சும்மா…. சிரிக்க மட்டுமே !

Posted by அகத்தீ Labels:

 





சும்மா…. சிரிக்க மட்டுமே !

 

என் பெயர் வடை

இட்லிக்கு முன் பிறந்தவன்

சந்தேகம் இருந்தால்

மருத்துவர் கு. சிவராமனைக் கேளுங்கள்

 

டீ ,காபி, இட்லி, பொங்கல்,

கேசரி, உப்புமா, தோசை

இப்படி என் சிநேகிதர்கள் அதிகம்.

என்னை வெறுப்போர் குறைவு

 

ஆமவடை ,உழுந்த வடை ,பருப்பு வடை

மெதுவடை ,மசால்வடை ,தவலைவடை ,

கீரைவடை , தட்டுவடை, அனுமார் வடை

தயிர்வடை ,ரசவடை ,சாம்பார்வடை

எத்தனை பெரிய குடும்பம் எனக்கு

எல்லா மதத்தவரும் சாதியினரும்

என் ஆசை உறவுகளே!

 

 

நான் எண்ணை குடித்தால்

தந்தி பேப்பரில்  பிழிந்து

தின்று விடுவார்கள் ஒரு போதும்

குப்பையில் போடமாட்டார்கள் !

 

ஒருத்தர் தினசரி

மாவும் எண்ணையும்

அடுப்பும் இல்லாமலே

வாயால் சுடுகிறார் வடை

எம் வம்சத்துக்கு நீங்கா

பழியை சுமத்தி மகிழ்கிறார் .

 

ச்சீ ! ச்சீ !

வாயால் சுடுவது வடையல்ல

வயிற்றை நிறைப்பதே வடையாகும் !

வடையின் வலியை புரிந்திடுங்கள்!

அந்த ’ச்சீ’ யின் வாயை தைத்திடுங்கள்!

 

சுபொஅ.

04/03/24


சோற்றுப் பானை பொய்சொல்லுமோ ?.

Posted by அகத்தீ Labels:

 

புள்ளிவிவரங்கள்

பொய்சொல்லலாம்

சோற்றுப் பானை

பொய்சொல்லுமோ ?.

 

பொருளாதாரப் புலிகள்

புளுகித் தள்ளலாம்

பசிக்கும் வயிற்றுக்கு

புளுகத் தெரியுமோ ?

 

ஊடக அடியாட்கள்

ஊதிப்பெரிதாக்கலாம்

கனவுக் கத்திரிக்காய்

கறிக்கு உதவுமோ ?

 

மதபோதை அதிகார போதை

வெறியாட்டம் போடலாம்

மானிட மென்பது புல்லோ? – அன்றி

மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?

 

[ கடைசி இரு வரிகள் புரட்சிக்கவி பாரதிதாசனிடம் உரிமையோடு எடுத்தாண்டது ]

 

சுபொஅ.

26/02/2024.

 

ஒரு ராஜாவுக்கு அறிவியல் துறை....

Posted by அகத்தீ Labels:

 

[ நேற்று ஒரு கதையை மீண்டும் கேட்டேன் . தெரிந்த கதைதான் . ஆயினும் இன்று அவசியம் சொல்லப்பட வேண்டிய கதை . கதை சொன்னவர் தாமஸ் பிராங்கோ . சொன்ன இடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 22 வது மாநில மாநாடு .பி எம் சி தொழில்நுட்ப கல்லூரி .ஓசூர். ]

 

ஒரு ராஜாவுக்கு அறிவியல் துறைக்கு தனி அமைச்சரை நியமிக்க ஆசை உண்டானது . தகுதியானவரை தேர்வு செய்ய போவதாய் தண்டோரா போட்டார் . பெருங்கூட்டம் திரண்டது . ராஜா சொன்னார் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் .சரியாகச் சொல்வோருக்கு பதவி .

