வசந்தம்

Posted by அகத்தீ Labels:




வசந்தம் 1938 ( ஜெர்மன் கவிதை )
------------------------------------------

இன்று
ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை.
காலையில் திடீரென பனிமழை பெய்தது!
தீவு எங்கும் பசுமை
அதன்மேல் வெண்பனித்துளிகள்
இந்தப் பெருங்கரை, தீவு,
எனது மக்கள் கூட்டம்,
என் குடும்பம் மற்றும் என்னையும் அழித்தொழிக்கும்
யுத்தத்தில் இறங்கியவருக்கு எதிராய்
விரல் சுட்டும் ஒரு கவிதையை
எழுதிக்கொணடிருந்த என்னை
எனது இளைய மகன்
வேலிக்கு அருகிலிருந்த
ஆப்ரிக்கோட் மரத்தின் பக்கம்
கையைப்பிடித்து அழைத்துப் போனான் !
குளிரால் உறைந்து நிற்கும் அம்மரத்தை
ஒரு சாக்கால் மூடினான்
நான் அமைதியானேன் !
கடலின்மேல் மழைமேகங்கள் தொங்கினாலும்
பூந்தோட்டங்களில்
வெய்யிலின் தங்க ஸ்பரிசம் !
கொய்யா மரங்களில் பச்சைத்தளிர்கள்
ஆனாலும் பூக்கவில்லை.
பூத்திருக்கும் செர்ரி மரங்களில்
இலைகளில்லை .
வறண்டு காய்ந்த கிளைகளில்
வெண்மலர்க்கொத்துகள் மலர்ந்திருப்பதைப்போல்
கடலில் சிறு அலைகளுக்கிடையில்
வெட்டித் தைத்த பாயுடன்
கடந்துபோகிறது ஒரு படகு.
பாக்கு மரக்கிளிகளின் கொஞ்சல் மொழிகளைக்
கிழித்துக்கொண்டு மூன்றாம் ரைஹின்
யுத்த விளையாட்டால் உண்டான
கப்பல் பீரங்கியின் இடிமுழக்கம்!
கடற்கரை அரளிமரங்களில்
வசந்த இரவில் காலக்கோழிகள் கூவுகின்றன.
மரணம் வருவதைத் தெரிவிக்கவே
காலக்கோழிகள் கூவுவதாய்
மக்கள் நம்புகின்றார்கள் .
அதிகார சக்கிகளின் அந்தரங்களை
வெளிப்படுத்தும் எனக்கு
மரணத்தைத் தெரிவிக்க
காலக்கோழிகளின் உதவி தேவையில்லை!


மூலம் : பர்தோள்ட் பிரட்
மலையாளத்திலிருந்து : எல்.பி.சாமி

(
ஹிட்டலரின் யுத்தவெறி உலகம் முழுவதையும் அச்சுறுத்திய இருண்ட காலமான 1938-41 ஆம் ஆண்டுகளில் பாசிசத்திற்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கவிதை தற்காலத்திற்கும் பொருந்தும். ஹிட்லர் இன்று இல்லை என்றாலும் வாரிசுகள் தொடரத்தானே செய்கிறார்கள்! ) - மொழிபெயர்ப்பாளர்


நன்றி : தேசாபிமானி மலையாள வாரயிதழ் 


புவிவெப்பமாதலின் அறிவியலும் அரசியலும்

Posted by அகத்தீ Labels:




