நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 16.

Posted by அகத்தீ Labels:

 

 

எங்கள் வாழ்க்கையில் ஓர் பகுதி சிறையிலும் தலைமறைவாகவும் கழிந்தது எனில் , உட்கட்சிப் போராட்டத்தில் கழிந்தது இன்னொரு பகுதி .

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 16.

 

நாடாளுமன்றமோ சட்டமன்றமோ எதுவாயினும் அவையும் வர்க்கப் போராட்டத்தின் இன்னொரு களமே என்பது கம்யூனிஸ்ட்டுகளின் பார்வை . ஆயினும் அதனை வலுவாக வெளிப்படுத்தியவர் ஒரு பட்டியலிட்டால் தோழர் ஏ.கே.கோபாலன் முதலிடத்தில் இருப்பார் . தமிழகத்தில் இருந்து பட்டியலிட்டால் ஆர் உமாநாத் , என் சங்கரய்யா , கே.ரமணி ,ஏ.பாலசுப்பிரமணியன் , எ.நல்லசிவன் போன்றோர் முன்வரிசையில் இருப்பார்கள் . ஆர் உமாநாத் சட்ட மன்றத்தில் ஆடிய ருத்திர தாண்டவங்களை வரலாறு பெருமையோடு பதிவு செய்திருக்கிறது , நாடாளுமன்றத்தில் இடதுசாரிகளின் செயல்பாடு குறித்து நாளை ஓருவர் ஆய்வு செய்தால் இவர்களைத் தவிர்க்கவே முடியாது .

 

இன்றைக்கு நாடாளுமன்றமோ சட்டமன்றாமோ முன்பு போல் இல்லை ; அது முழுமையாய்ச் சீரழிந்து போய்க் கிடக்கிறது .அதை மீட்கவே பெரும் போராட்டம் தேவைப்படுமே !

 

தோழர் ஆர் .உமாநாத்தோடு அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத  உரையாடிக் கொண்டிருந்த காலத்தில் ஓர் நாள் சொன்னார் ;

 

“ எங்கள் வாழ்க்கையில் ஓர் பகுதி சிறையிலும் தலைமறைவாகவும் கழிந்தது எனில் , உட்கட்சிப் போராட்டத்தில் கழிந்தது இன்னொரு பகுதி . ஒன்றாயிருந்த கம்யூனிஸ்ட் கட்சிக்குள் தத்துவ மோதல் அதில் நான் சிபிஎம் பக்கம் நின்று உட்கட்சிப்போர் நடத்தினேன் .

 

பின் நக்சலைட் பிரிந்த போது அதை எதிர்த்து தத்துவப் போரில் பங்கேற்றேன் , ஏஐடியுசி யிலிருந்து பிரிந்து சிஐடியு உருவாக்க நடந்த போராட்டத்திலும் என் பங்கு உண்டு .

 

இப்படி நானும் தோழர்களும் நடத்திய உட்கட்சிப் போராட்டங்களின் வரலாறே நெடியது .

 

பதவிக்கோ தனி நபரை எதிர்த்தோ நடந்த சண்டை அல்ல ; அவை வர்க்க சமரசமா ,வர்க்கப்போராட்டமா என்கிற கோட்பாட்டுரீதியான சண்டை . நான் வர்க்கப் போராட்டம் என்பதின் பக்கம் உறுதியாக நின்றேன் . “

 

தோழர் ஆர்யு சொன்னது எதுவும் மிகையல்ல . ஓர் முறை தோழர் பி.ஆர் .பரமேஸ்வரன் சொன்னார் ,” கட்சி வரலாற்றை போராட்டங்களின் வரலாறாகச் சொல்லலாம் ; தியாகங்களின் வரலாறாகச் சொல்லலாம் , உட்கட்சி தத்துவப் போராட்டங்களின் வரலாறாகச் சொல்லலாம் . மூன்றுமே சொல்லப்பட வேண்டியதுதான் .”

 

அதுமட்டுமா ? காங்கிரஸ் கட்சிக்குள் சோஷலிஸ்டாக ,சோஷலிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்டாக , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சிபிஎம் ஆக அன்றைய தலைமுறை நடத்திய தத்துவப் போர் அவர்களை பக்குவப்படுத்தியது என்றும் சொல்லலாம் . அது மிகை அல்ல.

 

உட்கட்சிப் போராட்டம் குறித்து தோழர் ஆர்யு தன் அனுபவமாகச் சொன்ன ஒன்றை அந்நூலில் பதிவு செய்தேன் . இப்போதும் அதை அறிவது நன்றே .

 

உமாநாத் சொன்னார் ,”என் இளமைக் காலங்களில் உட்கட்சி விவாதங்களில் என்னோடு யாராவது கருத்து மாறுபட்டாலோ ,என்னை விமர்சித்தாலோ உடனே குறுக்கிட்டு என் நிலையைக் கூற ஆரம்பித்து விடுவேன். உணர்ச்சி வசப்பட்டதும் உண்டு . ஆனால் காலம் போகப்போக நான் பக்குவப்பட்டேன் .

 

அடுத்தவர்கள் கருத்தை பொறுமையாகச் செவிமடுக்கவும் , அடுத்தவர் விமர்சனத்தை பொறுமையாக எதிர்கொள்ளவும் ,என் சுற்று வரும்போது சரியானவற்றை ஏற்கவும் , இதரவைகளை நிதானமாக எடுத்துச் சொல்லவும் கற்றுக்கொண்டேன் .

 

கமிட்டி உறுப்பினர்களின் கருத்தைக் காது கொடுத்துக் கேட்காமல் உணர்ச்சிவசப்படுவடுவது தோழர்களை வளர்க்க உதவாது என்பது மட்டுமல்ல காரியத்தையும் கெடுத்துவிடும் . .சில நேரங்களில் எதிர்விளைவும் ஏற்படுத்தும் . இவை புரட்சிகர கட்சிக்கு உரிய பாரம்பரியமல்ல .இதனை அனுபவத்தில்தான் கற்றுத் தேர்ந்தேன் .”

 

இந்த வாக்குமூலம் நமக்குச் சொல்லுவது என்ன ?

 

நான் எப்போதும் நிதானமானவன் பக்குவமானவன் என சுய தப்பட்டம் அடிக்காமல் ,கட்சிக்குள் பயிற்சியும் அனுபவமுமே எனக்குக் கற்றுக் கொடுத்தன ; என்னைப் பக்குவப்படுத்தியது என்று கூறுகிற அவரது நேர்மையே அவரது பக்குவமான அணுகுமுறைக்கு சாட்சி .

 

 “ கட்சிக் கடுப்பாடு என்பது தாம் கட்சி முடிவுகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விசுவாசமாய் இருப்பது என்பது மட்டுமல்ல ; அதற்கு மாறான போக்கும் செயல்பாடும் யாரிடம் எந்த மட்டத்தில் தலைதூக்கினாலும் அதை எதிர்த்து அதற்குரிய கமிட்டிகளில் விட்டுக்கொடுக்காமல் போராடுவதுமாகும் ..தவறு நடக்கும் போது கண்ணுற்றால் இதில் எனக்கு சம்மந்தம் இல்லை என்று ஒதுங்கிச் செல்வதும் கட்சிக்கு ஊறு விளைவிப்பதே ஆகும் . “ எனச் சுட்டும் உமாநாத் ஒரு போதும் அவர் அப்படி நடந்து கொண்டதில்லை . தவறுகளை எதிர்த்து சமரசமின்றி சண்டை போடுவார் .

 

அந்த உட்கட்சிப் போராட்டத்தை பொதுவெளியில் நடத்த முடியாது .நடத்தக் கூடாது .உரிய கமிட்டியில் முறையாக நடத்த வேண்டும் .இப்போரில் நாம் சொல்வதே சரி என்று சொல்லிவிட முடியாது .தன் உணர்வுகளைவிட கட்சி முடிவே மேலானது என ஏற்கும் பக்குவமும் வேண்டும் .

 

இங்கு ஓர் அனுபவத்தைச் சுட்டுவது பொருந்தும் , “ ஓர் முறை இலங்கைப் பிரச்சனை தொடர்பாக ஓர் கிளையில் விவாதம் . அது ஓர் முக்கியமான அறிவுஜீவிகளின் கிளை என்பதால் ,கடைசியில் கட்சிப் பொதுச் செயலாளர் இஎம்எஸ் அந்தக் கிளைக்கு நேராக வந்தார் . விவாதம் நடந்தது .

