கரை கடந்த சோகங்களும் கேள்விகளுமாய் ஓர் நாவல்.

Posted by அகத்தீ Labels:






கரை கடந்த சோகங்களும் கேள்விகளுமாய் ஓர் நாவல்.

சு.பொ.அகத்தியலிங்கம்.

  ‘சுமையா’ , ‘கூழாங்கற்கள்’ என இரு சிறுகதைத் தொகுப்புகள் மூலம் கனவுப்பிரியனாக அறிமுகமாகிய -  மணல் பூத்தகாடு எனும் நாவல் மூலம் முஹமது யூசப்பாக முகங்காட்டிய - தகவல் கொண்டாடியின் அடுத்த நாவல்   ‘கடற்காகங்கள்’ வாசித்து முடித்தேன் ; முந்தைய மூன்று படைப்புகளும் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்போடு…..

 “ இஸ்லாமிய வரலாற்றில் உமையாக்கள் ஆரம்பித்து வைத்த கரும்புள்ளி [நுக்த் – Nugtah ] நூற்றாண்டுகள் கடந்தும் சிரியா நிலத்தின் மீதுமட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபித்துள்ள இஸ்லாமியர் மீதும் – அவர்களின் மண் மீதும் – விதவிதமான பெயர்களில் – விதவிதமான இயக்கங்களில் விதவிதமான விதவிதமான தீவிரவாதாக் கொள்கைகளோடு; இரத்தம் தோய்ந்த புள்ளியாக நிரந்தரக் கறையைப் படியவிட்டு ,இன்னமும் உயிர் கொல்லியாய் வாழ்கிறதே என்ற கோபத்தில் அங்கிருந்த சுவற்றை எட்டி மிதித்தான்.”

என இறுதியில் கதாநாயகன் குழந்தை நல மருத்துவர் தாரிக் தாங்க முடியாமல் கலங்குவதும் ; அரற்றுவதும் ; “இவுங்க எல்லாம் ஏன் முஸ்லீமாகப் பிறந்தாங்க சத்யா , முஸ்லீமாகப் பெறக்கிறது என்ன அவ்வளவு குத்தமா ..? இல்ல இந்த மண்ணுல பெட்ரோல் கிடைக்கிறது தப்பா… ? என்று அரற்றியபடி அழுகையுடன் மொபைல் துண்டிக்கப்பட்டது.” சிரியாவில் மருத்துவமனை மீது நடந்த குண்டு வீச்சில் தாரிக் இறந்தான்  .

தமிழக கடற்புரமான இணையம் புத்தன் துறை எனும் ஊரில் தொடங்கி சிரிய நாட்டின் அலிப்போவில் முடியும் இந்நாவலின் பெரும் பகுதி அமீரகம் [UAE]சார்ந்த டெல்மா தீவிலேயே நிகழ்கிறது . ஆனால் பல நாட்டுக் குடிமக்களோடும் அவர் சார்ந்த பிரச்சனைகளோடும் கதை நகர்கிறது .தீவின் வர்ணனை நாமும் ஒரு முறை அங்கு போய்வர ஆர்வத்தைத் தூண்டுகிறது .

சென்னை பெசண்ட் நகரில் சுனாமிக்கு ஆசை மனைவி பானுவையும் மகள் ஆஷிபாவையும் கண்ணெதிரே பறிகொடுத்த நீங்கா சோகத்தோடு பயணிக்கிறான் தாரிக் . கடலாடிக்கு தைரியத்தைக் கற்றுத் தந்த கடலே அவர்கள் மனதில் பயத்தையும் விதைத்துவிட்டது .

 “ அவரவர் அவரவரின் விருப்பத்திற்கு எதுவும் பேசிக்கொள்ளலாம் .ஆனால் கண் எதிரே நிகழ்ந்த் இழப்பை .அழிக்க,புத்தியில் சேகரிக்கப்பட்ட செய்தி அழிய மனப்பிறழ்வு நிகழ்ந்தால் ஒழிய வேறு வழியில்லை .”

[ இந்த வரிகளை நாவலில் படித்த போது அண்மையில் நான் இழந்த ஓர் அருமைத் தோழரின்  நினைவு ஒரு நாள் முழுவதும் நூலை படிக்க விடாமல் தடுத்துவிட்டது .]

