முதுமைப் பெருங்கனவு .

Posted by அகத்தீ Labels:







முதுமைப் பெருங்கனவு .

வலிக்காத நாட்கள்
சலிக்காத மனது
நோயில்லா உடம்பு
ஆரோக்கியமான இணையர்
முடையில்லா பணம்
தடையில்லா பாசம்
கொண்டாடும் பிள்ளைகள்
கொண்டாடப் பேரப்பிள்ளைகள்
பேசி மகிழ நண்பர்கள்
படித்து மகிழ புத்தகங்கள்
உளம் விரும்பும் பொதுத் தொண்டு
செவி நாடும் இன்சொற்கள்
இப்படியாய் நாளும் கழியும்
முதுமையே பெருங்கனவு!!
முடியுமோ சொல்லுங்கள் !
யதார்த்தம் உணருங்கள் !!!!!!

சு.பொ.அகத்தியலிங்கம்.
26 ஜூன் 2019 .காலை .10.02.


#இதுவே தருணம்

Posted by அகத்தீ Labels:



#இதுவே தருணம்
ஒற்றையடிப் பாதையில்
காலில் செருப்புமின்றி
இருட்டை மிதித்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும்?
செம்மண் சாலையில்
மாட்டு வண்டியினைப்
பின் தொடர்ந்து நடந்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
கிராமத்து தெருவில்
கார் ஒன்று நுழைந்த போது
ஊரே கூடி வேடிக்கை பார்த்த நாட்களில்
அவர்களின் கனவு என்னவாக இருந்திருக்கும் ?
ஒரு வழிச் சாலை
இருவழிச் சாலை
நான்கு வழிச் சாலை
ஆறு வழிச் சாலை
மேம்பாலம்
அடுக்கு பாலம்
விரிந்து விரிந்து விரிந்து
நகர் வீங்கி வீங்கி வீங்கி
இப்போது
அவர்களின் கனவு என்னவாக இருக்கிறது
குடிநீர் …காற்று … பசுமை … தூய்மை ..
ஒற்றையடிப் பாதையிலேயே
நின்றிருக்க முடியுமா ?
ஒற்றையடிப் பாதைக்குத்
திரும்பிப் போக முடியுமா ?
அதுவும் சாத்தியமல்ல
இதுவும் சாத்தியமல்ல
எங்கே தவறு செய்தோம் ?
நுகர்வு எனும் பெரும்பசியில்
நாம் தின்றது எவை ? செரித்தது எவை ?
மீதம் இருப்பது எவை ? எவை ?
இன்னும் நம்பிக்கை இற்றுவிடவில்லை ?
யோசிக்கவும் செயல்படவும்
இதுவே தருணம்!!!
சு.பொ.அகத்தியலிங்கம்.
21 ஜூன் 2019 .இரவு .8.02

சித்தியளிக்கும் புத்தி யோகம் !

Posted by அகத்தீ Labels:




சித்தியளிக்கும் புத்தி யோகம் !

திருச்சி உறையூரை தலைநகராய்க்
கொண்டு ஆண்ட சோழன்
அங்கொரு கடற்கரையை
ஏன் சிருஷ்டிக்கவில்லை ?

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்
பிட்டுக்கு மண் சுமந்த சிவனைபிரம்பால்
அடித்ததற்கு வழக்கு ஏதும் பதியவில்லையா ?
மனித உரிமை மீறல் இல்லையா ?

சாதி இரண்டொழிய என்று
சொன்ன அவ்வைப் பாட்டி!
ஒரு சாதி எம் சாதி ;இன்னொரு சாதி
எதுவென்று ஏன் சொல்லவில்லை ?

வள்ளுவர் எல்லாம் சொன்னார்
சரிதான் . இல்லை என சொல்லவில்லை .
ஆனால் கணினி யுகத்தைக் குறளில்
ஏன் வரைந்து காட்டவில்லை ?

மகாபாரதம் ,இராமயணம் என
அறிவியல் நூல்கள் இருக்க
இயற்பியல் ,வேதியியல் ,கணிதம் என
பள்ளிகளில் இன்னும் பாடம் நடத்தலாமோ ?