 

இறுதியில் இஎம்எஸ் சொன்னார் , “ நான் கட்சியின் நிலை பாட்டைச் சொன்னேன் . நாம் கட்சி நிலைபாட்டில்தான் நிற்க முடியும் . உங்களுக்கு மாற்று கருத்து வைத்துக் கொள்ள உரிமை உண்டு , ஆனால் கட்சி கருத்தைத்தான் வெளியே சொல்ல வேண்டும் .நாளையே நீங்கள் சொன்னது சரியானது என்பது நிரூபனமானால் , கட்சி தன்னை திருத்திக் கொள்ளும் . கட்சி சொன்னது சரியானால் நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் . இப்போது கட்சி நிலைபாட்டோடு நில்லுங்கள்.” என்றார் .

 

அமைப்பு பிரச்சனை ஆயினும் , கோட்பாட்டு பிரச்சனை ஆயினும் உட்கட்சிப் போராட்டத்தின் எல்லை இதுவே !

 

கட்சிக்குள் கணவனும் மனைவியும் முழுநேர ஊழியராய் இருந்தால் , வீட்டு வாடகை ஒன்று என்பதால்  மனைவிக்கு கொஞ்சம் குறைவாகக் கொடுப்பது அன்றைய பொதுவான நடைமுறை . கட்சியின் பொருளாதார நெருக்கடியால் எடுக்கப்பட்ட சிக்கன நடவடிக்கையே இது .

 

ஆயினும் இது சரியான நடை முறை அல்ல என கட்சி செயற்குழுவில் தொடர்ந்து சண்டை போட்டிருக்கிறார் ஆர் .உமாநாத் . இதைப் பற்றி பேசும் போது ஆர்யு சொன்னார் , “ இது காசு பற்றியது அல்ல ;சமத்துவம் பற்றியது .” கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் போராடி வென்றார் . தனக்கு மட்டுமல்ல கட்சி முழுக்க அமலாக்க வேண்டும் என்றார் .

 

முழு நேர ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்த வேண்டும் , அவர்கள் பட்டினியிலும் கடனிலும் தவிக்க விட்டால் அது முறைகேட்டிற்கும் ஊழலுக்கும் நாமே வழிசெய்வதாகப் போய்முடியும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியவர் ஆர்யு .

 

ஆர் உமாநாத் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கல்லூரியில் பயிலவும் கட்சி வேலை செய்யவும் வந்த போது தோழர் கே .முத்தையாவின் தோழரானார் . படிப்பை முடிக்கும் முன்பே , படிப்பை பாதியிலேயே உதறிவிட்டு கட்சிக் கட்டளையை ஏற்று சென்னை தலைமறைவு மையத்துக்கு பணியாற்ற வந்தார் . சென்னை தி.நகரில் அம்மையம் இயங்கியது . தோழர் பி.ராமமூர்த்தியோடு உமாநாத்துக்கு அங்கு தொடங்கிய தோழமை இறுதிவரை நீடித்தது .  “தோழர் பி.ராமமூர்த்தியே என் மூன்று மகள்களுக்கும் ஞானத்தந்தை” என ஆர்யு  பெருமையுடன் குறிப்பிடுவார் .

 

பொதுவாக அலுவலகம் வந்தால் படிப்பது ,குறிப்பெடுப்பது ,கூட்டங்களில் பங்கெடுப்பது என திட்டமிட்டு இயங்குவார் . பொதுவான அரட்டைகளில் பங்கேற்கமாட்டார் . வாராந்திரிகளில் வரும் குட்டிக்கதைகளை விரும்பிப் படிப்பார் .தேவைப்படும் போது அந்தக் குட்டிக் கதைகளை பொருத்தமான இடத்தில் பயன்படுத்திக் கொள்வார் . எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து ஆலோசனைகளை அள்ளித் தெளிக்கும் பழக்கம் ஆர்யுவிடம் கிடையாது .  “ஒரு வகையான கறார்பேர்வழி” தோற்றமே அவருக்கு கட்சியில் உண்டு .

 

தன் காதல் இணையர் பாப்பாவின் மரணம் அவரை மிகவும் பாதிக்கவே செய்தது .கடைசி காலத்தை திருச்சியில் கழிக்க விரும்பிச் சென்றார் . அவரின் கடைசி காலத்தைப் பற்றி ஸ்ரீதர் சொல்லுவார் ,

 

“ தினசரி காலை பத்து மணிக்கு அவரை அலுவலுகத்துக்கு வண்டியை அனுப்பி கூட்டிவர வேண்டும் ; மதியம் கொண்டுவிட வேண்டும் . இடையில் ஒரு டீ மட்டும் குடிப்பார் . தினசரி பேப்பர்கள் படிப்பார் .புத்தகம் படிப்பார் . தேவை இருந்தால் மாநிலக்குழுவுக்கு போண் செய்து பேசுவார் . யார் வந்து அவரிடம் என்ன கேட்டாலும் , கட்சி மாவட்டச் செயலாலாளரிடம் பேசுங்க , என கையைக் காட்டி தள்ளிவிடுவார் . சம்மந்தம் இல்லாமல் எந்த விவகாரத்திலும் மூக்கை நுழைக்கவே மாட்டார் . எப்போதும் மிகவும் கட்டுப்பாட்டோடும் கண்ணியமாகவும் நடந்து கொள்வதுதான் ஆர்யு பாணி !

 

இன்னும் பேச எவ்வளவோ உள்ளது …. பேசுவோம்.

 

குறிப்பு : தொடர்ந்து பேசுவோம் , ஆயின் இப்போதல்ல . நான் கண்புரை அறுவை சிகிட்சைக்கு செப் .4 ,9 [ இடது ,வலது ] செல்ல வேண்டும் .அதற்கு முன் வேறு சில அவசர எழுத்துப் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது . எனவே சிகிட்சை முடிந்து அக்டோபர் இறுதியில் வருவேன் .,,, காலமும் களமும் அனுமதித்தால் நினைவலைகளைத் தொடர்வேன் . இப்போது விடைபெறுகிறேன் .நன்றி ! நன்றி !

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்,

31 ஆகஸ்ட் 2021.

 

 

 

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 15.

Posted by அகத்தீ Labels:

 

 

கட்சி அமைப்பு ,கூட்டுச் செயல்பாடு என வரும் போது தன்னைவிட அமைப்பு பெரியது என்கிற புரிதலோடு மேலிருந்து தொடங்கி கீழ்வரை செயல்படும் போது மட்டுமே விளைவு நன்றாக இருக்கும் .

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 15.

 

நான் தோழர் வி பி சிக்கும் ,தோழர் எ.நல்லசிவனுக்கும் பதிலியாய் பல பொதுக்கூட்டங்களில் பங்கேற்று இருக்கிறேன் .இருவருமே மிகுந்த உரிமையோடு என்னை கேட்பார்கள் . நானும் அவர்கள் கேட்டால் தட்டாமல் ஒப்புக் கொள்வேன் .

 

ஒரு முறை சென்னை மே தினப் பேரணியில் தோழர் ஏ என் பேசவேண்டும் .எனக்கு வேறு இடத்தில் கூட்டம் . எதிர்பாராவிதமாக என் கூட்டம் ரத்து ஆகிவிட்டது . ஏ என் என்னை அழைத்து , “ எனக்கு காய்ச்சலாய் இருப்பதால் பங்கேற்க இயலவில்லை , எனக்குப் பதில் நீங்கள் பங்கேற்க வேண்டும் .” எனக் கேட்டுக்கொண்டார்.

 

” நீங்கள் சொல்லி நான் பங்கேற்காமல் இருப்பேனா ? ஆனாலும் இது மே தினப் பேரணி , ஏஐடியுசி சார்பிலும் பெரிய தலைவர் வருகிறார் , நான் போனால் சரியாக இருக்குமா ?” என நான் கேட்டேன் .

 

தோழர் ஏ என் சத்தமாகச் சிரித்தார் , “ இந்தத் தொண்டையை வச்சுகிட்டு நான் பேசிறதவிட நீங்க பேசினா தோழர்கள் ஏற்றுக்கு வாங்க , ஏஐடியுசி தலைவரை கடைசியில் பேசச் சொல்லிட்டு நீங்க முதலில் பேசிவிடுங்க புரொட்டோகால் சரியாயிடும்..” என்றார் நானும் சென்றேன் . எஐடியுசி சார்பிலும் வேறு தோழரே வந்திருந்தார் .பிரச்சனை இல்லை .நான் சிறப்புப் பேச்சாளராகி விட்டேன் .

 

 

இந்த இடத்தில் இன்னொரு அனுபவம் .பால்பண்ணைத் தொழிலாளர்களுக்காக மூலக்கடையில் ஓர் கூட்டம் . அன்று விபிசிக்கு பதில் நான் .திமுக பேரவை சார்பில் செ.குப்புசாமி . ஏஐடியுசி சார்பில் தோழர் கே.டி.கே .தங்கமணி. நான்தான் இருப்பதில் சின்னப் பையன் எனவே முதலில் நான் பேசிவிடுகிறேன் என்றேன் . “ காம்ரேட் ! முதலில் அணுகுண்டு பட்டாசை வெடிச்சிட்டு அப்புறம் ஊசிவெடியை போட்டா நல்லா இருக்காது .நான் முதலில் பேசிவிடுகிறேன் .” என்றார் கே.டி.கே . ஒருவழியாய் குப்புசாமியை கடைசி பேச்சாளராக்கி நான் அவருக்கு முன் ,கேடிகேவுக்கு பின் பேசினேன் .

