சவாலான நேரங்களில் சரத் பவார் ….

Posted by அகத்தீ Labels:

 



 



 

சவாலான நேரங்களில் சரத் பவார் ….

 

வாழ்க்கை வரலாற்று நூல்களில் மிகக் குறைவான பொய்கள் கொண்டதே தன்வரலாற்று நூல் Autobiography என்பர் அறிஞர் பெருமக்கள் . மகாத்மாகாந்தியின் சுயசரிதை போல் ஏனையவையும் இருக்கும் என எதிர்பார்ப்பின் அது ஏமாற்றமாகும். . எப்படி இருப்பினும் சுயவரலாற்று நூல் நமக்கு பல செய்திகளை ஆதாரபூர்வமாகச் சொல்லும் . வாசிக்க சுவையாக இருக்கும் .

 

அந்த வகையில் சரத் பவார் சுயவரலாற்று நூலையும் வாசித்தேன் .2016 ல் தமிழில் வெளிவந்தது.தாமதமாக இப்போதுதான் வாசித்தேன் . சரத் பவார் “என் அரசியல் வாழ்க்கை” என மகுடமிட்டு அதன் சுழல் வட்டத்தை சுட்டிவிட்டார் . துணைத் தலைப்பு “அடிதட்டிலிருந்து அதிகாரத்தின் நுழைவு வாயில் வரை”

 

27 வயதில் மகாராஷ்டிரா மாநில பாரமதி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினரானவர் , 35 வயதில் அமைச்சர் , 38 வயதில் முதலமைச்சர் ஒரு முறை அல்ல நான்கு முறை , ஒன்றிய அமைச்சர் என பல படிநிலைகளில் வேகமாக தாவி ஏறியவர் .  “அதிகாரத்தின் நுழைவு வாயில் வரை” என துணைத் தலைப்பில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன ?

 

தன் அரசியல் குரு ஒய் .பி.சவானுக்கு பிரதமர் பதவி கிட்டாமல் நழுவிப் போனதுபோல் , தனக்கும் போனதை மறைமுகமாகச் சொல்லவே  “அதிகாரத்தின் நுழைவுவாயில் வரை” எனக் குறிப்பிட்டுள்ளார் போலும் . நூல் நெடுக அதன் சாட்சிகளும்  காட்சிகளும் உண்டு .

 

சாரதாபாய் கோவிந்தராவ் பவார் பொதுவாழ்வில் ஈடுபட்டவர் . சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸில் இருந்தவர் ,உழவர் உழைப்பாளர் கட்சியில் இணைந்தவர் .இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர் .செயல்பாட்டாளர் . இவரது கணவர் கோவிந்தராவ் பவார்  கூட்டுறவு ஊழியர் . பார்ப்பனிய கொடுமையை எதிர்த்து செயல்பட்ட ‘சத்ய சோதக்’ அமைப்பில் தீவிர செயல்பாட்டாளர் .இவர்களது மகன்தான் சரத் பவார் .இவர் சகோதரர்கள் ,உறவினர்கள் பலர் உழவர் உழைப்பாளர் கட்சியிலும் இடதுசாரி இயக்கங்களிலும் இருந்தவர்கள் . இத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் நேருவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். யஷ்வந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் என்கிற ஓய் பி சவானை தன் அரசியல் வழிகாட்டியாகக் கொண்டவர் . உறுதியான காங்கிரஸ்காரர் .

 

காங்கிரஸ் கொள்கையில் பற்றுறிதி கொண்டவராக இருந்த போதிலும் அரசியல் சதுரங்க காய்நகர்த்தலில்  காங்கிரஸை எதிர்த்து காங்கிரஸ் [ எஸ் ] கட்சியில் சேர்ந்ததும், பின் மீண்டும் இந்திரா தலைமையிலான காங்கிரஸில் இணைந்ததும் ,மீண்டும் பிரிந்து தேசியவாத காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கி இன்றுவரை தொடர்வதும் இவரது அரசியலின் இன்னொரு முகம் . எங்கு இருப்பினும் காங்கிரஸ்காரராக தன்னைக் கருதிக் கொள்வது இவர் நிலை .

 

காங்கிரஸில் லிபரல் [ தாராள சிந்தனையாளர்] , கன்சர்வேட்டிவ் [பழமைவாதி ] ,குழப்பவாதி ,சந்தர்ப்பவாதி எல்லோரும் அடக்கம் . தாதாபாய் நவ்ரோஜி தொடங்கி லிபரல் சிந்தனை வலுவாக இருந்தது ஒரு காலம் . காந்திக்கு பின் நேருவின் முற்போக்கான முகமே காங்கிரஸின் ஈர்ப்பு மையம். சவானும் அதன் அங்கம் .பவாரும் அப்படியே . இப்போது காங்கிரஸூக்கு லிபரல் முகம் மிகக் குறைவு .கோஷ்டியும் காங்கிரஸும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் . நூலை வாசிக்கும் போது இவ்வுணர்வே எனக்கு ஏற்பட்டது .

 

“ என்னை பெரிதும் ஈர்க்கும் இந்தியாவின் இரு பெரும் பண்புகள் ஜனநாயகமும் பல இனப் பண்பாடும்தான் . ஈடு இணையற்ற பன்முகத் தன்மை கொண்டது நம் பாரதத் துணைகண்டம் [ ஒற்றைநாடாகப் பார்க்காமல் துணைக் கண்டம் என அவர் குறிப்பிட்டிருப்பது மிக முக்கியம்.] . கடந்த 65 ஆண்டுகளில் [ நூல் எழுதும் போது ]ஏற்பட்ட பல சமூக ,அரசியல் கொந்தளிப்புகளிலும் நிலைகுலையாமல் இருந்திருக்கிறோம் .ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படத் தக்க இப்பண்பே நம் நாட்டின் எதிர்காலச் சிறப்புக்கும் காரணமாக விளங்கும் என நம்புகிறேன்.” என இவர் கொடுத்துள்ள வாக்குமூலம் கிட்டத்தட்ட இவரின் தெளிவான அரசியல் பயணத்தின் குறியீடு ஆகும்.

 

பேரழிவைக் கொண்டுவந்த லத்தூர் நிலநடுக்கம் ,மும்பை தொடர் குண்டு வெடிப்புகள் போன்ற மிகவும் சவாலான காலகட்டத்தில் இவர் முதலமைச்சராக  உறுதியுடன் செயல்பட்டு தன் நிர்வாகத்திறமையை நிரூபித்தார் .லத்தூரும் மும்பையும் மீண்டெழுந்ததில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கது .

 

மரத்வாடா சட்ட பலைகலைக்கு அம்பேத்கர் பெயர் சூட்ட முதலில் ஆணையிட்ட முதல்வர் பவார் . கடும் எதிர்ப்பு எழுந்த போது நிறுத்திவைத்து ,மீண்டும் முதல்வரான போது சாதுரியமாக பெயர் சூட்டிய இவரின் முயற்சியும் காய் நகர்த்தலும் மக்கள் தொடர்பும் எல்லோரும் படிக்க வேண்டிய பாடம் .கோட்பாட்டில் உறுதியாக இருக்கும் போதே வறட்டுத்தனமாக முரட்டுத்தனமாக செய்யாமல் சூழலை சாதகமாக உருவாக்கிட செய்யும் சாமர்த்தியம் காய்நகர்த்தல் முக்கியமானது . இதுவும்  இந்நூலில் உள்ள பாடம்.

 

என்ரான் , மரபணு மாற்றப் பயிர்கள் போன்றவற்றில் இவர் இன்னும் உறுதியாக அந்தப் பக்கம் நிற்பதோடு அதன் தோல்விக்கு வருந்தவும் செய்கிறார் . என்ரானுக்கு எதிரான போராட்டத்தையும் எதிர்மறையாகவே பார்க்கிறார் . மகாராஷ்டிராவில் தத்தா சமந்த் எனும் அதிதீவிர தொழிற்சங்கத் தலைவரின் முரட்டு அணுமுறையால் மும்பை தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டது எனவும் அதை மீட்க தான் எடுத்த முயற்சியையும் சொல்கிறார் . ‘ வாரி ‘ எனப்படும் கிராமப்புற விவசாயிகளின் பக்தி யாத்திரை வடிவத்தில் விவசாயிகள் யாத்திரை நடத்தி விவசாயிகளை ஈர்த்தவர் பவார் .

