Posted by அகத்தீ

Posted by அகத்தீ

அகத்தேடல்-8

Posted by அகத்தீ

அகத்தேடல்-8

கமும் புறமும் வேறாமோ
அங்கும் உளதோ முரண்பாடு?
எங்கும் தேடி சலித்தாலும்

முகம் காட்டும் கண்ணாடி
முகவரியைக் காட்டிடுமோ

கண்ணாடி காட்டும் முகம்
அசலா?போலியா?
அணிந்துள்ள முகமூடியா?
அறிய முயல்கிறேன்
அகத்துள்ளே தேடுகிறேன்

மறுபடியும் மறுபடியும்
கருங்குரங்கை நினைக்காமல்
லேகியம் சாப்பிடத்தான் ஆசை
விடாமல் துரத்துகிறதே
அந்தக் கசப்பு

பரமனின் அடிமுடியைப்
பார்த்தவரில்லை என
ஆன்மீக அடிப்பொடிகள்
அளந்த கதை கேட்டதுண்டு

சாதியின் ஆணிவேர் சல்லிவேரை
அலசி அடையாளங் கண்டு
அமிலத்தை ஊற்றிடவே
ஆசைப் படுகிறேன் வெகு நாளாய்..

இதுதான் விஷவேர் என்றே
வெளிச்சம் பாய்ச்சியவர்கள்
அநேகம் அநேகம்
ஆனால் அவர்கள்
தோற்ற இடம் எது?

தோண்டி எடு வரலாற்றை
துருவிப்பார் தத்துவத்தை
சாதிச்சிலுவை யுகயுகமாய்
அழுத்துவதின் ரகசியத்தை
அறிவியலின் வெளிச்சத்தில்
ஆராய்ந்து கண்டுபிடி
அனுபவக் கல்லில் உரசி
ஆழத்தை அளந்து சொல்

நிச்சயமாய்ச் சொல்வேன்
திறந்த மனதோடு
உனக்கு எதிராக
உன்னையே நிறுத்து
குறுக்கு விசாரணையில்
சாதிய அழுக்கைத்
தோலுரித்துக் காட்டு

இது கட்டளையா?
இலை இல்லை
சுய அடையாளத் தேடலின்
முதல் முடிச்சை
அவிழ்க்கும்
இடம் இதுதான்..

தொடரட்டும்
அகத்தேடல்...

சு.பொ.அகத்தியலிங்கம்.


..

அகத்தேடல்-7

Posted by அகத்தீ

அகத்தேடல்-7

உன் சாதிக்கு என் சாதி
உயர்ந்ததென்றும்
இழிந்ததென்றும்
பிதற்றுவதில் பெருமையென்ன?

மிதிக்கின்றாய் ஒருவனை
மிதிபடுகின்றாய் ஒருவனிடம்
கதைக்கின்றாய் சாதிப்பெருமை
உன்னை நீயே
சிமிழுக்குள் சிறையிட்டு
இழக்கின்றாய் சிறகை

தலைமுறை தலைமுறை
சாதி அழுக்கு உன்
தலைக்குள்ளே..

சுத்தமானவன் என்று
எப்படிச் சொல்கிறாய்?
வெட்கங்கெட்டவனே

சாதியின் வேர்களைத்தேடி
சரித்திரத்தின் இருண்ட தாழ்வாரங்களில்
கண்டதென்ன?

சனாதனத்தின் குடிமியையா?
வர்ணஸ்ரமப் பூணூலையா?

இரண்டும் குறியீடுதானே

மநுவின் சட்டம்
அர்த்த சாஸ்த்திரம்
கீதையின் போதனை

முக்கூட்டு மூளைச்சலவையில்
இழந்த சுயத்தை
எப்போது மீட்கப்போகிறாய்?

சடங்குகள் சம்பிரதாயங்கள்
விலங்குகள் என்பதை
எப்போது உணரப்போகிறாய்?

