போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!!

Posted by அகத்தீ Labels:





போராட்ட காலத்தில் பென்சிலய்யாவின் ஓராண்டு நினைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரேயர் மீட்டிங் மற்றும் பிரியாணி சாப்பாட்டைக்கூட அனுமதிக்காத போலீஸ் கெடுபிடி ; அதனை மாமி ,தாரா ,பரிசுத்தம் மற்றும் இதர பெண்கள் ஒற்றுமையாய் எதிர்த்து போலிஸ் நிலையம் சென்றது


போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையோ!!


சு.பொ.அகத்தியலிங்கம்





தங்கள் குவாட்டர்ஸுக்கு எதிரே உள்ள குவாட்டர்ஸ் காலியான போது , “ வேறு யாராவது வரதா இருந்தா சொல்லுங்கோ நாம்ப இடமாறிடலாம் “ என தன் கணவரிடம் புலம்பிய மாமிதான் ; நிகழ்வு போக்கில் பென்சிலையா குடும்பத்தோடு உயிர்துடிப்பு மிக்க உறவைப் பேணினார்

வாலிபால் ப்ளேயர் பென்சிலய்யா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிற காட்சியில் நாவல் துவங்குகிறது . ஆச்சாரமான பிராமண குடும்பத்துக்கும் கிறித்துவ தலித் தெலுங்கு குடும்பத்தைச் சார்ந்த பென்சிலய்யா குடும்பத்துக்குமான நெருக்கமான பிணைப்பு வலுவாய் சொல்லப்படுகிறது .

ரயில்வேயிலும் துறைமுகத்திலும் குவாட்டர்ஸில் தன் வீட்டுக்கு எதிரே தலித் வராமல் தவிர்க்க எப்படி எல்லாம் முயலுவார்கள் என்பதை தனி நாவலாகவே சொல்லலாம் . அதனையும் மீறி மத ,மொழி ,சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அங்கு ஐசிஎப் குவாட்டர்ஸில் உருவாகும் ஒருவித பாசமும் பிணைப்பும் இந்நாவலில் இயல்பாய் பதிவு செய்யப்பட்டுள்ளது .

1974 ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம் சார்ந்து பின்னப்பட்ட நாவல் . அம்பிதான் இதன் கதை சொல்லி .நாவல் முழுவதும் சென்னை ஐசிஎப் ரயில் பெட்டித் தொழிற்சாலை குடியிருப்பில் நிகழ்வதாகவே இருக்கிறது .அன்றைய காலகட்டத்தை அசை போடுவோருக்கு பலப்பல உணர்வுகளை உசுப்பிவிடும் நாவல் .

பென்சிலய்யா மரணம் அதைத் தொடர்ந்த கரிசனமிக்க அண்டைவீட்டார் அரவணைப்பு ; பென்சிலய்யா மனைவி பரிசுத்தம் ரயில்வே தரும் உதவியை ,வேலையைய்ப் பெற அனைவரும் மனப்பூர்வமாய் ஒத்துழைப்பது என அன்றைய காலகட்டத்தின் சமூக நல்லிணக்கம் மிக்க பரிவு நாவல் முழுக்க வியாபித்துள்ளது . இன்றைக்கு சாதியும் மதமும் கூறு போடும் சமூக அவலம் கண்முன் உறுத்துகிறது ; ஆயினும் இதன் விதை அன்றே உள்ளீடாய் இருந்த செய்தியும் நாவலில் போகிற போக்கில் மெலிதாய்க் கோடிடப்படுகிறது .

அம்பியின் குடும்பம் வித்தியாசமானது .ஆச்சாரமான அம்மா , ரயில்வே சங்கத்தில் ஈடுபாடுகொண்ட அப்பா , வாசிப்பின் வழி விரிந்த ஞானம் கொண்ட சகோதரி , வேலையில்லாத ஆனால் இடதுசாரி அரசியல் ஈடுபாடுகொண்டு அதே வேலையாய் அலையும் அம்பி .அவரது சகா வைத்தியர் வேலாயுதம் , கட்சியிலும் சங்கத்திலும் ஈடுபாடுகொண்ட தோழர்கள் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இந்நாவலில் உலவுவர் . இதில் அநேகம் பேர் மெய்யாக வாழ்ந்த சிலரின் மாதிரிகள் ; அவர்கள் அச்சு அசலாய் நம்முன் வந்து நிற்பது போல் சித்தரித்திருப்பது ராமச்சந்திர வைத்தியநாத்தின் வெற்றி என்பேன் .

அகில இந்திய ரயில்வே ஸ்டிரைக் உருவாகும் காலம் ; மெல்லக் கொதிப்பேறிய கோவம் ;வெடிப்பாய் நிகழ்ந்த ஸ்டிரைக் இவற்றை சொல்லுவதில் கூர்மையாய் இந்நாவலாசிரியர் செயல்பட்டிருக்கிறார் . கேட்டகிரி சங்கங்கள் , ஒர்க்கர்ஸ் யூனியன் ,யுனைட்டெட் ,பேரவை ,மஸ்தூர் ,கார்மிக் ,எஸ்சி எஸ்டி , ,சிஐடியு ,எஐடியுசி ,ஏஐஆர்எம், பெடரேஷன் ,சங்கு இப்படி பிரிந்து கிடக்கும் தொழிற்சங்கங்கள் தலைமையில் நிலவிய பல்வேறு ஊசலாட்டங்கள் என அனைத்தையும் உள்வாங்கி அததற்குரிய இடமும் நியாயமும் வழங்கி இருக்கிறார் எனில் மிகை அல்ல .