 

 

இவர் தொழில் வளர்ச்சி ,ஒருங்கிணைந்த வளர்ச்சி ,விவசாய வளர்ச்சி இவற்றில் தனித்த ஆர்வமும் பார்வையும் உடையவர் . பொறுப்புகளில் இருந்த போது விடாது விவரங்களைத் தேடி வாசித்தவர் .பலரோடு உரையாடி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருந்தவர் . முதலாளிகளோடு நல்லுறவைப் பேணிக்கொண்டே பொதுமக்களோடு நல்லுறவைப் பேணுவது கழைக்கூத்தாடி நடப்பது போல் சாகசம் .அதில் இவர் கைதேர்ந்தவர் .இந்நூலில் நிறைய சாட்சிகள் உண்டு .ஹூண்டாய் கார்தொழிற்சாலையை மகாராஷ்டிராவில் முதலீடு செய்ய அழைத்து வந்தார் .ஆனால் அங்கு சூழல் அவருக்கு எதிராகப் போனதால் . ஜெயலலிதாவிடம் பேசி தமிழ்நாட்டிற்கு மடை மாற்றிவிட்டார் .

 

இயற்கை பேரிடர் மேலாண்மை ,மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து உற்பத்தி , வேளாண் பொருட்களுக்கு விலை , வேளாண் கடன் தள்ளுபடி இப்படி காத்திரமான பிரச்சனைகளில் அமைச்சராக இவர் முன்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது .

 

நேருவுக்கு பின் இந்திராகாந்தி தொடங்கி சோனியா காந்தி வரை அக்குடும்பத்தோடு உடன்பட்டும் முரண்பட்டும் அரசியலில் பயணித்த இவரின் கதை காங்கிரஸ் வீழ்ச்சியின் ஒரு பக்கத்தைச் சொல்லும் . 10 ஜன்பாத் குடும்ப அரசியலில் கடும் வெறுப்பு கொண்டவராகவே பவார் உள்ளார் . நரசிம்மராவ் ஆட்சியை புகழ்கிறார் .அதே சமயம் பாபர் மசூதி இடிப்பு விஷயத்தில் அவரின் பிடி தளர்வாக இருந்ததையும் சொல்லுகிறார் .மன்மோகன் ஆட்சியின் மீதும் பாராட்டும் விமர்சனமும் வைக்கிறார் .அவசியம் படித்தறிய வேண்டிய செய்தி .ராகுல் காந்தி மீது நம்பிக்கை வைத்துள்ளார் .ஆயினும் காலம் கனிய வேண்டு மென்கிறார் .

 

கட்சிக்கு வெளியே சிவசேனாதலைவர் தாக்ரே ,சந்திரசேகர் ,பிஜுபட்நாய்க் ,வாஜ்பாய் ,செகாவத் ,சீக்கிய தலைவர்கள் ,சரண்சிங் உடபட பலகட்சித் தலைவர்களோடு தனிப்பட்ட நல்லுறவைப் பேணுபவராகவே பவார் உள்ளார் .இதனால் அவரால் சில முக்கிய பிரச்சனைகளில் காத்திரமாக தலையிட முடிகிறது . ஆயினும் இவர் அரசியல் சதுரங்கம் வட இந்தியாவுக்கு வெளியே குறைவே .தமிழ்நாடு ,கேரளா பற்றிய புரிதலில் வட இந்தியத் தலைவருக்கே உரிய எல்லை இவருக்கும் உண்டு. அதைவிட குறைவாகவே தமிழகத்தை அறிந்துள்ளார் .

 

 ‘காலைவாருபவர்’ , ‘ஊழல் பேர்வழி’ என்கிற அவப்பெயர் தமக்கு உண்டென்பதை ஒப்புக்கொள்ளும் பவார் அவற்றில் உண்மையில்லை என ஒரே போடாக போடுவதை நம்புவது சிரமமே ! இடதுசாரிகளை விமர்சன ரீதியாகவே சுட்டுகிறார் . காலமாறுதலை புரிந்து கொள்ளாதவர்கள் என்கிறார் .‘ஜோலாவாலக்கள்’ [ ஜோல்னாபையர்கள் ]என்று கிண்டலும் செய்கிறார் . இடதுசாரிகள் இவரோடு முரண்படும் இடங்கள் நிறைய ஆயினும் இவரிடம் அறிய வேண்டிய செய்திகளும் உண்டு .

 

வாயில் புற்றுநோய் ,இதய அறுவை சிகிட்சை ,எலும்பு முறிவு என கடும் நோய்களோடு மன உறுதியோடு போராடி மீண்டவர் . குறிப்பாக அந்த அத்தியாயம் அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று.

 

மனைவி பிரதிபா பவார் . மகள் சுப்ரியா சுலே இப்போது இவர் அரசியலில் பவாரின் வாரிசாகிவிட்டார் . மைத்துனர் அஜித் பவார் இப்போது அரசியலில் இவர் எதிரியாகிவிட்டார் .

 

இந்நூலில் உள்ள பல செய்திகள் கொறிக்க மட்டுமல்ல புரிதலுக்கும் உரியன ; சிலவற்றை  மட்டுமே கீழே தருகிறேன்.

 

1] மகாராஷ்டிராவை வறட்சி வாட்டிய போது பல மாநில முதல்வர்களிடம் முதல்வர் என்ற முறையில் உதவி கேட்டுப் பெற்றதைச் சொல்லிவிட்டு .அன்றைய உ.பி.முதல்வர் கமலபதி திரிபாதி காலைத் தொட்டு வணங்காததால்  உதவி செய்ய மறுத்து விட்டதையும் சொல்லிச் செல்கிறார்.

2] பவாரும் சிவசேனா தலைவர் தாக்ரேவும் சேர்ந்து வார இதழ் ஒன்று தொடங்க திட்டமிட்டு எல்லா ஏற்பாடுகளையும் பக்காவாகச் செய்தனராம். அப்போது தாக்ரே ஆலோசனைப்படி அவர் உறவினரான தெய்வீக சக்தி மிக்க ஓர் பெண்மணியிடம் துவக்க தேதி குறிக்கச் சொன்னார்களாம் . அந்த பெண்  தேதி குறித்த பின் சொன்னாராம் ,” இந்த சஞ்சிகைக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது.பிரபா தேவியில் உள்ள சித்தி விநாயகர் திருவடியில் முதல் பிரதியை வையுங்கள். எல்லா பிரதிகளும் விற்றுத் தீர்ந்துவிடும் .கடைகளில் ஒரு இதழ்கூட கிடைக்காது.” என்றாராம். பவார் சொல்கிறார் ,” அவர் சொன்னது சரியாய்ப் போனது . கடைகளில் ஒரு இதழைக்கூட காண முடியவில்லை .ஏனென்றால் வாங்குவோர் யாருமில்லை .சீக்கிரத்திலேயே அந்த கூட்டு முயற்சியை மூட்டை கட்டிவிட்டோம்.”

3] இந்தியாவும் அமெரிக்காவும் அணு ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது பால் மற்றும் பால் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து பெறும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாக இருந்ததாம் . ஆனால் அந்த பாலானது  “மாமிசம் கலந்த மாட்டுத் தீவனத்தைப் போட்டு வளர்த்த பசுக்களின் பால்” என்பது தெரியவந்தது . இது இங்கு பெரிய உணர்வை கிளப்பிவிடும் என்பதால் திட்டத்தையே கைவிட்டுவிட்டோம் என்கிறார் . இந்த நிகழ்வின் போது அருவருப்பான மொழியில் அமெரிக்கா பதில் சொன்னதையும் குறிப்பிட்டுள்ளார் .பசு அசைவத்தை சாப்பிடும் எண்ணத்தையே இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் .

