிதாக ஏணியில் ஏறவிடாது .
எப்போதும் மேலே போகப்போக போட்டியும் பொறாமையும் காலைவாருவதும் விருப்பு வெறுப்பும் அதிகம் இருக்கும் .ஏமாற்றமும் விரக்தியும் மேலோங்கும் . வாழ்க்கைச் சூழலும் ,தனக்கு பின் வந்தவர் முன்செல்வதும் ஆன சூழல் வருத்தும் சுற்றியுள்ளோரும் பகைவரும் குத்திக் காட்டுவர் . உள் கட்சியிலும் ஓரங்கட்டவும் வெளியேற்றவும் சிலர் முயல்வர் இச்சூழலில் ஒதுங்கி கொள்கையை மட்டும் பற்றி நிற்பது மிகச் சிலருக்கே சாத்தியம். பலர் இடறி விழவும் ; தடுமாறவும் தடம்மாறவும் வாசல் தானே திறந்துவிடும் .இவை எல்லாம் கொள்கை சார்ந்த அரசியலில் மட்டுமே .
இப்போது அரசியல் களமும் மெல்ல மெல்ல சூதாட்டக் களமாக்கப்பட்டு வருகிறது . இங்கே ஒன்று ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்ட வேண்டும் அல்லது குறுக்கு வழியில் பணம் பிடுங்க வேண்டும் . இங்கே பதவி வாங்கப்படுவதே . வாங்கியதை விற்பது வியாபார நியதிதானே ! நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும் கிரிமினல்களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்திருப்பது சீரழிவின் அளவீடு ஆகும் .
உள் கட்சி ஜனநாயகம் உயிர்ப்புடன் இருப்பின் இத்தகு விபத்துகள் ஓரளவு தவிர்க்கப்படும் . பெரும்பாலான முதலாளித்துவக் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் புதைக்கப்பட்டு நாயக வழிபாடு முன்னிறுத்தப்படுவதால் “உழைப்புக்கும் ,தகுதிக்கும் ,அனுபவத்துக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பது முயற்கொம்பே ! ஜால்ராக்களும் ஒட்டுண்ணிகளுமே உயரே செல்லும் . விளைவு கட்சி வீழ்ச்சியைச் சந்திக்கும் .
பாஜக என்பதே ஆர் எஸ் எஸ் என்கிற பாசிச அமைப்பின் அரசியல் பிரிவே . ஆகவே ஆர் எஸ் எஸ் கட்டளைப்படி இயங்கவே ஆதிமுதல் பயிற்சியும் கருத்தியலும் உருவாக்கப்பட்டுவிடுவதால் அது ஓர் தாதாவுக்கு கட்டுப்படும் கிரிமினல் கூட்டம் போல் செயல்பட முடிகிறது . அதே சமயம் அரசியல் சதுரங்க வேட்டையில் எல்லா குயுத்திகளையும் சகுனி வேலைகளையும் செய்யும் போது அங்கும் அதிருப்தி உருவாகும் ; ஆயினும் சீக்கிரம் வெளிப்படாது .சர்வாதிகாரத்தின் கீழ் சீழ் ஒழுகுவது வெளிப்பட நாளாகும் .முற்றிய பிறகே வெளிப்படும் . அது அதன் இறுதி கட்டத்தை நெருங்கிவிடும் .
அரசியல் என்பது மக்கள் தொண்டு என்பது போய் ஆட்சி அதிகாரம் என்கிற நினைப்பே இப்போது ஊதி பெரிதாக்கப்படுகிறது தேர்தல் நெருக்கத்தில் கட்சி ஆரம்பிப்பேன் .கட்சி ஆரம்பித்ததும் ஆட்சியைப் பிடிப்போம் என ரஜினி அறிவிப்பதும் ; அதை விமர்சனமின்றி ஊடகங்கள் பெரிதாகப் பேசுவதும் அரசியலை வெறும் பதவி அரிப்பாக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டமாகும் .இதனை ஏற்பதைவிட மக்கள் விரோத சிந்தனை எதுவும் கிடையாது .
.
இடது சாரி /கம்யூனிஸ்ட் இயக்கங்களில் உள்கட்சி ஜனநாயகம் பேசப்படும் அளவு செயலில் இருக்கிறதா ? சுயபரிசீலனை ஆவணங்கள் வெறும் எட்டுச் சுரைக் காயாகவே அங்கும் மாறிப் போய்விட வில்லையா ? அக்கட்சிகளிலும் மனம் நொந்தோர் இல்லையா ? இவையும் இவைபோன்ற இன்ன பிற கேள்விகளும் எளிதில் புறந்தள்ள முடியாதவையே !
ஆயினும் அங்கு அமைப்புசார் நடைமுறையே முன்னிலைப் படுத்தப்படுவதால் ; நாயக வழிபாடு குறைவாக இருப்பதால் தீர்வுக்கான வாசல் அடைபடாமல் இன்னும் திறந்தே இருக்கிறது . உட்கட்சி ஜனநாயகம் என்பது பதவிகளுக்கான தேர்வு மட்டுமல்ல ; கொள்கை முடிவுகளை பரந்த விவாதத்தின் மூலம் எட்டுவதும் ஆகும் . உட்கட்சி ஜனநாயகத்துக்கான போராட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொடர் நடவடிக்கையாகும் . அது கட்சி வாழ்க்கையின் ஒரு பகுதி .இதிலும் ஓர் சிக்கல் சிலர் அதுமட்டுமே கட்சி செயல்பாடாய் கருதி அதையே இருபத்தி நாலுமணி நேரமும் செய்து தானும் நொந்து கட்சி வளர்ச்சிக்கும் குந்தகம் செய்கின்ற சிலர் உள்ளனர் . இளைய தலைமுறைக்கும் புதியவர்களுக்கும் வழிவிடாத மூத்த தலைமுறையும் தங்களை அறியாமலே கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் செய்பவரே .
மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் ,அன்றைய சிபிஎம் மாநிலச் செயலாளர் தோழர் ஏ.நல்லசிவன் சென்னை மாவட்ட மாநாட்டு நிறைவுரையின் போது சொன்னார் . “ உள் கட்சிப் போராட்டமும் தத்துவ விவாதமும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் உயிர்நாடியே . மறுக்கவே முடியாது .மறக்கவும் கூடாது .அதேவேளை பொதுவெளியில் வேட்டியை உதறக்கூடாது ; ஜட்டியை மாற்றக்கூடாது அரிப்பெடுக்கிறது என்பதால் கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் சொறியவும் கூடாது .” என்றார் .
இப்போது உள்கட்சி போராட்டம் நடத்த தோதான நேரமும் இல்லை ;களமும் பாசிச எதிர்ப்புப் போர் முனையில் கவனம் செலுத்த கட்டாயப்படுத்துகிறது . இதனை கவனத்தில் கொள்வோமா ?
சிபிஎம் முதுபெரும் தோழர் என் .சங்கரய்யா அடிக்கடி சொல்லுவார் கட்சியிலிருந்து விலகி இருப்போரில் ஒரு சிலர் மட்டுமே கொள்கை மாறுபட்டு நிற்பவர் .பெரும்பாலோர் தனிநபர் நடவடிக்கை சார்ந்தே மாறுபட்டு நிற்கின்றனர் .அவர்களோடு பேசுங்கள்.ஏதேனும் ஒரு வகையில் கட்சியோடு நெருங்கி நிற்கச் செய்யுங்கள் .அது இன்றைய அவசரத் தேவை .
சுபொஅ.