போராட்ட காலத்தில் பென்சிலய்யாவின் ஓராண்டு நினைவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரேயர் மீட்டிங் மற்றும் பிரியாணி சாப்பாட்டைக்கூட அனுமதிக்காத போலீஸ் கெடுபிடி ; அதனை மாமி ,தாரா ,பரிசுத்தம் மற்றும் இதர பெண்கள் ஒற்றுமையாய் எதிர்த்து போலிஸ் நிலையம் சென்றது ; அதனைச் சார்ந்த நிகழ்வுகள் மிக சிரத்தையோடு மிகுந்த பொறுப்புணர்வோடு எழுதப்பட்டிருக்கிறது .

போராட்டத்தின் நடுவே அம்பியின் தந்தையே நிர்வாகம் அனுப்பும் பஸ்ஸில் வேலைக்குச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்படும்போது ; பரிசுத்தம் மறுத்து கம்பீரமாய் பஸ்ஸிலிருந்து இறங்குவது இயல்பாய் வடிக்கப்பட்டுள்ளது .

மதுரையில் போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடுபட்ட ராமசாமி ரயிலேற்றிக் கொல்லப்பட்டது பதிவாகி இருக்கிறது .ஆனால் அது இன்னும் கொஞ்சம் விரிக்கப்பட்டிருக்கலாமோ ?

“ ஒரு நாற்பது அல்லது ஐம்பது நாட்களில் பெற்றிட்ட அனுபவம் ,ஒரு சகாப்த வாழ்வுக்கு இணையாகவே தோன்றுகிறது .” என நூலாசிரியர் என்னுரையில் சொல்லுவது மெய்யென்பதை இந்நூலும் உறுதி செய்கிறது .

அன்றைய காலகட்டத்தின் நாவல் ,சினிமா என அனைத்தையும் உரையாடல் வழி அம்பி மற்றும் சரோஜா பாத்திரம் மூலம் சொல்லிச் செல்வது நுட்பமான அவதானிப்பின் சாட்சி . இடையிடையே தான் சார்ந்த இயக்கத்தின் மீதும் மெல்லிய பகடிவீச்சு வாசிப்புக்கு மெருகூட்டி நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது .

பொதுவாக ரயில்வேயில் இறந்துபோனவரின் மனைவிக்கு வேலைதேடி உதவ அலையும் போது ஒரு வித உறவும் முகிழ்த்துவிடுவது சர்வசாதாரணம் ; அதனை கொச்சையாக்காமல் மேம்பட்ட ஆண் பெண் உறவாக அம்பி - பரிசுத்தம் உறவை சித்தரித்திருப்பது பாராட்டுக்குரியது .

“ உன் அப்பா ஸ்தானத்திலே இருந்து பார்தேன்னா எனக்கு சந்தோஷம்தான் ; அவனோடு அப்பாவ பார்க்கிறச்சே நிம்மதின்னும் சொல்லலாம் ; கோடி மங்கலம் ஐயாகுட்டி சாஸ்திரிகளோட பிள்ளையா பார்க்கிறச்சே கோபமும் ஆங்காரமும் சேர்ந்து வருது ; டிவெண்டி ஷாப் நாப்பது எண்பது டோக்கண் ஸ்கில்ட் சிவராமன் என்கிறப்போ எல்லா இடத்திலேயும் நடந்திண்டு இருக்கு ,இப்போ நம்ம வீட்லேயும் நடக்கிறது . இதுலெல்லாம்கூட நம்ம இஷ்டம்னு பிடிவாதம் பிடிச்சு சின்னஞ் சிறுசுகளை அலைக் கழிக்கணுமான்னு தோணுது .” என அம்பியின் அப்பா மூலம் சொல்லுவது அழுத்தமான பக்குவநிலை .இது எங்கும் வாய்க்கப் பெறின் குடும்ப ஜனநாயகம் மெல்ல தழைக்குமே! ஆணவக் கொலைகளுக்கு இடமில்லாமல் போகுமே !

அம்பி இடதுசாரி முழுநேர ஊழியனாக பரிசுத்தம் துணையாவது நல்ல குறியீடு . கணவனை இழந்து ரயில்வே குடும்ப பென்ஷன் பெறும் பெண் . இளவயதாயிருப்பினும் , மறுமணம் நியாயமாய் இருப்பினும் சட்டபூர்வமாய் செய்தால் பென்ஷனை இழக்க வேண்டிவரும் ; ஆகவே லிவிங் டுகெதர் போல் சேர்ந்து வாழுவதே இத்தைகோருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது . அம்பியும் பரிசுத்தமும் அப்படித்தான் .இச்செய்தி போகிற போக்கிலேனும் சொல்லியிருக்கலாமே ! அது ஒன்றும் பிழையும் அல்லவே ! விவாதிக்கப்பட வேண்டிய ஒரு பெரும் பிரச்சனையும் ஆயிற்றே !