 

[அது சரி ! இப்போது அமெரிக்கா போகும் சங்கிகள் அந்த மாட்டுப் பாலை குடிப்பார்களா ? அந்த மாட்டு கோமியத்தை குடிப்பார்களா ? பசுவும் மாமிச உண்ணியாக மாறிவிட்டதோ ! சங்கீஸ் ! என்னடா சனாதனத்துக்கு வந்த சோதனை உங்கள் நேச அமெரிக்காவில்… : இது என் கேள்வி]

 

3] அரிசி , கோதுமை போன்ற மாவுப் பொருட்களை மானிய விலையில் கொடுக்கிறோம். ஆனால் புரதச் சத்து குறைவே இந்தியாவில் சவாலான பிரச்சனை . புரதம் மிக்க பயிறு ,பருப்பு உற்பத்தி குறைவு .விலையும் அதிகம் .ஏழைகள் வாங்க முடியாது .  “இந்நிலையில் மாட்டிறைச்சியும் தடை செய்யப் பட்டுவிட்டால் புரதத்துக்காக ஏழைகள் எதைத்தான் சாப்பிடுவார்கள் ?” எனக் கேட்கிறார் பவார் .

 

4] லத்தூர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மறுவாழ்வுக்காக வீடுகள் கட்ட நான்கு மாடல்களை தயார் செய்து மக்கள் விரும்பியதை தேர்வு செய்து பல்வேறு அமைப்புகளின் உதவியோடு  கட்ட அனுமதித்போதும்  ,” ஒரு குறிப்பிட்ட சாதி மக்கள் ஒரே இடத்தில் வசிக்கும் படியாக தொகுப்புகள் அனுமதிக்கப்படாது.“ என நிபந்தனை விதித்து அமலாக்கினார் பவார் .

 

5] தலித்துகள் ,சிறுபான்மையோர் , மகளிர் ,ஒடுக்கப்பட்டோரிடம் தமக்கு பரிவு உண்டென சொல்லும் இவர் தலித் கவிஞர் ஜவாகர் ரத்தோட் .ஜகதாப் போன்றோரை சுட்டுகிறார் .மகளிர் உரிமை பற்றி பேசுகிற போது தன் தாயின் முற்போக்கு நினைவோடும் அக்கறையோடும் பேசுகிறார் .

 

இப்படி சுவையான பல செய்திகள் உண்டு . ஓர் அறுபத்தி ஐந்து ஆண்டுகள்  அரசியல் வரலாற்றை அறிய இந்நூல் பயன்படும் .வாசிப்பீர் !

 

எனது அரசியல் வாழ்க்கை : அடித்தட்டிலிருந்து அதிகாரத்தின் நுழைவாயில் வரை,ஆசிரியர் : சரத் பவார், தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி ,

வெளியீடு  : அருட்செல்வர் டாக்டர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் ,

தொடர்புக்கு : 9443029736 , e mail : amti@drmcet.ac.in   பக்கங்கள் : 380 , விலை : ரூ.350 /

 

 

சுபொஅ.

30/10/23.

 

 

 

 

 


இதயத்தின் ஆழங்களை நோக்கி கடந்து வா!!

Posted by அகத்தீ Labels:

 


 “ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை ஒரு கவிதை நூலை வாசிப்பதுபோல் அத்தனை சுவையோடும் தாளலயத்தோடும் வாசிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பதற்கு முன் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை .”

 

இதயத்தின் ஆழங்களை நோக்கி கடந்து வா!!

 

”மனிதனை இருட்டில் பிறப்பித்து அவனுடைய வேர்களை மண்ணில் ஊன்றி நிறுத்த வேண்டும் .வாழ்வதற்கான மோகத்தை அவனுக்குத் தர வேண்டும்…. அவனுடைய கற்பனையை மலைகளின் பருந்துகள் போல் ஆக்க வேண்டும் .அவனுடைய சிந்தனைகளைக் கடலின் புயலாக மாற்ற வேண்டும்.” எனக் கனவு கண்டவர் கலீல் ஜிப்ரான்.

 

ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை ஒரு கவிதை நூலை வாசிப்பதுபோல் அத்தனை சுவையோடும் தாளலயத்தோடும் வாசிக்க முடியும் என்பதை இந்நூலை வாசிப்பதற்கு முன் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை .

 

மிகையில் நைமி தன் உயிர் நண்பன் கலீல் ஜிப்ரானோடு இரண்டறக் கலந்தவர். ஆகவே ஓவியனும் கலைஞனும் எழுத்தாளனுமான கலீல் ஜிப்ரானை  வரலாற்றை வெறும் வாழ்க்கைக் கதையாக எழுதாமல் உள்ளுணர்வுகளை ஒன்றுகூட்டி உயிர் சித்திரமாகவே  தீட்டி இருக்கிறார் .ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவிதையும் தத்துவமும் கொஞ்சுகின்றன .பக்கங்களைப் புரட்ட புரட்ட அவை நம் இதயத்தோடு பேசுகின்றன.

 

லெபனான் நாட்டில் 1883 ல் பிஷாரா எனும் இடத்தில் ஓர் ஏழைக் கிறுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர் ஜிப்ரான். வறுமை அவர் குடும்பத்தினர் [தந்தையைத் தவிர]எல்லோரையும் விரட்ட பிழைக்க வழிதேடி அமெரிக்க போஸ்டனுக்கு பயணப்பட்டனர் . அங்கும் வாழ்க்கை சுமையாகவே அழுத்தியது.

 

கலீல் 20 வயதை எட்டும் முன் அம்மா ,அண்ணன் ,தங்கை என மூவரை நோய்க்கு பலி கொடுத்தார் . ஒரே சகோதரி மரியான தன் சகோதரன் ஜிப்ரானுக்காக வாழ்நாள் முழுவதும் தையல் இயந்திரத்தில் வாழ்க்கையை தொலைத்தவர்.

 

ஜிப்ரான் வாழ்விலும் சில பெண்கள் குறுக்கிட்டார்கள் . அதில் மூவர் அவரது நினைவில் முக்கியமானவர்கள் .மேரி ஹாஸ்கில் ,மிஷ்லின் ,கடைசியில் வந்த மாபெரும் ரசிகையான இளம் பெண் . ஜிப்ரான் வாழ்வில் மிகையீல் நைமி அறிமுகமானதும் வாழ்வில் கடைசி துளி வரை அவர்களில் நட்பு ஆழமாய் வேர்விட்டு வளர்ந்ததும் அவரே அவர் இந்த வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியதும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க செய்தி .

 

1931 ஏப்ரல் 10 ஜிப்ரான் மரணமடைந்தார் .அவர் மறைந்ததும் இறுதி பிரார்த்தனை செய்ய தேவாலயம் மறுத்துவிட்டது . அது குறித்து நைமி எழுதுகிறார் ;

 

“மருத்துவ மனையில் இருந்தபோது தன்னைப் பார்க்க வந்த கன்னிகாஸ்திரியிடம் ‘நான் கத்தோலிக்கன் அல்ல’ என ஜிப்ரான் கோபமாகச் சொன்னதும் கன்னிகாஸ்திரி கோவித்துக் கொண்டு போனதும் திருத்தந்தை அறிந்திருந்தார் .இதனால்தான் இசைவு பத்திரம் நல்கப்படவில்லை .திருத்தந்தையை மனமாற்றம் செய்யும் வல்லமையுள்ள ஒருவரிடம் சொல்லி  எப்படியெல்லாமோ பத்திரத்தை சரியாக்கினோம் .இது போன்ற காரியங்களில் இசைந்துபோக விரும்பாத ஜிப்ரானுக்காக இதைச் செய்யவில்லை .மாறாக அவர் சகோதரி மரியானா சங்கடப்படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.”

 

அவர் உடல் நியூயார்க்கிலிருந்து போஸ்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு  தற்காலிகமாக அங்கு அடக்கம் செய்யப்பட்டது .பின் ஆகஸ்ட் 21 லெபனானுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் கடைசியில் வாழ ஆசைப்பட்ட மார்சார்கீஸில் அடக்கம் செய்யப்பட்டார் .