 

ராஜா கேட்டார் ;

 

நான் ஒரு கண்ணாடித் தொட்டியில் விழிம்புவரை தண்ணீர் நிரப்பினேன் . அதில் உயிருள்ள மீனை விட்டேன் .நீர் ஒரு சொட்டு வெளியேறவில்லை .அந்த மீனை சாகடித்து தொட்டிநிரம்பிய தண்ணீரில் போட்டேன் .நீர் கொட்டியது . ஏன் ?

 

யாராலும் பதில் சொல்ல முடியவில்லை .

 

ராஜா 24 மணி நேர அவகாசம் கொடுத்து சபையைக் கலைத்தார் .

 

மறு நாள் வேடிக்கை பார்க்க கூட்டம் திரண்டதே தவிர பதில் சொல்ல ஆளில்லை .

 

ஆனால் ,ஒரு இளைஞன் மேடை ஏறினான் . “ ராஜா ! நான் பதில் சொல்லத் தயார் .நீங்கள் கோபப்படக்கூடாது…” என கேட்டான் .

 

ராஜா சொன்னார் , “ நான் கோபப்பட மாட்டேன் .தண்டிக்க மாட்டேன்” என உறுதியாய்ச் சொன்னார் .

 

இளைஞன் சொன்னான் , “ ராஜா ! நீங்கள் பொய் சொன்னீர்கள் ! நான் நேற்று பலமுறை நீங்கள் சொன்ன சோதனையைச் செய்து பார்த்தேன் . உயிருடன் மீனைப் போட்டாலும் கொஞ்சம் தண்ணீர் வெளியேறியது . செத்த மீனைப் போட்டாலும் வெளியேறியது . இதுவே ஆர்க்கிமிடீஸ் அறிவியல் விதியும் கூட .”

 

ராஜா மகிழ்ந்தார் . அவனையே அறிவியல் துறைக்கு அமைச்சராக தேர்வு செய்தார் .

 

இக்கதையைச் சொல்லிவிட்டு பிராங்கோ சொன்னார் , யார் சொன்னாலும் எவ்வளவு பெரியவர் சொன்னாலும் தப்பை தப்பு என்று சொல்லும் மன உறுதியே அறிவியலின் முதல் நிபந்தனை .

 

திரும்பத் திரும்ப சோதித்தறி என்பது இரண்டாவது நிபந்தனை .

 

[ நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன் . இங்கே டிமோவின் அத்தனை புராணப் புளுகையும் அறிவியல் என்று சான்றளிப்பதுதானே அறிவியலார் அறமாகிப் போனது . நீதி மன்ற நீதியாகிப் போனது . அதிகார ஆணையாகிப் போனது . எங்கே போகிறோம் ?]

 

வாழ்த்துரை வழங்கிய ஆதவன் தீட்சண்யா நன்கு தத்துவ உரை நிகழ்ந்தினார் . “ தன்னை பொருள்முதல் வாதியாய் அறிவித்துக் கொள்வதே அறிவியலாளர் கடமை என்றார் . நாட்டு நடப்பை நன்கு பகடி செய்தார் .

 

இராணுவ ஆய்வறிஞர் டில்லிபாபு துவக்க உரை நிகழ்த்தினார் . அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்க மக்களுக்கான அறிவியலை அனுபவ கல்லில் உரைத்து விளக்கினார் .

 

அறிவார்ந்த துவக்க நிகழ்வுதான் . பங்கேற்றோர் எண்ணிக்கைதான் கவலைக்குரியது .

 

ஓசூரில் தொழிலாளி வர்க்கத்தில் இடதுசாரி இயக்கத்தில் முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு பெரும் பஞ்சமோ ? இல்லையே ! எங்கோ ஒருங்கிணைப்பில் பிழை நேர்ந்துள்ளது .அவ்வளவே !

 

சுபொஅ.

24/02/24.