சோமபானம் சுராபானம் அருந்தித்
திழைக்காமல் வருந்தலாமோ ?மது போதை ,
மத சாதி இன போதை , தேசபக்தி போதை
ஞானச் செருக்கறுக்கும் .அடிமை சுகமளிக்கும்.

சு.பொ.அகத்தியலிங்கம்.
17 ஜூன் 2019 . பகல்.3.58.




கை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....

Posted by அகத்தீ Labels:



அதுவும் அன்றைய சமூகச் சூழல் எப்படி இருந்தது? “தலித் வாழ்க்கையின் துயரம் இதுதான். பெண்களையும் சிறுமிக ளையும் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது என்பதை அந்த மக்களே தலைவிதியின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வது.” காலங்கால மாக இதுவே நடைமுறை. இதனை உடைத்துத் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராய் போராடி னார் பாந்த் சிங்கின் மகள் பல்ஜித்.



கை, கால் வெட்டப்பட்டாலும் தொண்டை இருக்கேய்யா....

சு.பொ.அகத்தியலிங்கம்.

“டாக்டர்களுக்குத்தான் இந்த விஷயங்கள் மிக நன்றாகத் தெரியும். என்னுடைய கைகளாலும் கால்களா லும் என்ன பயன்? நான் தொண்டையைக் கொண்டுதானே பாடப் போகிறேன்?”

தன்னுடைய இரண்டு கைகளையும் ஒரு காலையும் அகற்றிவிட - அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்த போது ஒருவர் இப்படிப் பேசுகிறார் எனில் அவர் எப்படிப்பட்ட துணிச்சல் காரராய் இருக்க வேண்டும் ?

இப்படியொரு அறுவை சிகிச்சைக்கு அவர் ஆளாக நேர்ந்தது நோயினால் அல்ல; சமூக அநீதியை சமரசமின்றி எதிர்த்ததற்கு ஆதிக்க சக்திகள் கொடுத்த பரிசு.

பாந்த் சிங் ஓர் மாக்ஹாபி சீக்கியர். அதாவது சீக்கிய சமூகத்தின் அடிமூட்டை யான ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தவர். அநீதிக்கு தலை வணங்காதவர். சீக்கிய குருவான குரு கோவிந்தரையும், பகத் சிங்கை யும் தன் வழிகாட்டியாகக் கொண்டவர். செங்கொடி இயக்கத்தின் அருந்தவப் புதல்வர். தலித் கவிஞர் சாந்த் ராம் உதாசியின் கவிதைகளில் நெஞ்சைப் பறி கொடுத்தவர். தன் குரலால் அதற்கு உயிர் கொடுத்தவர். எழுச்சிக்கு விதை தூவியவர்.

சீக்கிய சமயம் சாதி சமத்துவம் பேசிடினும் இந்து மதத்தின் சாதியப் பெரு நோய் சீக்கிய சமூகத்திலும் சீழ்பிடித்து ஒழு கியது.

தலித் சீக்கிய பெண்களை ஜாட் உள்ளிட்ட ஆதிக்க சாதிகள் விருப்பம் போல் வேட்டை ஆடுவர்.கேள்வி கேட்க முடியாது. பழி தலித் பெண்கள் மீதே சுமத்தப்படும். பாந்த் சிங்கின் மகள் பல்ஜித் இவ்வாறு கும்பல் வன்புணர்வுக்கு ஆட்பட்ட போது மற்றவர் போல் அடங்கிப் போகாமல் எதிர்த்து நின்றார். அவமானங்களைப் பற்றி கவலைப்படாமல் தந்தையும் மகளும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர்.

அதுவும் அன்றைய சமூகச் சூழல் எப்படி இருந்தது? “தலித் வாழ்க்கையின் துயரம் இதுதான். பெண்களையும் சிறுமிக ளையும் பாலியல் ரீதியாகச் சுரண்டுவது என்பதை அந்த மக்களே தலைவிதியின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்வது.” காலங்கால மாக இதுவே நடைமுறை. இதனை உடைத்துத் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராய் போராடி னார் பாந்த் சிங்கின் மகள் பல்ஜித்.