 

அரபியிலும் ஆங்கிலத்திலும் ஜிப்ரான் வெளியிட்ட நூல்களின் பட்டியலாக அல்ல நூல்கள் உருவான சூழல் குறித்தும் அதன் உள்ளடக்கம் பற்றியும் சுவைபட இந்நூல் பதிவு செய்துள்ளது ஜிப்ரான் வாழ்க்கைக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய அங்கீகாரமாகும் .

 

ஓவியராக பயணம் தொடங்கிய ஜிப்ரான் கடைசி வரை ஓவியம் வரைந்து செய்த பங்களிப்பு கலைநயம் மிளிர இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது . “ இயற்கையை அறிதலும் பிறருக்கு அதை பகிர்தலுமே உண்மையான கலை.”என சொன்னவர் ; அவ்வழி ஓவியங்களை வரைந்தவர் ஜிப்ரான்.

 

அவன் காதலி ,நண்பி ,மனைவியாக்க ஆசைப்பட்டு முடியாமல் போனவர் மேரி சொன்னார் ,” கலீல் நீ ஏன் ஆங்கிலத்தில் எழுதுவதில்லை .அரபியில் நீ புகழ் பெற்றவன் நீ என்று சொல்கிறார்கள் . இன்னும் மிகவும் இளம் வயது உனக்கு .அரபியில் மூன்று புத்தகங்கள் [அல் மியூசிக்கி , அராஇசூல் முரூஜ் ,அல் அர்வாஹல் முதமிரிதா ] ஏற்கெனவே வெளியிட்டு விட்டாய் .ஆனால் உன் பொருளாதார நிலை உயரவில்லை .இப்போதும் நீ செலவுதான் செய்துகொண்டிருக்கிறாய் “

 

மேரிதான் பண உதவி செய்து  ஜிப்ரானை மேலே படிக்க வைத்தாள் . ஆங்கிலத்தில் எழுத வைத்தாள் ,அவரின் ஆங்கிலத்தை திருத்தி செப்பம் செய்தவளும் அவளே . நைமி படித்து கருத்து சொல்வார் .

 

The Prophet தேவதூதர்  , Jesus Son of Man மனித குமாரன் இயேசு ஆகிய புத்தகங்களின் வருகையால் ஜிப்ரானின் ஆராதகர்கள் எண்ணிக்கை பெருகியது .

 

நைமியிடம் பேசும் போது சொன்னார் , “தேவதூதருக்கும் அதற்கு பின்னும் வருகின்ற படைப்புக்கும் இடையில் என் வாழ்க்கை இடை வெளியை நிரப்பவே இந்த புத்தகம் …. இது ஒரு முன்னுரை மட்டுமே . மனிதர் ஒருவருகொருவர் கொள்ளும் உறவைக் குறித்தே அதில் எழுதி இருக்கிறேன் . இன்று என் மனதில் ஓர் புத்தகம் இருக்கிறது . மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவுதான் அதன் பொருண்மை . அதற்கு Garden Of Prophet தேவதூதரின் தோட்டம் என அதற்கு பெயர் வைப்பேன் . [ இந்நூல் அவர் மரணத்துக்கு பிறகே வெளியானது ] மனிதனுக்கும் தெய்வத்துக்கும் உள்ள உறவு குறித்து மூன்றாவதாக ஓர் புத்தகம் எழுதுவேன் . Death of the Prophet தேவதூதரின் இறப்பு என்பதாக அதன் பெயர் இருக்கும் . [ நூல் எழுதப்படவே இல்லை]”

 

 

கண்ணீரும் புன்னகையும் ,முறிந்த சிறகுகள் , கடவுளின் பூமி , முழக்க ஊர்வலம் , மணலும் மெத்தையும் , தி மேடம் என அரபியிலும் ஆங்கிலத்திலும்  நூல்கள் எழுதிக் குவித்தவர் . அரபியில் உரைநடைக் கவிதை எனும் புதிய மரபைத் தொடங்கி வைத்தவர் .இன்று உலகெங்கும் அந்த கவிதை மரபு அனைத்து மொழிகளையும் ஆட்கொண்டுவிட்டது .

 

நைமி 1912 ல் தான் ஜிப்ரானுக்கு அறிமுகமாகிறார் .விரைவில் இருவரும் உயிர் நண்பராகி விடுகின்றனர் . அரபி இலக்கியத்தில் திசை திருப்பத்தை ஏற்படுத்திய அல் ராபத்வ அல்கலமிய்ய The Pen Movement எழுதுகோல் இயக்கம் 1920 ல் இவர்களால் தோற்றுவிக்கப்பட்டது .தலைவர் ஜிப்ரான் . செயலாளர்  மிகையீல் நைமி , பொருளாளராக வில்லியம் காத்பலீஸ் . இன்றும் அரபு இலக்கியத்தை பேசப்புகின் எழுதுகோல் இயக்கத்தை பேசாமல் கடக்க முடியாது .

 

ஜிப்ரான் நோயோடு போராடிய காலத்தில் உயிர் நண்பன் நைமி சொல்லிய சொற்கள் தமிழ்க் கலைஞர்களுக்கும் பொருந்தும் , “ஜிப்ரான் நீ உன் உடலுக்கு செய்த துரோகத்தின் பலன் இது . அதனிடம் நீ நீதி காட்டி இருந்தால் அது உன்னிடம் நீதி காட்டியிருக்கும் …  அளவுக்கு மீறிய மதுபானமும் ,புகைபிடிப்பும் , காபியும் உன் இரத்தத்தையும் சதையையும் இல்லாமல் செய்துவிட்டன …”

 

இந்நூல் நெடுக உள்ள கவிதை வரிகளை நீங்கள் வாசித்து அனுபவிப்பீர் ! இறுதியாக ஒரு சொல் ஜிப்ரான் வார்த்தைகளில் .

 

“வா … என்னிடம் வா … உன் அனைத்து நன்மைகளும் சாபங்களும் கொண்டு எனக்குள் நுழைவாயாக . பூமி வெறும் தரிசாக இருந்த போது பூமிக்கு இறைவனின் ஆன்மாவைக் கொண்டு வந்த மாருதத்தின் பிரியமக[ன்]ள் நீ …ஆதிகாலம் முதல் இருந்து வரும் ஆகாயம் பூமிகளுடைய மூச்சுகளை ஏற்றிக்கொண்டு நீ இப்போது வருகிறாய் …”

 

“வா … என் இதயத்தின் ஆழங்களை நோக்கி கடந்து வா. விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்துப் பொருட்களின் நண்பனாக்கி நீ என்னைச் செயல்பட வைப்பாயாக…”

 

2019 அக்டோபரில் வெளிவந்த இந்த நூல் , சில தினங்கள் முன் என் சம்பந்தி பொள்ளாச்சியிலிருந்து எனக்காகச் சுமந்து வந்த புத்தகக் கட்டில் இருந்தது .அவருக்கு என் இதய நன்றி ! உடனே படித்தேன் .இன்று பகிர்ந்துவிட்டேன்.

 

கலீல் ஜிப்ரான் : வாழ்க்கை வரலாறு ,

ஆசிரியர் : ’மிர்தாத்’ ஆசிரியர் மிகையீல் நைமி, மலையாளம் : எம் .ஏ. அஸ்கா வழி தமிழில் :சிற்பி,

வெளியீடு :அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் ,தொடர்புக்கு : 9976144451 ,email : amti@drmcet.ac.in

பக்கங்கள் : 160 ,  விலை : ரூ.150/

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

23/10/23.

 

 

 

 

 


எல்லா மதக் கடவுள்களும் தான்.

Posted by அகத்தீ Labels:

 


இன்றைய உலகில் மிகமிக அதிக பயத்துடன் ஓடி ஒளிந்து கொண்டிருப்பது யார் ?

 

சந்தேகம் என்ன ? கடவுள். கடவுளேதான்.

 

எந்த மதக் கடவுள் ?

 

வேறுபாடெல்லாம் இல்லை . எல்லா மதக் கடவுள்களும் தான்.

 

ஏன் ?