ஆக தன்னை சதா வாட்டிக்கொண்டிருக்கும் நினைவிலிருந்து விடுபடத்தான் தாரிக் டெல்மாவை நோக்கி பயணித்தான் ,தன் மருத்துவத் தோழி சத்யா ஆலோசனைப்படி.

அலை ஓய்வதில்லையே அங்கு சந்திக்கும் முவாசின்- டீச்சர் சமீரா தம்பதியர் ,ராஜா - சுல்தானா , டேனியல் -பொற்கொடி என்கிற எஸ்தர் , ஜெர்ரி ,மர்வான் ,சாவக்காடு ஹமீத் ,டயானா , ஷெர்லின் , கார்லோ ,செல்வராஜ் , டாக்டர் அம்ரு ,மஜீத் ,அப்பாஸ் மாமா ஒவ்வொருவரும் வாழ்வின் பல சோகங்களையும் குணங்களையும் சுமந்தபடி பயணிக்கின்றனர் .

பரந்த ஞானமும் கூர்மதியும் கொண்ட டீச்சர் சமீரா குழந்தை இன்மையால் படும் வேதனையையும் , தாவூத் தொடர்பின் மூலம் ஈடுகட்ட முயல்வதும் நுட்பமான உளவியல் சமனுடன் சித்தரிக்கப்பட்டிருக்கிறது . வழக்கமான முஹமது யூசுப் நாவலைவிட இந்நாவலில் பாலியல் சற்று தூக்கலாய் உள்ளது . அப்பிக் கிடக்கும் சோகத்தைக் கடக்க இது தேவைப்பட்டிருக்கலாம்.

 “அந்த பெர்ஷியன் கடலில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று மீன் பிடிக்கலாம் .டேனியும் அவனது சக ஆட்களும் மார்வானுடன் சேர்ந்து அதிகம்  செல்வது கத்தார் நாட்டின் அருகில்தான்.ஆனால் யாரும் யாரையும் சுடுவதில்லை.இந்தக் கடலுக்கு ஈரம் இருந்ததால் மீனவர்கள் செத்து ஒதுங்கியதாக ஒரு நாளும் இங்கு பத்திரிகையில் செய்தி வந்ததில்லை . ”

 “ ஒரு வேளை இந்தியாவில் உயர் பதவிகளில் எல்லா காலங்களிலும் இருக்கும் உயர் குலத்தோர் மீன் கருவாடு தின்பவர்களாக இருந்திருந்தால் இன்னேரம் கடலாடிகளின் துயர் புரிந்திருப்பார்களோ ?”

மேலே சுட்டிய வரிகள் நெற்றிப் பொட்டில் பளார் பளார் என அறைகிறது .


வசிய மருந்து வைப்பதோ எடுப்பதோ அறிவியல் பூர்வமில்லை எனத் தெரிந்தும் சக நண்பர் அன்வர் ராஜாவினை உளச்சிக்கலிருந்து மீடக் அதனை மேற்கொள்ளச் செய்வதும் ; அது பலனின்றிப் போனதாய் முடிப்பதும் ஒரு நடைமுறை சாத்தியமான அணுகுமுறையோ ? ஆயினும் நாவல் வாசிக்கும் எல்லோரும் அப்படிப் புரிந்து கொள்வார்களா ?

அன்வர் ராஜா- சுல்தான உறவில் இனம்காண இயலா நம்பிக்கையின்மை ;தாரிக் சுனாமியில் பானுவை இழ்ந்தான் அலெய்டா காதலும் அந்தரத்தில் நிற்க கதை முடிந்து விட்டது ; முவாசின் –சமீரா உறவுக்கு இடையிலும் ஓர் அபசுரம் ; டேனியல் – பொற்கொடி போராட்டத்துக்குப் பின் வாழ்வைத் துவக்குகிறார் இப்படி ஒவ்வொரு கதாபாத்திரமும் பிரச்சனைகளோடே மல்லுக்கட்டுவது சமூக யதார்த்தம்தானே !

 “ வாழ்வு என்பதே கேள்வி எனும் கிளையின் மீது நிற்கும் ஒரு காக்கைதானே” என்றும் ; “ விவாதங்களின் மிச்சம்தானே இருத்தலின் அடையாளம்” என்றும் முன்னுரையில் முஹமது யூசுப் சொல்வது நாவலின் உள்ளுறையாய் இருக்கிறது .

