புரையோடிய புண்களின் படப்பிடிப்பு ….

Posted by அகத்தீ Labels:

 


 


புரையோடிய புண்களின் படப்பிடிப்பு ….

 

 

 “ வாழ்க்கையும் ஒரே கோணத்தில் இல்லை .வலிகளும் ஒரே கோணத்தில் இல்லை… ”

 

 

 

இது நாவல் அல்ல . சிறுகதை தொகுப்பும் அல்ல . பல நூல்களை அறிமுகம் செய்வதின் வாயிலாக , இலங்கையில் வாழும் பல்வேறு தமிழர்கள் குறித்த ஓர் பன்மைத்துவ சிந்தனைப் பார்வையை நம்முள் விதைக்கும் அரிய முயற்சி . ஆசிரியரின் பரந்த வாசிப்பும் கூரிய அவதானிப்பும் நம்மை வியக்க வைக்கிறது .

 

 

கட்டுரைத் தொகுப்புகள் வெளிவருவது அண்மையில் அதிகரித்துள்ளன . பொதுவாய் அவை அவ்வப்போது பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி அல்லது தேவையை சார்ந்து அல்லது போகிற போக்கில் எழுதப்பட்டவற்றின் தொகுப்பாய் அமைகின்றன . அவற்றுள் சில பேசப்பட வேண்டியவையே .நானும் சிலதைப் பேசியுள்ளேன்.

 

 

ந.பெரியசாமியின் “ மொழியின் நிழல்” நூல்அறிமுகங்களின் தொகுப்பாய் அமைந்து , இன்னும் நான் வாசிக்க வேண்டிய பரப்பை என்னுள் உணர்த்திச் சென்றது . அய்ஜாஸ் அஹமதுவுடன் விஜய் பிரசாத் உரையாடித் தொகுத்த “மானுடத்துக்கு உரியதெதுவும் எனக்கு அந்நியமானதல்ல” எனும் நூல் இங்கு நாம் கற்றது கைமண் அளவு கற்க வேண்டியது கடலளவு என இடித்துச் சொன்ன நூல் .

 

 

இந்நூல் வாச்சியம் எனப்படும் நூல் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு . ஆயின் பொதுவாய் வாசித்ததின் தொகுப்பல்ல . ஒரு கூர்த்த பார்வையோடு தமிழீழப் போருக்கு முன்னும் பின்னுமாய் பயணித்து ; பொது புத்தியில் இன்னும் போய்ச் சேராத சமூக வாழ்வை காட்சிப் படுத்தும் கடுமையான முயற்சி .

 

 

நான் இலங்கைத் தமிழ் இலக்கியத்தோடு எழுபதின் இறுதிகளிலேயே அறிமுகம் ஆனவன் .இந்நூலில் முதலில் பேசப்படும் டேனியலின் பஞ்சமரை அப்போதே வாசித்தவன் .  கவிதை ,நாவல் சிறுகதை இலக்கியத் திறனாய்வு என இலங்கைத் தமிழ் பரப்பில் ஆர்வம் கொண்டிருந்தவன் . ஒரு கட்சியின் திட்டத்தையே நாவலாக்கி “லங்கா ராணி” என உலவவிட்ட ஈழத்தமிழர் குறித்து பெருமை பொங்க பேசித் திரிந்த காலம் அது .

 

 

முள்ளிவாய்க்காலுக்குப் பின் வெளிவந்த நூல்கள் ஆதரித்து / எதிர்த்து என இரண்டே கோணங்களில் அனைத்தையும் பார்ப்பதாக என்னுள் ஒரு சோர்வு தட்டியது .நூலாசிரியரும் அதனைச் சுட்டுகிறார். அதன் பின் இலங்கைத் தமிழ் எழுத்துகளின் மீதான நாட்டம் குறைந்தது . “ சுகந்தி என்கிற ஆண்டாள் தேவநாயகி” என்கிற ட்டி .ராமகிருஷ்ணனின் மலையாள நாவலை குறிஞ்சிவேலன் மொழியாக்கத்தில் படித்ததுதான் நான் கடைசியாகப் படித்த ஈழத்தமிழ்ர் சார்ந்த நாவல் .