கடல்தாண்டினும்
மலைதாண்டினும்
மதம் மாறினும்

உடை மாற்றி குரல் மாற்றி
நடை மாற்றினும்
மாறாத சாதியை

மனதிலிருந்தே
துடைத்தெறியாத வரையிலும்
சாதிக்கறைதானே
உன் அடையாளம்?

அறிவியலில் நீ
பெற்ற வெற்றியெல்லாம்
விழலுக்கு நீர்தானே

துணியில் கறை நீக்க
சோப்பு உண்டு
சாதிக்கறை நீக்க என்ன வழி
நீ யோசி

மதம் மீறி சாதி மீறி
மனதுக்கு ஏற்ற துணை
நீ தேடு
காதல் பெ
ரு நெருப்பில்
கருகட்டும் சாதி மதம்

-சு.பொ. அகத்தியலிங்கம்

டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும்

Posted by அகத்தீ

டிராபிக் ராமசாமி போன்ற மனிதர் களை கொண்டாடத் தொடங்கினால்தான் நாடு உருப்படும் இப்படி முகநூலில் (பேஸ் புக்கில்) ஒரு நண்பர் கூறியிருந்தார். மனிதர் விடாமல் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கி விதிமீறியக் கட்டடங்கள் சிலவற்றுக் காவது சீல்வைக்கச் செய்துவிட்டாரே என பாராட்டியிருந்தார். அவர் கூறியது ஒருவகையில் சரிதான். தீப்பிடித்துவிட்டதாகவோ, குண்டுவைக்கப் பட்டிருப்பதாகவோ யாரோ ஒரு வதந்தியைக் கிளப்பினால் போதும் பயபீதியில் மிரண்டோ டும் கூட்ட நெரிசலில் மிதிபட்டே நூற்றுக் கணக்கில் செத்திருப்பர். கும்பகோணம் பள்ளியில் குழந்தைகள் கருகிச்செத்த கோரக் காட்சி இங்கேயும் அரங்கேறியிருக்கலாம். சீல் வைக்கப்பட்ட பலகட்டடங்களின் நிலை அதுதான்.

அப்படி ஒரு சோகம் நடக்கும் முன்பே சீல் வைக்கப்பட்டது மகிழ்ச்சியே. டிராபிக் ராம சாமியின் பொதுநல வழக்கும் அதில் நீதி மன்றம் காட்டிய கெடுபிடியும் இல்லாமல் இது நிகழ்ந்திருக்காது. இதற்கே 15 ஆண்டு களுக்கு மேல் உருண்டோடிவிட்டது. மாறி மாறி வந்த கழக ஆட்சிகள் விதிமீறிய கட்ட டங்களை பணம் காய்ச்சி மரங்களாகத்தான் பார்த்தன. அதற்கேற்ப அடக்கி வாசித்தன. இதெல்லாம் நினைவில் அலைபாயும்போதே வேறு சில காட்சிகளும் மனத்திரையில் ஆடு கின்றன.

பொங்கல் மற்றும் இதரப் பண்டிகையை யொட்டி கிராமவீதிகளுக்கே வந்து பெட்ர மாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் ஜவுளியை ஏலம் போட்ட நாட்கள் போயொழிந்தன. வீடு தேடி புடவை, வேட்டி, போர்வை என விற்பதும் வழக்கம். பொதுவாக இந்தியச் சந்தையை வெண்டர்ஸ் ஓரியண்டட் அதாவது வீடுதேடி வந்து பொருள் விற்கும் வகையது என்பர். மக்களைத்தேடி இங்கு சந்தைவரும். ஆனால் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ மக்கள் தான் சந்தையைத்தேடிப் போவார்கள். அதனை மார்க்கெட் ஓரியண்டட் என்பர். கடந்த நூற்றாண்டில் நகரங்களில் முளைத்த ஜவுளிக்கடைகள் மக்களை ஈர்க் கத்துவங்கின. ஜவுளி என்பதே தமிழ்ச்சொல் அல்ல என்பதிலிருந்து அது நமக்கு புதிய வரவு என்பது சொல்லாமலே விளங்கும். இந்தக் கடைகள் தலைச்சுமையாகவும் சைக் கிளிலும் விற்பனை செய்த பலரை அத்தொழி லைவிட்டே ஓட்டியது. அதேசமயம் புதிய நகரக் கடைவீதிகள் பல்லாயிரம்பேரை வியாபாரி களாக்கியது. பல்லாயிரம்பேருக்கு வேலை வாய்ப்பானது. நடைபாதை வணிகமும் பெரு கியது.