நம் சமூகக் கட்டுமானம் என்கிற துணி கிழிக்கப்படுகிறது……

Posted by அகத்தீ Labels:

 





 “ ’இந்து – இந்தி – பாஜக’ எனும் சூத்திரத்துக்குள் கெட்டிப்படுத்தபடும் மனிதத் திரள் என்பது எவ்வளவு ஆபத்தான நகர்வு என்பதை அழுத்தமாகச் சொல்கிறது…”

 

[ மிக முக்கியமான நூல் குறித்தது .கொஞ்சம் நெடிய கட்டுரையாகிவிட்டது . இன்றைக்கு தேவையானது . அருள்கூர்ந்து பொறுமையாய் முழுதாய் வாசிக்கும் படி வேண்டிக்கொள்கிறேன்.]

 

நம் சமூகக் கட்டுமானம் என்கிற துணி கிழிக்கப்படுகிறது……

 

நிதானமாக வாசித்தேன்.. சில பக்கங்களை ஒரு முறைக்கு இரு முறை வாசித்தேன் . கவலை ,கோபம் , அறச்சீற்றம் எல்லாம் ஒருங்கே பீறிட்டன . இந்நூலைப் படிக்கும் உங்களுக்கும் அதே உணர்வு ஏற்படலாம்.

 

நான் இந்நூலை கடந்த ஒரு வருடமாகக் கேள்விப்படுகிறேன் . விஜய்சங்கர் மொழியாக்கம் செய்யத் தொடங்கியதுமே “ கோணல் மரம்” என்ற சொல் சரியா என கேட்டு பொதுவெளியில் பதிந்தார் . பொருளாதார நூலென்றே எண்ணி இருந்தேன் .வாசித்தபின் அதிர்ந்தேன் . மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் ஸ்கேன் ரிப்போர்ட்டாக , பரகால பிரபாகர் எழுதிய நூலே  “ புதிய இந்தியா எனும் கோணல் மரம் “

 

நூல் முகப்பில் சொல்லப்பட்டுள்ள  “ கோணல் மரமான மனிதகுலத் திலிருந்து நேரான எதுவும் ஒரு போதும் உருவாக்கப்பட்டதில்லை” என்ற  இம்மானுவேல் காண்ட் பொன்மொழியில் இருந்தே தலைப்பு உருப்பெற்றுள்ளது .   

 

நெருக்கடியில் உள்ள ஒரு குடியரசு பற்றிய கட்டுரைகள்” என்பது நூலின் துணைத் தலைப்பு மட்டுமல்ல ; நூலின் உள்ளடக்கச் சாறும் ஆகும் . எம் இனிய  தோழர் ஆர் .விஜயசங்கர் அலுப்புதட்டாத ஆற்றொழுக்கு நடையில் நன்கு தமிழாக்கம் செய்திருக்கிறார்.வாழ்த்துகள்.

 

“நம் ஜனநாயகம் ஒரு நெருக்கடியில் சிக்கியிருக்கிறது ;நம் சமூகக் கட்டுமானம் என்கிற துணி கிழிக்கப்படுகிறது ; நம் பொருளாதாரம் ஆபத்தில் இருக்கிறது ; நாம் இருண்ட காலத்துக்கு இழுத்துச் செல்லப்படுகிறோம். இதை வலுவாகவும் திரும்பத் திரும்பச் சுட்டிக்காட்டுவதும் , எச்சரிக்கை மணி ஒலிப்பதும் ஒவ்வொரு குடிமகனின் தலையாயக் கடமை. என்னுடைய இந்தப் பத்திகள் ,பேச்சுகள் மூலமாகவும் ,இந்த நூலின் வழியாகவும் ,நானொரு குடிமகன் என்கிற முறையில் இந்தக் கடமையைச் செய்கிறேன்.” என்கிறார் அறிமுக உரையில் பரகால பிரபாகர் .