ரயில்வே ஸ்டிரைக்கை மையமாக வைத்து நாவல் எழுதியதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும் ; இதுவரை செய்யாமல்விட்டதை செய்ததற்காக நன்றி கூறுகிறோம் .

அன்றைய போராட்டம் ; ரயில்வேயிலுள்ள சூழல் எல்லாம் தெரிந்த ஒருவருக்கு இந்நாவல் மிகமிக நெஞ்சுக்கு நெருக்கம் ஆகும் . ஆனால் ,புதிய வாசகனுக்கு இதிலுள்ள பல செய்தியை உள்வாங்குவதில் சிரமம் இருக்கத்தானே செய்யும் ?

முன்னுரை எழுதிய ஆர் .இளங்கோ இலக்கியம் குறித்து ஒரு பார்வை வழங்க முயற்சித்திருக்கிறார் .பிழையல்ல ;தேவைதான் . ஆனால் இந்த நாவலின் பேசு பொருளான ரயில்வே ஸ்டிரைக் குறித்து ஒரு வரலாற்றுக் குறிப்பை அவர் முன்னுரையாகவோ ,பின்னுரையாகவோ எழுதிச் சேர்த்திருக்க வேண்டும் . அப்போதுதான் நாவலின் நோக்கம் நிறவேறும் .

சில செய்திகளுக்கு அடிக்குறிப்பாகவோ பின் இணைப்பாகவோ விவரம் தந்திருக்க வேண்டும் .எடுத்துக்காட்டு : பொன்மலைத் தியாகிகள் . பல்வேறு ரயில்வே சங்கங்கள்

இதையெல்லாம் இளங்கோ செய்திருப்பின் வைத்தியநாத் நிச்சயம் ஏற்றிருப்பார் ; வேறு யாரேனும் செய்தால் மறுத்திருப்பார் . இளங்கோ செய்யத் தவறிவிட்டார் . நாவலே அம்பி மூலமின்றி வேறொருவர் மூலம் நகர்த்தப்பட்டிருப்பின் இன்னும் வலுவாய் இருந்திருக்குமோ ?

எப்படி இருப்பினும் இந்நாவல் வருகை காத்திரமானதும் . வாசிக்க வேண்டிய முக்கிய நாவலும் ஆகும் . போராட்ட வரலாற்று நாவலெனில் மிகையாமோ ? .




ஸ்டிரைக் , [ புதினம் ]
ஆசிரியர் : ராமச்சந்திர வைத்தியநாத்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,7, இளங்கோ சாலை , தேனாம்பேட்டை ,
சென்னை - 600 018.
பக் : 304 , விலை : 250/

சூழும் வலி

Posted by அகத்தீ Labels:








சூழும் வலி




பேரழிவு துரத்திக்கொண்டிருக்கிறது
நெருப்பு வளையம் சூழந்திருக்கிறது
எல்லா பக்கமும் கொலைவெறியோடு
காத்திருக்கிறது கொடும் பூதங்கள்
நிராயுதபாணியாய் சிக்கிய கூட்டம்
தப்பிக்க வழிதேடி தவிக்கிறது
புகைமூட்டம் கண் தெரியவில்லை
எந்தப்பக்கம் ஓடுவது இலக்குமில்லை
நெருக்கடி நேர சட்டாம் பிள்ளைகள்
ஆளுக்கொரு திசையில் இழுக்க
அழுகையும் பற்கடிப்புமாய் பொழுதுநகர
அவதார புருஷனின் வருகைக்காய்
காத்திருந்து காத்திருந்து காத்திருந்து
சூழந்த நெருப்பு ஒவ்வொருவராய் விழுங்க
எரிந்து சாவதா ? எழுந்து வெல்வதா ?
விதி உங்கள் கையில் ...

சு.பொ.அகத்தியலிங்கம் .

இன்னும் நிறையக் கொட்டிக்கிடக்கே

Posted by அகத்தீ Labels:







இன்னும் நிறையக் கொட்டிக்கிடக்கே...

ச. சுப்பாராவ் என்றதும் அவரது மறுவாசிப்பு படைப்புகளே நினைவில் நிற்கும். புராணங்களை உள்வாங்கி நுட்பமாய் சமூகநீதி ,பெண்ணியம்,வர்ணாஸ்ரமம் போன்ற கோணங்களில் நறுக்குத் தெறித்தாற்போன்ற ஆனால்உறுத்தாத படைப்புகளை தந்து நம் நெஞ்சில் சம்மணம்போட்டு உட்கார்ந்திருப்பவர் அவர்.

முந்தைய மூன்று தொகுப்புகளை அசைபோட்டுக்கொண்டே இந்த நான்காவது தொகுப்பில் நுழைந்தால் இதிலும் மொத்தம் 16 கதைகளில் ஏழு கதைகள் மறுவாசிப்பு சார்ந்தவை.