“தனக்கு வரதட்சணையாக ஒரு கைத்துப்பாக்கி வாங்கித்தா அப்பா !” என்கிற புரட்சிக் கவிதையை ஊட்டி வளர்த்த பாந்த் சிங்; அநீதிக்கு எதிராய் போராட உறு துணையானார். திருமணம் நின்று போனதைப் பற்றி சட்டை செய்ய வில்லை.பின்னர் ஒரு நல்லிதயம் கொண்டவன் மணந்தான்.

பாந்த் சிங் மீது ஆதிக்க சாதிக்கு கோபம் வர பல காரணங்கள் இருந்தன. உதாசியின் பாடல்களால் தலித்துகளுக்கு எழுச்சி ஊட்டி யது; செங்கொடி ஏந்தியது; சுயமரியாதை யுடன் சொந்தத் தொழில் செய்து சொந்தக் காலில் நின்றது. பொறுக்குமா? கையையும் காலையும் முறிக்க திட்டமிட்டனர். முறித்த னர். ஆனால் பாந்த் சிங் போராட்டம் அதன் பின்னரும் ஓயவில்லை; வீரியம் பெற்றது.

அந்த வீரக்கதையே இந்நூல். பாந்த் சிங், அவர் மனைவி ஹர்பன்ஸ், எட்டு குழந்தைகள் ‘இரண்டு இறந்தது போக’ எல்லோரும் ரத்தமும் சதையுமாய் உலவும் உயிர்க் காவியம் இது.

இந்நூல் நான்கு கோணங்களோடு அமைந்துள்ளது.

முதலாவதாக பாந்த் சிங்கின் துணிச்சல் மிக்க வாழ்க்கை. சுயமரியாதையும் போர்க்குணமும் தலித் சமூகத்தின் போர்குண மிக்க விழிப்புணர்வின் அடையாளமாக.
இரண்டு தலித் கவிஞர் சாந்த் ராம் உதாசியின் வாழ்க்கையும் வீரிய மிக்க புரட்சிப் படைப்புகளும் பாந்த் சிங்குக்கும் அவருக்கும் இடையிலான உறவும் ஒப்பீடும்.
மூன்று சீக்கிய சமூகத்தில் புரையோடிப்போன சாதியக் கொடுமையின் குறுக்குவெட்டுத் தோற்றம், பஞ்சாபின் அரசியல் சமூக போக்குகளூடே
நான்கு, இந்திய சமூக அமைப்பின் சாதிய கொடூர முகமும் அனைத்து நிறுவனங்களிலும் ஊடுருவி இறுகிப்போன சாதிய நச்சுமனமும் சுயநலமும்

“பாந்த் சிங் சார்ந்துள்ள அரசியல், கட்சி இயக்கம் அவற்றின் நடைமுறைகளோடு பாரதி புத்தகாலயம் கருத்து வேறுபாடு கொண்டிருந்த போதிலும் இந்நூல் முன்வைத்துள்ள கலகக்குரலின் முக்கியத்துவம் கருதி இப்புத்தகத்தை பதிப்பிக்கிறோம்.” என்கிற குறிப்பு பதிப்புரையில் இடம் பெற்றுள்ளது. இந்நூலில் எங்கும் நக்சலைட்டின் அரசியல் பேசப்படவில்லை. பாந்த் சிங்கை அதன் உறுப்பினராய் காட்டி உள்ளனர். தலித் மீதான ஒடுக்குமுறையும் அதற்கெதிரான கலகக்குரலுமே ஓங்கி ஒலிக்கிறதென்பது நூலைப் படித்த பின் தோன்றும் உண்மையாகும்.

கடைசி அத்தியாயத்தில் ஓர் அணில் செங்கொடியை உயரே தூக்கிக் கொண்டு போவது போன்ற காட்சிப் படிவம் வரையப்பட்டுள்ளது. இது உண்மையில் நடந்த நிகழ்வா அல்லது கவித்துவமான நம்பிக்கையூட்டும் முடிவுக்கான நிரூபண மாக வரைந்த காட்சியா? உறுதி சொல்ல இயலவில்லை. ஆயினும் இலக்கிய நுட்பமும் லட்சிய நம்பிக்கையும் பின்னிப் பிணையும் இடம் அது.