 

 

 “ சகமனிதர்னைத் தொடவோ கட்டித் தழுவவோ கைகுலுக்கிக் கொள்ளவோ முடியாத வாழ்க்கையை ஏன்தான் வாழவேண்டும் ?மானுட விழுமியத்தையும் அறத்தையும் முற்றாகப் புறந்தள்ளிவிட்டு வாழும் நாட்கள் எப்படி அர்த்தபூர்வமானதாக இருக்க முடியும் ? புறவெளியில் இயங்கும் தோய்த்தொற்றைக் குறித்தல்ல நான் கூறுவது . அகத்துக்குள் வஞ்சக விசமாய்த் தோய்ந்திருக்கிற பெருந்தொற்றைக் குறித்தே நான் பேச விரும்புகிறேன்.”  சுகன் தொகுத்த “தீண்டத்தகாதவன்” சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய வாச்சியத்தை இப்படித்தான் துவங்குகிறார் ம.மணிமாறன் . இந்நூலுக்கு மதிப்புரை எழுதிய கவிஞர் கருணாகரனும் இவ்வரிகளை மேற்கோள் காட்டியே தொடங்குகிறார் .

 

 

அப்படி எனில் இந்நூல் தீண்டாமை எனும் மைய அச்சில் சுழல்கிறதா ? ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லிவிட முடியாது . போரும் புரட்சியும் புலம்பெயர்தலும் எதுவும் கரைத்துவிடாத சாதிய ஆதிக்க மனக் கசடுகளை இந்நூல் வழி மணிமாறன் படம் பிடிக்கிறார் .முதல் கட்டுரை பஞ்சமர் தொடங்கி கடைசிவரை ஊடும் பாவுமாய் இந்நூலில் நிறைந்துள்ளது .

 

 

அதற்கும் மேல் தோட்டத் தொழிலாளர் வாழ்வு ,தேயிலை காப்பித் தோட்டங்களில் செடியின் தூரில் உறைந்திருக்கும் கண்ணீரின் வெப்பமும் அடர்த்தியும் , இலங்கை முஸ்லீம்களில் கையறு வாழ்க்கை அவலம் ,பெண்களின் இரட்டைத் துயரம் , போர் சப்பிப்போட்ட வாழ்வின் முடிவற்ற துயரம் என பன்முக சமூக அவலங்களையும் புரையோடிப்போன புண்களையும் பேசிய பல இலக்கியங்களை முன்வைத்து கதை ,நாவல் வழி சமூக வரலாற்றைச் தீட்ட முயல்கிறார் மணிமாறன் .

 

 

மலையகத் தமிழ்ர் ,யாழ்ப்பாணத்தமிழ்ர் ,முஸ்லீம் தமிழர் என பலவாறு பிரிந்தும் ஒட்டியும் வாழ்கிற மொத்தத் தமிழ்ர்களையும் ஈழத்தமிழ்ர் என்ற சொல்லில் அடக்க முடியுமா ? அங்கே நிலவும் அரசியல் ,சமூகச் சூழல் அதற்கேற்ப உள்ளதா ? இலங்கைத் தமிழர் எனும் பொதுச் சொல்லில் அழைப்பதிலும் சிக்கல் உண்டு .வேறு சொல்லும் இன்னும் பரிந்துரைக்கப்பட வில்லை.

 

 

யாழ்ப்பாண தமிழர் அதிலும் சைவநெறி நின்ற மேல்தட்டு தமிழர் வழியும் வலியும் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்சனையின் முதலும் முடிவுமல்ல என்கிற செய்தி அழுத்தமாய் மணிமாறனால் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது . “ போர் சிதைத்த நிலத்தின் கதை “ என மின்னிதழில் தொடராக வந்தவையே இப்போது “ போருக்கும் அப்பால்” என்கிற பெயரில் நம் கையில் தவழ்கிறது .புதிய தலைப்பு கவிஞர் கருணாகரன் உபயம் . போருக்கு பின்னால் என்று சொல்லாமல் போருக்கும் பின்னால் என ஒரு உம் சேர்த்ததே நுட்பமானதுதாம்.

 

 

 “போரால் நிலைகுலைந்து கலங்கிக் கிடக்கும் கதையை வரிசைப் படுத்திதான் எழுத வேண்டுமா என்ன ? ஆகவே காலத்தைக் கலைத்து முன்பின்னாக எழுதலாம் என நினைக்கிறேன்.” என்கிற மணிமாறன் அப்படித்தான் செய்திருக்கிறார் . எப்போது பேசினும் சில வலிகளும் வாழ்க்கையும் முடிவற்றதாய் தொடருதே ! குற்ற உணர்ச்சி குத்திக் குடையுதே ! மணிமாறன் நோக்கத்தில் வென்றுவிட்டார் .