 

தோழர் ஏ என் , தோழர் கே டி கே போல் ,தோழர் எம் ஆர் வி போல் இளம் தோழர்களை முன்னுக்கு நிறுத்த ஆசைப்படும் தலைவர்கள் அரிது . எல்லாம் தனக்குத்தான் தெரியும் , நான்தான் எல்லா மேடையிலும் முன்னால் இருக்க வேண்டும் என ஆசைப்படாமல் , உரிய இடத்தில் உரிய தோழரே முன்னிறுத்தும் அருங்குணம் அவர்களின் தனிச்சிறப்பு .

 

நான் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ,கட்சியிலிருந்து தோழர் பி.ராமச்சந்திரன் எங்களுக்கு பொறுப்பாக வழிகாட்டிவந்தார் .அவருக்கும் எனக்கும் பல நேரங்களில் முடிவெடுப்பதில் முரண்பாடு தலைநீட்டிவிடும் . தோழர் ஏ.என் அவர்களைச் சந்திக்க திருவல்லிக்கேணி தேரடி அலுவலகம் செல்வோம் .மாடியில் ஏ என் இருப்பார் .போய் பார்த்தது பேச ஆரம்பிப்போம் வழக்கமாக நீண்ட நேரம் பேசும் ஏ என் டக்கென்று தலையிட்டு . “ காம்ரேட் பி ஆர் சி ! யூத் ஏதோ புதுசா யோசிக்கிறாங்க … செய்து பார்க்கட்டும் … தப்பு வந்தால் பின்னாடி திருத்திக்கலாம் “ என்பார் . என்னைப் பார்த்து , “ சுபொ ! நீங்க யோசிப்பது திட்டமிடுவது எல்லாம் சரிதான் , கொஞ்சம் கட்சித் தலைமயோட பேசியிருக்கலாமே ! இனி கவனமா இருங்க !” கூட்டம் முடிந்துவிடும் .

 

மாடியிலிருந்து படி இறங்கும் போது பி ஆர் சி சிரிச்சுகிட்டே சொல்லுவார் , காம்ரேட் ஏ என் என்ன சொல்லுவார்னு நினைச்சனோ , அதைத்தான் சொன்னார் .” அப்புறம் பார்த்தசாரதி கோயில் அருகிலுள்ள காபி கடைக்கு அழைத்துப் போய் காபியும் வடையும் வாங்கித் தருவார். சட்டென்று கோவிப்பதிலும், அடுத்த நொடியே வாரி அணைப்பதிலும் பிஆர்சிக்கு நிகர் பிஆர்சியே ! . அவரோடு சண்டை போட்டால் . அடுத்து காபி வடை உறுதி!!

 

ஒரு முறை வாலிபர் சங்க மாநிலக்குழு எடுத்த முடிவு .ஓரே ஒரு மாவட்டத்தில் மட்டும் அமுலாகவில்லை . விசாரித்த போது கட்சி மாவட்டச் செயலாளர் குறுக்கிட்டு நிறுத்தியது தெரிந்தது . நான் இதை புகாராக ஏ என் பார்வைக்கு கொண்டு சென்றேன் . அவர் செயற்குழுவிலும் பேசி .  “ இது தவறு , வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஜனநாயக பூர்வமான முடிவை அமலாக்க தடை போடக்கூடாது .மாற்று கருத்து இருப்பின் கட்சி மாநிலக்குழுவுக்கு தெரிவிக்கலாம் .” என ஓர் சுற்றறிக்கையை அனுப்பிவிட்டார் . அந்த மாவட்டச் செயலாளர் பெரும் பொறுப்புக்கு வந்த பின்னும் என் மீது கோபம் கொண்டவராகவே நெடுங்காலம் இருந்தார் .

 

இப்போது சிபிஎம் கட்சி மாநாடுகள் துவங்கிவிட்டன . தோழர் ஏ என் மாநிலச் செயலாளராக இருந்தபோது ஒரு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி , கட்சிக்குள் கோஷ்டி சண்டை . அப்போது தோழர் ஏ.என் கொடுத்த விளக்கம் இன்றும் பொருந்தும்.

 

“ கொசுவுக்கு பிளவை நோய் வந்தது மாதிரி , நம்ம கட்சியில கோஷ்டி சண்டை . கட்சியை வளர்க்கச் சொன்னா கோஷ்டியை வளர்க்கிறீங்க ! நாம் சும்மா இருந்தாலும் அந்நிய வர்க்க கருத்துகள் பாட்டாளி வர்க்க கட்சியில் ஊடுருவிவிடும் . அவற்றுக்கு எதிராக நாம்தான் உறுதியா போராடணும் இல்லேண்ணா கோஷ்டி சண்டையில கட்சியே காணமல் போய்விடும்…”

 

மேலும் சொன்னார் ,” கொள்கை ,கோட்பாட்டு ரீதியான உள் கட்சி சண்டை இல்லை இது . முழுக்க முழுக்க பதவி ,தனிநபர் ஈகோ சார்ந்தது .இந்த கோஷ்டிச் சண்டையை நம் கட்சியியில் அனுமதிக்க முடியாது .மாவட்டச் செயலாளர் என்பவர் மாவட்டத்துக்கே செயலாளர் அல்ல ; மாவட்டக் குழுவின் செயலாளர் . மாவட்டக்குழு முடிவுகளை எக்சிகியூட் பண்ணும் செயல்படுத்தும் நிர்வாகி அவ்வளவுதான் . திமுக ,அதிமுக போல குறுநில மன்னர் அல்ல . இந்தப் புரிதல் எல்லோருக்கும் தேவை . மாநிலச் செயலாளர் நான் . அப்படி எனில் மாநிலக்குழுவின் செயலாளர் .அவ்வளவுதான் . அகில இந்திய பொதுச் செயலாளர் எனில் மத்தியக்குழுவின் செயலாளர்தான் .இந்தப் புரிதல் வலுவாக இருந்தால் கோஷ்டி சண்டை ஏன் ?”

 

மேலும் சொன்னார் , “ வட்டம் ,ஒன்றியம் ,மாவட்டம்னு ஒரு விசிட்டிங் கார்டு இருந்தால் போலீஸ் ஸ்டேஷன் ,கெவர்மெண்ட ஆபிஸ் எல்லாம் மரியாதை கிடைக்கும் , கொஞ்சம் அதிகாரம் செய்யலாம் , அப்பாவி மக்களுக்கு சின்ன சின்ன உதவி செய்து கொடுத்துவிட்டு காசு சம்பாதிக்கலாம் ,கட்டப் பஞ்சாயத்து செய்யலாம் என மற்ற கட்சிகளில் நினைப்பதும் ,அதற்காகப் பதவியைப் பிடிக்க எல்லா வித்தையையும் கைக்கொள்வதும் நடக்கும் . பாட்டாளி வர்க்க கட்சியில் – கம்யூனிஸ்ட் கட்சியில் அந்த சீரழிந்த பார்வை தொற்று நோயாக விடலாமா ? அனுமதிக்கலாமா ? அமைப்பு விதிகளையும் வழிகாட்டும் ஆவணங்களையும் கறாராகப் பின் பற்றினால் கோஷ்டியும் வராது , புடலங்காயும் வராது .”

 

மாநிலச் செயலாளர் என்ற பந்தாவை தோழர் ஏ என் அவர்களிடம் மருந்துக்கும் பார்க்க முடியாது .பார்வைக்கு மட்டுமல்ல அணுகுறையிலும் எளிமை . யாரையும் இழந்துவிடக்கூடாது தவறுகளைத் திருத்தி கட்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தம் கொடுப்பார்  .அதற்காக சம்மந்தப்பட்ட தோழரிடம் மணிக்கணக்கில் பேசத் தயங்கவே மாட்டார் .

 

ஒரு விவாதத்தின் போது ஒரு தோழரின் பழைய தவறுகளை பட்டியல் போட ஆரம்பித்தார் இன்னொரு தோழர் . உடனே ஏ என் தலையிட்டு ,” அது முடிந்து போன கதை . அப்போதே அவருக்கு கட்சி தண்டனை கொடுத்துவிட்டது .ஒரு தவறுக்கு ஒரு முறைதான் தண்டனை . இப்போது ஏதாவது செய்தாரா சொல்லுங்கள்… எல்லா நோய்க்கும் ஒரே மருந்து எங்கும் கிடையாது ,” என்றார் .