இந்நூல் நெடுக ஊடும் பாவுமாய் விரவி இருக்கும் உதாசியின் கவிதைகளை அசைபோடவும் உள்வாங்கவும் இந்நூலை வாசியுங்கள் என்றும் கூடுதலாகக் கூறலாம். அக்கவிதைகளோடு அதே இதயத் துடிப்போடு நூலை மொழியாக்கம் செய்த கமலாலயனுக்குஒரு ரெட் சலுயூட்!
உதாசியின் கவிதையோடு இப்போது விடைபெறுவோம்;

“திறப்புக்கூட அந்த இருண்ட மேகங்கள் வழிவிடுவதாயில்லை.
நாம் மந்திரங்கள் அறிந்தவர்கள் தாம்; எனினும் அந்தக்
கொடிய விஷப் பாம்பு சுதந்திரமாய்ச் சுற்றித் திரிகிறது.
கடவுளைவிடவும் பலம் வாய்ந்தவர் மக்கள் என்று
நாம் இன்னமும் அவர்களிடம் சொல்லவில்லை.
சங்கொலி இன்னமும் தம் பேரொலி முழக்கத்தைஎழுப்பவில்லை;
இருட்டின் அடர்த்தி மிகச் செறிவாய் இருக்கிறது.”

துணிவின் பாடகன் : பாந்த் சிங் ,
ஆசிரியர் : நிருபமா தத்.
தமிழில் : கமலாலயன்.
வெளியீடு : காம்ரேட் டாக்கீஸ்.
கிடைக்குமிடம் : பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ சாலை, தேனாம் பேட்டை,
சென்னை –- 600 018.
பக் : 280 விலை : ரூ.240/-
தொ.பேசி: 044 -24332924

நன்றி : தீக்கதிர் , 17 ஜூன் 2019 , புத்தகமேசை.

#பதிந்த எம் சுவடு மட்டும்.

Posted by அகத்தீ Labels:




#பதிந்த எம் சுவடு மட்டும்.

எதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
வாழ்ந்ததின் மிச்சம் ஏது ?
பதிந்த எம் சுவடு மட்டும்.

வருடமோ கணக்கில் கூடும்
வலிகளும்  மரத்துப் போகும்
கனவுகள் என்ன வாகும் ?
காலந்தான் பதிலைக் கூறும் .

இளமையில்  மோதிப் பார்த்தும்
முதுமையில்  அலசிப் பார்த்தும்
மொத்தத்தில் கண்டது என்ன ?
லட்சியம் பிழையே இல்லை,

கூடி வாழ்ந்தது இன்பம்
கூடி உழைத்தது இன்பம்
உகுத்திடும் கண்ணீர் ஏனோ ?
போராட்டம் நாளும் இன்பம்.

எதுவும் கடந்து போகும்
இதுவும் கடந்து போகும்
வாழ்ந்ததின் மிச்சம் ஏது ?
பதிந்த எம் சுவடு மட்டும்.

சு.பொ.அகத்தியலிங்கம்.
15 ஜூன் 2019 . பிறந்த நாளில் …








#மெளனத்தைக் குலைத்த #மெல்லிய புன்னகை எங்ஙனம் ?

Posted by அகத்தீ Labels:



#மெளனத்தைக் குலைத்த
#மெல்லிய புன்னகை எங்ஙனம் ?        

இவ்வளவு களைகள்
மண்டிக் கிடக்கும் வயலில்
எப்படி அங்கொன்று இங்கொன்றாய்
நெற்கதிர்கள் ?

நீர் நிலைகள் வறண்டு
வெடித்துக் கிடக்கும் பூமியில்
ஓரிரு இடத்தில் விரலில் ஒட்டும்
நீர் திவலைகள் எப்படி ?

இருள் போர்த்திய இரவு
எதிரில் இருப்பதே தெரியவில்லை
இருளைக் கிழிக்கும்
மின்மினிகள் அங்கெப்படி ?

அப்படி  ஒரு அமைதி
மூச்சுவிடவும் தயக்கம்
மெளனத்தைக் குலைத்த
மெல்லிய புன்னகை எங்ஙனம் ?                   