புவிவெப்பமாதலின் அறிவியலும் அரசியலும்

சுற்றுச் சூழல் பாதிப்பு எனும் பேரபாயத்தை இன்றைய உலகம் சந்தித்து வருகிறது .இதனை எல்லோரும் பேசத்தொடங்கியுள்ளனர் . சுற்றுச்சூழல் பாதிப்பு என்பது என்ன? இதைப்புரிந்து கொள்வதிலும் விளக்குவதிலும் ஆளுக்குஆள், அமைப்புக்கு அமைப்பு மாறுபாடுகள் உண்டு. அவை வெறுமே புரிதல் குறைபாடு மட்டுமல்ல ; அதற்கும் மேல் அவை ஒவ்வொன்றுக்கு பின்னாலும் ஒரு நுட்பமான அரசியல் ஒளிந்திருப்பதை அறியாதவரைக்கும்  சுற்றுச் சூழல் பாதுகாப்பு வெறும் வெற்று முழக்கமாகவே இருக்கும்.
மனிதனுக்கு பயன்படாமல் இயற்கை வீணடிக்கப்படுவதைச் சுற்றுச் சூழல் பாதிப்பு எனலாம். அது மட்டுமல்ல , மனிதன் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இப்புவிக்கோளம் நல்வாழ்வுக்கு உகந்ததாக அமையாமல் பெரும்பாதிப்பு ஏற்படும் வகையில் தொடர்ந்து சீரழிக்கப்படுவதையும் சுற்றுச் சூழல் பாதிப்பு எனலாம்.
 ‘‘ஓசோன் படலம் பாதிப்பு ; உலகளாவிய வகையில் வளிமண்டலம் பாதிப்படைதல் -இதனை சுருக்கமாகச் சொன்னால் புவி வெப்பமாதல் ; உயிரினங்கள் அழிந்து அற்றுப்போதல்; மரபணு வகைகள் அழிதல்; அமில மழை; மழைக்காடுகள் அழிதல்; சதுப்புநிலம் அழிதல்; மண் அரிப்பு; பாலைவன மாதல்; வெள்ளமும் வறட்சியும் ;நிலத்தடி நீர் உட்பட குளம் , குட்டை, ஏரிமுதலிய நீர்அருகல்; கடற்கரை மாசுபடுதல்; விஷத்தன்மையுடைய மாசுபடுதல் என பலவகை யான மாசுப் பிரச்சனைகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளன. இவை நம் நல்வாழ்வைப் பாதிக்கின்றன’’ என்கிறார் விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன். தற்போது புவிவெப்பமாதல் மிக முக்கிய அவசர அவசிய சவாலாக நம் முன் எழுந்துள்ளது .இப்பிரச்சனையை அறி வியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் புரிந்து உடன் செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது .
‘‘ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் – உதாரணமாக ஒரு நாளில் சுற்றுச் சூழலில்  அல்லது வளிமண்டலத்தில் ஏற்படும் வெப்பம், அழுத்தம், காற்றில், ஈரப்பதம் மற்றும் மழை யில் அளவு மாற்றத்தையே தட்பவெப்ப நிலை (WEATHER) என்று கூறுகிறோம். தட்ப வெப்ப நிலையின் நீண்டகாலத் தொகுப்பையே காலநிலை (CLIMATE) என்கிறோம். பன்னெடுங் காலமாக இயற்கையாகவே காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
ஒரு காலத்தில் பனிப் பெருங்காலம் இருந்தது. அப்போது பூமி முழுவதும் பனிபடர்ந்திருந்தது. அதன்பின் ஏற்பட்ட பனி விலகிய காலம் இது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுபனிக்காலம் விலகி இன்றைய பனி இடைக்காலம் [INTERGLACIAL AGE] ஏற்பட்டுள் ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை இயற்கை மாற்றம்; லட்சம் அல்லது பல்லா யிரம் ஆண்டுகள்  இடைவெளியில் மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றம்’’.
