ஆயின்….

Posted by அகத்தீ Labels:





ஆயின்….

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

என் சகோதரனுக்கு  அநீதி இழைக்கப்படும் போது - அதை
நீதியின் வெற்றி எனக் கொண்டாடுவது அமைதியா ?

சகமனிதனை மதம் ,சாதியின் பெயரால் அவமதிப்பதும்
இழிவுசெய்வதும்  அமைதி பூங்காவின் லட்சணமா ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

 நல்லிணக்கத்தை குலைக்க யாரும் விரும்பவில்லை – ஆயின்
வலுத்தவனுக்கு வாலைக் குழைப்பதா நல்லிணக்கம் ?

நீதிக்கு தலைவணங்கவே யாவருக்கும் விருப்பம் – ஆயின்
நெஞ்சார பொய்சொல்வோரிடம் மண்டியிடுவதா நீதி ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

சட்டத்தின் ஆட்சிக்கு உட்படச் சம்மதம்தான் – ஆயின்
கொழுத்தவனைக் காப்பதற்கா சட்டமும் ஆட்சியும் ?

தியாகம் செய்வதற்கு தயக்கம் இல்லை – ஆயின்
குபேரன் கொழுக்க ஏழை கோவணத்தை இழப்பதா தியாகம் ?

மனம் அமைதியைத்தான் விரும்புகிறது -ஆயின் ,
எது அமைதி என்பதில்தான் குழப்பம்.

மனச்சாட்சியைக் கொன்று புதைப்பின்
மயாண நிசப்தமே எங்கும் சூழும் !
மனட்சாட்சி விழித்து எழுமின் !
மனமும் கண்களும் சினந்து சிவக்கும் !!!!

- சு.பொ.அகத்தியலிங்கம் .
12/11/2019.



0 comments :

Post a Comment