 

அறிமுகம் உட்பட 24 அத்தியாயங்கள்  கொண்டது. பத்து தளத்தில் விவாதிக்கின்றது . தேர்தல் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் நம் சமூகம் ஆழ்ந்து கவலைப்பட வேண்டிய,சீறி எழ வேண்டியவை அவை .

 

 ‘மோடி vs மோடி ’ அத்தியாயம் தொடங்கி “ ஆன்மீக இந்தியா ,அரசியல் இந்தியா – ஓர் ஆய்வறிக்கை’ முடிய 64 பக்கங்களில் 6 அத்தியாயங்களில் சொல்லப்பட்ட செய்திகள் அதிமுக்கியமானவை . ’இந்து – இந்தி – பாஜக’ எனும் சூத்திரத்துக்குள் கெட்டிப்படுத்தபடும் மனிதத் திரள் என்பது எவ்வளவு ஆபத்தான நகர்வு என்பதை அழுத்தமாகச் சொல்கிறது . நூலறிமுகத்தில் அனைத்தையும் சொல்ல வாய்ப்பில்லை . ஒரு குறிப்பைச் சொல்கிறேன் ;

 

 எல்லா விஷயத்திலும் மோடி இரட்டை நாக்கோடு பேசுவதை நூல் நெடுக பரகால பிரபாகர்  தோலுரிக்கிறார் .மக்கள் தொகை பெருக்கம் என்பது குறித்து உண்மைக்கு மாறாக பிரதமரும் அவரது ஊதுகுழல்களும் பேசிவருகின்றனர் . சிறுபான்மை இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பை ஊட்டுவதே இதன் அடிப்படை . இது குறித்து பரகால பிரபாகர் சொல்கிறார் ,

 

 “இந்தியாவில் கருவுறு விகிதம் கணிசமாகக் குறைந்து 2:2 என்கிற அளவை எட்டி இருப்பதாக ……… ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது கொள்கை .செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து சுதந்திர தினத்தன்று பிரதமர் பேசியது அரசியல் . தான் ஆளும் மாநிலங்களில் இது குறித்து பாஜக செய்வதும் அதே அரசியல்தான். ‘நாம்’ என்பதை ‘அவர்களுக்கு’ எதிராக நிறுத்தும் அரசியல். அதற்குப் பின் ‘நாம்’ ‘அவர்களை’நிராகரிப்போம். ‘நமக்கு’ அவர்கள்’ வேண்டாம் . ‘நாம்’ பாஜகவுக்கு வாக்களிப்போம் . அதாவது ‘நமது’மதத்துக்கு . ‘நாம்’என்கிற சொல்லுக்கு .’நாம் மட்டுமே’ என்கிற அடையாளத்துக்கு ! இதுதான் பாஜக அரசியல் .”

 

அலைபேசியில் ‘ ஆபாசக் காட்சிகளைப் பார்க்கிறீர்களா?” எனும் கேள்விக்கு ‘இல்லை’ என வேகமாகத் தலையாட்டிவிட்டு , யதார்த்ததில் அவர் அலைபேசியில் அதனைத் தேடித் தேடி ரசிப்பது போன்ற உளநிலை மதவெறி விஷயத்திலும் ஒரு பகுதி இந்தியருக்கு ஏற்பட்டிருப்பதை இந்நூலில் ஆசிரியர் விவரித்திருக்கிறார் . பெரும்பான்மையினரின் உளவியலில் மதவெறி நஞ்சு மெல்ல கலக்கப்பட்டு ஜனநாயம் மிகப் பெரும் சோதனைக்குள்ளாகி இருப்பதை இப்பகுதிகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன .

 

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதில் ‘ கண்டித்த வாய்கள்’ பல , அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் மாற்றிப் பேசி ’ஜெய்ஸ்ரீராம்’ சொன்னதை இதோடு இணைத்துப் பாருங்கள் ஆபத்தின் விஸ்வரூபம் புரியும்.