இயேசு  ஐரோப்பியாவிலா பிறந்தார் ? “வளைகுடா நாட்டில்தான் பெத்லஹேம் இருக்கு ,அப்போ இங்கதாஸ்கிருஸ்துமஸ் ட்ரீ வளரது,இங்கதான் பனி பொழியுது ,இங்கதான் மாட்டுத் தொழுவத்திலதான் இயேசுநாதர் பிறந்தார்…” என அங்கு சென்று படம் எடுத்து மொபைலில் பதியும் தாரிக் மதம்பிடிக்காத இறைநம்பிக்கையாளர் .

மணல் பூத்த காட்டில் தோளப்பா மூலமே வகாபியிஸத்தின் வரலாறும் தீங்கும் விவாதிக்கப்படும் .இந்நாவலில் சமீரா , சாவக்காடு ஹமீது என சில பாத்திரங்கள் வழி இஸ்லாம் குறித்த நல்லதும் கெட்டதும் வரலாறும் புனைவும் பேசப்படுகிறது ;ஆயின் சில இடங்களில் நூலுக்கு வெளியே துருத்திக் கொண்டு தகவல் கொட்டுகிறது .

ஒருவர் பிற மதத்தை விமர்சிக்கும் போது அது மதப் பகையாகும் ; ஆனால் மதத்துக்கு உள்ளிருந்தே விமர்சனக் குரல் எழுவது ஜனநாயகம் ஆகும் . அவ்வகையில் இந்நாவல் குறிப்பிடத்தக்கது .ஆயின் ,முஸ்லீம் அல்லாத ஒருவர் இதன் உட்கூறுகளை மிகச் சரியாக உள்வாங்க முடியுமா ? அல்லது அப்படி சொல்லப்பட்டிருக்கிறதா என்பதே கேள்வி . இன்னொன்று இஸ்லாம் இளைஞர்களிடம் இந்நாவல் சார்ந்த உரையாடல் நிகழ்த்த இப்போது வாய்ப்பு உள்ளதா ? இல்லையேல் நாவலின் நோக்கம் கரை சேராது .


இந்த நாவலில் தகவல்கள் சில இடங்களில் வலிந்து திணிக்கப்பட்ட உணர்வும் ; பானு /ஜானு என எழுத்துப் பிழை , பாசக்காரன் சாவக்காடு ஹமீது என்பது பாஜககாரன் [பக்கம் 264 ]என வந்திருப்பது பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் சொன்னேன் .பிழை திருத்துவதிலும் எடிட்டிங்கிலும் இன்னும் கூடுதல் கவனம் தேவை .

மார்ச் மாதம்தான் மணல்காடு விமர்சனம் எழுதினேன் .ஜனவரியில் கடற்காகம் மகிழ்ச்சி அளிக்கிறது . கொஞ்சம் அவகாசம் எடுப்பினும் பிழை அல்ல ;இன்னும் செழுமையான நாவலை முஹமது யூசுப்பிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

கடற்காகம் ,ஆசிரியர் : முஹமது யூசுப் ,
பக்கங்கள் :  328    ,விலை : ரூ.  395

வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ்,
214 ,புவனேஸ்வரி நகர் 3 வது முதன்மைச் சாலை ,
வேளச்சேரி,சென்னை- 6 00042.

அலைபேசி : 9042461472 /9841643380

நன்றி : தீக்கதிர் ,புத்தகமேசை ,23/12/19. தீக்கதிரில் சுருக்கப்பட்ட வடிவம் வந்துள்ளது .இங்கு முழுமையாக வெளியிடப்படுகிறது.




குடிகேடர் ஆட்சி வீழ்க !

Posted by அகத்தீ Labels:




 குடிகேடர் ஆட்சி வீழ்க !

உடுத்தும் உடையால்
உண்ணும் உணவால்
கும்பிடும் சாமியால்
மனிதர்களைக் கூறுபோடும்
குரூரமான பிரதமர்
கொடிய உள்துறை அமைச்சர்..
கேடுகெட்ட அமைச்சர்கள்
நத்திப் பிழைக்கும் அடிமைகள்
நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல
வன்மம் மிக்க காட்டாச்சி .

ஏ ! புயலே !
இந்த அநீதியின் ஆட்சியை
உன் இரக்கமற்றக் கரங்களால்
புரட்டிப்போடு !

