#ஆயிரம் கண்ணுடையோராய் மாறுக !”

Posted by அகத்தீ Labels:






#ஆயிரம் கண்ணுடையோராய் மாறுக !”



 நாடு கெட்டுக் கிடக்குது
விழிப்பாய் இருங்கள் !”

 “ஐயா !
உங்கள் உபதேசம் சரிதான் .
ஆனால் ,
எதில் விழிப்பாயிருப்பது
என்பதில்தான் குழப்பம்…”

 “ இதில் என்ன குழப்பம் ?”

 “ எதிரிகளிடமா
நண்பர்களாய் நடிப்பவர்களிடமா
பற்றி எரியும் வாழ்க்கைப் பிரச்சனைகளிலிருந்து
கவனத்தை சிதறடிக்கும் குபீர் ஞானதேசிகன்களிடமிருந்தா ?
ஊடகங்களிடமிருந்தா ?
அடக்குமுறையை ஏவுவோர்களிடமா ?
அதை நியாயப்படுத்துவோரிடமா ?
பொய் பித்தலாட்டம் செய்வோரிடமா ?
அதற்கு வக்காலத்து வாங்கிவோரிடமா ?
நீதிமான்களிடமா ?
வெறுப்பை விதைப்போரிடமா ?
அதனை சகிப்போரிடமா ?
அடகுபோன அறிவுஜீவியிடமா ?
அநீதிகளுக்கு துணைபோவோரிடமா ?
அதனைக் கண்டும் உணர்ந்தும்
வாய்மூடி கண்மூடி மவுனித்திருப்போரிடமா?
…. ….. …… ….. ….. ….. ….. ….. …..
யாரிடம்… யாரிடம்… யாரிடமிருந்து ?”

 “ எல்லோரிடமும்
எல்லாதிசையிலும்
எப்போதும்
தூங்கும் போதும்
விழித்திருக்கும் போது
ஒவ்வொன்றிலும்
விழிப்பாயிருப்பீர் ..
காலம் கொட்டுக் கிடக்குது
எதிரி ஆயிரம் முனைகளில்
ஆயிரம் முகத்தோடு நிற்கையில்
உனக்கு மட்டும் ஒரு கண் போதாது
ஆயிரம் கண்ணுடையோராய் மாறுக !”

சு.பொ.அகத்தியலிங்கம் .
ஜனவரி 24 , 20 20

வேதம் புதிது.

Posted by அகத்தீ Labels:








வேதம் புதிது.



எல்லா கண்களையும்
ஒரே நேரத்தில் குருடாக்க வேண்டும்
எல்லா காதுகளையும்
ஒரே நேரத்தில் செவிடாக்க வேண்டும்
எல்லா வாய்களையும்
ஒரே நேரத்தில் ஊமையாக்க வேண்டும்
சர்வ வல்லமை மிக்க
அதிகாரத்தின் பேரால் ஆணையிட்டார் …
மாமன்னர்.


மயாண அமைதியில் மன்னர் புன்னகைத்தார்
திடீரென்று வானம் இருண்டது இடி இடித்தது
பெருமழை ஊரைப் புரட்டிப் போட்டது .


பார்வை அற்றவரும்
நெற்றிக் கண்ணைத் திறந்தனர்
கேட்கும் திறனிழந்தோரும்
காற்றுக்கும் காதுகொடுத்தனர்
பேசமுடியாதோரும்
அடிவயிற்றிலிருந்து ஆங்காரக் குரலெழுப்பினர்


அதிசய சுகமளிக்காது ஆராதனைகளென
ஆர்ப்பரித்து திரண்டனர் வீதிகளில்
அதிகார வெறி பொடிந்து தூளாகும்
சமிக்ஞை விண்ணில் பளிச்சிட்டது
தேவதூதரின் வருகையை அல்ல
மக்கள் எழுச்சியை முன்னறிவித்தது …

சு.பொ.அகத்தியலிங்கம்.