தேவை ஒரு பதவி , ஒரு விசிடிங் கார்டு …????

Posted by அகத்தீ

 


தேவை ஒரு பதவி , ஒரு விசிடிங் கார்டு …????

அரசியலில் பலருக்கு ஏதோ ஒருவித ஆர்வம் பொதுவாய் இருக்கும் அதனாலேயே அவரவர் ஏதோ ஓர் கட்சியின் உறுப்பினராக இருப்பார் என்பது பொருளல்ல ; அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை .
சிலர் ஏதேனும் ஓர் கட்சியில் தீவிரமாய் அல்லது சாதரணமாய்ச் செயல்படத் துவங்குவர் அதற்கு அக்கட்சியின் கொள்கை ஈர்ப்பு / அக்கட்சி தலைமை மீதான நம்பிக்கை / மதம் ,சாதி ,இனம் ஏதோ ஒன்றின் மீதான பற்று / உள்ளூர் விரோத குரோத எதிர்நிலை என ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம் .
கொள்கை சார்ந்து படித்து , விவாதித்து, போராட்டங்களில் ஈடுபட்டு புடம்போட்டு வார்க்கப்படுகிற லட்சியவாத அரசியல்வாதிகளும் உண்டு . எண்ணிக்கையில் குறைவாயினும் இவர்களின் தேவை முன்னெப்போதையும்விட இப்போது அதிகரித்திருக்கிறது.
யார் கட்சி ஆரம்பித்தாலும் அவர்களுக்கும் ஊருக்கு இரண்டு பேர் கிடைத்து விடுகிறார்களே எப்படி ? சாதி அல்லது உபசாதி இப்படி ஏதேனும் தொடர்பு ஒரு காரணம் ; ஆயின் அதுமட்டுமல்ல.
இளைஞர்களில் ஒரு மிக மிகச் சிறு பகுதியினர் வெகுசீக்கிரம் செல்வாக்கு பெற வேண்டும் , செல்வம் ஈட்ட வேண்டும் என அவசரப் படுகின்றனர் . அவர்கள் ஏற்கெனவே வேர்விட்ட கட்சிகளில் சேர்ந்து பொறுப்புகளைப் பெறுவது மிகச் சிரமம் .
தாங்கள் போலிஸ் ஸ்டேசன் . அரசு அலுவலகம் இவற்றோடு தொடர்பு கொள்ளவும் , கட்டை பஞ்சாயத்துகள் ,கமிஷன் பேரங்கள் செய்யவும் ஒரு விசிட்டிங் கார்டு தேவை .தன் லெட்டர் ஹெட்டில் ஒரு பதவி தேவை ,வாகனத்துக்கு ஒரு கொடி தேவை ,இவை அவருக்கு செல்வாக்கையும் செல்வத்தையும் கொண்டுவர ஒரு வழி .
ஆகவேதான் அதற்கேற்ப சில கட்சிகளை தேர்ந்தெடுத்து சேர்கின்றனர் .தமிழகம் நெடுக்க இது போன்றோரைக் காணலாம். இது பழைய பாணி .
இப்போது இப்படி கட்டை பஞ்சாயத்து , போலிஸுக்கும் அரசு அலுவலகங்களிலும் கமிஷன் ஏஜெண்டு ,ரவுடித்தனம் ,இப்படி இருப்போரின் சாதி ,உபசாதி எல்லாம் கணக்கிட்டு தம் கட்சியில் சேர்த்துக் கொள்ள பாஜக தீவிரமாக முயற்சிக்கிறது . அதற்காக பணத்தை வாரி இறைக்கிறது .அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டியும் வழிக்கு கொணர்கிறது .
மறுபுறம் உயர் அதிகாரிகள் ,பேராசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் பலவீனங்களை சரியாக அறிந்து அதை கையில் எடுத்து பேசியும் ஆசைவார்த்த்தை காட்டியும் மிரட்டியும் பாஜகவில் சேர்க்க முயற்சிக்கின்றனர் .
சமூகநீதி ,சமத்துவம் , ஒடுக்கப்பட்டோர் உழைக்கும் மக்கள் நலம் விரும்புவோர் அரசியல் களத்தில் இன்னும் நுட்பமாக - இன்னும் பரவலாக - இன்னும் ஆழமாக - இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டியதையே இச்சூழல் உரக்கச் சொல்கிறது .
சுபொஅ.