ஏ ! சுனாமியே !
உன் பெரும்பசிக்கு
இந்த அக்கிரம ஆட்சியை
விழுங்கி ஏப்பம்விடு !

ஏ! நெருப்பே !
உன் சினம் மிக்க நாவல்
வன்மம் மிக்க ஆட்சியைச் சுட்டெரி !

நாங்கள் இரத்தம் சிந்தி வாங்கிய
இந்தியா இதுவல்ல ..
காந்தியும் ,பகத்சிங்கும் உயிர் தந்த
இந்தியா இதுவல்ல !

அநீதிக்கு தலைவணங்குவதே
தேசபக்தி எனில்
எனக்கு அது தேவையே இல்லை
உங்களுக்கு ??????

சுபொஅ.16/12/




ஆயின்….

Posted by அகத்தீ Labels:





ஆயின்….

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

என் சகோதரனுக்கு  அநீதி இழைக்கப்படும் போது - அதை
நீதியின் வெற்றி எனக் கொண்டாடுவது அமைதியா ?

சகமனிதனை மதம் ,சாதியின் பெயரால் அவமதிப்பதும்
இழிவுசெய்வதும்  அமைதி பூங்காவின் லட்சணமா ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

 நல்லிணக்கத்தை குலைக்க யாரும் விரும்பவில்லை – ஆயின்
வலுத்தவனுக்கு வாலைக் குழைப்பதா நல்லிணக்கம் ?

நீதிக்கு தலைவணங்கவே யாவருக்கும் விருப்பம் – ஆயின்
நெஞ்சார பொய்சொல்வோரிடம் மண்டியிடுவதா நீதி ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

சட்டத்தின் ஆட்சிக்கு உட்படச் சம்மதம்தான் – ஆயின்
கொழுத்தவனைக் காப்பதற்கா சட்டமும் ஆட்சியும் ?

தியாகம் செய்வதற்கு தயக்கம் இல்லை – ஆயின்
குபேரன் கொழுக்க ஏழை கோவணத்தை இழப்பதா தியாகம் ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

மனச்சாட்சியைக் கொன்று புதைப்பின்
மயாண நிசப்தமே எங்கும் சூழும் !
மனட்சாட்சி விழித்து எழுமின் !
மனமும் கண்களும் சினந்து சிவக்கும் !!!!

- சு.பொ.அகத்தியலிங்கம் .
12/11/2019.



“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்! “போர் வியூகம்” சமைப்பீர்!

Posted by அகத்தீ Labels:




கீழ்க்கண்ட பத்தியில் முதல் இரண்டு வரியைத் தவிர மற்றவை இடமின்மையால் தீக்கதிரில் விடுபட்டுள்ளன . இங்கு அதனையும் சேர்த்து வெளியிடுகிறேன் .

 “நூல் இறுதியில்  திணிக்கப்பட்ட என்.குணசேகரனின் கட்டுரை இந்நோக்குக்கு உதவுமா ? அவர் பதிலுரை பொத்தாம் பொதுவாய் சமாதானம் சொல்வதாய் மட்டுமே உள்ளது. தவறியும் பிராமணியம் ,வர்ணாஸ்ரமம் என்ற சொற்களைக்கூட பயன்படுத்தாமல் சாதியத்தை பேசுவது வியப்பாய் உள்ளது . நிறைவாய் சொல்லும் சூத்திரத்திலும் எளிதில் புரியம்படி பளிச்சென்று சொல்ல வில்லை . டெல்டும்டே அம்பேத்கரிஸ்ட் இயக்கங்கள் பற்றி சுயவிமர்சனமாய் சொல்லியிருக்கிறார் ; ஆனால் குணசேகரன் கட்டுரையில் சுயவிமர்சனம் இல்லையே ஏன் ?”


“சாதியின் குடியரசை” விவாதிப்பீர்!  போர் வியூகம்” சமைப்பீர்!

சு.பொ.அகத்தியலிங்கம்.


நவீன தாராளமய இந்துத்துவா காலத்தில் சமத்துவம் பற்றி சிந்தித்தல்என்கிற துணைத் தலைப்போடு வந்திருக்கிறசாதியின் குடியரசுஎன்கிற ஆனந்த் டெல்டும்டேயின் நூல் ஆழந்த வாசிப்புக்கும் விவாதத்திற்கும் உரியது.  