 

“ ஸ்ரீ மோடியை வழிபாட்டுக்குரிய பிம்பமாக மாற்றியது அவரது கட்சி மட்டுமல்ல ; அவர் நடத்தும் அரசாங்கமும் அதை உருவாக்கிப் பரப்புவதற்கு இரவு பகலாக வேலை செய்தது.” இந்த விவரங்களை  “அசாதாரணமாக்கு அதைக் காட்சிப் படுத்து” என்ற அத்தியாயத்தில் 10 பக்கங்களில் சொல்லி இருப்பது பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாகும். ஐ நாவில் உரையாற்றிய ஒரே பிரதமர் , முதலமைச்சராக இருந்து பிரதமரான ஒரே தலைவர் மோடி போன்ற அப்பட்டமான பொய்களைக்கூட கூச்சமின்றி சொல்வது ; புராணக் கதைபோல் புளுகி பாலகன் மோடி குறித்து காமிக் வெளியிடுவது ; மோடி பிறந்த நாளில் தடுப்பூசி சாதனை என விளம்பரம் [ கடைசியில் உள்ள கொரானா பற்றிய பெரிய அத்தியாயம் இன்னும் சொல்லும் ] என ஒவ்வொன்றையும் பரகால  பிரபாகர் வேதனையுடன் வெளிப்படுத்தி உள்ளார் .

 

 “ஒன்று ,இணைய மேடைகளில் நாம் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையை நசுக்கப் பார்க்கிறது . இரண்டு , நம் அனுமதி இல்லாமலேயே நம்முடைய தனிப்பட்ட தரவுகளை தொழில் நுட்ப நிறுவனங்கள் சேமித்து வைத்திருப்பது. மூன்று ,அரசாங்கமும் இந்த நிறுவனங்களும் வைத்திருக்கும் நம் தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு .” இந்த மூன்று பிரச்சனைகளையும் அலசும் “ ‘தன்முனைப்பாட்சி’ .இணைய சுதந்திரம் .தரவுத் தனிஉரிமை” என்கிற ஆழமான  12 பக்கங்கள் கொண்ட இந்த அத்தியாயத்தை ஆழ்ந்து வாசித்து ஆபத்தை உள்வாங்க வேண்டும் . “ விதிமுறைகள் .நிபந்தனைகள் குறித்த நீளமான ஆவணத்தை நம்மில் எவராவது முழுமையாகப் படிக்கிறோமா என்பது சந்தேகமே” என்கிறார் நூலாசிரியர் . படித்தாலும் சிலவற்றை ஏற்க மறுக்க உங்களுக்கு வழி உண்டா  என்பது என் கேள்வி.

 

பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ்  இயக்கத்திற்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் சமந்தமே கிடையாது ஆயினும் மரபுரிமையைத் திருட முயற்சிப்பதை , “ சுபாஷ் போஸும் ,புதிய இந்தியாவில் வேட்டையாடுபவர்களும் “ எனும் எட்டு பக்க அத்தியாயத்தில் நச்சென்று நெற்றிப்பொட்டில் அறைகிறார் . “….தேசபக்தி குறித்தான தன் தந்திரமான கதையாடலை நிலைநிறுத்துவதற்காக காந்திஜி ,பட்டேல் ,நேரு மற்றும் போஸுடன் தற்போது சாவர்க்கரையும் கோட்சேவையும் இணைத்து ஒரு புதிய நாட்டார் கதையை உருவாக்கி இருக்கிறது .இந்தியாவைக் குறித்து இந்த மனிதர்களின் சிந்தனைகளில் இருந்த முரண்பாடுகள் அதை உறுத்தவில்லை ; இவர்களின் தோள்களில் துப்பாக்கியை வைத்து ,நேருவைச் சுட வேண்டும் என்பதே நோக்கம் . ஏனெனில் நேரு அவர்களுடைய இந்து ராஷ்டிரம் ஏற்படுவதைத் தடுத்தார் என்பது மட்டுமின்றி ,அவருடைய பாரம்பரியம் தொடர்வதால் அதையேதான் மறுபடியும் செய்வார் என நினைக்கிறது .” என பரகால பிரபாகர் சொல்வது உண்மை .உண்மையைத் தவிர வேறில்லை .