 

 

 “ சொற்கள் யாவும் ஒரு பொருளுடையவை அல்ல .இயக்கம் என்றால் அது மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை . நம் காலத்தில் வலது கருத்தியலைப் பின்பற்றுபவர்கள்கூட தங்களை இயக்கக்காரர்கள் என்று அழைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள் .இப்படித்தான் புரட்சி ,போர்க்குணம் , நவீனம் ,ஏன் பின் நவீனம் என யாவற்றின் மீதும் பன்மைத்துவ உரையாடல் நிகழ்த்த வேண்டும் என்பது காலத்தின் கோரிக்கையாக நம்முன் நிற்கிறது “ என ஜீவகுமாரின் “கடவுச்சீட்டு” நாவலுக்கு எழுதிய வாச்சியத்தில் மணிமாறன் சொல்கிறார் . இந்நுல் நெடுக அவ்வாறு முயன்றும் உள்ளார் .

 

 

 “போரின் சூழலுக்குள்ளேயே இருந்தவர்களின் ஆழ்மனதின் தடித்த சுவர்களுக்குள் பதுங்கிக் கிடந்த கதைகள் மெதுவாய் வெளியேறுகின்றன.’ என மெடூசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்.” கதைத் தொகுப்பிற்கு வாச்சியம் எழுதும் போது மணிமாறன் சொல்லும் வரிகள் மெய்யென்பதை அறிய முடிகிறது .

 

 

 “இங்கிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் நடமாடும் ஆவணங்களாக இருப்பதை …”  மலையக வாய்மொழி இலக்கியத்திற்கு வாச்சியம் எழுதுகிற போது மணிமாறன் நினைத்துப் பார்க்கிறார் ; நம்மையும் அந்த நாட்களுக்குள் இழுத்துவிடுகிறார் .

 

 

சொந்த மண்ணின் அகதிகள் கதையை ,கூலித் தமிழர்களின் கதையை , போர் சிதைத்த இஸ்லாமிய வாழ்க்கைப் பாடுகளை , இஸ்லாமிய பெண்களின் உள்ளத்து போராட்டக்குரலை என இவர் தொட்டுக்காட்டும் பரப்பும் வீச்சும் மிகப் பெரிது . காலங்காலமாய் சுமக்கும் கொடும் வலிகளுடன் யுத்தம் திணித்த பேரவலம் இரண்டையும் நினைத்தாலே தூக்கம் தொலைந்துவிடும் ; அழுகை நிற்காது . அதற்குள் நம்மை இலகுவாக தள்ளிவிட்டுவிடுகிறார் மணிமாறன் .

 

 

ஈழத்தமிழ் இலக்கியம் குறித்த நம்முள் இருந்த ஒடுங்கிய பார்வை இந்நூலை வாசித்தபின் நிச்சயம் நெகிழும் .மாறும் . வாழ்க்கையும் ஒரே கோணத்தில் இல்லை .வலிகளும் ஒரே கோணத்தில் இல்லை .நீங்கள் வாசிக்க வேண்டிய நூல்களின் பட்டியல் நீளும்.

 

 

தொடராக எழுதும் போது தினசரி வாசகர் பரப்பு மாறும் அதற்கொப்ப கொஞ்சம் முன்னுரையாக சிலவற்றை சொல்லுவது தவிர்க்க இயலாது .நூலாக்கும் போது கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாமோ ?

 

 

 

போருக்கும் அப்பால் ,ஆசிரியர் : ம.மணிமாறன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,பக்கங்கள் :216 , விலை : ரூ. 210/

தொடர்புக்கு :044 – 24332424 /24330024/ விற்பனை 24332934

bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

28/6/2022.

 

 

 

 

 


ரகசியம்

Posted by அகத்தீ Labels:

 

ரகசியம்



மனம் விசித்திரமானது

புழங்கிய இடத்தை

புழங்கிய மனிதர்களை

புழங்கிய பணியை

புழங்கிய வழிதடத்தை

மறந்துவிடுவதில்லை

என்பது மட்டுமல்ல

அசைபோட்டுக் கொண்டே இருக்கும்

முதுமையின் துயரமே அதுதான்.