ராமன் சரயு நதியில் தற்கொலை செய்து கொண்டானா? கொல்லப்பட்டானா? என்கிற முடிச்சை அவிழ்க்கும், “ வேறொன்றின் ஆரம்பம்.” கதை பரிசு பெற்ற கதை. சம்புகன் தலையை ராமன் கொய்தகதை தெரிந்தவர்களுக்கு சம்புகனின் மகன் பழிவாங்கியதன் நியாயம் புரியும் ; எந்த வேறொன்றின் ஆரம்பம் என்பதும் தெளிவாகும். சம்புகன் யாரென்பதை கதையோட்டத்தில் ஒற்றை வரியாகவேனும் சேர்த்திருக்கலாமோ?

“குரு.” , “ஒரு சக்கரவர்த்தியின் ஜனனம்” , “இரண்டாம் இடம்,” மூன்றுகதைகளுக்கும் மிக நெருக்கமான தொடர்புள்ளது மட்டுமின்றி ; இக்கதைகளின் துவக்கமும் கிட்டத்தட்ட திரும்ப திரும்பச் சொல்வது சலிப்பூட்டாதோ?தனித்தனி இதழில் வரும்போது தெரியாது ; ஒரே தொகுப்பில் இடம்பெறும் போது வாசகனை சற்று இடறவைக்குமே!. மூன்றையும் ஒன்றாக்கி மூன்று காட்சிகளாய் பின் பகுதியை அமைத்திருந்தால் வீரியம் கூடியிருக்கலாம் ?

இந்த மூன்று கதைகளோடு , “ராஜ தந்திரி’ , “பதிலில்லா கேள்வி” “ராஜ்ஜியத்திற்காக” ஆகியனவும் சேர்த்து ஆறுமே மகாபாரத கதைகளின் மறுவாசிப்பே.

கர்ணனின் குரு ஏகலைவன் எனப் பேசும் குரு , வர்ணக்கலப்பின் மீதான வன்மத்தைப் பேசும் ஒரு சக்கரவர்த்தியின் ஜனனம், இரண்டாம் இடம், ராஜதந்திரி, பதிலில்லா கேள்வி, இவற்றுடன் பரமாத்மாவின் பெண் பற்றிய அருவருப்பான பார்வையை போட்டுடைக்கும் ராஜ்ஜியத்திற்காக என இக்கதைகளின் நுட்பமான மறுவாசிப்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

அனுபவச் சூட்டில் பொரித்தெடுத்த ; மனமாற்றம் , பூனை புராணம், டார்வின் விதி , தேவரனைவர் , புதிய பாடம் போன்ற கதைகள் நம் நெஞ்சோடுபேசும் .

அதிலும் அந்த ‘‘ஜீன்ஸ்” எல்லோரையும் அசை போடவைக்கும்.“மெல்லுவதற்கு கொஞ்சம் அவல் ,” என்பது வெறும் கதையல்ல ; ஆண் பெண் நட்பு பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயுள்ள சீழைக் குத்திவிடும் நுட்பமான கதை ; அதில் மேற்கோளாய் வரும் விகடன் கவிதை உட்பட.

“எஞ்சிய சில நல்ல பக்கங்கள்,” எனும் முதுமை சார்ந்த அனுபவப் பிழிவு நம்மை நாமே அசைபோடவைக்கும் . அது சரி, இத்தொகுப்புக்கு அவ்வளவு கச்சிதமாய் இத்தலைப்பு பொருந்திப் போவது எப்படி ?

மொழி பெயர்ப்புப் பணியில் தீவிரமாகி விட்டதால் படைப்பிலக்கியத்தில் பங்களிப்பது குறைந்து போயுள்ளது. கேட்டுக்கொண்ட போதுமட்டுமே எழுத நேர்ந்தது என முன்னுரையில் கூறியுள்ளதை இந்நூலை வாசிக்கும் போது உணரவும் முடிகிறது.

மொழி பெயர்ப்பு பணியைக் குறைத்து மதிப்பிடவும் இல்லை ; வேண்டாம் என்று கூறவும் மாட்டேன் . ஆனால் என் போன்றோர் கவிதை,சிறுகதை என முயன்றும் வெற்றிபெற முடியவில்லை .ஆனால் உங்களுக்கு நன்கு கைவரப் பெறுகிறது .நல்லதோர் வீணை செய்தே நலங்கெடப் புழுதியில்எறிவதுண்டோ?

இலக்கிய,இதிகாச,புராணப் பரப்பில் மறுவாசிப்புக்கு இன்னும் நிறையக் கொட்டிக் கிடக்கே!.



எஞ்சிய சில நல்ல பக்கங்கள் ,ஆசிரியர் : ச. சுப்பாராவ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,7,இளங்கோ சாலை , தேனாம்பேட்டை , சென்னை - 600 018.
பக் : 80 , விலை .ரூ.70/
சு.பொ.அகத்தியலிங்கம்.
நன்றி : புத்தகமேசை , தீக்கதிர் , 08/03/2018.

மழை வந்ததும்...

Posted by அகத்தீ Labels:









ழைவந்ததும்...


சு.பொ.அகத்தியலிங்கம்.