 

ஒன்றா ? இரண்டா ? சொல்லி அழ…

 

சொன்னால்தானே தெரியும்

 

சாத்தான்கள் கையில் அதிகாரம் . கடவுளின் குழ்ந்தைகள் கொல்லப் படுகிறார்கள் .பட்டினி போடப்படுகிறார்கள்.பழிவாங்கப் படுகிறார்கள். எல்லாம் கடவுளின் பெயரால் . அநீதியைத் தடுக்க இயலாத கடவுள்கள் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறார்கள்.

 

மெய்தான் .மெய்தான் . உண்மையை உரக்கச் சொல்லாதே நீயும் ஓடு அந்தக் கடவுள்களின் பின்னால் …

 

சுபொஅ.

22/10/23.


வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.

Posted by அகத்தீ Labels:

 


 “புனல் சூழ் மணல் தோப்பில் குயில் கூட்டம் நாங்கள் :வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.” கிடைத்தது . மகிழ்ச்சி.

 

வாழும் போதே சான்றோர்களை மத்தித்து போற்றல் நல்ல மரபு . அது வெறும் தனிநபர் துதியாக அமையாமல் பல்வேறு அருஞ்செய்திகளைத் தாங்கி வருதல் அதனினும் நன்று .

 

வைகறை வாணன் எனும் நல்ல எழுத்தாளர் .இதழாழர் , நூல் பதிப்பாளர் , சமூக செயல்பாட்டாளர் ,தமிழாய்ந்த சிந்தனையாளர் குறித்த அருமையான செய்திகளும் தகவல்களும் தமிழ்ச் சமூகம் அறிய வேண்டிய ஒன்று .அதனை தொகுத்தளித்த மலர் குழுவுக்கு பாராட்டுகள் .

 

280 பக்கங்கள் .69 கட்டுரைகள் ,படங்கள்  அத்துடன் பெட்டிச் செய்திகள் அடங்கிய மலர் . பொதுவாய் இது போன்ற மலர்களில் நாயகன் புகழ்மாலை மட்டுமே இடம் பெறும் . மலரின் நோக்கமும் அதுதானே ! இம்மலர் அதனின்று மாறுபட்டு வந்திருக்கிறது .

 

அரியல்[அரிஷ்டம்] எனும் அருமருந்து , திரைக்கு பின்னால் , கி.ரா .நேர்காணல் , இயற்கை பாலும் இலக்கணப் பாலும் , காதல் என்பது எதுவரை ?, வைகறை வானம் என உருது பாரசீக  கவிதைகள் குறித்த கட்டுரை ,ஸ்பானிஷ் நாட்டுப்புற கதை அடங்கிய பிடாரி ,எம் வி வெங்கட்ராமனும் சமகால எழுத்துகளும் , தமிழ் ஒளி குறித்து ,இலக்கியப் பழமொழிகள் , கால்டுவெல் , மஹாகவி ,தரங்கம்பாடி சீகன் பால்கு , காமம் , இன்குலாப் நாடகங்களில் ஈழப்பதிவுகள் , மூளை குறித்த மருத்துவ அறிவியல் கட்டுரை , பி.சீனிவாசராவ் – கோ நடேசய்யர் ஒப்பீடு ,சிதம்பரனார் ,சோழர்கள் நீர் மேலாண்மை , இப்படி மலரின் கணிசமான பகுதி பொதுத்தளத்தில் கட்டுரைகள் இடம் பெற்றிருப்பது வித்தியாசமான முயற்சி .

 

வைகறை தமிழ் பற்றாளர் ,இடதுசாரி சிந்தனையாளர் அதே சமயம் பெரியார் அம்பேர்கர் சிந்தனையின் தாக்கத்தையும் கொண்டவர் , தமிழீழ ஆதரவாளர் - அதன் பல்வேறு போக்குகளை உள்வாங்கி எல்லா குழுவோடும் நட்பு பாராட்டி அதேநேரம் தேசிய இனப் பிரச்சனை குறித்த தனித்த பார்வை உடையவர் . இம்மலர் நெடுக உள்ள கட்டுரைகளில் அவரின் அரசியல் சார்பு புலப்படும்.

 

நக்கீரன் ,சிகரம் ,காக்கைச் சிறகினிலே , பாலம் ,நந்தன் ,சங்கம் ,குமுதம் உள்ளிட்ட பல ஏடுகளில் தடம் பதித்தவர் . பொன்னி எனும் பதிப்பகம் நடத்தி காத்திரமான நூல்களை பதிப்பித்தவர் ,

 

என்னைவிட மூன்று வயது பெரியவர் . எனக்கு அவரை நன்கு தெரியும் .ஆனால் நெருங்கிப் பழகியதில்லை .அவசரகாலத்தில் சிகரம் ஏட்டின் மூலம் அறிமுகம் . செந்தில்நாதன் ,இளவேனில் ,பெ.நா.சிவம் போன்றோரோடு இருந்த நெருக்கம் வைகறையோடும் அரணமுறுவலோடும்  இருந்ததில்லை . நான் எழுதிய களப்பால் குப்பு குறித்த கட்டுரையை நந்தன் இதழில் வெளியிட்டவர் . [ மீண்டும் அந்த கட்டுரையைத் தேடிக்கொண்டிருக்கிறேன் .] அவர் வெளியிட்ட நூல்கள் , இதழ்கள் மூலமே அறிமுகம் .

 

எனக்கு இலக்கிய ஆர்வமும் ஈடுபாடும் இருந்த போதிலும் ஒரு தொழிலாளி என்கிற முறையில் தொழிற்சாலை தாண்டி இலக்கிய உலகோடு சங்கமிக்க வாய்ப்பு குறைவே .அவசரகாலத்திற்கு சற்று முன்பும் பின்புமாய் இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அத்தகைய இலக்கியவாதிகள் ,அறிவுஜிவிகள் தொடர்பு முகிழ்த்தது எனக்கு .ஆனால் இயக்கம் வேகமாக இழுத்துக் கொண்டது .

 

விரைவில் வாலிபர் சங்க பொறுப்பேற்று கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழகம் முழுவதும் சுற்ற வேண்டியவனானேன். அதன் பின் 20 ஆண்டுகள் தீக்கதிர் நாளேட்டில் பணி. எனவே இலக்கிய மற்றும் அறிவுஜீவிகளோடு தனிப்பட்ட முறையில் நெருங்கிக் பழக உண்டு உறங்க உறவாட உரையாட சந்தர்ப்பம் மிகக் குறைந்தது .

 

அவரவர் எழுத்தின் மூலமே உறவு அமைந்தது . வைகறையை நான் நேசித்த போதும் இரண்டறக் கலக்க வாய்ப்பு அமையாதது அப்படியே . நான் தோள் சாய்ந்து என் துயர்களை இறக்கி வைக்கும்  சிபிஎம் தலைவர்களில் ஒருவரும் விவசாய சங்கத் தலைவருமான தோழர் கோ .வீரய்யன் அடிக்கடி வைகறை வாணன் குறித்து என்னிடம் பேசுவார் . அவர் மூலமே வைகறையை அதிகம் அறிந்தவன்.

 

இம்மலர் அவரின் பன்முக பரிணாமத்தை எமக்கு சொல்கிறது . இன்றைய இளைய தலைமுறை அறியவும் பழைய தலைமுறை அசை போடவும் இம்மலர் வாசம் மிகுந்து பூத்துள்ளது . வாசிப்பீர் !

 

“புனல் சூழ் மணல் தோப்பில் குயில் கூட்டம் நாங்கள் :வைகறை 74 வாழ்க்கைப் படிப்பினை மலர்.”

பக்கங்கள் : 280 , விலை : ரூ.400 /

தொடர்புக்கு : பொன்னி , 8248338118 , vivekdushy@gmail.com

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் ,

20/10/2023.



ஒவ்வொரு நாளும்......

Posted by அகத்தீ Labels:

 









ஒவ்வொரு நாளும்

நடை பயிற்சியின் போது

கடந்துபோகும்

தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை

கூடிக்கொண்டே போகிறது.