 

 “ இல்லை தோழர் ..அந்த விஷயத்தில்….” என தொடர்ந்து பழைய கதையையே பேசினார் . ,மீண்டும் ஏ என் குறுக்கிட்டார் , “ தண்டனை என்பது தவறைத் திருத்தத்தான் ,ஆளைக்கொல்வதற்கு அல்ல .ஒவ்வொரிடமும் ஏதாவது ஒரு திறமையும் இருக்கும் ,பலவீனமும் இருக்கும் . பலவீனத்தை விமர்சனம் ,சுயவிமர்சனம் மூலம் சரி செய்ய வேண்டும். ஒரே நாளில் ஒரே மந்திரத்தில் எல்லாவற்றையும் சரி செய்திட முடியாது ,பொறுமையாக வென்றெடுக்கணும் . அவரின் திறமைக்கு உரிய வேலை கொடுத்து அவரை நன்கு தொடர்ந்து பயன் படுத்த வேண்டும் . தொடந்து இயக்கத்தில் செயல்படுவதன் மூலமே திருந்தி பிரகாசிப்பார். ”

 

இன்னும் அவர் சொன்ன எல்லாவற்றையும் சொன்னால் அதுவும் அமைப்பில் அத்துமீறலாகிவிடும் . இதுவே கொஞ்சம் அதிகம் . ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

 

கட்சி அமைப்பு ,கூட்டுச் செயல்பாடு என வரும் போது தன்னைவிட அமைப்பு பெரியது என்கிற புரிதலோடு மேலிருந்து தொடங்கி கீழ்வரை செயல்படும் போது மட்டுமே விளைவு நன்றாக இருக்கும் .

 

கேரியரிசமும் ,கன்ஸ்யூமரிசமும் இப்போது புகாத இடமில்லை .மனம் இல்லை . ஆகவே இக்காலத்தில் ஏ என் போன்றவர்களை இன்னும் நெருங்கிப் படிப்பது அவசியம் அல்லவா ?

 

பேசுவோம் !

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

29 ஆகஸ்ட் 2021.

 

 

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 14.

Posted by அகத்தீ Labels:

 


 

இந்த கீதை எதுக்கு உபயோகப்படும் ?  ஒரு கைக்கடிகாரம் கொடுத்திருந்தால் மணி பார்க்கவாவது உதவும் என்றாராம்

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 14.

 

 தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் எழுதிய காந்தியம் சுரண்டல் வர்க்கத்தின் கேடயம்.” என்கிற சிறு வெளியீடு அக்காலத்தில் எங்களால் கொண்டாடப்பட்டது . அன்றைய இடதுசாரி இளைஞர்களிடம் ஓங்கி இருந்த காந்திய எதிர்ப்புக்கு நல்ல தீனி அது . இப்போது இத்தொடரை படிக்கிற தோழர் ஒருவர் அந்நூல் பற்றி கேட்டார் .  கால ஓட்டத்தில் காந்தியைப் பற்றிய பல மதிப்பீடுகள் மாறிவிட்டன என நாம் இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது .

 

முதலாளிகள் தர்ம கர்த்தாக்களாக விளங்க வேண்டும் என்கிற காந்தியின் தர்ம கர்த்தா தத்துவதையும் , சனாதன வர்ண தர்மத்தின் மீது தனக்கு நம்பிக்கை உள்ளதென அவர் சொன்னதையும் மையப்படுத்தியே அந்த வெளியீடு அமைந்திருந்தது .அந்த விமர்சனத்தை இப்போதும் நாம் நிராகரிக்கவில்லை .ஆயின் காந்தி இன்றும் தேவைப்படுகிறார் எனும் பொருளில் காந்தியை மேலும் பயில வேண்டியுள்ளது .

 

காந்தி விடுதலைப் போராட்ட தலைவராக உயர்ந்தது எப்படி? அவரின் தத்துவ நிலைபாடுகள் முதலாளித்துவத்துக்கு வலு சேர்ப்பதாக இருந்தபோதும் இறுதிநாட்களில் அவர் சோர்ந்தது ஏன்? தர்மகர்த்தா தத்துவம் ‘அகிம்சா தத்துவம்' எனஅவர் நம்பிய கோட்பாடுகள் தோல்வியடைந்தது ஏன்? வெகுமக்களை போராட்ட களத்துக்கு திரட்டிய அவரே அதற்கு எதிராகவும் நிலையெடுத்த தத்துவமயக்கம் ஏன்? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் தத்துவப் பார்வையோடும் எளிமையாய் “ மகாத்மாவும் இசமும்” நூலில் விளக்கியிருக்கிறார் இஎம்எஸ். அதனை இன்றைய இளைஞர்கள் படிப்பது அவசியமே . ஆயினும் , மதவெறி பேயாட்டம் போடும் காலத்தில் காந்தி இன்னும் தேவைப்படுகிறார் . ஏன் ?

 

பிபன் சந்திரா எழுதிய “மகாத்மா- மதச்சார்பின்மை- மதவெறி” எனும் சிறிய வெளியீடு [ அ.குமரேசன் மொழியாக்கம் ] இன்றைக்கு காந்தி எப்படி நமக்கு நெருக்கமாகிறார் என்பதைச் சொல்லும் . காந்தி மதநம்பிக்கையாளர் ஆனால் மதவெறிக்கு எதிரான போரில் தன்னையே பலிதந்தார் .அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் அவரவர் முனையிலிருந்து அன்றைக்கு காந்தியை விமர்சித்தனர் .அதே நேரம் விடுதலைப் போரில் அவரின் அளப்பரிய பங்களிப்பை அங்கீகரித்தனர் . விடுதலைப் போரில் துளியும் பங்கேற்காத ஆர் எஸ் எஸ் தான் காந்தியை கொலை செய்தது . ஆன்மீகவாதியாய் தன்னை வரித்துக்கொண்ட காந்தியின் குரு கோகலேவும் சீடர் நேருவும் பகுத்தறிவாளர் என்பது காந்தியின் இன்னொரு பக்கத்தைக் காட்டும் .

 

ஆகவே மீண்டும் சொல்கிறேன் ,இன்றைக்கு மதவெறிக்கு எதிரான போரில் காந்தி தேவைப்படுகிறார் . அதே வேளையில் காந்தியைப் பற்றிய முழுமையாக அறிய மேலும் வாசிப்பீர் !

 

ஒர் தோழர் காந்தியை கடுமையாக குறைகூறி பேசிவிட்டார் ; அவரை தோழர் ஏபி அழைத்து காந்தியின் தத்துவம் மீது நமக்கு விமர்சனம் உண்டு ,ஆயின் காந்தி மாபெரும் தலைவர் .அவர் பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றார் .இந்த பேச்சினூடே , “  ‘காந்தி – ஜோசி கடிதப் போக்குவரத்து’ நூல் படித்துள்ளீர்களா ? போய் படியுங்கள்.” என்றார் .அப்போது அருகிலிருந்த நான் அப்புறம்தான் அந்த நூலைத் தேடிப்படித்தேன் .இன்றும் படிக்க வேண்டிய நூல் அது .

 

அதே போல் பெரியார் மீதும் அளப்பரிய மதிப்பு வைத்திருந்தார் .சமூக சீர்திருத்தப் பார்வையும் செயல்பாடுகளும் கம்யூனிஸ்டுகளுக்கு தேவை என்பதில் உறுதியானவர் . எம் ஆர் வெங்கட்ராமனும் , ஏ.பாலசுப்பிரமணியமும் பிறப்பால் பார்ப்பனர்களே ஆனால் ஒரு துளியும் அந்த வாசனை இல்லாதவர்கள் . எம் ஆர் வெங்கட்ராமன் சிறையில் இருந்தபோது அவரது மைத்துனர் அவருக்கு பகவத்கீதை புத்தகம் ஒன்றை கொண்டுவந்து கொடுத்தாராம் . அவரிடம், “ இந்த கீதை எதுக்கு உபயோகப்படும் ?  ஒரு கைக்கடிகாரம் கொடுத்திருந்தால் மணி பார்க்கவாவது உதவும் என்றாராம் எம் ஆர் வி.

 

மநுதர்மத்திலிருந்து பல அம்சங்களை தலைப்புவாரி தொகுத்து ஒரு கடுரையாக்கி தட்டச்சு செய்து வைத்திருந்தேன் .அதை தோழர் இரா. வேணு எடுத்து ஆர் ராமராஜிடம் கொடுக்க அது தோழர் ஏ.பாலசுப்பிரமணியம் கைக்கு போனது .கூப்பிட்டு விசாரிப்பார் எனக் காத்திருந்தால்  இரண்டொரு நாளில் அது தீக்கதிரில் பிரசுரமானது . அதை அனுப்பி போடச் சொன்னது ஏபி என்பதை பின்னர் அலுவலகச் செயலாளர் சுந்தர்ராமன் மூலம் அறிந்து கொண்டேன் .