 பாரதி புத்தகாலய ஆசிரியர் குழு தன் பங்கிற்கு ஏற்பும் மறுப்பும் கொண்டிருந்தாலும் ஒரு கனத்த விவாதத்திற்கான சட்டகத்தையும் இறைச்சிப் பொருளையும் வழங்கும் இந்நூலை தமிழில் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம்.” என பதிப்புரையில் செய்துள்ள அறிவிப்பு இடதுசாரி அறிவுப்புலம் சார்ந்தோருக்கு மிகுந்த நம்பிக்கை ஊட்டும் .



எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்கிலி இதழில் தொடர்ந்து அவ்வப்போது நடந்தவற்றுக்கு எதிர்வினையாக எழுதியவற்றை  மீண்டும் செம்மைப்படுத்தி கூர்மையாக்கி 13 கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் டெல்டும்டே .  



அனைத்துக் கட்டுரைகளும், “இந்தியக் குடியரசு சாதி என்கிற அஸ்திவாரத்தில்தான் கட்டப்பட்டிருக்கிறது.” என்கிற செய்தியை வலியுறுத்துவதாகவும் , “ ஒரு ஜனநாயக் குடியரசாக நாம் உயிர் பிழைப்பதுபற்றி கவலைப்படுவதாகவும் அமைந்துள்ளது .


 “ ஆனந்த் டெல்டும்டேயின் தெளிவான வாதங்கள் யாருக்கும் வசதியாக இருக்காது.” எனமுன்னுரையில் சுனில் கில்னானி சொல்லியிருப்பதின் பொருளை நூலை வாசிக்க வாசிக்க உணரலாம் .

  “சாதியை ஒழிக்காமல் இந்தியாவில் புரட்சி வராது . அதே சமயம் ,ஒரு புரட்சி இல்லாமல் சாதியை ஒழிக்க முடியாது.அதனால் இரு தரப்பும் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது என்றாலும்கூட இவ்விரு நிலைப்பாட்டின் ஆச்சாரக் கூட்டங்களோடு நான் மோதத்தான் வேண்டும் என நான் உணர்ந்தேன்.அது உழுவதற்கான ஒரு தனிமையான வயல்.”என அறிமுக அத்தியாயத்தில் ஆசிரியர் நூலின் உள்ளடக்கம் செல்வழியை சொல்லிவிட்டார் .

13 அத்தியாயங்களில் 9 அத்தியாயங்கள் நேரடியாக மேலே சுட்டிய பொருள் சார்ந்தே சுழல்கிறது .மாவோயிஸ்ட் பற்றிய அத்தியாயம் தலித், பழங்குடியினர் உரிமை இவற்றுடன் அரசு பயங்கரவாதத்தையும் பேசுகிறது . கல்வி, சுவச் பாரத், ஆம் ஆத்மி பற்றி பேசும் மற்ற மூன்று கட்டுரைகளும் கூட இறுதியில் குடியரசின் முகலட்சணத்தை, சாதியப் பார்வையைத் தோலுரிப்பதாக அமைந்துள்ளன .  

இடஒதுக்கீட்டின் சுருக்கமான வரலாற்றோடு அமலாக்கத்தையும், அதன் எதிர்வினைகளையும், விளைவுகளையும் மிக கூர்மையாக அலசுகிறார் . 1. “இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவது சாதியல்ல குடும்பம்என்ற அளவுகோலை இணைத்திருந்தால் எனும் வாதம். 2. இட ஒதுக்கீட்டால் பலன் பெற்றோர் தனித்தீவாகிவிட்டனர் என்கிற கவலை. 3. புதிதுபுதிதாய் சாதிகள் ஒதுக்கீடு கோருதல், உள் ஒதுக்கீடு கோரிக்கை. 4. தனியார்துறையிலும் இட ஒதுக்கீடு என பல முனைகளில் விவாதத்தை முன் வைக்கிறார் .  

47 பக்கங்கள் கொண்ட முதல் கட்டுரையும் , பிற அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ள செய்திகளும் இடஒதுக்கீட்டை  ‘சர்வரோக நிவாரணியாகப் பார்ப்போருக்கும் ,  ‘இடஒதுக்கீடே சர்வரோக காரணிஎன்போருக்கும் கசப்பாக இருக்கும்அதுவும் உயர் சாதியினருக்குதனி வகை ஏழையென10 சதம் இட ஒதுக்கீடு அவசரமாக அமலாக்கப்பட்ட பின்னணியில் , தமிழகப் பார்வையும் பிற மாநிலப் பார்வையும் முரண்படும் சூழலில்,  கட்டாயம் விரிவாகப் பேச பல செய்திகளைச் சொல்லுகிறது .