ஆயின் காலகதியில் அனைத்தும் 

மாறியும் மறந்தும் போகும்

எல்லாவற்றையும் 

நினைவில் வைத்துக்கொள்ள

வரலாற்றுக்கு என்ன கட்டாயம் ?

கிரீடம் தரித்தவர்களையே

குப்பையில் வீசும் வரலாறு

செங்கல் சுமந்தவனையும்

செந்நீர் சிந்தியவனையுமா  

நினைவில் வைக்கப் போகிறது ?


தூரத்தில் இருந்து ரசிக்கவும்

துயரத்தை மனதில் புதைக்கவும்

கேட்டால் மட்டுமே சொல்லவும்

அளவறிந்து நிறுத்தவும்

அழைத்தால் மட்டுமே போகவும்

அன்போடு அழைப்பை நிராகரிக்கவும்

நம் கடன் முடிந்ததென விலகவும்

நேற்றின் நினைவிலும்

நீங்கா மனநிறைவிலும்

வாழப்பழகின் முதுமை இனிக்கும் !


சுபொஅ.

25/6/2022.

மர்மப் பெட்டி

Posted by அகத்தீ Labels:

 மர்மப் பெட்டி


ஒவ்வொருவரிடமும்
ஓர் மர்மப் பெட்டி இருக்கிறது
சொல்ல நினைத்து
சொல்ல மறந்தது
சொல்லியிருக்க வேண்டியது
சொல்லக்கூடாதது
பிழையாகச் சொன்னது
ஏமாற்ற சொன்னது
சொல்லை நம்பி ஏமாந்தது
எவ்வளவோ எவ்வளவோ
இதுவரை யாரும் அந்த
மர்மப் பெட்டியை திறந்ததே இல்லை.
இனி திறக்கப் போவதுமில்லை.

சுபொஅ.
25/6/2022.

உரைச் சித்திரம் : 15 பந்தும் பாவையும் கழங்கும் புனலும் ஆடுக இளம் பெண்ணே !

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 15


 

பந்தும் பாவையும் கழங்கும் புனலும்

ஆடுக இளம் பெண்ணே !

 

“ ஓடி விளையாடு பாப்பா!” என்பது சரிதான் ; “ ஓடி விளையாட திடல் எங்கே ?” , “ ஓடி விளையாடவும் நேரமின்றி ஹோம் ஒர்க் கொடுக்குதே பள்ளிக்கூடம் ?” - என இக்காலக் குழந்தைகள் கேட்கும் நிலை . எங்கிட்டு சொல்லி அழ.

 

 

பெண்கள் விளையாட்டுத் துறையில் பெரும் சாதனை புரியும் இந்நாளிலும் , ஊரிலும் நகரிலும் பொதுஇடத்திலும் விளையாட்டுத் திடல்களிலும் பெண்கள் வந்து விளையாடுவது எளிதாமோ ?

 

பொம்பள பிள்ளைக்கு என்ன விளையாட்டு வேண்டி கிடக்கு ? பொறுப்பா வீட்டில இருந்து கூடமாட உதவலாம்ல..” என்கிற அங்கலாய்ப்பு இன்னும் ஓய்ந்தபாடில்லையே .

 

 “ ஏ ! பெண்ணே ! ஏன் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாய் ? வெளியே வா ! விளையாடு ! “ அப்படின்னு  உரக்கக் கூப்பிட்டால் எப்படி இருக்கும் ?

 

இதோ கூப்பிடுறாங்க ! ஆமாம் , தமிழ்நாட்டில்தான் கூப்பிடுறாங்க … தமிழில்தான் கூப்பிடுறாங்க … ஆனால் அது சங்க காலத்தில்

 

பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி தொகுத்த நற்றிணை நானூற்றில் ஒரு காட்சி ! ரசிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்காகவும்…

 

 “ ஏ ! இளம் பெண்களே ! இளம் பெண்களே ! ஏன் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கிறீர்கள் ! இந்தப் பருவம் எங்கும் ஓடியாடி விளையாட வேண்டிய பருவம் அல்லவா ? வெளியே வாருங்கள் ! வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் பருவமல்ல இது ; அப்படி அடைந்து கிடப்பது நியாயமும் அல்ல ; உடல் நலத்துக்கும் கேடு ! வெளியே வாருங்கள் ! ஆற்றில் புதுவெள்ளம் நுரைபொங்கிப் பாய்கிறது .குதித்து நீந்தி மகிழ்ந்து விளையாட வேண்டிய நேரம் இது …. வாருங்கள் வெளியே ! ”

 

எவ்வளவு பொருளும் ஆழமும் மிக்க அழைப்பு .