தாராளமய உலகமய யுகத்தில் இந்தியா நுழைந்ததும் வர்த்தகங்களின் தன்மை மாற லாயிற்று. ஜவுளிக்கடைகள் ஜவுளிக்கடலா யின. மின்னணு ஊடகங்களின் விளம்பரப் பொறியில் மக்கள் விழலானார்கள். மெகா சீரியல், மெகாத் தொடர்கள்,மெகா ஷோக் கள், மெகா தயாரிப்புகள் என எங்கும் மெகா மோகம் தலைவிரித்தாடலாயின. இவ்வளவு ஏன், இருபது கோடிச் செலவில் உண்ணா விரதம் இருந்த அன்னா ஹசாரேவைத்தான் காந்தியவாதி என்கிற காலம் இது. இந்த காலக்கட்டத்தில் பெருநகரங்களில் மெகா ஸ்டோர்கள் உருவெடுத்தன.அவை சின்ன மீன்களை விழுங்கி பெரிய மீன்களாக உரு வெடுத்தன.அனைத்து நெறிமுறைகளையும் காலில்போட்டு மிதித்துக் கொழுத்தன. மக்கள் அவற்றை நோக்கிப் படைஎடுக்கும்படி விளம்பர மகுடியை சினிமா நட்சத்திரங்கள் மூலம் ஊதினர். பெருகும் வாடிக்கையாளர் கூட்டத்தின் எதிரொலியாக கட்டடங்கள் வரம்புமீறி வீங்கின; வீதிகள் சுருங்கின; திண றின. எடுத்துக்காட்டாக கூறுவதெனில் சென்னை யில் தி.நகர் மெகா வியாபாரக் கேந்திர மானது.

தி.நகரில் சென்று பொருட்கள் வாங்கு வதுதான் நாகரிகமானது; கவுரவமானது என்ற மாயை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்களை தொற்றுவியாதியைப் போல் கவ்வியது. அந்த மாவட்டங்களின் நடுத்தர வியாபாரிகள் பிழைப்பில் மண் விழுந்தது. பஸ்-ரயில் போக்குவரத்தும் பெரும் நெரிசலைச்சந்தித்தன.

இதே காலகட்டத்தில் தகவல்தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, குறிப்பாக கணினித்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி மத்திய தர மக்களில் ஒரு பகுதியினரிடம் பணப் புழக் கத்தை அதிகரித்தது. வெளிநாடு சென்று வரும் அவர்களிடம் மேலைநாடுகள் போல் இங்கு சாலைவசதி, கார்பார்க்கிங், மெகா வணிக வளாகங்கள், போன்ற எதிர்பார்ப்புகள் ஓங்கின. ஊடகங்களில் எதிரொலித்தன.