ழை வந்ததும் ஒதுங்க இடம் தேடினேன்
மழையில்  ஆட்டம் போட்டு அம்மாவிடம்
அடிவாங்கிய நாட்கள்  நினைவிலாடின
பேரன் மழையில் நனையாமல் அணைத்துச்
சென்ற நேற்றின் காட்சி நெஞ்சில் விரிந்தது
மழை என்னை மெல்ல கடத்திச் சென்றது
ஒரு மழை இரவில் மண்சுவர் இடிய கூரை சரிய
விடியவிடிய தவித்த தவிப்பு வலித்தது நெஞ்சில்
மாமழை போற்றுதும் என்றதும் இதயத்தின் துடிப்பே
அடைமழை எப்போது நிற்கும் ; ஏங்கியதும் மெய்யே !
கேட்டதும்  கேட்டபடி பெய்ய  ஏவலாளா மழை ?
பெய்கையில் தேக்கவும் வடிக்கவும் தவறியது யார் பிழை ?
பெய்யாமல் வறுத்ததும் பெய்து அழித்ததும் என
ஒவ்வொரு மழையும் ஒரு சுவட்டை விட்டுச் செல்கிறது
மனிதனுக்கு அதில் எவ்வளவோ பாடம் இருக்கிறது
பேசுகிறோம் எழுதுகிறோம் பேசிக்கொண்டே இருக்கிறோம்
நேற்றின் தேவையும் இன்றின் சிக்கலும் புரிந்தும் புரியாமல்
யார் மீது பழிபோட ; என்னென்ன கதை சொல்ல ஓயாமல்
யோசித்தோம் ; ஒரு போதும் உன்மைதேடி உரையாடினோமா ?



என்னோட காமாட்சி ஆச்சி !!!

Posted by அகத்தீ Labels:






என்னோட காமாட்சி ஆச்சி !!!


இன்று [ மார்ச் 8 ] சர்வதேச உழைக்கும் பெண்கள் தினம் ; யாரெனும் ஒரு பெண்ணியப் போராளியை எழுதலாம்தான் . ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் பெண்ணியப் போராளிகள் இருப்பார்கள் . நாம் அவருக்கு வாயாடி ,பஜாரி ,அடங்காப்பிடாரி என பல பட்டங்கள் கொடுத்து திரைபோட்டிருப்போம் .


என் ஆச்சி . அதாவது அப்பாவின் அம்மா காமாட்சி அம்மாள் எனும் பெண்ணியப் போராளியை ; அதாவது மேலே சுட்டிய பட்டங்கள் வாங்கிய ஒரு பெண்ணை அறிமுகம் செய்யப் போகிறேன் .

என் காமாட்சி ஆட்சி சுமார் ஆறடி உயரம் இருப்பார் .திடகாத்திரமான உடம்பு . சிகப்பு நிறம் .பேரழகி . ஒரு வேளை அன்று அழகிப் போட்டி நடந்திருந்தால் ஐஸ்வர்யா என் பாட்டியிடம் தோற்றிருப்பார்.

என் ஆச்சிக்கு திருமணம் ஆகும் போது வயது பதினாறு . தாத்தாவுக்கு வயது அறுபது . தேவாங்கு உடம்பு .நாலரை அடி உயரம் . என் தாத்தாவுக்கு அது நான்காவது கல்யாணம் . அதன் பிறகு இரண்டு ஆசை நாயகி வேறு .அதை பிறகு பார்ப்போம் .

கோவில் தர்மகர்த்தா என்பதால் கோவிலுக்கு சொத்து இருக்கும் இடமெல்லாம் இப்படி மனைவியோ / ஆசை நாயகியோ அவருக்கு . பெண்களி விருப்பத்தை யார் கேட்டனர் ; எல்லாம் பணம் முடிவு செய்தது .

என் ஆச்சிக்கு இரண்டு மகன்கள் பிறந்தபின் அவர் வேறு ஆசைநாயகி பக்கம் போய்விட்டார் . அவர் எங்கு இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது.

ஆச்சிக்கு கிடைத்த கொஞ்சம் வயலும் வீடும் அவரது அழகும் அவருக்கு பகையாளியை அதிகப்படுத்தின .அதிலும் உறவினர்கள் கழுகாய் வட்டமிட்டனர் .

என் ஆச்சி ஜாக்கெட் அணிந்து பார்த்ததில்லை . வெள்ளைப் புடவைத் தூக்கிச் சொருகியபடியே இருப்பார் . பாம்படம் அணிந்த காது . கழுத்தில் எப்போதும் ஒற்றைச் சங்கிலி அணிந்திருப்பார் .திருநீறு பூசிப் பார்த்ததே இல்லை .
தூங்கும் போதும் ; வயலுக்கு ஆற்றுக்கு போகும் போதும் வீச்சரிவாள் கூடவே இருக்கும் ; யாராவது வாயைத் திறந்தால் அவ்வளவுதான் காதுகூசும் வசவுகளால் துளைத்து எடுத்துவிடுவார் . என் ஆச்சி வாயைத் திறந்தால் எல்லோரும் காதை மூடிக்கொண்டு ஓட்டம் பிடிப்பர் .