 

  “அம்ரித்மகோத்ஸவ் ,ஐஎம்எஃப் இந்தியாவை மறுகற்பனை செய்தல்” அத்தியாயங்கள் எட்டே பக்கங்கள்தாம் ஆயின் பேசப்பேச விரியும் . மோடியின் முகத்தில் குத்தும் சில வரிகளையாவது இங்கு சுட்டாவிட்டால் நியாயம் செய்வதாகாது . “ தரவுகளைப் பார்ப்பதை விட முகங்களைப் பார்ப்பது அணுகுறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் . அது நம் அரசியல் ,சமூக ,பொருளாதாரத்தை மனிதநேய மிக்கதாக்கும். அதனால்தான் காந்திஜி நமக்குக் கொடுத்த தாயத்து வலிமையானதாக இருக்கிறது . அந்தத் தாயத்து : ‘ ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டிய சூழலை நீங்கள் எதிர்கொள்ளும் போது ,ஏழைகளிலேயே பரம ஏழைகளைக் கற்பனை செய்து பார்த்து அவர்களின் முகங்களில் உங்களின் முடிவு ஒரு புன்னைகையை வரவழைக்க முடியுமா என்று நினைத்துப் பாருங்கள் .’”  இங்கே நான் நினைத்துப் பார்க்கிறேன், ’தரித்திர நாராயண்கள்’ என காந்தி அவர்களை குறித்தது வெறுஞ்சொல் அல்ல. இறுதியில் பரகால பிரபாகர் சொல்கிறார் ,”மோடி அரசு அடையாளம் குறித்த சில்லறைத்தனமான கதையாடல்களைவிடுத்து ரமேஷ் , அஹமத் ,பீட்டர் ,குர்மீத் , லலிதா ,ஃபாத்திமா போன்றோரின் முகங்களைக் காணதவறிவிட்டது .அதற்கான முயற்சியைக் கூட செய்யவில்லை .”

 

வேலைவாய்ப்பற்றவர் குறித்த 10 பக்கங்கள் கொண்ட கட்டுரை  முந்தைய இரு கட்டுரைகளின் தொடர்ச்சிதான் எனலாம் . ஸ்கில் இந்தியா மற்றும் வேலையின்மை குறித்த அலசல் . வேலை வாய்ப்பற்றவர்கள் , வேலை செய்யத் தகுதியற்றவர்கள் , திறன் குறைந்தவர்கள் குறித்த விவாதம் பெருமளவில் நடத்தப்பட வேண்டும் . நான் ஐடிஐ தொழிற்கல்வி படித்த சிடிஐ பக்கம் அண்மையில் ஒரு முறை போயிருந்தேன் அதன் பெயர் பலகையில் ’ஸ்கில் இந்தியா’ என முத்திரை குத்தி இருக்கக் கண்டேன் .மோடி செய்தது முத்திரை குத்துகிற வேலைமட்டுமே .வேறெந்த மாற்றமும் இல்லை . அதை இந்த அத்தியாயம் ஆதாரத்தோடு சொல்கிறது . “ ஸ்ரேஷ்ட பாரதம் என்பதும் ஆத்மநிர்பார் பாரதம் என்பதும் உண்மையில் திறன் மிகு பாரதம்தான் ;அதற்கு அனைத்து மதங்கள் ,பிரதேசங்கள் ,மொழிப் பிரிவினரிடையே திறன் மிகுந்தவர்களை உருவாக்குவதுதான் இன்றையத் தேவை ; ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் ,இந்துத்துவ ஆதரவாளர்கள் மட்டுமே வாக்காளர்களாக இருக்கும் பிரதேசங்களுக்கும் , ஆதிக்க மொழி பேசுபவர்களுக்கும் மட்டுமான பாரதம் அல்ல அது .”என்கிறார் . இந்த சொற்களை நின்று நிதானித்து யோசித்தால் , வஞ்சிக்கப்படும் தெற்கும் , சிறுபான்மையோரும், ஒடுக்கப்பட்டோரும் ,பழங்குடியினரும் உங்கள் நினைவுக்கு வந்தால் யாம் பொறுப்பல்ல .