 

கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் இன்னொரு காட்சியை சித்தரிக்கிறார் மிகை கற்பனைதான் ஆயினும் அன்றைக்கு இருந்த விளையாட்டுகளை அறிய முடிகிறது .

 

பெண்கள் பந்து விளையாடினர் ,கழங்கு எனும் கழச்சிக்காய் அல்லது கல் வைத்து விளையாடும் ஆட்டம் ஆடினர் என்கிறார் .அதுவும் எப்படி ஆடினார் தெரியுமா ?

 

நல்ல சத்தான சுவையான உணவைத் தின்றுவிட்டு ,இடுப்பில் முத்துவடம் எனும் தங்கச் சங்கிலி அணிந்து – மெல்லிய துகிலை உடுத்தி ஆடினர் .அந்த துகில் வெண்மை கொண்றை மலரில் பனிதுளி ஆடியது போல் இருந்ததாம் .கால்களில் தங்கத்தால் செய்யப்பட்ட கொலுசு ஒலிக்க ஆடினார்களாம் – மலைமீது தன் வண்ணத் தோகையை விரித்து மயில்கள் ஆடியதுபோல் ஆடினார்களாம் .மேகம் தவளும் உயர் மாளிகை மாடத்தில் நின்று , மென்மையான நூலினால் வரிந்து கட்டப்பட்ட பந்தினை எறிந்து எறிந்து ஆடினார்களாம் .

 

ஆக ,மாடியில் மகளிர் பந்து ஆடினார்கள் என்பதே செய்தி . எவ்வளவு நேரம் மாடியிலேயே ஆடுவது ? போரடிக்குமே ! கீழே இறங்கி வந்து மணல் வெளியில் தோழிகளுடன் கழங்கு ஆடினார்களாம் .அந்த கழங்கும் தங்கத்தால் செய்யப்பட்டதாம் . அந்தப் பட்டணத்தின் பெருமையைச் சொல்ல இப்படி விளையாட்டுக்கும் தங்கம்பூசிக் காட்டுகிறார் புலவர் .

 

சங்க காலத்தில் பெண்கள் என்னென்ன விளையாட்டுகள் விளையாடினர் என கணக்கெடுத்து ஆய்வாளர் பலர் சொல்லி இருக்கின்றனர் . 1] தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடும் புனல் விளையாட்டு, 2] வட்டாடுதல் என்ப்படும் ஒரு வகை வட்ட கல் / கட்டை /காய் கொண்டு ஆடுவது . இதில் சூதும் உண்டு அல்லாமலும் ஆடலாம். 3] பலவகையான பந்தாட்டம் , 4] கழங்காடுதல் எனும் கழச்சிக்காய் அல்லது சிறு கற்களை உள்ளங்கையிலும் புறங்கையிலுமாக போட்டுப் பிடித்து விளையாடும் ஆட்டம். ,5] புதிர் ,விடுகதை என பலவகையில் அறிவு சார்ந்து விளையாடல் . இது ஓரையாடல் எனப்படும். ,6] ஊஞ்சலாடுதல் 7] அம்மானை [ இதனை பந்து விளையாட்டின் ஒரு வகை எனவும் பார்க்கலாம் ,பாடலோடு ஆடுவதால் தனித்தும் பார்க்கலாம்] , 8] வண்டலிழைத்தல் அதாவது வண்டல் மண்ணில் பொம்மை செய்து சிங்காரித்து விளையாடல் .

ஆறு ,குளம் ,ஆற்றங்கரை ,மணல்வெளி ,சோலை ,மரத்தடி என பொதுவெளிகளில் இளம்பெண்கள் கூடி மேற்கண்ட ஆட்டங்களில் ஈடுபட்டதாக காட்சிச் சித்தரிப்புகள் உள்ளன.