பெரும்பசி பேய்ப்பசியுடன்

Posted by அகத்தீ

 

பெரும்பசி பேய்ப்பசியுடன்
லாபப்பிசாசு வலம்வர
மந்திர உச்சாடனத்தோடு
தொப்பைகாவி முன்வர
அவர் கொள்ளிக்கண்களில்
பட்டதெல்லாம் சாம்பலாக
சுபம் லாபம் சர்வம் நாசம்
ஜெய் ராம் ஸ்ரீராம் !ராம் ராம் !
சுபொஅ.

இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்

Posted by அகத்தீ

 


இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்

 

அவன் வானத்துக்கும் பூமிக்கும்

விஸ்வரூபமெடுத்து நின்றான்

தன் இரும்புக் கைகளால் கண்ணில்

கண்ட அனைத்தையும் பிடுங்கி எறிந்தான்

 

 

நூறாண்டு கண்ட ஆலமரமோ

பாரம்பரியமான கற்கோட்டையோ

மரமோ ,கட்டிடமோ ,உயிரோ ,செடி கோடியோ

எதையும் அவன் விட்டுவைக்கவில்லை

 

 

அவன் கால்களில் புல்பூண்டு புழு

அனைத்தும் துவம்சமாயின

அவன் தோள்களில் கால்களில்

ஒட்டிக்கொண்ட ஒட்டுண்ணிகள்

மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன

 

 

 “மானிடப் பதர்களே ! என்னையா எதிர்ப்பீர்?

ஊதிப் பறத்துவேன் !நசுக்கி அழிப்பேன் ?

ஹா…ஹா,,,, ஹா,,,,, ஹா,,,,” என்றவன்

அரக்கச் சிரிப்பை அடக்கியபடியே

கடுப்பாய்க் கேட்டான் , “ யாராடா

பூமிக்கு கீழே நெருப்பைப் புதைத்தவன் ?”

 

முனகலாய் வெளிப்பட்டது பதில்

 “ நான் தான் தூங்கும் எரிமலை

இப்போதுதான் சோம்பல் முறிக்கிறேன்.”

 

சுபொஅ.


எது தர்மம் ? எது அதர்மம் ?

Posted by அகத்தீ

 


எது தர்மம் ? எது அதர்மம் ?
எது அறம் ? எது அறமற்றது ?
எது நீதி ? எது அநீதி ?
எது நியாயம் ? எது அநியாயம் ?
எது புண்ணியம் ? எது பாவம் ?
எது புனிதம் ? எது தீட்டு ?
எதற்கும் எப்போதும்
ஒற்றை விடை இல்லை
இருப்பவர் / இல்லாதவர்
ஒடுக்குபவர் / ஒடுக்கப்படுபவர்
சுருண்டுபவர் /சுரண்டப்படுபவர்
அந்த சாதி /இந்த சாதி
எல்லோருக்கும் எங்கும்
ஒரே பதில் இல்லை.
வர்க்கப் பார்வையும்
வர்ணப் பார்வையும்
முகம்காட்டும் – அங்காங்கு
கண்ணோட்டம் அதற்குத்தகும்.
சுபொஅ.