ஆக புவி நீண்டகாலமாக சூடேறிக் கொண்டுதானே இருக்கிறது என்று ஒதுக்கி விடமுடியாத நிலை உருவாகியுள்ளதா? ஆம். ‘‘மனிதத் தலையீடுகளால் தற்போது ஏற்படும் மாற்றங்கள் சூழல் மண்டலத்தையே நிலை குலைய வைத்துவிடும். இதைத்தான் கால நிலை மாற்றம் எனக் கவலையோடு பேசுகிறோம்’’. இன்னும் தெளிவாகச் சொல்வ தெனில் புவியிலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு செறிவை பிபிஎம் எனும் அலகால் குறிப்பிடுவர். வளிமண்டலத்தில் 100 பிபிஎம் அதிகரிக்க 5000 ஆண்டுகளிலிருந்து 20,000 ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும் . ஆனால் கடந்த 120 ஆண்டுகளில் மனிதன் உருவாக்கிய மாசி னால் அதே 100பிபிஎம் அதிகரித்துள்ளது.அதாவது குறைந்தபட்சம் ஐயாயிரம் ஆண்டுகளாவது பிடிக்கும் பேரழிவை நாம் வெறுமே 120 வருடங்களில் செய்துள்ளோம். நிலைமை இப்படியே போனால் 2100 ஆம் ஆண்டு மேலும் 100 பிபிஎம் அளவு கார்பன் அதிகரிக்கும் . புவியின் வெப்பம் 4 டிகிரி கூடும்.
புவிவெப்ப மடைந்தால் பல உயிர்கள் அழியும்; பருவநிலை சீர்கெடும்; விவசாயம் பாதிக்கப்படும் ; தொற்று நோய்கள் உரு வாகும் ; பனிப்பாறை உருகும் ; கடல் மட்டம் அதிகரிக்கும் ; மாலத்தீவு உட்பட பல நாடுகள், கடற்கரைப் பிரதேசங்கள் அழிவைச் சந்திக்கும்; இப்படி எண்ணற்ற தொடர் விளைவுகள் ஏற்படும் .
இந்த வெப்ப அதிகரிப்புக்கு சூரிய ஒளிதான் காரணமா ? இல்லை ! பின் என்ன காரணம்? ஒரு எளிய உதாரணம் ஒரு போர்வையால் தலை  முதல் கால் வரை இறுக்க போர்த்திக் கொள்ளுங்கள் சற்று நேரத்தில் போர்வைக் குள் கதகதப்பாகிவிடும் ;இதன் பொருள் இடையே இருக்கிற காற்றுதான் அல்லவா? அதேபோல் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன் – டை – ஆக்ஸைடு, மீத்தேன், குளோரோப்ளூரோ கார்பன் முதலிய பசுங்கூட வாயுக்களே காரணம்.
இதில் குளிர்சாதனப் பெட்டி போன்ற வற்றில் அடைக்கப்பட்ட குளோரோ ப்ளூரோ பெரும் கேட்டை உண்டாக்கியது . சர்வ தேச அளவில் மேற்கொள்ளப்பட்ட தொடர் போராட்டம் – முயற்சி இவற்றின் விளை வாக இந்நிலை மாற்றப்பட்டு மாற்று தொழில் நுட்பம் மூலம் குளோரோ ப்ளூரோ கைவிடப் பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது; விளவு தற்போது ஓசோன் ஓட்டை அடைந்து வருகிறது.
இந்த கார்பனை பெருமளவு மரங்கள் பகலில் உணவுதயாரிக்க உறிஞ்சிவிடும்; தற்போது பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டு வருவது பிரச்சனையை இன்னும் கடுமையாக்குகிறது. காடு பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு புதிய நெருக்கடிகளைத் தவிர்க்குமா? பெரிய ஆய்வுகள் சொல்வதென்ன? இது முக்கியமே ; ஆனால் இது மட்டுமே தீர்வல்ல. ஏனெனில் தொழில் வளர்ச்சியை சார்ந்து நாம் உபயோகிக்கும் நிலக்கரி , பெட்ரோல் போன்றவைகளே பெரிதும் காரணமாகிறது; அவையே கார்பன் அதிகரிப்பில் முக்கிய சூத்திரதாரி ஆகிறது. இதன் உபயோகத்தை உடனே நிறுத்துவது சாத்தியமல்ல எனினும் படிப்படியாக மாற்று தேடியாக வேண்டும். வேறுவழியில்லை.