இதற்காகவே காயை நகர்த்திய உலக வங்கி, ஐஎம்எப் போன்றவற்றின் செயல் மேடையாக அரசும்,மாநகராட்சியும், பெரு நகரவளர்ச்சிக் குழுமமும் உருமாறின. போக்கு வரத்துக்கு இடையூறு, எனவே அண்ணா சாலையில் ஊர்வலம் போராட்டம் கூடாது. தூய்மை மிகமுக்கியம்,எனவே மெரினாவில் பொதுக்கூட்டங்கள் கூடாது. குடிசைகள் சென்னையின் எழிலையும் சுகாதாரத்தையும் கெடுக்கின்றன. எனவே அப்புறப்படுத்த வேண்டும். நடைபாதைக்கடைகளால் டிராபிக் ஜாம் ஏற்படுகின்றன. எனவே அவற்றை காலிசெய்யவேண்டும்.இவ்வாறான குரல்கள் கேட்கத்தொடங்கின. டிராபிக் ராமசாமிகள் உருவாயினர். பொதுநலவழக்குகள் புனையப் பட்டன. நீதிமன்றங்கள் வர்க்கப்பாசத்தோடு ஒத்து ஊதின. சென்னையின் முகப்பொலிவை மட்டுமல்ல ஆத்மாவையே மாற்றியமைக்கும் உலகவங்கிச்சதி அரங்கேறலாயிற்று.

வெறும் வாயை மென்ற இவர்களுக்கு விதிமீறிய கட்டடங்கள் அவலாயின. 15 ஆண்டு கள் போராடி சீல் வைக்கிற அளவுக்கு வென்றனர். அது சரிதான். அதேநேரம் அந்த வணிகநிறுவனங்களை நம்பி நிற்கிற பல்லா யிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை திடீ ரென வீதியில் தூக்கி எறியப்பட்டால் என்ன ஆகும் என்ற கவலை டிராபிக் ராமசாமி களுக்கும் இல்லை.நீதிமன்றங்களுக்கும் இல்லை. நாயை அடிப்பதானால்கூட தப் பிக்க வழிவிட்டு அடிப்பார்கள். அந்த மிரு காபிமானம்கூட இந்த ஏழைத் தொழிலா ளர்கள் மீது காட்டப்படவில்லை. அங்காடித் தெரு சினிமா இவர்களின் வாழ்க்கைப்பாட் டில் ஒரு பகுதியை காட்டின.முழுவதும்அறிந் தால் கண்களில் இரத்தம் கொட்டும். கெட்டும் பட்டணம் போ என பிழைக்க வந்தவர்கள் இன்று சென்னை நகர வீதிகளில் குப்பையாய் கொட்டப்பட்டுள்ளனர்.இவர்களின் வாழ்வு ரிமை பற்றியும் குறைந்தபட்ச கண்ணியமான பணிச்சூழல் பற்றியும் ஊடகப்புலிகளுக்கோ, அரசுக்கோ, நீதிமன்றத்திற்கோ டிராபிக் ராம சாமிகளுக்கோ அக்கறை ஏதும் எப்போதும் இருந்ததில்லை.