அனைத்தையும் இழந்து
நிராயுதபாணியாய்
வல்லூறுகளில் நடுவே – ஆயினும்
நம்பிக்கை துளிர்க்கிறது !!!

சு.பொ.அகத்தியலிங்கம்.
12 ஜுன் 2019 .இரவு . 7.55.




#எம்குடிசைக்கு #நீதிவந்ததில்லை!

Posted by அகத்தீ Labels:






சேரரோ...
சோழரோ... 
பாண்டியரோ...
பல்லவரோ... 
நாயக்கரோ...
பாளையக்காரரோ
குப்தரோ... 
மெளரியரோ... 
குஷானரோ...
மொகலாயரோ... 
வெள்ளையரோ...
பின் அடுத்தடுத்து 

எமை
ஆளவந்த கொள்ளையரோ...
யாரண்ட போதும் 
எம் குடிசைக்கு 
நீதி வந்ததில்லை.

உழைப்பவரும் 
ஒடுக்கப்பட்டவரும்
உயர 
ஒரு துரும்பையும் 
அசைக்கவில்லை
‘பொற்கால ஆட்சி’ 
‘நற்கால ஆட்சி’
ஏழைக்கு 
இதுவரை இருந்ததில்லை .

‘வல்லரசு’ என்பது 
ஏழையின் கனவுமல்ல;
ஏழைக்கான அரசும் அல்ல.
உழைக்கும் மக்களுக்கும்,
ஒடுக்கப்பட்டோருக்கும் 
இழப்பதற்கு எதுவுமில்லை
அடிமைச் சங்கிலியைத் தவிர..!
பெறுவதற்கு 
ஓர் பொன்னுலகம்
வெகுதூரக் கனவாய்..! 

சு.பொ.அகத்தியலிங்கம்.
11 ஜூன் 2019.காலை .9.36.
Su Po Agathiyalingam முகநூலில்...

கோபம் பொங்கத்தானே வேண்டும் ?

Posted by அகத்தீ Labels:



நீ
மனித குலத்தை நேசிப்பது மெய்யெனில்
மனிதகுல விரோதியை யுத்தவெறியரை
கட்டாயம் வெறுக்கத்தானே வேண்டும் ?

நீ
உழைக்கும் வர்க்கத்தை  காதலிப்பது மெய்யெனில்
சுரண்டும் வர்க்கத்தை கொள்ளைலாப வெறியரை
சுட்டெரிக்கும் கோபம் பொங்கத்தானே  வேண்டும் ?

நீ
ஒடுக்கப்பட்டோரை உளமார விரும்புவது உண்மையெனில்
ஒடுக்குவோரை  ஆதிக்க மேட்டுக்குடியை
சினம் பொங்க சீறி எதிர்க்கத்தானே வேண்டும் ?

நீ
சமத்துவத்தை சமூகநீதியை நம்புவது மெய்யெனில்
மநு நீதியை ஆதிக்க அதிகாரத்தை
பொசுக்கும்  கோபம் பொங்கத்தானே வேண்டும் ?

சு.பொ.அகத்தியலிங்கம்.
8 ஜூன் 2019 .காலை .8.40






சங்கி விஞ்ஞான்

Posted by அகத்தீ

சங்கி விஞ்ஞான்.
***-**********-******


என் முப்பாட்டனுக்கு
முப்பாட்டனுக்கு
முப்பாட்டனுக்கு
முப்பாட்டனுக்கு
............................
.............................
முப்பாட்டனுக்கு
முப்பாட்டன்
கணினியில்
மகாபாரதம்
யாத்தான்
கார், ஹெலிகாப்டர்,
ரோபாட் எல்லாம்
அவனிடம் இருந்தன
அவன் முயற்சியில்
ஸ்டெம் செல் மூலம்
பிரசவித்ததே
எம் பரம்பரை!
ஆனாலும்
வர்ண அடுக்கும்
சாதிப் படிகட்டும்
சற்றும் குலையாமல்
காத்துவரும்
மநுவின் ஸ்வீகார
வம்சம் எங்களுடையது
இன்னுமா சந்தேகம்?

சு.பொ.அகத்தியலிங்கம்.