 “ கிராமம் என்பது பிரதேசவாதம், அறியாமை,குறுகிய மனப்பான்மை, மதவாதம் ஆகிவற்றின் சாக்கடை அன்றி வேறு என்ன ? வரைவு அரசியல் அமைப்பு கிராமத்தை விட்டு தனி நபரை தன் அலகாக எடுத்துக் கொண்டதில் நான் மகிழ்கிறேன்.” எனும் அம்பேத்கரின் மேற்கோளைச் சுட்டும் டெல்டும்டே தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் சொல்லும் செய்திகள் நெஞ்சைப் பதறவைக்கிறது.

இந்தியக் குடியரசு சாதிகளின் அஸ்திவாரத்தில்தான் இன்னும் தன் கோரப்பற்களைக் காட்டிக்கொண்டு இரத்தம் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருக்கிறது.நீதி, நிர்வாகம் ,காவல் ,ஊடகம் என அனைத்தும் சாதியக் கண்ணோட்டத்தோடேயே சகலத்தையும் அணுகுவதை - சாதிய ஒடுக்குமுறைக்கு முட்டுக்கொடுப்பதை அநேக எடுத்துக் காட்டுகளுடன் நிறுவுகிறார்.

நிர்பயா பாலியல் வன்புணர்வு பேசப்பட்டதின் நூற்றில் ஒரு பங்கு கிராமப்புற தலித் பெண் தாக்கப்படும் போது பேசப்படுவதில்லையே .டெல்டும்டே கோபம் நியாயமே! தமிழக அனுபவமும் அதுதானே

தமிழகத்தில் வாச்சாத்தி, சின்னாம்பதி போன்றவை கம்யூனிஸ்ட்டுகள் உறுதியான தலையீட்டால் ஓரளவு வெளிச்சம் பெற்றதும் ;போராடி கொஞ்சம் வெல்ல முடிந்ததும் வரலாறு .அது ஏனோ டெல்டும்டே பார்வையில் படாமல் போய்விட்டது.  

மார்க்சிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள் எனப்படும் இரு தரப்பினருமே தங்களது இயக்கங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்வதற்கும், தங்களது சொந்த அழிவிற்கும் ஏராளமான வேலை செய்துள்ளனர்.” என்பதை விரிவாக ஆய்கிறார்.

அம்பேத்கர் துவங்கிய இயக்கம் எப்படி சிதைவுண்டும், பிளவுண்டும், ஆளும் வர்க்கத்தின் கைக்கருவியாய்ப் போய்விட்டது என்பதை சுயவிமர்சன ரீதியாக ஒளிவு மறைவு இன்றி போட்டு உடைக்கிறார். நிலம் எப்படி தலித் மக்களின் அடிப்படைப் பிரச்சனை என அம்பேத்கரிஸ்ட்டுகள் பார்க்கத் தவறியதை, உனா போராட்டத்தில் அது முன்னுக்கு வருவதை எல்லாம் படம் பிடிக்கிறார் .

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கான்பூர் மாநாட்டில் பேசிய ஒற்றைவரியைச் சுட்டி  “சிங்காரவேலுவே இப்படிப் பேசினால்என ஒரு  ‘க்கன்னாவைத்து பிராமணத் தலைவர்கள் என கம்யூனிஸ்ட்கள் மீது விமர்சனமாக்குகிறார்
சகோதரத்துவம் என்ற பேச்சு சாதி உள்ளவரை வெறும் பேச்சே! மந்திர தந்திரங்களால் நோயைப் போக்க முடியாததுபோல் .நமது சமூகப் பெருநோயாகிய சாதி என்னும் நோயை கள்ள நியாயத்தால் போக்க முடியாது. பூணூலைத் தரித்துக்கொண்டு அதற்குரிய சாதிச் சடங்குகளை செய்து கொண்டே சாதியை விட்டதாகச் சொல்லும் பெரியோர்களின் நியாயம் கள்ள நியாயமே .இந்த கள்ள நியாயம் இந்தியருக்கு வெகுகாலம் இருந்து வருகிறது.” என்று சொன்னவர் சிங்கார வேலர், இன்னும் வலுவாய் சாதிக்கு எதிராய் குரல் கொடுத்தவர். ஆகவே டெல்டும்டே சுட்டியது பொருத்தமல்ல.