 

அதைத் தொடர்ந்து தோழர் ஏபியோடு பேசும் போது சொன்னார் , “ பகவத் கீதை ,அர்த்த சாஸ்திரம் , மனுதர்மம்” மூன்றும் பிராமண ,சத்திரிய ,வைசிய வர்ணத்தாரைக் காக்க எழுதப்பட்டவையே . சூத்திரர் ,பஞ்சமர்களுக்கு எதிரானது . இவை உழைப்பாளி வர்க்கத்திற்கு எவ்விததிலும் பயன்படாதென்பதை மிகப் பொறுமையாக விளக்க வேண்டும் .இது குழந்தைகளுக்கு கசப்பு மருந்து ஊட்டுவதுபோல் கடினமான வேலைதான் . மிகுந்த எச்சரிக்கையோடு பொறுப்பாக பக்குவமாகச் செய்ய வேண்டும் . வாலிபர் ,மாணவர் சங்கம் அவ்வேலையினை தன் வேலைத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றார் .


இளைஞர்களை வளர்க்க வேண்டும் என்பதில் தோழர் ஏபிக்கு எப்போதும் முனைப்பு உண்டு . அப்போது கட்சி மாநிலக்குழு அலுவலகம் சென்னை குக்ஸ் சாலையில்தான் தற்காலிகமாக இயங்கி வந்தது . மாநிலம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுப்பும் போது நான் ,கே சி கருணாகரன் ,நன்மாறன் , கோவை பாலகிருஷ்ணன் ,பி.ஆர் நடராஜன் ,திண்டுக்கல் ஜெயராமன் ,வடலூர் இடிமுழக்கம் மகாதேவன் [ இவர் கட்சியில் இப்போது இல்லை.] என பலரை கட்டாயம் பட்டியலில் சேர்க்கும் படி அலுவலகச் செயலாளரிடம் சொல்லிச் சேர்ப்பார் .அதுபோல் பெண்களை பேச்சாளராக அனுப்புவதில் ஆர்வம் காட்டினார் .  “கிணற்றுல தூக்கிப் போடு தானா நீச்சல் கற்றுக்குவாங்க” என்பார் .

 

எம் ஜி ஆர் பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய போது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் வந்தது , சிபிஎம் எம் ஜி ஆரை ஆதரித்தது .மாயத்தேவர் போட்டியிட்டார் .கடும் வன்முறையை ஆளும் திமுக ஏவியது . எம் ஜி ஆர் கட்சி தொடங்கிய புதிது எனவே வன்முறையை எதிர் கொள்ள  தோழர் ஏபி உடன் இருந்து வழிகாட்டினார் , “ ஊழியர் கூட்டத்தில் அடிவாங்கிட்டு கட்சி ஆபீஸூக்கு தோழர்கள் யாரும் வராதீர்கள் .அடிச்சிட்டு வாங்கன்னு “ சொன்னார் .தோழர் ஏபியின் சொல் கட்டளையானது . வன்முறையை கம்யூனிஸ்ட்  தோழர்கள் நெஞ்சுரத்துடன் எதிர்த்து நின்றனர் .மாயத்தேவர் வென்றார் .

 

அவசர காலதிற்கு முன்பே காங்கிரஸ் இண்டிகேட் ,சிண்டிகேட் என இரண்டாகப் பிரிந்தது . இண்டிகேட் சிண்டிகேட் ரெண்டும் சாபக்கேடு என தோழர் ஏபி பேச்சு முழக்கமாகவே ஆனது .காமராஜர் இறந்தபோது சிண்டிகேட்டில் அதாவது பழைய காங்கிரஸில் இருந்த காங்கிரஸ்காரர்களை பிடிக்க இண்டிகேட் என்ற இந்திரா காங்கிரஸ் முயற்சித்த போது தோழர் ஏபி பேச்சு சிறுவெளியீடானது .

 

 “ பந்தலிலே பாகற்காய் / போகையிலே பார்த்துக்கலாம் / ஐயையோ வித்துக்கில்லோ விட்டிடிருக்கேன்,” என்கிற கிராமியக்கதைச் சொல்லி அரசியல் நையாண்டி செய்திருப்பார் .அது அன்றைக்கு பிரபலமானது .

 

தோழர் ஏபி எங்கு பேச்சை முடிக்கும் போது , “ காக்கை நோக்கறியும் ,கொக்கு டப்பறியும் . நீங்கள் காக்கையா இருக்கப் போறீங்களா ? இல்லை கொக்கா இருக்கப் போறீங்களா ?” என்ற உதாரணத்தைச் சொல்லியே முடிப்பார் . அதாவது காக்கையை அடிக்க கல்லை எடுக்கும் முன்பே காக்கா பறந்துவிடும் ;கொக்கு சுடுப்பட்டு வீழும் . நாம் காக்கையாகத்தானே இருக்க வேண்டும் ?

 

ஒரு முறை தோழர் ஏபிஐ பார்க்கும் போது அவர் கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்து அடிக்கோடிட்டு படித்துக்கொண்டிருந்தார் . பழையபடி அறிக்கையைப் படிக்கிறீங்க என்றேன் .கணக்கு வைக்கவில்லை .ஒவ்வொரு முறையும் படிக்கும் போது புரிதல் மேம்படுது ,தெளிவாகுது என்றார் .திரும்பத் திரும்ப சில நூல்களைப் படிக்கணும் ; சில நூல்களை மறுவாசிப்பும் செய்யணும் . மறுவாசிப்பு என்பது பட்டறிவு படிப்பறிவு இரண்டும் தந்த ஞானத்தோடு மேலும் தெளிவு பெற படிப்பதாகும் .

 

  தோழர் இஎம்எஸ் எழுதிய ‘வேதங்களின் நாடு' ‘இந்திய வரலாறு' மகாத்மாவும் இசமும்' ‘நேருவின் கொள்கையும் நடைமுறையும்' ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு' ‘இந்திய பொருளாதார திட்டமிடலும் நெருக்கடிகளும்' ‘சோஷலிசத்திற்கான இந்தியப் பாதை' என்கிற ஆறு புத்தகங்களையாவது வரிசையாகப் படித்தால் இந்திய சமூக அரசியல் வரலாற்றைப் பற்றிய ஒரு  பார்வை கிடைக்கும். மலையாளிகளுக்கு கேரள சமூகம் குறித்து அவர் எழுதிய நூல் மேலும் ஒரு போனஸ். தமிழில் அப்படி ஒரு நூல் இல்லாதது பெருங்குறையே. எது எப்படியோ இந்நூலை வாசிப்பது அரசியல் பயிற்சியின் அடிப்படையாகும். ஆனால் அப்படியே சூத்திரம் போல் படிப்பதல்ல ; இன்றுவரை வளர்ந்திருக்கிற சமூகப்பார்வையோடு அவற்றை மறுவாசிப்பு செய்ய வேண்டும் . இளைய தலைமுறை அதனைச் செய்வார்களாக !


ராமச்சந்திர குஹா எழுதிய “ இந்திய வரலாறு – காந்திக்குப் பின் “ இரண்டு பாகங்களும்கூட இந்த வரிசையில் தகவலறிய பயன்படும் .அதே நேரம் நூலாசிரியரின் கம்யூனிஸ்டுகள் மீதான கடும் விமர்சனமும் வெறுப்பும் நூலின் பல இடத்தில் தலைநீட்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டே படிக்க வேண்டும்.

 

இன்னும் பேசப்பேச நீளும் … பேசுவோம்.

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

24 ஆகஸ்ட் 2021.

 

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 13,

Posted by அகத்தீ Labels:

 


“ அப்படிச் சொல்லு ! நம்ம பரம்பரை மன்னிப்பு கேட்கிற பரம்பரை அல்லடா ! மன்னிப்பு கேட்டேன்னு வை ஜெயில் வாசலிலேயே உன்னை வெட்டிப் புதைச்சிருவேன்…” என தந்தை மகனை மிரட்டுகிறார் .



நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 13,

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மாணவர்களின் போராட்ட களமாக இருந்தது .தோழர் கே.முத்தையா அந்த போராட்ட களத்தில் புடம் போடப்பட்டவர் . அவரை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர் , வழக்கம் போல் பிரிட்டிஷ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி என்கிற வழக்குதான் .

சிறையில் அடைபட்ட கே முத்தையாவைப் பார்க்க அவர் அப்பா கருப்பையா வந்திருக்கிறார் .அவர் ஓர் தகவல் சொன்னாராம் “ காங்கிரஸ் தலைவர் சர் வேதரத்தினம் என்னைச் சந்தித்தார் . மன்னிப்பு கடிதம் கொடுத்தால் முத்தையாவை விடுதலை செய்து விடுவார்கள் என்றாராம்.”

