செல்க 2020 … வருக 2021

Posted by அகத்தீ Labels:

 



செல்க 2020 … வருக 2021

 

 

பிறப்புச் செய்தியோ

இறப்புச் செய்தியோ

இல்லா நாளொன்றில்லை

 

நாட்களின் தொகுப்பாய்

வாரம் இருக்கையில்

மாதம் இருக்கையில்

அதுவும் அப்படித்தானே

 

ஒவ்வொரு ஆண்டும்

முடிவும் தொடக்கமும்

இந்த ஐந்தொகையோடுதான்

 

நன்றும் தீதும் கலந்ததே வாழ்வு

பெற்றதும் இழந்ததும் பெருங்கணக்காகும்

வழக்கம் போலும் வழக்கம் தவறியும்

நடந்திடும் நல்லதும் கெட்டதும்

 

 “முன்னைப் போல் இப்போது இல்லை”

காலந்தோறும் இதே வார்த்தை

தாத்தா /பாட்டி சொன்னார்

அப்பா /அம்மா சொன்னார்

நானும் சொன்னேன்

நாளை என் மகனும் /மகளும் சொல்வார்

பேரனும் பேத்தியும்கூட

இப்படியே காலம் நகரும்

 

முன்னேறியபடியே – ஆம்

முன்னேறியபடியே …

காலம் நகரத்தான் செய்யும்

ஆனால்

யாருக்கானது முன்னேற்றம்

கேள்வி தொடரத்தான் செய்யும்..

 

சிக்கி முக்கி கல்லோடு

திருப்தி அடைந்திருந்தால்…

மரவுரியோடும் மண்பாண்டத்தோடும்

மனநிறைவு கொண்டிருந்தால்… ?????

திருப்தி என்பது வளர்ச்சியின் எதிரி

தேடலே நம்மை முந்தித்தள்ளும்

 

 “துப்பாக்கிகள்

கிருமிகள்

எஃகு”

வரலாற்றை முடுக்கிய விசைகள்

என்பார்

ஜாரெட் டைமண்ட்

 

தொற்றுநோய்கள் அழிவைத் தந்தன

ஆட்டம் போட்டன ஆயினும்

அதனை வெல்லும் மருத்துவத்தையும்

மனிதகுலமே கண்டெடுத்தது

 

மார்க்சியம் ஞான தீபமேற்றி

காலத்தை வசப்படுத்த

தொடங்கிய போர் இன்னும் முடியவில்லை

 

மானுட சக்திக்கு ஈடாய்

மாற்றொன்றில்லை தோழா!

சாதி வெறி, மதவெறி சாகும்

சரித்திரப் பெருநதி ஓடும்!

 

செல்க 2020

வருக 2021

வருக ! வருக !

 

சுபொஅ.

 

குறிப்பு :

“துப்பாக்கிகள் – கிருமிகள் -எஃகு”

ஜாரெட் டைமண்ட் எழுதிய நூல் .

 


எது முக்கியம் ?

Posted by அகத்தீ Labels:

 


எது முக்கியம் ?

 

 


 

தலையே ! தலையே !

மேலே இருக்கும் முடியைவிட

உள்ளே இருக்கும் மூளையா முக்கியம் ?

 

கண்ணே ! கண்ணே !

புருவத்தின் ஒப்பனையைவிட

பார்வையா முக்கியம் ?

 

காதே ! காதே !

ஜால்ரா ஓசையைவிட

போராட்ட முழக்கமா முக்கியம் ?

 

வாயே ! வாயே !

மந்திர உச்சாடணத்தைவிட

கேள்வி கேட்பதா முக்கியம் ?

 

முகமே ! முகமே !

முகமூடி அணிவதைவிட

ரெளத்திரம் பழகலா முக்கியம் ?

 

கையே ! காலே !

தொழுது அடிபணிவதைவிட

போரிட அணிவகுப்பதா முக்கியம் ?

 

உயிரே ! உடலே !

கூனிக்குறுகி குற்றேவல் புரிவதைவிட

மனிதனாய் எழுவதா முக்கியம் ?

 

மனிதா ! மனிதா !

சொரணையற்று சங்கியாய் இருப்பதைவிட

சுயமரியாதையோடு வீழ்வதே மேல் !

 

சுபொஅ.

 

 


உங்கள் கண்ணீரில்

Posted by அகத்தீ Labels:

 


உங்கள் கண்ணீரில்




உங்கள் கண்ணீரில்
உப்பில்லை
ஈரமில்லை
வருத்தமில்லை
ஆனாலும் நீங்கள்
அழுகிறீர்கள் ! – அது

கார்ப்பரேட் அழுகை
விவசாயிகளின் மீதான
கரிசனத்தால் நீங்கள்
அழவில்லை !
போராட்ட நெருப்பை
அணைக்க அழுகிறீர் !
மன்னிக்கவும்
அழுவதுபோல் நடிக்கிறீர் !
உங்கள் அழுகை தொழுகை
எல்லாமும் மகாநடிப்பே !

மோடிஷா !
உங்களை நான் மட்டுமல்ல
ராமன் ,சிவன் ,முருகன் ,துர்க்கா
அல்லா ,ஏசு ,சீக்கிய குரு நானக் ,
சத்புருஷர் ,மகாவீர்
உட்பட எந்தக் கடவுளும்
கடவுளின் தூதரும்
நம்பமாட்டோம் !

போராடும் விவசாயிகளே!
உங்களுக்கே
எங்கள் ஆசீர்வாதங்கள்!!!!

ஏனெனில்
நாங்கள் இருப்பதே
உழைப்பாளிகள்
வியர்வையில்தானே!

சுபொஅ.