நிலம் ,பொருளாதாரம் போன்றவற்றில் அம்பேத்கரிஸ்ட்டுகள் தவறிழைத்தது போலவே, பிராமணியம், வர்ணாஸ்ரமம் போன்றவற்றை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள் போதிய அக்கறை காட்டாமல் தவறிழைத்துவிட்டார்கள் என டெல்டும்டே நூல் நெடுக வாதிப்பது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடக் கூடிய அனுபவமாக இருக்கலாம்.

 “ எனது கருத்தின்படி இந்த நாட்டின் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது . அவை பிராமணியமும் ,முதலாளித்துவமும் . இதில் பிராமணியம் என்பதில் ஒரு சமூகமாக பிராமணர்களிடம் உள்ள அதிகாரம் ,சலுகை ,நலன் ஆகியவற்றைக் குறிக்கவில்லை. நான் அந்த அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை .பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம் போன்றவற்றை மறுப்பதைக் குறிப்பதாகும்.இந்த வகையில் பிராமணர்கள்தான் அதை ஆரம்பித்தவர்கள் என்றாலும் பிராமணர்களிடம் மட்டுமின்றி எல்லா வகுப்பினரிடமும் பரவலாகக் காணப்படுகின்றது .” அம்பேத்கரின் இந்த மேற்கோளை மிகச்சரியாகப் பொருத்தி இதனை உள்வாங்காத கம்யூனிஸ்டுகள்,  அம்பேத்கரிஸ்டுகள், முற்போக்காளர்களை விமர்சிக்கிறார் டெல்டும்டே.

பகுஜன் சமாஜ் கட்சியின் தோற்றம், வெற்றி, அதன் பலவீனம் இவற்றை மிகச்சரியாகவே கணிக்கிறார் .கன்ஷிராமிற்குப் பின் வந்த மாயாவதி சர்வஜனம் என முன்வைத்த வாதம் தேர்தலில் வெற்றி பெற உதவியதையும், அதனால் சாதிய ஆதிக்கம் உள்ள மாநிலத்தில் ஓர் தலித் முதல்வராக முடிந்ததும் ; அதன் மூலம் சில சாதனைகளைச் செய்ததையும் , தலித்துகளிடையே நம்பிக்கை உருவானதையும் கோடிட்டு காட்டுகிற போதே ; இலக்கை மழுங்கடித்துவிட்டதையும் சொல்கிறார் .

பிராமணர், மேல் சாதியினர்பகுஜன் கட்சியில் சேர்ந்து வெற்றி. பெற்றாலும் அதுரோட்டி பேட்டிகாவிவகாரமாக அதாவது உணவை சமத்துவமாக பரிமாறுவதாகவோ ,பெண் கொடுத்து பெண் எடுப்பதாகவோ மாறவில்லை என்கிறார் .

சாதிகள் உள்ளார்ந்த வகையில் பிரிப்பவை , அவை ஒரு போதும் மக்களை ஒன்றிணைக்காது’  “மாயாவதியின் சாதி அடிப்படையிலான கூட்டு எந்த சமூகப் புரட்சிக்கும் நேர் எதிராக சாதியத்தை ஆழப்படுத்துவதில்தான் போய் முடியும்,”என்கிற பாடத்தை பகுஜன் சமாஜ் கட்சி மூலம் வரலாறு மீண்டும் ஒரு முறை சொல்லியிருப்பதையும்; கன்ஷிராமின் ஆரம்ப இலக்கை மாயவதி தவறவிட்டுவிட்டதையும், இடதுசாரிகளோடு சேருவதில் பகுஜனுக்கு எப்போதும் விருப்பம் கிடையாது என்பதையும் ; பாஜக கூட போகத் தயங்கியதில்லை என்பதையும் சுட்டிக்காட்டகிறார்.

பாஜக தலித்தை இழுப்பதில் வெற்றி பெறுவதை, அம்பேத்கரை வெறும் வழிபாட்டு உருவமாக மாற்றுவதை நுட்பமாக ஆய்கிறார். ராகுலின் தலித் பாசம் எப்படி அக்கறையோடு செய்யப்பட்டாலும் அது குறிக்கோளைச் சரியாகக் கொள்ளவில்லை என்கிறார் .