1972ல் ஸ்டாக்ஹோமில் நடந்த சுற்றுச்சூழல் மாநாடு முதல் எச்சரிக்கை மணியை அடித்தது; அதுமுதல் 2016 பாரீஸ் மாநாடு வரை நடந்த மாநாட்டு விவாதங்கள், முடிவுகள், முட்டுக் கட்டைகள், திசைதிருப்பல்கள்  என பெரும் அரசியல் போராட்டமும் இதோடு பின்னிப் பிணைந்தது .2014ல் ஐந்தாம் அறிக்கையில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்-கி-மூன் எச்சரித்தார். ‘‘விஞ்ஞானம் பேசிவிட்டது! இதில் மறுப்பதற்கு ஏதும் இல்லை !உலகத் தலை வர்கள் செயல்பட வேண்டிய தருணம் இது . இன்னும் தயங்கி நிற்க காலம் நம் பக்கத்தில் இல்லை!’’
ஆம், அண்மையில் கியூபாவின் பெரும் தலைவர் தோழர் பிடல் காஸ்ட்ரோ தன் பேச்சில் உலகின் தலையாயப் பிரச்சனையாக சுற்றுச் சூழல் பாதுகாப்பையே முன்னிறுத்துவார்.   2016 -ம் ஆண்டுக்கான 88-வது ஆஸ்கர் விருது வழங்கும்  விழா  லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றபோது, சிறந்த நடிகருக்கான பரிசு பெற்ற லியோனார்டோ டி காப்ரியோ எச்சரித்தார்  ‘‘நாம் ஆதரிக்க வேண்டும்  புவி வெப்பமயமாதல் குறித்து உண்மையை பேசும் தலைவர்களை.  சூழலை மாசுப்படுத்தும் மனிதர்கள் மற்றும் பெரும் நிறுவனங்களை ஆதரித்து பேசாத தலைவர் களை சுட்டிக்காட்ட வேண்டும். புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும்,  உலகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்காகவும்,  கோடான கோடி  ஏழைகளுக்காகவும் பேசும் தலைவர் களை, நாம் ஆதரித்து எழ வேண்டும்’’-  இது ஆஸ்கர் மேடையில் காப்ரியோ பேசியது.
மேம்போக்காக பார்த்தால், இது சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், பருவ நிலை மாற்றத்தில் ஆதிக்கம் செலுத்தும், தொடர்ந்து கார்பன் உமிழ்வை குறைத்துக் கொள்ள மறுக்கும் அமெரிக்காவில் நின்று கொண்டு பேச ஒரு கலைஞனுக்கு மாபெரும் துணிச்சல் வேண்டும்.
புவி சூடாகிவிட்டது ஆளுக்கு கொஞ்சம் குறைத்துக் கொள்வோம் என பொதுவாகப் பேசும் அமெரிக்க சாமர்த்தியம் அல்லது அளவுக்கு குறைவாய் மாசுபடுத்துவோரிடம் காசு கொடுத்து பசுமையை என் கணக்கில் சேர்த்துக் கொள்கிறேன் என்கிற வியாபார தந்திரம் எல்லாவற்றையும் எதிர்கொண்டே இப்பிரச்சனையை அணுக வேண்டியுள்ளது .