 

 “ போன்சாய் பல்கலைக் கழகங்களும் கிழிந்த ஜீன்ஸுகளும் “ ,”நமது பல்கலைக் கழகங்கள் : மிகச் சிறந்தவைகூட நல்லவை இல்லையோ ?”, ”ஜேஎன்யூ வழக்கத்துக்கு மாறான பல்கலைக்கழகமாகத் தொடர வேண்டும்”, ”ஹிஜாப் vs கழுத்து சால்வை” 34 பக்கங்களில் விரிந்திருக்கும் கல்வி குறித்த கட்டுரைகள் காத்திரமானவை ; ஜனநாயகம் சகிப்புத்தன்மை தொலைத்த கல்விச் சூழல் , இந்துத்துவ வெறிக்கூட்டம் சீரழிக்கும் கல்வி இவை பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன .” கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ஐந்து நட்சத்திர போன்சாய் பல்கலைக்  கழகங்களில் ஒன்றுகூட முதல் பத்து இடங்களில் இடம் பெறவில்லை.”என்பதை ஆதாரத்தோடு நிறுவுகின்றது . மோடி அரசின் ’புதிய கல்விக் கொள்கை’ குறித்த தனித்த கட்டுரை எதுவும் இடம் பெறவில்லை .

 

“சமத்துவமின்மை குறித்த ஆக்ஸ்ஃபாம் அறிக்கையும் பிக்கெட்டியும் புதிய இந்தியாவும் “ , “ வறுமையின் தரவுகளும் தரவுகளின் வறுமையும்” , “ பொதுத்துறை மெகாவிற்பனையும் விசாகப்பட்டினத் திருட்டும்” 22 பக்கங்களில் 3 கட்டுரைகளில் பொருளாதாரப் பிரச்சனைகளை விவாதித்திருக்கிறார் . “உலக அளவில் பெருந்தொற்று காலத்தில் வறுமைக்குள் தள்ளப்பட்டவர்களில் 60 % இந்தியர்கள் .நடுத்தர வர்க்கம் என்ற நிலையிலிருந்து கீழே சென்றவர்கள் 60 % பேரும் இந்தியர்கள் .”  என சுட்டும் பரகால பிரபாகர் “ சமத்துவமின்மையே ஏழைகளுக்கு நன்மை பயக்கும்” என்கிற கார்ப்பரேட் குரலை எதிரொலிக்கும் மோடியை அம்பலப்படுத்துகிறார் . “எதார்த்ததை மறுக்கும் ,தரவுகளை மறைக்கும் இந்த நோய் 2019 ல் வேலைவாய்ப்பு குறித்து கிடைத்த தரவுகளை குப்பைத் தொட்டியில் வீசியபோது தெளிவாகத் தெரிந்தது .” என்பது கசப்பான உண்மை அல்லவா ?

 

 “பாதிரியார் ஸ்டேன் ஸ்வாமியைக் கொன்றது யார் ? ” 10 பக்கங்களில் இக்கேள்வியை வலுவாக எழுப்பி உள்ளார் . இந்திரா காந்தி தொடங்கி மோடிவரை பயங்கரவாத சட்டம் எப்படி கொடூரமாய் வளர்க்கப்பட்டது என்பதோடு இணைந்தது அக்கேள்வி.