என் ஆச்சி கோவிலுக்கு போகமாட்டார் ,சாமி கும்பிடமாட்டார் . சடங்கு ,சம்பிரதாயம் எதையும் மதிக்கமாட்டார் .அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது .பகுத்தறிவு ,நாத்திகம் எல்லாம் அறியமாட்டார் .தன் கணவரின் மீதான கோபம் . “ கொட்டை , பட்டை போடுற எல்லா பயலும் அயோக்கியன் ,” என்ற அனுபவத் தீர்மானம் .அடிக்கடி அதை சொல்லவும் செய்வார் ,

தனது சாதியோடு நெருங்கமாட்டார் .இயல்பாக வீடும் கடைக்கோடியில் இருந்தது .நாவிதர் ,வண்ணார் ,தாழ்த்தப்பட்டோர் வீடுகள் அடுத்தடுத்து ; அவர்களோடு மிக நெருக்கம் .அவர்கள் வீட்டில் சாப்பிடுவது ;தன் வீட்ட்டில் அவர்களுக்கு சாப்பாடு போடுவது என இயல்பான சமூகசீர்திருத்தம் செய்தவர் . அது அவருக்கு பெரும் பாதுகாப்பு வளையமும் ஆனது .


அவர் ஆற்றுக்கு போகும் போது ஒரு இடுப்பில் நானோ என் அண்ணனோ இருக்க இருக்க இன்னொரு இடுப்பில் அவர்கள் வீட்டு பிள்ளைகளை இடுக்கிக் கொள்வார் .இதன் காரணமாக சாதி சொல்லி என் அம்மாவுக்கும் அவருக்கும் சண்டைகூட வரும் .அப்போதும் ஆச்சி மிரட்டிவிடுவார் .


அவா பொம்பளையா போக்கிரி பஜாரி !” என ஊரும் உறவும் வசை பாடும் .

ஆனால் அவரின் துணிச்சலும் கம்பீரமும் போர்க்குணமுமே அவரையும் அவர் சொத்தையும் காக்கவும் உதவின . பிள்ளைகளை வளர்க்க உதவின . வயலைக்கூட குத்தகைக்கு விடாமல் அவரே பயிர் செய்தார் .உழைப்பாளிகள் இவரின் உற்ற துணையாய் இருந்தனர் ; சொந்த சாதியினரோ வன்மம் காட்டினர் .

நான் கட்சிக்கு வந்த பின்னரே என் அம்மா சாதியைப் பார்க்காமல் எல்லோரும் பழக ;இரண்டறக் கலக்க பழகினார் .

என் ஆச்சியைப் பற்றி எதிர்மறை பிம்பத்தையே என் அம்மாவும் அம்மாவழி ஆச்சியும் ஏற்படுத்தியிருந்தனர் . குமரி மாவட்டத்தில் அம்மாவழி வீட்டில்தான் குடியிருக்கும் வழக்கம் இருந்ததால் அப்பா வழி ஆச்சி மீது ஆசை இருப்பினும் ,லீவு நாட்களில் போனாலும் அம்மா வழி ஆச்சி சொன்னதே படிந்தது .

கொஞ்சம் வளர்ந்த பிறகு பழைய செய்திகளை விவரமாக அறிந்த பின்னர் காமாட்சி ஆட்சி பெண்ணியப் போராளியாய் என் மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்துவிட்டார் . என் அம்மாவும் பின்னாளில் இதனை உணர்ந்து உறுதி செய்தார் . என் அம்மாவிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன . என் ஆச்சி நிச்சயம் ஒரு இயல்பான பெண்ணியப் போராளியே !

ஒவ்வொரு வீட்டிலும் இப்படி வசை மொழி வாங்குவோரை , பேய் பிடித்தோரை ,சாமி வருவோரை அலசிப் பாருங்கள் ஒரு பெண்ணியப் போராளியின் கண்ணீர்க் கதை அதற்குள்ளிருக்கும் .

பெண்ணியம் மேற்கிலிருந்து வந்ததோ அந்நியக் கருத்தோ அல்ல ; ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சாம்பல் பூத்த நெருப்பாய் கனந்து கொண்டிருப்பதாகும் .

உற்று அறிவீர் ! உரக்கப் பேசுவீர் ! இதுவே என் பெண்கள் தினச் செய்தி !

[ எவ்வளவு முற்போக்கு ,புரட்சி பேசினும் ஆணாதிக்க உணர்வின் மிச்ச சொச்சம் பேச்சிலும் நடைமுறையிலும் இருக்கத்தான் செய்யும் ; நானும் விதிவிலக்கல்ல . நீங்களும் விதிவிலக்கல்ல .ஆயினும் பாலின சமத்துவத்துக்கான போராட்டம் உள்ளுக்குள்ளும் வெளியும் சமரசமின்றி தொடர்வதன்றி வேறுவழி ?}

- சு.பொ.அகத்தியலிங்கம் .





படித்ததும் சமூகக் கோபம் சூல் கொள்ளும்

Posted by அகத்தீ Labels:









படித்ததும் சமூகக் கோபம் சூல் கொள்ளும்


சு.பொ.அகத்தியலிங்கம் .