இதனைச் சொல்லிவிட்டு தந்தை மகனிடம் கேட்டாராம் “ ஏண்டா ! மன்னிப்பு கடிதம் கொடுத்திட்டா வரப்போறே ?”

“ ஐயையோ ! இல்லை .இல்லை . மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லை …”

“ அப்படிச் சொல்லு ! நம்ம பரம்பரை மன்னிப்பு கேட்கிற பரம்பரை அல்லடா ! மன்னிப்பு கேட்டேன்னு வை ஜெயில் வாசலிலேயே உன்னை வெட்டிப் புதைச்சிருவேன்…” என தந்தை மகனை மிரட்டுகிறார் .

இதுதானாடா ! எங்கள் பாரம்பரியம் ! மன்னிப்பு கேட்பது சவார்க்கர் பாரம்பரியம் , சங்கிகள் பாரம்பரியம் .

ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூன்று சகோதரிகளைத்தான் தோழர் பி.ராமமூர்த்தி ,கே.முத்தையா ,மாதவன் [சிபிஐ] மூவரும் மணந்தனர் . இது சாதிமறுப்புத் திருமணம் என்பதால் தந்தை வரமறுத்துவிட்டார் . தாயும் தம்பியும் மட்டுமே வந்தனர் . கட்சி வாழ்க்கைக்கு தன்னை அர்ப்பணித்த போது பெற்றோர் அதனை ஏற்க மறுத்தனர் . நிலபுலம் ,சொத்து எதிலும் நான் பங்கு கோரமாட்டேன் என எழுதிக் கொடுத்துவிட்டே கட்சிப் பணி ஏற்றவர் கே.எம்.

1942 ல் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளராக தோழர் பாலதண்டாயுதமும் சென்னை மாவட்டச் செயலாளராக கே.முத்தையாவும் தேர்வு செய்யப்பட்டனர் . சென்னையில் எம்ப்டன் குண்டு வீசியதில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து சென்னையே வெள்ளக்காடானது . கே முத்தையா தன் தோழர்களுடன் வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் ஈடுபட்டார்.1946 கப்பற்படை எழுச்சியின் போது கேஎம் சென்னையில் ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தினார் .

தீக்கதிருக்கு முன்பு ஜனசக்தியிலும் ,தாமரை இலக்கிய ஏட்டிலும் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர்தான் கே.எம் . அவ்வேடுகளுக்கு ப.ஜீவானந்தம் ஆசிரியராக செயல்பட்டார் . ஒன்றாக இருந்த கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுண்டு சிபிஐ ,சிபிஎம் என செயல்படுகிற காலம் வரை அவற்றில் செயல்பட்ட தோழர் கே எம் கட்சி பிரிந்தபோது சிபிஎம்மோடு இணைந்தார் .

தோழர் பி.ராமமூர்த்திதான் தன் சகலை கே .முத்தையாவை சிபிஎம்முக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டதாய் ஓர் விமர்சனம் உண்டு . அது குறித்து ஓர் முறை கே.எம்மிடம் கேட்டேன் .

தோழர் கே எம் சொன்னார், “ தப்பு . தப்பு . அப்படியானால் இன்னொரு சகலை அங்கேயே தங்கிவிட்டாரே ! அவரை ஏன் இழுத்துவரவில்லை .சிபிஎம் செல்கிற பாதைதான் சரி என்கிற கருத்து எனக்கு வலுவாக இருந்ததால் நான் இந்தப் பக்கம் நின்றேன் . இல்லை சிபிஐ பாதையே சரி எனக் கருதியதால் அவர் அந்தப் பக்கம் நின்றார் அவ்வளவுதான் ”

எம் ஜி ஆர் கட்சி ஆரம்பித்த போது அவரின் கொள்கை என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது “அண்ணாயிசமே” என் கொள்கை என்றார் . விளக்கம் கேட்டபோது ,” சோஷலிசம் ,கம்யூனிசம் ,கேப்டலிசம் மூன்றும் கலந்த சித்தாந்தக் கலவையே அண்ணாயிசம்” என்றார் . இதனை விமர்சித்து “ இதுதான் அண்ணாயிசமா ?” என தோழர் கே.எம் எழுதிய சிறுவெளியீடு அன்றைக்கு எங்களுக்கெல்லாம் மேடையில் பேசுபொருளானது .

கே முத்தையா படைப்புகள் என்று பார்த்தால் ,இமயம் (புதினம்) , ,உலைகளம் (முதல் நாவல்) , விளைநிலம் [நாவல்] இவை இரண்டும் செம்மலரில் தொடராக வெளிவந்தவை,செவ்வானம் (நாடகம்),புதிய தலைமுறை (நாடகம்) ,ஏரோட்டி மகன் (நாடகம் ] இவையும் ஏடுகளில் வெளிவந்து பின் நூல் வடிவம் பெற்றவையே . இந்த படைப்புகளை அன்றைக்கு கடுமையாக விமர்சித்தவர்களில் நானும் ஒருவனே ! கட்சி வரலாற்றோடும் , அரசியல் பிரச்சாரம் சார்ந்தும் படைப்புகளை ஆக்கும் வலியும் எல்லையும் அன்றைக்கு எனக்கு உறைக்கவில்லை .

அவற்றில் சிலவற்றை இன்னும் செதுக்கி சிற்பமாக்கி இருக்கலாம்தான் .ஆயினும் விளைநிலம், உலைக்களம். போன்ற நாவல்கள் வெறும் கதையல்ல. கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழகத்தில் வேர் கொண்டபோது சந்தித்த அடக்குமுறைகளை போராட்டங்களை ஜீவத்துடிப்போடு நம்மிடம் பேசும். அம்முயற்சியின் முக்கியத்துவம் எப்போது புரிந்தது தெரியுமா ? கம்யூனிச இயக்க வரலாறு நாவல்களாக போதுமான அளவு வந்துள்ளதா என்கிற கேள்வி முளைத்த போதே !

ஓர் முறை இயக்குநர் பாலுமகேந்திரா என்னை அவர் அலுவலகத்துக்கு அழைத்தார் . கட்சியின் தியாக வரலாற்றைச் சொல்லும் படைப்புகள் பற்றி கேட்டார் .கிட்டத்தட்ட மூன்று மணி நேர உரையாடலின் போதே நாம் படைக்கத்தவறியவைகளின் பட்டியல் விஸ்வரூபமெடுத்தது . அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க என்னிடமிருந்த கட்சித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு அளித்தேன் .அதைப் படித்த பின் பாலுமகேந்திரா சொன்னார் ,” கட்சி கோணத்தில் என்.ராமகிருஷ்ணன் எழுதியுள்ளார் ; படைப்பாளி கோணத்தில் கொஞ்சம் சுவையான செய்திகள் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.”

தோழர் என் .சங்கரய்யா பலமுறை எழுத்தாளர்களிடம் கேட்ட கேள்வி , “ இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் பற்றி நிறைய விமர்சிக்கிற நீங்கள் ,வெண்மணி குறித்து , நம் தியாக வரலாறு சார்ந்தும் எத்தனை படைப்புகள் செய்துள்ளீர்கள் ?”

தோழர் கே எம் எழுதிய நாவல்கள் ,நாடகங்கள் அந்த வகையில் இன்னும் நினைக்கத்தக்கது .

2012 பிப்ரவரி மாதம் “தோளில் சுமக்க வேண்டிய நாவல்கள்” என ஓர் கட்டுரை எழுதினேன் . அதிலிருந்து சில பத்திகள் இங்கு பொருத்தப்பாடு கருதி சேர்க்கிறேன்.

“கையூர் தியாகிகளின் வீரவரலாற்றைப் பேசும் “நினைவுகள் அழிவதில்லை” (மொழி பெயர்ப்பு - பி.ஆர். பரமேஸ்வரன்) என் நெஞ்சை விட்டு இன்றளவும் நீங்கவில்லை. 1946ல் நடந்த கப்பற்படை எழுச்சியின் பின்புலத்தில் யஸ்பால் எழுதிய “காம்ரேட்” நாவலின் கீதாவை யார்தான் மறக்க இயலும்? இப்படி பல நாவல்கள் கடந்த காலங்களில் கம்யூனிஸ்ட் உணர்வை ஊட்டுவதில் ஆற்றிய பங்கை அசைபோட்டு பார்க்கவேண்டும். மேலே குறிப்பிட்ட நாவல்கள் மொழிபெயர்ப்பாக வந்தவை.”