இப்போது இவர்கள் கவலையே வேறு. ஏழைகள் உள்ளே நுழையக்கூட முடியாத எக்ஸ்பிரஸ் அவென்யூக்களும் வால்மார்ட்டு களும்தான் இவர்களின் ஒரே கனவு. அதற்கு இடையூறாக உள்ள எல்லாம் அவர்கள் கண்களை உறுத்தும்.அந்த கனவு அவென் யூக்களில் கார்பார்க்கிங் செய்யவே ரூ.200/- உள்ளேபோய் வெளியே வந்தால் குறைந்த பட்சம் ரூ.3000/-காலியாகிவிடும். பெரும்பா லோரின் அரை மாதச் சம்பளம் அது. புதைப்பதற்குக்கூட போதுமானதாகஅல்லாத கைஅகல ரூம் வாடகை ரூ.5000/-யை தாண்டு கிறது. வீட்டுமனை விலையோ பலகோடி. இங்கே சாதாரண மனிதர்கள் பிழைக்க முடி யாது. வாழமுடியாது. நடைபாதை வியாபார மும் போச்சு. நடுத்தர வியாபாரமும் நொடிஞ் சாச்சு. சின்னமீன்களை விழுங்கி அடாவடிச் செயல்கள் மூலம் கொழுத்த சரவணாக்கள், போத்தீஸ்கள் உட்பட அனைத்தையும் விழுங்க வால்மார்ட் திமிங்கிலங்கள் வாய்பிளந்து நிற்கின்றன. அரசும் நீதிமன்றங்களும் அதற்குத் தான் நடைபாவாடை விரிக்கின்றன. சென்னை யாருக்கு? இக்கேள்வியை உரக்க கேட்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐம்பது ரூபாய் கூலிக்காரன் வாழ கையேந் திபவன்களும், கோடீஸ்வரர்கள் டாம்பீகமாக வாழ நட்சத்திர ஹோட்டல்கள்,கடைகளும் என்கிற பன்முனைதான் இந்திய யதார்த்தம் என மேற்கத்திய நிபுணர்கள் பீற்றியதுண்டு. சென்னை நகரில் அதற்கும் ஆபத்து வந்து விட்டது. நடைபாதைக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை,குடிசைகள் முதல் சாதாரண மக்கள் குடியிருப்புவரை அனைத்தையும் பிய்த்து எறிந்துவிட்டு வசதிபடைத்தவர் களின் கனவு நகரமாக சென்னையை சிருஷ் டிக்க மௌனமாக ஒரு உலகவங்கிச்சதி அரங் கேறுகிறது. டிராபிக் ராமசாமிகளும் எக்ஸ் பிரஸ் அவென்யூக்களும் அதன் குறியீடு தான். வாய்பொத்தி மெய்பொத்தி இருக்கப் போகிறோமா? ஒரு விழுக்காடு மக்களுக்கா கவா? 99 விழுக்காடு மக்களுக்காகவா?என வால்ஸ்ட்ரீட்டுக்கு எதிராக போராட்ட முழக் கம் அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் கேட் கிறது. அதைப்போல சென்னை யாருக்கு? வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமா? அனை வருக்குமா?இக்கேள்வி வீதிகள்தோறும் இடி முழக்கமாய் எதிரொலிக்கவேண்டிய நேரம் நெருங்கி விட்டது.இன்னுமா மௌனம்? உரக்கப் பேசுக.

அகத்தேடல்-6

Posted by அகத்தீ Labels:

“ஆயிரம் சொன்னாலும்
நல்லது கெட்டதுக்கு
சாதி சனம்தானே வந்தாகணும்...

கொள்வினை கொடுப்பினையில்
சாதியை விட்டுவிட இயலுமா?

ஆசிட்டிலே
முங்கி எழுந்தாலும்
உன் சாதி அடையாளம்
உன்னை விட்டுத்தொலையுமா?”

கேள்விக் கொடுக்குகள்
மீண்டும் மீண்டும்
கொட்டும்போதும்

உனக்குள்ளிருக்கும்
சாதிய நச்சரவம்
தலைநீட்டத்தான்
செய்கிறது..

மேடையில் முழக்கிய
சாதிய எதிர்ப்பு
வீட்டுக்குள்
முடங்கிப் போகிறது

பொதுவெளியும்
தனிவெளியும்
முரண்பட
சாதியவெறியரின்
நகைப்புக்கு இடமாக..
சாதிபடுத்தும் பாடு
தாளம்படுமா?
தறிபடுமா?

சாதிக்குள் முடங்க
அறிவும் தடுக்கிறது
மனச்சாட்சியும் மறுக்கிறது

ஆயினும்

சமூகநிர்பந்தமும்
குடும்ப நிர்பந்தமும்
முடிவைத்திணிக்கிறது

இப்போதும்
திமிறி வெளிவருவதில்தான்
உனது
மெய்யான இருத்தல்
அர்த்தம் பெறுகிறது...

அதற்கு நீ
அதிகவிலை
கொடுக்கநேரலாம்..

ஆனாலும்
சூழும் தோழமை
கொட்டிய கேள்விக்கெல்லாம்
விடையாகும்
மருந்தாகும்

இன்னும் மீதமிருக்கிறது
நம்பிக்கை

தேடலைத்தொடர்க..