 

ஒவ்வொரு தெருவிலும்

இரவும் பகலும்

ஆழ்துளைக் கிணறு தோண்டும்

இயந்திரத்தின் இரைச்சல்

கேட்டுக்கொண்டே இருக்கிறது .

 

வீட்டின் பின்புறமுள்ள

சில நூற்றாண்டுகள் பழமையான எரி

ஆலை ரசாயணக் கழிவுகளால்

நிரம்பி நாற்றமெடுக்கிறது

 

குடிநீர் கேன் விநியோக

சப்தமும் காட்சியுமாய்

ஒவ்வொரு நொடியும்

நகர்ந்து கொண்டே இருக்கிறது.

 

வானம் தினசரி இருண்டு

நாலு தூறல் போட்டு

போக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது .

 

குளிர் நகரத்தில்

ஸ்வெட்டர்கள் பீரோவில்

அடைபட்டுவிட்டன

ஏசியும் ஃபேனும் மின்நுகர்வை

அதிகரித்துக் கொண்டிருக்கிறது .

 

பழியை யார் மீது போடலாம் ?

மூளையை கழற்றி வைத்துவிட்டு

மூக்கையும் கண்ணையும்

தீட்டிக் கொண்டிருக்கிறோம்.

நாக்கு தடித்துக் கொண்டிருக்கிறது.

 

சரி ! சரி ! யோசித்தது போதும்

தண்ணீர் லாரியில் அடிபடாமல்

தெருவில் நடக்கப் பழகு முதலில்.

 

சுபொஅ.

17/10/23. பெங்களூர்.

 

 



“எட்டு மணி நேர வேலை” : யாரோ போட்ட பிச்சை அல்ல…

Posted by அகத்தீ Labels:

 



  “எட்டு மணி நேர வேலை” : யாரோ போட்ட பிச்சை அல்ல…

 

அண்மையில் வெளியான நூல் . ஆனால் ஒரிரு மாதங்களில் உருவான நூல் அல்ல .” இந்த புத்தகத்தின் கருத்துகள் நீண்ட நாட்களாக நான் களமாடிய கருத்துகளாகும் .” என நூலாசிரியர் கூறிய வாக்குமூலம் மெய்யென்பதை நூலை வாசிப்போர் உணர்வர் .

 

இந்நூல் குறித்து  ‘ஐம்பொறி’ யூ டியூப்பில் நாலய்ந்து அறிமுகங்கள் காணக்கிடைக்கின்றன . ஏற்கெனவே சில நூலறிமுகங்களும் வெளிவந்து விட்டன . ஆகவே இங்கே என் பணி வழிமொழிவது மட்டுமே !

 

இந்நூல் நான்கு முக்கிய கேள்விகளுக்கு விடைகூற முனைந்துள்ளதாகவே நான் கருதுகிறேன் .

 

1] உழைப்பு – கூலி –லாபம் – வேலைநாள் இவற்றுக்கு இடையே உள்ள அரசியல் பொருளாதார உறவு என்ன ? உபரி மதிப்புக்கும் வேலைநாளுக்கும் இடையிலான உறவின் சித்தாந்தத் தொடர்பு என்ன ?

 

2] தொழிற்புரட்சியின் காலகட்டத்தில் நேரம் காலம் இல்லாமல் உழைக்கும் கரங்களும் குழந்தைத் தொழிலாளியும்  முதலாளிகளுக்கு  தேவைப்பட்டது ஏன் ? அதனை உருவாக்க செய்யப்பட்ட சட்டபூர்வ மற்றும் சட்டபூர்வமற்ற முயற்சிகளின் வரலாறும் வலியும் ரணமும் எத்தகையது ?

 

3] 18 மணி நேர உழைப்புச் சுரண்டலில் இருந்து எட்டு மணி நேர உழைப்புக்கு உழைக்கும் வர்க்கம் வந்து சேர கடந்து வந்த கரடு முரடான கண்ணீரின் வெப்பம் மிகுந்த பாதை எது ?

 

4] எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து உலகெங்கும் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சிந்திய ரத்தத்தின் சுவடுகள் எவை ? எவை ? போராடிப் பெற்ற சட்டங்கள் எவை ? எவை ? அதற்கு இன்று வந்துள்ள பேராபத்து யாது ?

 

இப்படி எழும் அடிப்படைக் கேள்விகள் சார்ந்து 13 பகுதிகளாக இந்நூல் அமைந்துள்ளது .

 

முதல் இரண்டு கேள்விகளுக்கு விடை சொல்லும் போது இருந்த ஆற்றின் வேகம் ,அப்புறம் சட்டென பாய்ச்சல் வேகத்தில் நகர்ந்து விடுகிறது . வரலாற்றை ஏற்கெனவே ஒரளவு உள்வாங்கியவர்களுக்கு நினைவூட்டலாக அவை போதும் .ஆயின் புதிய வாசகர்களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம் . நூலின் பக்க அளவு ஒரு வேளை தடை ஆகியிருக்குமோ !

 

தோழர் வீரராகவன் ஆய்வு செய்து எழுதிய “ சென்னை பெருநகர தொழிறசங்க வரலாறு “[ அலைகள் வெளியீட்டகம்] ,தோழர் பி.ராமமூர்த்தி எழுதிய  “தொழிற்சங்க இயக்கம் எனது நினைவுகள்” [ பாரதி புத்தகாலயம்],சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் மூன்று தொகுதிகள் [ நியூ செஞ்சுரி புக்ஸ் வெளியீடு ] இவற்றிலிருந்து சில செய்திகள் ,மேற்கோள்கள் சேர்க்கப்பட்டிருந்தால் இன்னும் வலுவாயிருக்குமோ ? ஒரு வேளை இது என் பேராசையோ !

 

 “ மக்கள் உற்பத்திக் கருவிகளையும் நிலத்தையும் இழந்த பிறகுதான் வேலை நேரம் என்பது சமூகப் பிரச்சனை ஆகிறது என்பதை பொதுவாக அறிவோம் . இதனை வரலாற்று ரீதியாக தகவல்களைச் சேகரித்து , எல்லையற்ற வேலை நேரம் என்ற கொடுமை எப்படி உழைக்கும் மக்களை நரகத்தில் தள்ளியது என்பதில் தொடங்கி வர்க்கப் போராட்டம் காரணமாக வேலை நேரத்திற்கு எல்லை எப்படி வந்தது என்பதை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது .” இப்படி தோழர் வே.மீனாட்சிசுந்தரம் முன்னுரையில் கூறியிருப்பதைவிட அதிகமாக நான் என்ன சொல்லிவிட முடியும் ?

 

 

இளம் தொழிற்சங்க ஊழியர்களுக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய வகுப்பிற்கான ஓர் தலைப்பின் பாடக்குறிப்புகளே இந்நூல் எனில் மிகையாமோ ?

 

வாசிப்பீர் !

வேலை நாள் : ஒரு வரலாற்றுப் பார்வை ,

ஆசிரியர் : அ.பாக்கியம் ,

வெளியீடு : தூவல் பதிப்பகம் ,

54 ,கரிகாலன் தெரு , ஜி எஸ் நகர் , ஆர் ஏ புரம் ,சென்னை – 600 028 . 

அலைபேசி : 94863 44333 , மின்னஞ்சல் : vedhaperumal@gmail.com

பக்கங்கள் : 160 , விலை : ரூ.200 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10/10/2023.


கண்ணுக்கு எட்டாத உலகம்.

Posted by அகத்தீ Labels:

 

கண்ணுக்கு எட்டாத உலகம்.

 


 

புது புத்தகத்தின் வாசம்

எப்போதும் கிறங்க வைக்கிறது .

வாசித்து அடுக்கிய புத்தகங்கள்

பார்க்கும் நொடியில் புன்னகைக்கிறது .

வீட்டில் இடமில்லாமல்

பராமரிக்க முடியாமல்

இடம் பெயர்ந்து விட்ட ,

இரவலாகப் போய்விட்ட

அன்பளிப்பாய் கைமாறிவிட்ட ,

தோழமையோடு ‘சுட்டு’ச் சென்றுவிட்ட

புத்தகங்கள் நினைவிலாடுகிறது.