 

இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பே பெண்களுக்கு இப்படி உடல் நலம் , அறிவு நலம் , உள்ள மகிழ்ச்சி எல்லாம் தரும் ஆட்டங்கள் இருந்தது சாதாரணமானதா ?  இந்த பட்டியல் இன்றைய தேவைக்கு போதுமானதல்ல . காலத்துக்கு ஒப்ப பட்டியல் பெருத்து விரிந்து சென்று கொண்டே இருக்கிறது . அத்தனையும் ஆட அழைப்பதாகவே கொள்ளலாம் .

 

விளையாட்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியே . இன்னொரு காட்சியைப் பார்ப்போமா ?

 

ஒரு இளம்பெண் திடீரென தன் உள்ளம் கவர் இளைஞனோடு உடன்போகி விட்டாள் . அன்று தாய் வருந்துவாள் ஆயினும் காதலரைப் பிரிக்க ஒரு போதும் எண்ண மாட்டார்கள் . கபிலர் குறுந்தொகையில் ஒரு சித்திரம் வரைந்து காட்டுகிறார் .

 

தன் பெண் விரும்பியவனோடு உடன்போகி விட்டாள் .தாய் அரற்றுகிறாள் . “ என் ஆசை மகள் என்னைவிட்டு போய்விட்டாளே ! வாங்கியம் எனும் வளைந்த இசைக்கருவி போல் தும்பிக்கையை உயர்த்தி முழங்கும் யானை உலவும் காட்டின் வழி சென்றுவிட்டாளே ! இதோ அவள் ஆசை ஆசையாய் தினமும் விளையாடி மகிழும் பந்து ,கழங்கு ,பாவை அதுதான் பொம்மை எல்லாம் சீண்ட அவளற்றுக் கிடக்கிறதே !” என பந்தையும் ,கழங்கையும் ,பாவையையும் பார்த்துப் பார்த்துக் அழுதாளாம்.

 

பாலின வேறுபாடின்றி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ஓடி ,ஆடி விளையாட , ஆடிப்பாடி களிக்க உரிய நேரமும் வாய்ப்பும் வழங்காத சமூகத்தைக் காறி உமிழினும் தப்பில்லை.

 

 விளையாட்டும் பொழுதுபோக்கும்கூட மனித உரிமையே !

 

விளையாட்டாககூட , ‘ விளையாடப் போகாதே!’ என குழந்தைகளுக்குச் சொல்லிவிடாதீர் !

 

 

 

 

 

விளையா டாயமொடு ஓரை யாடாது
இளையோர் இல்லிடத் திற்செறிங் திருத்தல்
அறனும் அன்றே ஆக்கமுந் தேய்ம்மெனக்
குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்
பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்.

நற்றிணை , நானூறு  

 

கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர்

கொன்றை மென் சினை பனி தவழ்பவை போல்

பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க

மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்                    330

பீலி மஞ்ஞையின் இயலி கால

தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை

வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ

கை புனை குறும் தொடி தத்த பைபய

முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்             335

பட்டின மருங்கின் அசையின் முட்டு இல்

 

பெரும்பாணாற்றுப்படை , கடியலூர் உருத்திரங் கண்ணனார்  

 

 

 

 

நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை

இயம் புணர் தூம்பின் உயிர்க்கு அத்தம்

சென்றனள்மன்ற - என் மகளே

பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே

 

குறுந்தொகை , கபிலர்

 

விளையாட்டும் பொழுதுபோக்கும்கூட மனித உரிமையே !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/6/2022.

 

 

விதி ஒன்றுதான்….

Posted by அகத்தீ Labels:

 

விதி ஒன்றுதான்….

 

தறிகெட்டு ஓடும்

எதுவும் குப்புறச் சாயும் !

வாகனமோ சர்க்காரோ

விதி ஒன்றுதான்.

 

நுனிக் கொம்பர் ஏறின்

கிளை ஒடியும் அவர் வீழ்வர்

யாராக இருப்பினும்

விதி ஒன்றுதான்

 

மதுபோதையோ மதபோதையோ

எல்லை மீறின் மனிதம் சாயும்

எங்கே ஆயினும்

விதி ஒன்றுதான்

 

அதிகார மமதையும் மதவெறியும்

கைகோர்க்கும் போதில்

நாடு கொடும் நரகமாகும்

எங்கும் விதி ஒன்றுதான்.