உலகின் மொத்தகார்பன் அளவில் ஒவ்வொரு நாட்டுப் பங்கையும் கணக்கிட்டால்  அமெரிக்கா 14.7 ,சீனா 23 , இந்தியா 5 . இதையே மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட் டால் அமெரிக்கா 14 டன், சீனா 7 டன், இந்தியா 1.5 டன்  இதனை சராசரி 2 டன்னாக குறைக்க வேண்டுமெனில் அமெரிக்காதானே பெரும் முயற்சி செய்ய வேண்டும். இதைத்தான் லியோனார்டோ டி காப்ரியோ சரியாக எச்சரித்தார் .
அமெரிக்கா பெரிய தவறு செய்கிறது. பேரழிவு அமெரிக்காவுக்கு என சும்மா இருக்க இயலுமா?  ‘தென்ன மரத்தில் தேள் கொட்டினால் பனமரத்தில் நெறிகட்டும்’ என்பது போல 0.3க்கும் குறைவான கார்பனை வெளியிடும் மாலத்தீவே முதலில் அழியும் ; நம் போன்ற வளரும் நாடுகளின் கடலோரப்பகுதி மக்கள் இயற்கைப் பேரழிவைச் சந்திப்பர். எனவே எல்லோரும் கூட்டாகச் சந்திக்க வேண்டிய பெரும் சவால்.
பாரீஸ் மாநாட்டில், ‘‘ஆண்டு தோறும் வளிமண்டலத்தில் மனித நடவடிக்கைகளால் உமிழும் கார்பன் அளவைக் குறைத்துக் கொண்டு –கார்பன் தவிர்த்த வளர்ச்சிப்பாதை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனை வரும் ஒப்புக் கொண்டுள்ளனர். மேலும் கொள்கை அளவில் அனைவருக்கும் பொது வான,  ஆனால் வேறுபட்ட அளவிலான பொறுப்பேற்பு [COMMON BUT DIFFERENTIAL RESPONSIPLITY] எனும் கோட்பாட்டையும் ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளது முக்கியமான மைல்கல்லாகும் .
ஆயினும் அதனை நிறைவு செய்வது அவ்வளவு சுலபமல்ல ; அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கத்தை மீறி செய்வது பெரும் சவாலே. அமெரிக்கா கார்பனை அதிகம் உமிழும் தொழில்களை இந்தியா போன்ற நாடுகளின் தலையில் கட்டிவிடும் , மேக் இன் இண்டியா என கவர்ச்சி வசனம் பேசி மோடிகள் இதனை நம்மக்கள் மீது திணித்துவிடக்கூடும் ;மேலும் மாற்று தொழில் நுட்பத்திற்கு வளரும் நாடுகள் மாறுவது பெரும் நிதிச்செலவாகும் ; அதுவும் மூன்றாம் உலகநாடுகளில் பெரும் கடன் சுமையாக ஏறும். ஆக, புவி வெப்பமாவதை தடுத்து நிறுத்துவது நம் எதிர்காலத்தை குறித்த பெரும் கேள்வியாகும் .
இதன் அறிவியலை,வரலாற்றை, அர சியலை முழுமையாக உள்வாங்காமல் இப்போரினில் வெல்ல இயலாது. ஒரு முழுமையான பார்வை தேவை. த.வி.வெங் கடேஸ்வரன் எழுதிய பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள புத்தகம் (102 பக்கம், விலை ரூ.80) ‘‘சுற்றுச்சூழல் அரசியல் : ஏமாற்றம் தரும் பாரீஸ் ஒப்பந்தம்’’ எனும் நூல் தொடக்க பாடமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் அவசியம் படிக்க வேண்டும்.விவாதிக்க வேண்டும். பரப்புரை செய்ய வேண்டும்.களம் காண வேண்டும் .
இந்த புவிக்கோளம் நம்முடையதல்ல எதிர்காலச் சந்ததியினருக்கு இதனை பத்திரமாய் கையளிக்க வேண்டியது நமது கடன். இதனை வலியுறுத்தவே குழந்தைகள் முன்பு பாரீஸ் ஒப்பந்தம் கையெழுத்தானது. நாமும் அதனை உணர்வுப் பூர்வமாய் ஏற்று அடுத்த தலைமுறைக்காக சிந்திப்போம்.செயல்படுவோம்.
  • சு.பொ.அகத்தியலிங்கம்

கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்

Posted by அகத்தீ Labels:

“ பசு பூஜை ,சைவ உணவுவாதம் ,புண்ணியநதிபோன்ற சொல்லாடல்கள் பிறமதத்தினர் மேல் வெறுப்பை வளர்க்கவும், ஆக்கிரமிப்பதற்கான நியாயமாகக் காட்டுவதிலும் காவிப்படை வெகுவாக வெற்றி பெற்றிருக்கிறது” என சொல்லும்ஆசிரியர் பாலித்தான என்ற சிறுநகரில் அசைவம் முட்டை உட்பட தடை செய்யப்பட்டதை விவரிக்கிறார் .எப்படி பிராமணிய மயமாக்கல் அதிகார வெறியோடு நடைபெறுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் பாடம் .


கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்






“ தெய்வம் மரணித்திருக்கிறது
இங்கே எங்கும் பேரழிவு மட்டும்..”

ஜீவன் தாக்கூரின் இந்த கவிதை வரிகள் குஜராத்தின் உண்மை முகத்தை பளிச்சென படம் பிடிக்கிறது . குஜராத் என்றதும் கோத்ரா நிகழ்வும் அதன் தொடர் வன்முறையாட்டமும் உடனே நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாது ; அதேபோல் “குஜராத்தின் வளர்ச்சி” என்கிற மயக்கமும்கூடவே பேசுபொருளாகும் . முன்னதை எதிர்மறையாகச் சொல்லுகிற ஊடகங்கள் பின்னதை வியந்தோதுவதைக் காணலாம் . ஊடகங்களின் வாயையும் அடைத்துவிட்ட குஜராத்தின் உண்மை நிலையை ஸ்கேன் ரிப்போர்ட்டாக இந்நூல் வழங்குகிறது எனில் மிகை அல்ல .

நுட்பமான விவரங்களுடன் -துல்லியமான வரலாற்றுப் பின்னணியுடன் – நெடிய சதித்திட்டத்தை அழகாக அம்பலப்படுத்துகிறது இந்நூல். “ ரிலையன்சும் ராமஜென்ம பூமியும் இணைந்து பின்னப்பட்ட இந்துத்துவ கலவை ,ஐரோப்பிய பாசிஸ்ட்டுகளைப் போல சிறுபான்மையோருக்கு மரணமணியை உறுதிப்படுத்திய போதுகூட மத்தியதரவர்க்கம் அபாயகரமான மௌனத்தில் ஆழ்ந்தது.

நினைவுகளும் எதிர்குரலுமற்ற இத்தகைய செயலற்ற நிலை வரலாறு முழுவதும் நாசகரமான விளைவையே ஏற்படுத்தியுள்ளது .சமூகமறதி நோயும் மௌனமும் கைகோர்த்து நிற்கிறது .” என நூலாசிரியர் சொல்லுகிறார் . இந்நூல் அந்த மௌனத்தை உடைக்க முயற்சிக்கிறது. இந்நூலின் 14 அத்தியாயங்களும் 14 கூறுகளைப் படம் பிடிக்கிறது.

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் தமிழ்நாட்டின் அவமானம் . அது தகர்க்கப்பட்டது . ஆனால் தகர்க்கப்படாத பிரிவினைச் சுவர் அஹமதாபாத்தில் இன்னும் நிற்கிறது .“ கிழக்கு அஹமதாபாத்தின் வட்வாவில் சுவரால் பிரிக்கப்பட்ட மக்தூம் நகரும் தர்மபூமி சொசைட்டியும் இரண்டு வேறுபட்ட நிலைகளின் நினைவுச் சின்னங்கள்” என்று நூலாசிரியர் தருகிற தகவல் மோடியின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறது .

சகல வசதிகளுடன் தர்மபூமி . அங்கே முஸ்லிம்களுக்கு இடம் இல்லை . மக்தூம் நகர் வெறும் குப்பைத் தொட்டி .இங்குதான் முஸ்லிம்கள் வாழவேண்டும் . மோடியின் ‘ஸ்வச் பாரத்’ இன்னும் எட்டிக்கூட பார்க்காத இடம் அது. “சலவைத்தூளிலிருந்து பல்கலைக் கழகத்துக்கு” என்ற அத்தியாயத்தில் நிர்மா சோப்பு வியாபாரி கல்வி வியாபாரத்தில் இறங்கிய கதையையும் , கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டுவிட்டதையும் கல்வி காவிமயமாக்கப்பட்டுவிட்டதையும் உரக்கச் சொல்கிறது.“ அம்பானிகளும் அதானியும்,சிரிபால் குழுமமும் ,கடிலாவும் பிறரும் குஜராத்தின் மேற்கல்வித்துறை முழுவதுமாகக் கைப்பற்றிக் கொண்டனர். .கலை,வரலாறு,அறிவியல் துறைகளுக்கு மாற்றாக வணிகக் கல்வியை அவர்கள் வளர்த்தனர்” என நூலாசிரியர் சுட்டுகிறார் .