”தமிழில் சுயமாக எழுதப்பட்ட இத்தகைய நாவல்களை சற்று நினைவுத்திரையில் ஓடவிட்டு பார்க்கிறேன். பெரிய பட்டியல் இருக்கிறது. ஒன்று இரண்டை தொட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. பஞ்சாலைப் போராட்ட வாழ்வைப் படம்பிடித்த தொ.மு.சி. ரகுநாதனின் “பஞ்சும் பசியும்”; தேயிலைத் தோட்டத்தில் அட்டைக் கடிகளுக்கு மத்தியில் வதைப்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை அவலத்தையும் - கொடுமையை எதிர்த்து அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் சங்கம் சேர்ந்த வரலாற்றையும் ரத்தமும் சதையுமாய் பேசும் டி. செல்வராஜின் “தேநீர்”; மலைமக்களின் வாழ்க்கையை எழுச்சியை உயிர்க்காவியமாய் ஆக்கியிருக்கும் கு. சின்னப்ப பாரதியின் “சங்கம்”; சின்னியம்பாளையம் தியாகிகளின் வீரக்கதையை சொல்லும் ராஜாமணியின் “சங்கமம்” ; இந்த வரிசையில் தொண்டு நிறுவனங்களோடு செயல்பட கற்றுக்கொடுக்கும் தனுஷ்கோடியின் “தோழன்” இப்படி ஒவ்வொன்றும் நம் இதயத்தில் நுழைந்து மூளையைக் குடைந்து ரத்த நாளங்களை சூடேற்றும்.”

“இந்த வரிசையில் கு. சின்னப்ப பாரதியின் “தாகம்”, ”சர்க்கரை”, டி. செல்வராஜின் ”மலரும் சருகும்”, ச. தமிழ்செல்வனின் ”ஜிந்தாபாத்” உட்பட பல உண்டு. சுபாஷ் சந்திர போஸ் எழுதிய சாம்பவான் ஓடை மற்றும், சிவராமன் போன்ற நாவல்களும் இதே பணியைச் செய்கின்றன.”

[ நினைவிலிருந்து எழுதியதால் பல நூல்களின் பெயர்கள் விடுபட்டிருக்கக்கூடும். அதையும் இக்கட்டுரை வாசிப்போர் சேர்த்துக் கொள்ளலாம் ]”

“கடைசியாக வெளிவந்த டி. செல்வராஜின் தோல் நாவல், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் அவசியம் படிக்க வேண்டிய தோளில் சுமக்கவேண்டிய நாவல்.”

[ தற்போது ரயில்வேத் தொழிலாளர் போராட்டம் சார்ந்து ராமச்சந்திர வைத்தியநாத் எழுதிய “ போராட்டம்.”]

“வெண்மணியின் வீரஞ்செறிந்த வரலாற்றை கொச்சைப் படுத்தி இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல் “குருதிப்புனல்” வெளிவந்து பல வருடங்களுக்கு பிறகு சோலை சுந்தரபெருமாளின் ”செந்நெல்” வெளிவந்தது.”

[ கீழைத் தீ உட்பட ஒரிரு நாவல்கள் வந்துள்ளன .முழுவதும் நினைவுக்கு வரவில்லை.]

இவை மட்டும் போதுமா?”

“வெண்மணியின் நெருப்பில் இருந்து கங்கெடுத்து நூறு நாவல்கள் பூத்திருக்க வேண்டாமா?
பொன்மலை தியாகிகளின் தன்னலமற்ற தியாகம் நாவலாய் மலர்ந்திருக்க வேண்டாமா?
வாச்சாத்தி கொடூரமும் நியாயத்துக்காக நடந்த போராட்டமும் அதன் வெற்றியும் அற்புதமான நாவல் களமல்லவா?
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது துணிச்சலாய் எல்லையோரத்தில் ரயிலை இயக்கி பெருந்தொண்டாற்றிய தமிழக ரயில்வே தொழிலாளர்கள் நினைவலைகள் பல நாவல்களின் உலைக்களம் அல்லவா?
ஏன் மிகச் சமீபத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய தியாகி லீலாவதி இன்னும் தமிழ் நாவலின் கதாநாயகியாகவில்லையே?
அவரை மையமாக வைத்து ஒரு ஹிந்தி திரைப்படம்கூட தயாராகிவிட்டது. லீலாவதியும், தூக்குமேடை பாலுவும், களப்பால் குப்புவும் இன்னபிற தியாகிகளும் நமது இலக்கிய நாயகர்களாய் உலா வருவது எப்போது?”

தோழர் கே.எம் தன் வாழ்நாளெல்லாம் இதுபோல்தானே சிந்தித்தார் . செயல்பட்டார் .இலக்கியம் படைத்தார். அவர் முயற்சி சிறிதெனினும் முக்கியமானதன்றோ ? அவர் முயற்சி எவ்வளவு பெரிதென இப்போது எண்ணிப்பார்க்க புரிகிறது .

இன்னும் பேச நிறைய இருக்கிறது .
பேசுவோம்.
சு.பொ.அகத்தியலிங்கம்.
22 ஆகஸ்ட் 2021. 
See Less

Chinniah Kasi, Ramesh Bhat and 74 others
23 Comments
22 Shares
Like
Comment
Share

நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 12.

Posted by அகத்தீ Labels:

 

“காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டதுஇன்பம்” என்கிற ஒளவையின் சொல்லுக்கு முழுப்பொருளாய் வாழ்ந்து முடிந்த உமாநாத் –பாப்பா நமக்கு என்றும் முன்னுதாரணம் .

 


நூற்றாண்டு நாயகர்கள் நினைவலைகள் : 12.

 

 வானிலும் உயர்ந்ததாய்

கடலிலும் ஆழமானதாய்

பிறப்பு இறப்பிலும் விந்தை மிக்கதாய்

காலத்தைவிட அதிகமானதாய்

ஒன்று இருப்பதை நான் கண்டு கொண்டேன்

முன்பு அறிந்திராத ஒன்றை இப்போது அறிந்து கொண்டேன்.”

 

இது கலில் ஜிப்ரான் காதலைக் குறித்து எழுதிய ஓர் கவிதை .

 

தோழர் ஆர் உமாநாத் வாழ்க்கை வரலாற்றை எழுத என்னைப் பணித்தார் தோழர் கே .வரதராசன் . தோழர் ஆர்யு எழுதி வைத்திருந்த ஆங்கில குறிப்புகளில் இருந்து விவரங்களை தேர்வு செய்தும் , அவரோடும் பாப்பாவோடும் குடும்பத்தாரோடும் உரையாடியும் என் பாணியில் நூலை எழுதினேன் . ஒவ்வொரு அத்தியாயத்திலும் திருக்குறளை இணைத்தேன் .பாரதி ,பாரதிதாசன் , பட்டுக்கோட்டை கவிதைகளையும் கோர்த்தேன் . தோழர் கே.வி யிடம் கொடுத்தேன் .

 

 “ அகத்தி ! தோழர் ஆர்யு கொங்கிணி .தமிழில் திக்காமல் பேசவே குறிப்பு வைத்து பேசப் பழகியவர் . நீயே அதையும் இதில் எழுதியிருக்கிறாய் .அவர் வரலாற்றில் திருக்குறளா ? இதை அவர் ஒப்புக்கொள்வாரா தெரியவில்லை . பேசிப்பாருங்கள் .” என்றார் கே.வி . நான் ஆர்யுவிடம் டிராப்டைக் கொடுத்துவிட்டேன் . இரண்டு நாள் கழித்து போனேன் .

 

“ காம்ரேட் எஸ்பிஏ ! நீங்க நல்லாத்தன் எழுதியிருக்கீங்க .. ஒன்றிரண்டு திருத்தங்கள் ஆங்காங்கு செய்திருக்கேன் .ஆனால் குறள் ,கவிதை எல்லாம் பாப்பாவுக்கு பிடிச்சிருக்கு …சரியான்னு எனக்குத் தெரியலை … காம்ரேட் கேவி கிட்ட பேசுறேன்னு சொல்லி போணில் பேசினார் . அவர் ஒகே சொன்னார் .

 

அத்தோடு . “ 15 வது அத்தியாயத்தில் உங்க காதலைப் பற்றி வர்ணிச்சிருக்கான் ,16 வது அத்தியாயத்தில் கலில் ஜிப்ரான் காதல் கவிதை [ இங்கு ஆரம்பத்தில் உள்ள கவிதை ] சேர்த்து எழுதியிருக்கான் … அது பற்றி நீங்கதான் முடிவெடுக்கணும்னு கேவி போட்டும் கொடுத்துவிட்டார் .

 

ஆர்யு குலுங்கிக் குலுங்கி சிரித்தார் . “நானும் பாப்பாவும் அதை ரசித்தோம் .கரெக்டாத்தான் இருக்கு . கலில் ஜிப்ரான் கவிதை சூப்பர் .என் அன்றைய உணர்வை சரியா பிரதிபலிக்குதுன்னு” ஒரு போடு போட்டார் . எனக்கு மகிழ்ச்சி .