 

குட்ட குட்ட குனிந்தவன்

தரை முட்டியதும் நிமிர்வான்

குட்டியவன் தாடை பெயரும்

எந்த நொடியும் நிகழலாம் !!

 

 

சுபொஅ.

19/6/2022.

 

 

 


உரைச் சித்திரம் :10.கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

Posted by அகத்தீ Labels:

 உரைச் சித்திரம் :10.

 


கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

 

 

அண்டாவில் தண்ணீரை ஊற்றி , அதில் பார்ப்பனர் உட்கார்ந்து , சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி , வருண ஜெபம் செய்தால் மழை பொழியும் என்கிற மூடத்தனங்கள் இல்லாத சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்திருக்கிறது .

 

சங்க இலக்கியத்தில் எங்கே தொட்டாலும் மழை குறித்த அறிவியல் பார்வை மிகுந்திருக்கிறது .இதன் பொருள் இன்றைக்கு இருக்கிற ஞானம் அப்படியே அன்றைக்கு இருந்தது என்பதல்ல ; மாறாக மழை எப்படி உருவாகிறது என்கிற இயற்கையின் ரகசியத்தை உற்று நோக்கி அறிந்திருக்கிறார்கள் அன்றைய தமிழர்கள் .

 

 “மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!” என்பது தமிழ்ச் சமூகத்தின் பண்பாடாகவே ஊடும் பாவுமாய் இருந்துள்ளது . இன்றும் தொடர்கிறது . வள்ளுவர் கூட கடவுள் வாழ்த்துக்கு அடுத்ததாக வான் சிறப்பை வைத்து மழையைப் போற்றியது தற்செயல் அல்ல ;பண்பாட்டு வேர் .

 

சங்க இலக்கியமான பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் புலவர் காவிரிப்பூம் பட்டிணத்தில் ஏற்றுமதி இறக்குமதி குறித்து பாடவந்தவர் மழையின் இயல்போடு அதனை ஒப்பிட்டு பாடலானார் .

 

கடலிலே முகந்த நீரை மலையிலே மேகம் மழையாகப் பொழியும் .அந்த மழைநீர் பெருக்கெடுத்து ஆறாகி ,கண்மாய் ,குளம் ,ஏரி ,குட்டை எங்கும் நிறையும் . மீதி நீர் கடலில் போய்ச் சேரும் .என மழைநீரின் சுழற்சியை மிக அழகாக சொல்லிவிட்டு ,

 

அது போல காவிரிப்பூம் பட்டிணத்தில் ஏற்றுமதி இறக்குமதி காட்சி இருந்ததாம் .ஒரு பக்கம் வெளிநாட்டிலிருந்து கப்பலில் வந்து குவிந்த பொருட்களின் பொதி மூட்டைகள் ;மறுபக்கம் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் பொதிமூட்டைகள் என குவிந்து கிடந்ததாம் .

 

அந்த காட்சி மேகம் உரசும் பொதிகை மலையின் சாலைகளில் வருடை மான்கள் துள்ளி விளையாடுவது போலும் ,பண்டகசாலையில் கூர்மையான நகங்களையும் வளைந்த பாதங்களையும் உடைய ஆண் நாய்களும்செம்மறி ஆட்டுக் கிடாய்களும துள்ளிக் குதித்து விளையாடுவது போலும் இருந்ததாம்.

 

கடல் –மேகம் –மழை –ஆறு – கடல் என நீரின் சுழற்சி ஒழுங்காய் அமைந்தால்தான் வளம் கொழிக்கும் ; அதுபோல் ஏற்றுமதியும் இறக்குமதியும் சுழல்வழிப் பாதையாய்ச் சீராய் அமைய வேண்டும் என்கிற நுட்பமான சிந்தனையோட்டம் அன்றைக்கே தமிழ்ப் புலவன் முன்வைத்திருக்கிறான் என்பது வியப்பான செய்தி .

 

முதலில் கடவுள் வாழ்த்தாகத் திருமாலைப் பாடவந்து - மழையின் இயல்பைப் போற்றியதுதான் சங்க இலக்கியமான முல்லைப்பாட்டில் ஹைலைட் ! புலவர் நப்பூதனார் பாடியது .