வாசிக்காமல் கண்ணெதிரே

அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்கள்

 “பழைய உன் வேகம் எங்கே ?”என

கேலி செய்கிறது என் முதுமையை.

ஒவ்வொரு புத்தகத்தையும்

வாசித்து முடிக்கும்போதும்

 ”கற்காதது உலகளவு” என உறைக்கிறது.

 “கை மண் அளவே” கற்ற எனக்கு

நேற்றைவிட இன்று என் வீட்டு

சாளரம் அகலமாய் திறந்திருக்கிறது

நேற்றைவிட இன்று வெளிச்சம்

வெகுதூரம் பரவுகிறது .

ஆனாலும் இன்னும் கண்ணுக்கு எட்டாத

உலகம் விரிந்து கொண்டே போகிறதே !

என்ன செய்ய ? என்ன செய்ய ?

 “படி ,படி ,படி ,படி மரணிக்கும் வரை !”

 

சுபொஅ.

7/10/2023.

 


வள்ளுவர் நிச்சயம் காதலித் திருப்பார்

Posted by அகத்தீ Labels:

 



 


வள்ளுவர் நிச்சயம் காதலித் திருப்பார்

 

   ‘வள்ளுவர் நிச்சயம்

காதலித் திருப்பார் ‘,

என்று

அவள் உள்மனம் சொன்னது .

 

இப்படி உறுதியாய் சொல்பவர் ஆர் .பாலகிருஷ்ணன் .

 

2017 ல் வெளியான “பன்மாயக் கள்வன்” புத்தகம் குறித்து 2023 ல் எழுதலாமா ? எப்போது படித்தாலும் எழுதலாம் என்பது பொதுவான சமாதானம். ஆனால் அதைவிட முக்கியமான காரணம் வேறொன்று உண்டு .

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் அறம் ,பொருள்,இன்பம் என முப்பாலிருந்தும் , மூன்றாம் பாலான இன்பத்துப்பால் அல்லது காமத்துப் பால் பற்றி தமிழ்ச் சமூகம் பேசியது மிகமிகக் குறைவே . இது என் நெடுநாள் கருத்து .

 

அறத்துப்பால் ,பொருட்பாலில் உள்ள குறள்கள் மேற்கோள் காட்டப்பட்ட அளவு ,புழங்கும் அளவு இன்பத்துப்பால் புழங்குகிறதா என்பது என் கேள்வி . இப்பாலில் 25 அதிகாரங்களும் 250 குறள்களும் இடம் பெற்றிருந்தாலும் விரல்விட்டு எண்ணத் தக்க குறள்களே பொது புத்திக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது .

 

கலைஞர் குறளோவியத்தில் சில காட்சிகளை வரைந்து காட்டி இருக்கிறார் . ஆயினும் போதுமான வெளிச்சம் படாத பகுதியாகவே நான் குறளின் மூன்றாம் பாலை எண்ணிப் பார்ப்பதுண்டு .இத்தகையச் சூழலில்  இன்பத்துப் பாலில் இருந்து 56 குறள்களைத் தேர்வு செய்து , 57 காட்சிச் சித்திரங்களாய் ,எழுத்தோவியங்களாய் இன்றைய நவீன உலகச் சொல்லாடல்களோடு ஆர் .பாலகிருஷ்ணன் தந்திருக்கிற “பன்மாயக் கள்வன்” என்னைக் கவர்ந்துவிட்டான். ஆகவே காலங்கடந்தும் எழுதுவதில் பிழை ஏதும் இல்லயே !

 

சங்க இலக்கியத்தில் காதலுக்கு உயர்ந்த இடம் உண்டு . இயற்கையையும் காதலையும் அறத்தையும் கொண்டாடியவன் தமிழன் என்பதற்கு சங்க இலக்கியங்களே சாட்சி . திருக்குறளின் மூன்றாம் பால் ஓர் மானுட உளவியல் படைப்பு எனில் மிகை அல்ல. பாலகிருஷ்ணன் அதனை நூல் நெடுக மெய்பிக்கிறார் .

 

 “ ‘ என்’

‘தொன்மையைப் போலவே

மென்மையானது

என் ‘ தொடர்ச்சி’

 

நான்

‘காவடிச்சிந்து அல்ல

காதல் சிந்து.”

 

 ‘ பிரிவு ஆற்றாமை’ யில் இடம் பெற்றுள்ள குறளை முன்வைத்து தீட்டிய முதல் சித்திரத்தில் தெறிக்கிற முத்திரை 57 கவிதைகளிலும் தொடர்வது வியப்பு . கவிஞனும் காதலும் பிரிக்க முடியாததா ? பிரிக்கக் கூடாததா ?

 

 “ சேலை கட்டிய கூகுள்” என்கிற கவிதை “ அலர் அறிவுறுத்தல்” அதிகாரத்திலுள்ள குறள் சார்ந்தது . தலைப்பே நவீனமாக இருக்கிறது . அலர் என்றால் என்ன ?

 

“ ‘தினத்தந்தி’ என்று

தனக்கொரு

பெயர் இருப்பது

அவளுக்கேத் தெரியும் .

மாலையில் குளக்கரைக்குப்

போகும்போது

அவள்

‘ மாலைமுரசு’ என்று

அழைக்கப்படுகிறாள்.

 

‘புறம்’ பேசுவது

என்னவோ

அநேகமாக

‘அகப்பொருள்’தான்..

 

இந்த நெடுங்கவிதையில் முடிவில் சொல்கிறார்,

 

“தனது வதந்தியால்

நிகழும்

நல்ல கெட்

பக்க விளைவுகள்

எதைப் பற்றியும் அறியாமல்

குருவம்மா

அலப்பறையாக

அலர் தூற்றி வருகிறாள்.

 

தினம் ஒரு

புது அலர்.

 

வளர்.”

 

கம்ப்யூட்டர் ,ஊடகம் ,சினிமா எல்லாவற்றையும் வள்ளுவனின் அலரோடு பிசைந்ததில் நூலாசிரியர் தனித்து நிற்கிறார் .

 

பருவக் கோளாறு பற்றி பேச வந்தவர் ‘ புருவக் கோளாறு’ பற்றி பேசுகிறார் .தகையணங்குறுத்தலில் வள்ளுவன் சொன்னதுதான் .

 

“விழியில் அம்பையும்

புருவத்தில் வில்லையும்

கண்டுபிடித்தவன்

கவிஞனோ இல்லையோ

நிச்சயம் ரொம்பவும்

காயம் பட்டவன்.”

 

  “ எடுத்ததும் கொடுத்ததும்” என்ற தலைப்பில் ” பசப்புறு பரவலை” பேசவந்தவர் சொல்கிறார்,

 

“ சிறகைக் கொடுத்து

சிலுவையை ஏற்பதா ?

காதல் கணக்கு ?

வாய்ப்பாடு அல்ல

உளவியல் .”

 

காதலில் மயங்கி வர்ணிப்பது போல் வரியாய் இந்நூலை விவரிக்கத் தேவையில்லை . இன்னும் ஒன்றிரண்டோடு முடித்துக் கொள்கிறேன்.

 

 “உறக்க தினம்” என்ற கவிதையில் “படர் மெலிந்திரங்கல்” சார்ந்து பேசுகிறார் ,

 

  “கட்டிலின் மறுமுனையில்

ஒரு காட்டெருமையைப்

போலத் தூங்கிக்

கொண்டிருந்தான்

அவள் காதல் கணவன்”

 

இக்கவிதையின் இன்னோர் இடத்தில் சொல்கிறார் ,

 

“எனது மனதை மட்டும்

உன்னால்

படிக்க முடியுமென்றால்

பனிக்குடம் ஆகும்

உன் கண்கள்.”

 

 “ஊடலுவகை” பற்றி பேசவந்தவர்  “சொர்க்கத்தின் பின்கோடு” என தலைப்பிட்டு சொல்கிறார்,

 

“இந்த

 ‘புலவி நுணுக்கம்’

தெரியாத

 ‘இடம்’

எதுவானாலும்

அது

தேடல் மருணித்த

வெற்றிடம் .”