ஒரு கவிதைப் புத்தகம் அப்படி என்ன செய்துவிட முடியும் ?

இந்தக் கவிதைத் தொகுப்பை படிக்க ஆரம்பிக்கும் முன் மேலே உள்ள கேள்விக்கு சொன்ன பதிலை ; புத்தகத்தைப் படித்தபின் நிச்சயம் சொல்லவே முடியாது .

மராத்தி ,தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் ,தமிழ் என ஐந்து மொழி சார்ந்த 17 கவிஞர்களின் 54 கவிதைகள் ,கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்,” எனும் தலைப்பில் தொகுப்பாக்கப்பட்டுள்ளது .

தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள்.” என்கிற துணைத் தலைப்பு நம்மை ஈர்க்க , உள்ளே நுழைந்தால் ;

ஒவ்வொரு கவிதையைப் படித்த பின்னும் மனதை அது என்னமோ செய்கிறது . அடுத்த கவிதையை உடனே படிக்க முடியவில்லை . சற்று நேரம் இடைவெளிவிட்டு அடுத்ததைப் படித்தால் , இன்னும் வேகமாய் இதயம் துடிக்கிறது .

ஒவ்வொரு கவிதையும் வலியை ,ரணத்தை மட்டுமே சொல்லவில்லை .அதில் நம்மைத் துடிக்க வைக்கிறது . மூளைக்குள் ஒரு வெடிகுண்டை வீசிச்செல்கிறது .

ஒரு பெண்ணால் சிரிக்க முடியுமா ?
அறிவிலிருந்து ,மனதிலிருந்து ,கருவறையிலிருந்து ,
சத்தமாக ,சுதந்திரமாக ,முன்னறிந்து கொள்ளமுடியாத வகையில்..?”

பிரதண்ய தயா பவாரின் கேள்வி நம் சட்டையைப் பிடித்து உலுக்குகிறது .

சுதந்திரமென்றால் என்ன ?
எனக்கு இன்னும் சொல்லப்படவில்லை .
… …. …...................................................................

பெண் என்றால் என்ன?
எனக்கு இன்னும் சொல்லப்படவில்லை,”

என்கிற அவரின் ஆதங்கம் இன்றும் அப்படியே தானே உள்ளது .


இனி நான் , ‘ வாழ வேண்டும்,’ என்று கூக்குரலிடமாட்டேன்
இனி நான் சாவதற்காகவே வாழ்வேன் .
கிராமம் எரியும் சுடுகாடகட்டும் என்னுடன்
ஒரு பறைநாய் போல் வாழமாட்டேன் எங்குமே !”

மீனா கஜ்பயேவின் சீற்றம் நியாயம் .

ஒவ்வொரு கவிதைக்கு பின்னும் ஒரு கதை இருக்கிறது .ஒரு வாழ்க்கை இருக்கிறது . ஒரு வரலாறு இருக்கிறது .” என்று சுகிர்தராணி தரும் வாக்குமூலம் வெறும் வார்த்தை அல்ல . உண்மை ; உண்மையைத் தவிர வேறில்லை .

ஹிரா பான்சோடெ எழுதியுள்ள , “ ! யசோதாரா.” கவிதையில் சொல்கிறார் ;

சித்தார்த்தன் மட்டும் , ‘ சமாதி.’எனும்
போலி ஆட்டத்தில் இறங்கி இருந்தால்
உன்னைப் பற்றிய மாபெரும் காவியமொன்று
எழுத்தப்பட்டிருக்கும்.”

இந்திய வரலாற்றின் கதிபோக்கை இதைவிட நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்வது எப்படி ?

நீங்களே கூறுங்கள்
இந்நாட்டில்
தீண்டாமை வாடையேறாத
தற்கொலைகள் ,கொலைகள்கூட சாத்தியமா?”

சல்லப்பள்ளி ஸ்வரூபராணி சவுக்கால் அடித்து கேட்கிறார் . இன்று பல்கலைக் கழகங்கள்கூட இக்கேள்விக்குத் தப்பமுடியாதே !


கைப்பிடியில் பத்திரமாக வைத்திருந்த
நம்பிக்கை நாணயம் ஒன்று
எங்கேயோ எப்போதோ சத்தமின்றி விழுந்தது
வெறுமையான உள்ளங்கைகளின் பாதுகாப்பின்மை
கண்ணுக்குத் தெரியாத இருள் திரையாகி
என்னைச் சுற்றி ஒரு முள் கிரீடத்தைப் பரப்புகிறது.”

எம் .எம் .வினோதினிக்கு மட்டுமல்ல தேசம் முழுவதும் அதுதான் நிலைமை என உரக்கச் சொல்லவேண்டும் போலிருக்கிறது .


ஒரு , ‘முந்தானை.’ விலகும் நேரம் கள்ளப்பார்வை ,பார்க்கும் ஆணின் பார்வைக்கும் , முந்தானையூடே வாழ்வு முழுவதையும் தரிசிக்கும் ஜுபக்க சுமத்ரா பார்வைக்கும்தான் எவ்வளவு பெருத்தவேறுபாடு ?