ராகுலை விமர்சிக்கும் போது, “அம்பேத்கர் சொன்னதர்ம சாஸ்திரங்களை வெடிவைத்து தகர்க்க வேண்டும்என்பதை காங்கிரஸ் இன்னும் உள்வாங்கவேவில்லைஎன்கிறார். வேறு வார்த்தைகளில் கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்கிறார்.  
பிரதமரின் சுவச் பாரத் பற்றி பேசும் போது, தூய்மைப் பணிக்கு ஒரு சாதி என்ற கலாச்சாரம் மாற்றப்படாமல் சுத்தம் பற்றிய சமூக பார்வை மாறாதென்கிறார் . மிகமிக சரியே !  

வீட்டில் ஆணாதிக்கம் ஓங்கி சுத்தம் செய்தல் பெண்கள் பணி என்றும் ; வெளியில் ஒரு சாதியின் பணி என்றும் பார்க்கும் பார்வை என ஆணாதிக்கத்தையும் சேர்த்தே சொல்லியிருக்கலாம். இன்னும் பேச நிறைய உள்ளது .

ஒட்டு மொத்தமாக சாதியம் என்கிற கொடிய ஒடுக்குமுறை சமூக உளவியலுக்கு எதிராய் , மதவெறி பாசிசத்துக்கு எதிராய் கம்யூனிஸ்ட்டுகளும் அம்பேத்கரிஸ்ட்டுகளும் தமிழக சூழலில் பெரியாரிஸ்ட்டுகளும் இணைந்தும் செயலாற்ற வேண்டிய காலம்.

எல்லொரும் ஒன்றுபடும் புள்ளியும் உண்டு. வேறுபடும் புள்ளியும் உண்டு . முன்னதை முன்னிறுத்துவதே இன்றைய தேவை. பின்னதை பரிசீலிப்பது வேறு; அதையே சாக்காக்கி கூட்டாக இயங்குவது சாத்தியமில்லை எனச் சொல்ல முடியுமா?  

வேறுபடும் புள்ளிகளை மட்டுமே மூச்சைக்கட்டிப் பேசிப் பேசி இடைவெளியை பெரிதாக்கி இந்துத்துவா சக்திகளுக்கு உதவும் வறட்டுவாதிகள் தமிழகத்தில் நிறைய உண்டு. அவர் வலையில் விழாமல் டெல்டும்டே நூலை ஆழ விவாதிப்பதும்; சுயவிமர்சனமாய்ப் பார்ப்பதும் காலத்தின் தேவை.  

நூல் இறுதியில்  திணிக்கப்பட்ட என்.குணசேகரனின் கட்டுரை இந்நோக்குக்கு உதவுமா ? அவர் பதிலுரை பொத்தாம் பொதுவாய் சமாதானம் சொல்வதாய் மட்டுமே உள்ளது.

தவறியும் பிராமணியம் ,வர்ணாஸ்ரமம் என்ற சொற்களைக்கூட பயன்படுத்தாமல் சாதியத்தை பேசுவது வியப்பாய் உள்ளது .

 நிறைவாய் சொல்லும் சூத்திரத்திலும் எளிதில் புரியம்படி பளிச்சென்று சொல்ல வில்லை . டெல்டும்டே அம்பேத்கரிஸ்ட் இயக்கங்கள் பற்றி சுயவிமர்சனமாய் சொல்லியிருக்கிறார் ; ஆனால் குணசேகரன் கட்டுரையில் சுயவிமர்சனம் இல்லையே ஏன் ?

நூல் வெளிவந்த பின் விவாதம் பல முனைகளில் நடக்க அனுமதித்து இறுதியில் ஒரு செறிவான நிறைவான நியாயமான தொகுப்புரை வழங்க வழிவிட்டிருப்பின் நல்லது. இப்போதும் இடமும் காலமும் உள்ளதே


.சுப்பாராவ் மொழியாக்கம் நன்று!


ஆசிரியர் : ஆனந்த் டெல்டும்டே, தமிழில் : ச.சுப்பாராவ்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம், 7,இளங்கோ சாலை ,தேனாம்பேட்டை ,
சென்னை -600 077.

பக்கங்கள் :424 , விலை: ரூ.350/

நன்றி : தீக்கதிர் ,புத்தக மேசை , 11/11/2019.