“ பசு பூஜை ,சைவ உணவுவாதம் ,புண்ணியநதிபோன்ற சொல்லாடல்கள் பிறமதத்தினர் மேல் வெறுப்பை வளர்க்கவும், ஆக்கிரமிப்பதற்கான நியாயமாகக் காட்டுவதிலும் காவிப்படை வெகுவாக வெற்றி பெற்றிருக்கிறது” என சொல்லும்ஆசிரியர் பாலித்தான என்ற சிறுநகரில் அசைவம் முட்டை உட்பட தடை செய்யப்பட்டதை விவரிக்கிறார் .எப்படி பிராமணிய மயமாக்கல் அதிகார வெறியோடு நடைபெறுகிறது என்பது அதிர்ச்சியூட்டும் பாடம் .

தமிழகத்தில் பெண் சிசுவை கள்ளிப்பாலில் கொல்லும் கொடூரம் பற்றிப் பேசும் யாரும் குஜராத்தில் “ தூத் பீத்தி” பாலில் மூழ்கடித்துக் கொல்லும் கொடூரம் குறித்து சொல்லுவதே இல்லை. ஒரு வேடிக்கை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிகூட அவரது தாயின் முற்போக்கு பார்வையால் “ தூத் பீத்தி”யிலிருந்து தப்பியவரே! இதுவும் இந்நூல் தரும் செய்தி.

ஆண் பெண் விகிதம் 1971ல் 1000க்கு 965 ஆக இருந்தது. மோடியின் இந்துத்துவ எழுச்சிக்கு பிறகு 861 ஆக வீழ்ந்திருக்கிறது . “பைரானி புத்தி பாணியே” என்கிற குஜராத்தி பழமொழியை – ( “பெண் புத்தி பின் புத்தியே” என்பது போன்ற ஒரு பழமொழி) தலைப்பாகக் கொண்ட அத்தியாயம் வன்புணர்ச்சி , வேலைவாய்ப்பு ,கல்வி , ஒடுக்குமுறை , பாலியல் தொழிலுக்கு விரட்டப்படல் என பெண் தொடர்பான சமூகக் குறியீடுகள்அனைத்திலும் குஜராத் மிகவும் பின் தங்கி இருப்பதையும் ; மதக்கலவரங்களில் ஈடுபட்ட பெண்களையும் அவர்களை வழிநடத்திய மாயாபென் கோத் நானியையும் சரியாக அடையாளம் காட்டுகிறது.கவுரவக் கொலை என்கிற தொற்றுவியாதி தமிழக நற்பாரம்பரியத்தை அழித்துவிடுமோ என கவலைப்படுகிறோம் .
இந்தப் படுகொலை சித்தாந்தமும் இந்துத்துவாவின் ஒரு பகுதியே.குஜராத்தில் 98.4 கிராமங்களில் சாதி மீறிய திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்கிற வெளிச்சத்திற்கு வராத அதிர்ச்சித் தகவலை இந்நூல் அடிக்கோடிடுகிறது .