 

ஒவ்வொரு கவிதையும் நீள் கவிதைதான் .நான் சில வரிகளையே சுவைக்கத் தந்தேன் . முழுவதும் சுவைக்க நூலைவாசிப்பீர் !

 

ஆர் .பாலகிருஷ்ணனின் எழுத்தோவியங்களுக்கு அழகு சேர்க்கிறது மருதுவின் கோட்டோவியங்கள் எனில் மிகை அல்ல. 25 அத்தியாயங்களையும் இந்நூல் தொட்டுச் சென்றாலும் “ படர் மெலிந்திரங்கல்” ,”குறிப்பு அறிவுறுத்தல்” எனும் இரு அத்தியாயங்களில் அதிகம் எடுத்தாண்டிருக்கிறார்.சங்க இலக்கிய நதியில் நீந்தி முக்குளித்த நூலாசிரியரின் கவிதை மணமும் காதல் மனமும் கைகோர்த்து நடம் புரிகிறது .

 

“ நீங்கள் எழுபது வயதைக் கடந்துவிட்டீர்கள் . இப்போது உங்களுக்கு இதெல்லாம் மிக முக்கியமா ?” என என்னை நானே கேட்டுக் கொண்டேன். சங்க இலக்கியம்  முதுமைக் காதலைக்கூட பேசுமே ! முதுமையிலும் காதல் வரும் மரணம் வரைகூடவரும் என கண்ணதாசன் சொல்லியிருக்கிறாரே ! எனக்கும் இந்த காதல் நூல் பிடித்துவிட்டது .படித்தால் உங்களுக்கும் பிடிக்கும்.

 

முன்னுரையில் பிரபஞ்சன் சொல்கிறார் ,” காதல் என்ற சொல்தான் ,பால்கள் எனப்படும் பெண்கள் ,திருநர்கள் ,ஆண்பால் என்ற ஆடைக்குள் அடங்காச் சொல்லாகும் .அதற்கு வர்ணம் இல்லை .சாதிமதம் இல்லை ,இடம் காலம் இல்லை .அது வானம் .வள்ளுவரால் அளக்க முடிந்தது . அவர் சூரியனாக மாறினார் ,ஆகவே முடிந்தது .”

 

மேலும் பிரபஞ்சன் தொடர்கிறார் ,” பொதுவாகக் குறள் ,குறளுக்கு அர்த்தம் என்பதுதான் நம் மரபு .[ மேலே யாரும் சிந்தித்துவிடக் கூடாது அல்லவா ?] ஆர் .பாலகிருஷணன் ,இந்த நுண்ணிய விஷயத்தின் பல பரிமாணங்களைக் கவிதையாக மாற்றுகிறார் .

 

வள்ளுவன் காதலின் உளவியலை நுட்பமாகப் பார்த்தவன் .இதை நன்கு உணர்ந்து இந்நூலை படைத்திருக்கிறார் ஆர் .பாலகிருஷ்ணன் .

 

இந்த நூலுக்கு “பன்மாயக் கள்வன்” என்ற தலைப்பு ஏன் ? நூலாசிரியரே விளக்கம் தருகிறார் ;

 

 “ ‘பன்மாயக் களவன்’ என்ற இந்த நூலின் தலைப்பே திருவள்ளுவர் தந்ததுதான் [குறள் 1258] .இன்பத்துப் பாலில் ததும்பும் உணர்வின் ஆழம் , உண்மையில் ஓர் யதார்த்த உளவியல் .என் மட்டில் ‘பன்மாயக் கள்வன்’ வேறுயாருமில்லை ,வள்ளுவன்தான்.அறம் பேசும் ஆசானாய் ,பொருள் பேசும் அறிஞனாய் ,இன்பம் பேசும் காதலனாய் இந்த வள்ளுவனுக்குள் எத்தனை பன்முகங்கள் ! ஆமாம் . பன்மாயக் கள்வன்’ என்பதில் ’மரியாதைப் பன்மை’இல்லைதான்.ஒருமைதான்.அதனால் என்ன ?அதுதான் அருமை. வள்ளுவனிடம் நமக்கு இல்லாத உரிமையா ?”

 

பன்மாயக் கள்வன் , ஆசிரியர் : ஆர்.பாலகிருஷ்ணன்,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு :24332924 /9444960935 

email : thamizhbooks@gmail.com    / www.thamizhbooks.com

பக்கங்கள் : 304  , விலை : ரூ.270 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

agathee2007@gmail.com

 

 

 


காந்தியும் பிள்ளையாரும்

Posted by அகத்தீ Labels:

 





காந்தியும் 


பிள்ளையாரும்

 





பிள்ளையார் : காந்திஜி ! என் சுற்று முடிந்தது


.இன்று உன் சுற்று ஆரம்பம்..காவிகளிடம் ஜாக்கிரத….

 

காந்தி : பிள்ளையாரப்பா ! நீ என்ன சொல்ல வருகிறாய் ?

 

பிள்ளையார் : காந்திஜி ! முதலில் என்னைக் கும்பிடுவானுக ! என் தலையில கலகக் கொடி ஏற்றுவானுக …  அப்புறம் ஆற்றில குளத்தில கடல்ல போட்டு சாகடிப்பாங்க… இப்போ உன்னைக் கும்பிடுறானுக …

 

காந்திஜி : பிள்ளையாரப்பா நீ அதிர்ஷ்டசாலி ! உன்னைக் கும்பிட்டுட்டு கொல்றாங்க … என்னை முதல்ல கொண்ணுட்டானுக அப்புறம்தான் கும்பிடுறாங்க ..

 

பிள்ளையார் : காந்திஜி ! ஆமாம் ஆமாம் அத மறந்திட்டேன் …இவனுக நம்மைத் தூக்கிச் சுமக்கிறதே நம்மப் போட்டு மிதிக்கத்தான்…

 

காந்திஜி : பிள்ளையாரப்பா  ! இவனுக பதவிப் பசிக்கும் … இரத்தப்பசிக்கும் … வெறுப்பு அரசியலுக்கும் … நாமதானா பலி ஆடு ?

 

பிள்ளையார் : காந்திஜி ! நானு பாலு குடிக்கிறதா ஊரெல்லாம் டிராமா போட்டானுக … நான் ஒரு சொட்டு குடிச்சிருந்தா அப்பவே என் கோயில் புகுந்து வெட்டியிருப்பானுக  என் ஜோலி முடிஞ்சிருக்கும்… நான் கல்லு களிமண்ணுன்னு அவனுகளுக்கு நல்லாத் தெரியும் அதனாலதான் என்ன வச்சி கலவரம் செய்ய சதி செய்யுறாங்க…

 

காந்தி : அவனுக தெய்வ பக்தியும் வேஷம் , அவனுக தேசபக்தியும் வேஷம் , சாதி வெறியனுக மற்றும் கார்ப்பரேட் அடியாளுங்க.. மனசு முழுக்க குரோதம் ,வன்மம் இவனுக நெஞ்சில அன்பு , கருணை ,மனிதம் மருந்துக்கும் கிடையாது . நான் சொன்ன ராமராஜ்யம் ‘அன்பு ராஜ்யம்’ . அங்கு ராமனும் ரஹிமும் ராபர்ட்டும் தோள்ல கைபோட்டு நடப்பாங்க .. இவங்க சொல்ற ராமராஜ்யம் எல்லோரும் வெட்டிட்டு சாகிற  ‘குரோத ராஜ்யம்’…

 

பிள்ளையார் : காந்திஜி ! மெதுவா பேசு ! இது  ‘புல்டோசர் ராஜ்யம்’ .. உம்மை பீடத்தோடு பிடுங்கி எறிய புல்டோசரை அனுப்பிடுவானுக…

 

பிள்ளையார் எலி வளையைத் தேடினார் பதுங்க … !!!

 

நவகாளியைப் போல்  கைத்தடியோடு 

“ஒண் மேன் ஆர்மி” ஆனார் காந்தி …… !!!

 

சுபொஅ.

2/10/2023.