 

 “காதலர் இருவர் கருத்து ஒருமித்து, ஆதரவு பட்டதுஇன்பம்” என்கிற ஒளவையின் சொல்லுக்கு முழுப்பொருளாய் வாழ்ந்து முடிந்த உமாநாத் –பாப்பா நமக்கு என்றும் முன்னுதாரணம் . எனவேதான் நானும் அவர் வாழ்க்கை வரலாற்றில் காதலுக்கு உரிய இடம் கொடுத்தேன் . அது பிழையில்லை என்பதே என் முடிவு .

 

கம்யூனிஸ்ட் எனில் கிழிஞ்ச வேட்டி , சாயம் போன சட்டைன்னு யார் சொன்னது ? தூய்மையாக அழகாக ஆடை அணிவது பிழையல்ல . தோழர் ஆர்யு எப்போதும் பளிச்சென விதவிதமான வண்ணத்தில் சட்டை அணிவார் . பட்டையான சிவப்புக்கரை வேட்டி .கிளின் ஷேவ் .

 

ஆர்யுவின் நேர்த்தியான உடைக்கு பாப்பாவும் ஓர் காரணம் . இதை நான் உறுதியாகச் சொல்லக் காரணம் . பாப்பாவோடு ஹோசூரில் இருந்து சென்னைக்கு ஓர் பிரச்சார யாத்திரை போனபோது குழுவினரின் உடையை சலைவை செய்துதர சிறப்பு கவனம் செலுத்தினார் . அதுபோல் உணவிலும் அக்கறை காட்டி கவனித்தார் .எல்லோரும் நன்கு உடுத்த , நன்கு உண்ணத்தானே நாம் போராடுகிறோம் என்பார் .தோழர் விபிசியும் உடையில் பளிச்சென இருக்கவே விரும்புவார் .நான் பேண்ட சட்டை / ஜிப்பாவில்  பள்ளி மாணவன் போல் இருப்பதாய் சொல்லி வேட்டி சட்டை /ஜிப்பாவுக்குக்கு என்னை மாற்றியவர் விபிசிதான். .அப்புறம் அதுவே என் உடையாகிப் போனது .

 

”கட்சியில் உள்ள புதிய இளைஞர்கள் ஆடம்பரமாக உடை அணிகிறார்கள் .சரியா ?” என ஒரு முறை தோழர் இஎம்எஸ்சிடம் தேசாபிமானியில் ஓர் கேள்வி கேட்கப்பட்டது .

 

அவர் சொன்னார் , நாங்கள் கம்யூனிஸ்டாக இருப்பினும் காந்திய தலைமுறையைச் சார்ந்தவர்கள் . காந்தியின் எளிமையை பின்பற்றியவர்கள் . எங்கள் காலத் தேவை அது . இன்றைய தலைமுறைக்கு அது தேவை இல்லை . இளைஞர்கள் புதுயுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ; அவர்கள் உடை அதற்கேற்ப இருப்பது சரிதானே ! பகட்டு கூடாது .படாடோபம் ஆகாது . .ஆனால் நவீனமாக அவர்கள் விருப்பத்திற்கு உடை உடுத்துவதில் தப்பில்லை . எல்லோரும் நன்றாக உடுத்த வேண்டும், நன்றாக படிக்க வேண்டும், நன்றாக உண்ண வேண்டும் .அதற்காகத்தானே நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

 

சாமியார் பிரேமானந்தா வழக்கு , சிதம்பரம் பத்மினி வழக்கு இப்படி பலவற்றை மேடையில் பேசும்போது பாதிக்கப்பட்டவர் பக்கம் நின்று சிம்ம கர்ஜனை செய்வார் தோழர் ஆர்யு , ஆனால்  பெண்களை இழிவுபடுத்தும் சொற்களையோ ,சாதிய ரீதியான இழிவுபடுத்தும் சொற்களையோ தவறியும் அவர் பயன்படுத்த மாட்டார் . மற்றவர் பயன்படுத்தினாலும் அனுமதிக்க மாட்டார் .சில கூட்டுமேடைகளில் இச்சிக்கல் வரும் . ஆர்யு சமரசம் செய்யாமல் அது தமக்கு ஏற்புடையதல்ல என அந்த மேடையிலேயே சொல்லிவிடுவார் . அதுபோல் கட்சி நிலையை சமரசமின்றி எந்த மேடையாயினும் சொல்லிவிடுவார் . அதனால் சில பிரச்சனைகளை எதிர்கொண்டதும் உண்டு

 

கட்சியின் மாநிலக்குழு கூட்டம் ஒன்றில் தேர்தல் பரிசீலனை முக்கிய நிகழ்ச்சி நிரல் .கூட்டத்திற்கு ஆர்யு தலைவர் . நான் பேசும்போது “ இந்த போஸ்ட்மார்ட்டம் [ postmortem ] ரிப்போர்ட்டில் “ என ஆரம்பித்தேன் . ஆர்யு கொந்தளித்துவிட்டார் .

 

 “ காம்ரேட் ! இது மாநிலக்குழு கூட்டம் .இங்கு வாய்க்கு வந்ததை பேசக்கூடாது . இது எலக்‌ஷன் ரிவியூ ரிப்போர்ட் . போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் அல்ல ;பிரேதபரிசோதனை அறிக்கை அல்ல .ரிவியூ என்பது கம்யூனிஸ்டு பாரம்பரியம் .பலம்.” என்ப் பொரிந்து என்னைக் கண்டித்துவிட்டார் .

 

அப்புறம் சொன்னார் , இந்த அறிக்கையை முற்றாக நிராகரிக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு , இதன் குற்றம் குறைகளை எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் . போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் போன்ற சொற்களைத் தவிர்க்க வேண்டும்.”

 

நான் அந்த வார்த்தையை திரும்பப் பெற்றுவிட்டு தொடர்ந்து பேசினேன் .கடுமையாக விமர்சித்தேன் .காது கொடுத்து புன்முறுவலோடு கேட்டுக்கொண்டிருந்தார் .

 

எனக்கு பின்னால் பேசவந்த தோழர் உரா வரதராசன் , “ தோழர் சுபொ சொன்ன வார்த்தை மிகப்பிழையே !.அதை ஏற்கமுடியாது . ஆர்யு சரியாகத்தான் சுட்டிக் காடியுள்ளார் . ஆனால் இந்த அறிக்கை ஏற்புடையது அல்ல .இது செத்தவன் கையில் கொடுத்த வெற்றிலை பாக்காகத்தான் இருக்கிறது” என்றார் .

 

ஆர்யு உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர் . பின்னர் உணவு இடை வேளையில் என்னை அழைத்து “ உங்களுக்கு விமர்சிக்க முழு உரிமை உண்டு . வார்த்தைகளை எச்சரிக்கையாக வீசவேண்டும் . செயற்குழு ஆளுங்கட்சியுமல்ல ; மாநிலக்குழு எதிர்கட்சியுமல்ல .மாநிலக்குழு முடிவுகளை அமலாக்குவதே செயற்குழு” என் அமைப்பு பாடமே சொல்லிக்கொடுத்தார் .

 

 

ஓர் வேடிக்கையான அனுபவம் . நான்  ஓர் கூட்டத்தில் கலைஞர் எனப் பேசிவிட்டு கீழே இறங்கியதும் , ஒரு அறிவுஜீவி தோழர் அது என்ன கலைஞர் , கருணாநிதி என்று சொன்னால் போதாதா எனக் கேட்டார் .

 

சில நாட்களில் இன்னொரு பொதுக்கூட்டம் . நான் பேச எழுந்தேன் .எதிரே அதே தோழர் .வம்பு எதற்கு என கருணாநிதி எனப் பேசினேன் .மேடையில்  இருந்த சங்கரய்யா நீங்க சொன்ன அரசியல் விமர்சனம் சரியே ! கலைஞர் என்று சொன்னால் நாம் குறைந்து போய்விடமாட்டோம் .நாம் சொல்வதை மற்றவர்கள் கவனிப்பார்கள்,மதிப்பார்கள் என்றார் .அவர் பேசும்போது நண்பர் கலைஞர் கருணாநிதி என்றே குறிப்பிட்டார் ஆனால் அரசியல் விமர்சனத்தில் கறாராக இருந்தார் . அது முன்மாதிரியாக இருந்தது .

 

ஆர்யு ,சங்கரய்யா ,ஏபி ,விபிசி போன்ற தோழர்கள் எதிரியை விமர்சிக்கும் போது அதில் கண்ணியம் பேண வேண்டும் என்பார்கள் . நாம் சொல்லுகிற செய்தி வலுவாகவும் நாம் பயன்படுத்தும் சொற்கள் கண்ணியமாகவும் அமைவதே மேடை இலக்கணம்.

 

இன்னும் பேச எவ்வளவோ உள்ளது .பேசுவோம் !!!

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

21 ஆகஸ்ட் 2021.