மாட்டுக்கறி - எங்கள்.” வாழ்வு என்ற கோகு ஷியாமளா கவிதை சமூகவலைதளம் வழி ஏற்கெனவே நம் போர்க்கருவியானது . இங்கு படிக்கையில் இன்னும் அதனுள் பலப்பல செய்திகள் .

உடலைத் திறக்காதே
உன் நீர்நிலைக்குள்ளும்
அவனுடைய தூண்டிற் கண்கள்
பதுங்கி வரலம்.”

விஜிலா சிறப்பாடுவின் எச்சரிக்கை நம் நாகரீகத்தின் மீது சவுக்கால் அடிக்கிறது .


சுகிர்தராணி , உமாதேவி , ஜெயராணி ,அரங்க மல்லிகா ஆகியோரின் தமிழ்க்கவிதைகள் ;

திண்ணியங்களில்
என் வாயில் திணிக்கப்பட்ட
மலத்தின் ஒரு கவளம் .” என அவலமும் ;

இந்த சேரி வாழ்வு
உனை அனுபவங்களுக்கு பழக்கவில்லை மகளே !
சாவுக்கு பழக்குகிறது .” என்கிற எதார்த்த கசப்பும் ;

மேல் வயல் நிரம்பினால்
கீழ் வயல் நீர் பெறும்
மேற்புறத்தில்...
காணி நிலம்
என் கனவுகளில் ..” என விரியும் கனவும் ;

யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்செனச் சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று.” என நம்பிக்கையும் ;


திடுக் திடுக்கென
அதிர்ந்து அழும் இதயத்திற்கு
ஆறுதல் தந்தது
எங்கள் பறையே!” என்கிற கம்பீரமும் ;

எல்லாம் நம் நெஞ்சை பிசையும் .

கைர்லாஞ்சி ,மரத்வாடா ,திண்ணியம் , சவுதார் குளம் ,வெண்மணி , சைத்திய பூமி , சுனிதா,வெமுலா இப்படி நெடிய வரலாற்றில் அழுத்தமான சுவடுகளூடே பயணிக்கும் இக்கவிதைகள் வரலாற்றை , அரசியலை , வாழ்க்கையை உரக்கப் பேசுகின்றன .


ஒரு பிடி மனிதமும் அற்றுப்போன தேசத்தில் இக்கவிதைகள் பெரும் வரலாற்று வெளியை அடையாளப்படுத்தி ; பண்பாட்டு வீழ்ச்சிக்கு சாட்சி சொல்லி ; நெஞ்சுக்குள் தீ மூட்டுகிறது .


வலி , அவமானம் ,சீற்றம் ,போர்க்குரல் ,கண்ணீர் , அறவுணர்வு ,எல்லை கடத்தல் , விரிவாகுதல் ,நேசம் ,மன்னிப்பு ,நீதி ,பீமா எனும் அம்பேத்கர் ,சித்தார்த்தன் எனும் புத்தன் , அவன் மூடிய விழிகளின் கீற்றில் ஒளிரும் யசோதாரா என பல ஒளி பொருந்திய பரிமாணங்களைக் கொண்ட அரிய புத்தகமாக இது அறியப்பட வேண்டும் என்பதே எமது பிரயாசை .” என முன்னுரையில் பிரேமா ரேவதி மொழிந்திருப்பது ஆசையாக முடியவில்லை ; .கைகூடி இருப்பதற்கு இந்நூல் சாட்சி .

மகாராத்தி , தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் ,தமிழ் என மொழி எதுவாயினும் தலித் பெண்களின் வாழ்க்கைப்பாடு ஒன்றாகவே இருக்கக் காண்கிறோம் .

தலித் விடுதலை ,பெண்விடுதலை , சாதி ஒழிப்பு , சமத்துவம் இவை நான்கும் பின்னிப் பிணைந்தவை .ஒன்றை மட்டுமே தனித்து பெற முடியாது . இக்கவிதைகள் அதற்கு உந்தித்தள்ளும் ஐயம் இல்லை .


அதே நேரம் இக்கவிதைகள் பிறந்த மண்ணின் அரசியல் சூழல் ; அம்பேத்கரியம் ,பெரியாரியம் ,மார்க்சியம் இவை உள்ளீடாக உள்ளன . காரமும் வீரியமும் கவிதைக்கு கவிதை மாறுபடும் ; பிறந்த மண்ணின் சூழல் சார்ந்து .

எப்படியாயினும் இந்நூலை வாசித்து முடித்தபின் உள்ளுக்குள் சமூகக் கோபம் நிச்சயம் சூல் கொள்ளும் . ஒரு நூலின் வெற்றிக்கு இதைவிட வேறென்ன வேண்டும் ?



கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்

தலித் பெண் கவிஞர்களின் கவிதை

வெளியீடு மைத்ரி புக்ஸ் ,49 பி ஒமேகா பிளாட்ஸ் ,
 4 வது லிங் சாலை ,சதாசிவ நகர் ,மடிப்பாக்கம் ,சென்னை - 600 091.

பக் : 152 , விலை ரூ .140/


நன்றி : புத்தகமேசை ,தீக்கதிர் 04.02.2018.