 

முல்லை நிலத்துக்குரிய கார்காலம் துவங்குவதை மகிழ்ந்து போற்றி கடவுளை வணங்குகிறார். திருமால் இந்த பரந்த உலகை வளைத்துக் கொண்டானாம் - கையில் சங்கும் சக்கரமும் ஏந்தி நின்றானாம் – மாவலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானம் கேட்டு குனிந்து நின்றானாம் . மாவலி சக்கரவர்த்தி நீர்வார்த்து தானம் கொடுத்தாரம் – உடனே திருமால் விஸ்வரூபமெடுத்தாராம் …

 

என கற்பனைக் கதையைச் சொன்ன புலவன் இந்த திருமால் மழையைக் கொடுத்தாரெனச் சொல்லாமல் ; கடலில் நீரைப் பருகிவிட்டு வலப்புறமாக மேலெழுந்த மேகம்  நெடுந்தொலைவு பயணித்து மலையில் மோதி பெருமழையாகப் பொழிந்தது போல ; அதாவது கடலில் மேகம் உறிஞ்சிய சிறு துளி பெருவெள்ளமானது போல அந்த விஸ்வரூபம் அமைந்தது என்கிறார் .

 

இங்கும் கடவுளுக்கு மேலானதாக இயற்கையே உயர்வானதாகக் காட்டுவதுதான் தமிழின் சிறப்பு.

 

திருமுருகாற்றுப்படையில் முருகனைப் புகழ்ந்து போற்ற வந்த மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் மழையை ,மலரை ,வனத்தை முருகன் படைத்தான் என கதைவிடாமல் இயற்கையை விவரித்து முருகனைச் சுட்டுகிற பேரழகைப் பாருங்கள் ;

 

கடல்நீரை உறிஞ்சி சூலுற்ற மழை மேகங்கள் , வானில் வாள் போல் மின்னலோடு மழையாய்ப் பொழிந்தது . கடும் கோடைக்குப் பின் பெய்த அந்த முதல் மழையில் காடு இருண்டது , பசுமை பூத்தது , வெண் கடம்பம் மரத்தில் மலர்கள் சிரித்தன . அந்த மலர்களில் மாலை கோர்த்து முருகனுக்கு அணிவித்து வணங்கினர் .

 

இயற்கையை கடவுளின் கொடையாகச் சொல்லாமல் ; இயற்கையோடு இயைந்தே முருகனையும் வணங்கினார் தமிழர் என்பது எத்தனைச் சிறப்பு .


மழையெனும் இயற்கைப் பெரும் சுழற்சியை பழுதற உணர்ந்தவர் தமிழர் .

 

கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

ஆம் , 

 

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்கும்மேல் வானோர்க்கும் ஈண்டு” [ திருக்குறள் : 18 .]

 

வானம் பொய்த்துப்போனால் பூஜை ஏது ? புன்ஸ்காரம் ஏது ? திருவிழா ஏது ?

 

கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

 

 

. “வான் முகந்த நீர் மலைப் பொழியவும்

மலைப் பொழிந்த நீர் கடல்பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல

நீரினின்றும் நிலத்து ஏற்றவும்

நிலத்தினின்று நீர்ப் பரப்பவும்

அளந்து அறியா பலபண்டம்

வரம்பு அறியாமை வந்து ஈண்டி

அருங்கடி பெருங்காப்பின்

வலிவுடை வல் அணங்கின் நோன்

புலிபொறித்து புறம் போக்கி

மதி நிறைந்த மலி பண்டம்

பொதிமூடைப் போர் ஏறி

மழை ஆடு சிமைய மால்வரைக் கவாஅன்

வரை ஆடு வருடைத் தோற்றம் போலக்

கூர் உகிர் ஞமலிக் கொடுந்தாள் ஏற்றை

ஏழகத் தகரொடு உகளும் முன்றில்” (126-141)

 

பட்டினப்பாலையில்  “கடியலூர் உருத்திரங்கண்ணனார்

 

 

 

 

 “நனந் தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை
நீர் செல, நிமிர்ந்த மாஅல், போல,
பாடு இமிழ் பனிக் கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

5

பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை,”

 

முல்லைப்பாட்டு 1-6 புலவர் நப்பூதனார்

 

 

 

 “கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத்து
இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .(10)
உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன் . . . .(7 – 11)

 

பாடியவர் :- மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்
பாடப்பட்டவன் :- முருகப்பெருமான் 7-11

 

 

 

கடவுளும் மழைக்கு பின்னர்தான்…

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

14/5/2022.