குஜராத்தில் 2084 கிராமங்களில் 98 விதமான தீண்டாமை கொடிகட்டி வாழ்கிறது . “ஆர் எஸ் எஸ் ஒரு பண்பாட்டு இயக்கம் – அதனால் மட்டுமே சாதிக் கொடுமையை ஒழித்து இந்துக்களிடையே சமத்துவத்தை கொண்டுவர முடியும்” என இங்கே சில அறிவுஜீவிகள் வாதிடுவது எவ்வளவு தவறானது என்பதை குஜராத் அனுபவம் நிரூபிக்கிறது .மோடியின் ஆடம்பரத்தை அம்பலப் படுத்தும் அத்தியாயத்தைத் தொடர்ந்து காந்தி ,பட்டேல் அத்தியாயங்கள் மிகுந்த வரலாற்று பின்புலத்தோடு சங்பரிவாரின் நயவஞ்சக அரசியலையும் சேர்த்து நமக்குப் பாடம் சொல்லுகிறது. இந்த அத்தியாயங்கள் மோடியின் கபடநாடகத்தை சரியான வரலாற்று ஆதாரங்களோடு நிறுவுகிறது. 56 இஞ்ச் எனப் பெருமை பீற்றும் மோடி, பட்டேலுக்கு பிரமாண்டமான இரும்பு சிலை; இவற்றுக்கு பின்னே உள்ள உடலரசியலை நுட்பமாக இந்நூல் பேசுகிறது. காந்தி உருவாக்கிய சபர்மதி ஆஸ்ரமமும்கூட மோடி ஆட்சியில் கலவரத்தால் பயந்து ஓடிய இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம்தர மறுத்தது கொடுமையிலும் பெருங்கொடுமை.சீக்கியர்கள் தில்லியில் வேட்டையாடப்பட்டதையும் குஜராத்தில் முஸ்லிம்கள் வேட்டையாடப் பட்டதையும் இணைத்துப் பார்ப்பதும் ; காங்கிரஸின் பலவீனங்கள் சங்பரிவார் வளர உதவியதையும் சேர்த்தே இந்நூல் பேசுகிறது ! அடடா! எவ்வளவு செய்திகள்! எவ்வளவு ஒப்பீடுகள்! அருமை! அருமை!

இந்தியாவின் மான்செஸ்டர் என புகழப்பட்ட அஹமதாபாத்திலும் சூரத்திலும் ஜவுளித் தொழில் சர்வநாசமாக்கப்பட்ட செய்திகள் மோடியின் வளர்ச்சித் தம்பட்டத்தின் வெறுமையை உணர்த்துகிறது . இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சுட்டிய கவிதைவரி இதனையொட்டி எழுதப்பட்ட கவிதையின் கடைசி வரிகளாகும்.

“அழித்தொழிப்பு நிகழ்கிறது இங்கே”என கவிதையின் ஓரிடத்தில் சொல்வது மிகை அல்ல; அது முழு குஜராத்துக்கும் பொருந்தும்.`ஹிட்லர் , முசோலினி உள்ளிட்ட உலகறிந்த பாசிஸ்டுகளின் வரலாற்று உண்மைகளும் குஜராத் நிகழ்ச்சிப் போக்குகளும் எப்படி ஒத்துப் போகின்றன என்பதை மிகவும் துல்லியமாகவும் உணர்ச்சிப் பெருக்கோடும் இந்நூலாசிரியர் சொல்லிச் செல்கிறார் .மோடி என்கிற பிம்பம் எப்படி கட்டி அமைக்கப்பட்டது என்பதை; அதில் மோடியின் வஞ்சகக் காய் நகர்த்தல்களை; மனம் பதறாத படுகொலைகளை அழுத்தமாய் இந்நூல் பதிகிறது .
பெருமுதலாளிகள் நலனுக்கு – அந்நிய முதலாளிகள் நலனுக்கு எப்படி மோடியும் தேவையாகிப் போனார் என்பதையும்; மோடியின் வளர்ச்சியில் அம்பானி ,அதானி போன்ற முதலாளிகளின் பங்கையும் அவர்கள் விதைக்கும் வெறுப்பு அரசியலையும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது பாராட்டுக்குரியது .இந்நூலை நல்ல முறையில் மொழியாக்கம் செய்த உத்திரகுமாரனுக்கும் வெளியிட்ட வம்சி புக்ஸ்சுக்கும் பாராட்டுக்கள். மோடிக்கு எதிராக – சங்பரிவாருக்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளுக்கு இந்நூல் பேராயுதம் எனில் மிகை அல்ல.

கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்
மலையாள மூலம் : ஏ.வி.அனில் குமார்,
தமிழில் : மா. உத்திரகுமாரன் ,
வெளியீடு : வம்சி புக்ஸ்,19.டி.எம்.சாரோன்,திருவண்ணாமலை – 606 601.
பக்: 256 , விலை : ரூ.200/- - சு.பொ.அகத்தியலிங்கம் . நன்றி : புத்தக மேசை , தீக்கதிர், 07-08-2016