 

“ விவசாயச் சட்டங்கள் : ஒரு அகந்தையின் கதை”, “லக்கிம்பூர்கேரி” 22 பக்கங்களில் நீளும் இரண்டு அத்தியாயங்கள் விவசாயப் போராட்டங்களை முன்வைத்து வேளாண் பிரச்சனையை அலசுகின்றன . வேளாண் உற்பத்தி அதிகரித்து உணவுப் பஞ்சத்திலிருந்து மீண்ட காலத்தில் விவசாயிகளின் வருமானம் வீழ்ந்தது , கடன் அதிகரித்தது ,துயரமும் தற்கொலையும் அதிகரித்தன என நெடிய வரலாற்று உண்மையினை தொட்டுக் காட்டி ; தொடர்ச்சியாக மோடி தேர்தலில் சொன்னதிற்கு நேர் எதிராய் சென்றதால் வெடித்த விவசாயிகள் போராட்டத்தை கவனத்துக்கு கொண்டு வருகிறார் . அடக்குமுறைகளை அவதூறுகளை அநீதிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் . ஐஎம்எப் போன்ற நிறுவனங்களின் அலோசனையைக் கேட்கும் நமது அரசு  ஜப்பான் , சைனா , தென்கொரியா ,தைவான் ,வியட்நாம் என கிழக்கை ஏன் நோக்குவதில்லை எனக் கேள்வி எழுப்புகிறார் .  அங்கெல்லாம் குடும்பப் பண்ணைகளை உருவாக்கி - நில உரிமை வழங்கி - கடன் வழங்கி மேம்பட்ட உற்பத்திக்கு உதவி-  வேளாண் உற்பத்தி 50 % 60 % ம் உயர்த்தி- விவசாயிகள் வருமானத்தை 100 % 150 % அதிகரித்த காட்சியை எடுத்துக் காட்டி; நாம் ஏன் அந்தப் பக்கம் பார்வையை செலுத்தவில்லை என கேட்கிறார் பரகால பிரபாகர் .

 

“ பெருந்தொற்றின் பதிவேடு ,2021” என்கிற 64 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்பிலேயே மிகப்பெரிய கட்டுரை இது . ஏற்கெனவே அறிந்த பல செய்திகளையும் அதிகாரபூர்வமான தரவுகளையும் வைத்து மோடி அரசு எப்படி தப்பும் தவறுமாய் பிரச்சனையைக் கையாண்டது ,குழப்பியது ,தோல்வியைகூட சாமர்த்தியமாய் சாதனைபோல் காட்டியது ,பொய் சொன்னது எல்லாவற்றையும் விவரிக்கிறார் .

 

இந்தியாவில் போலியோ உட்பட  தடுப்பூசிகள் போட்ட வலுவான நோய் தடுப்புக் கட்டமைப்பும் அனுபவமும் கோவிட்டிலும் பயன்பட்டது எனப் பில் கேட்ஸே  பாராட்டும் போது ; யாரும் இதற்கு முன் செய்யாததை தான் மட்டுமே ஒற்றையில் சாதித்ததாய் மோடி வெட்டி ஜம்பம் அடிப்பதை  மிகச் சரியாக இடித்துரைக்கிறார். இதை தனிப் பிரசுரமாகக் கொண்டு வந்து பிரச்சாரம் செய்யலாம். நெடிய கட்டுரையை மீண்டும் வாசித்து மோடியின் முகவிலாசத்தை அறிவீர் !

 

“ வெறுப்பின் அடிப்படையிலான செயல் திட்டம் தரும் போதையினால் அதன் அரசுடைய தோல்விகளை அந்த சமூகம் கண்டு கொள்வதில்லை .களத்தில் கண்ட விஷயத்தை வைத்து இதை விளக்குகிறேன்.” என்கிறார் முடிவுரையில். ஆம் இந்த கொடூர உண்மையை உள்வாங்க இந்நூல் நமக்கு ஓரு ஸ்கேன் ரிப்போர்ட்டாக இருக்கிறது . குடிஉரிமைச் சட்டம் , புதிய கல்விக் கொள்கை ,மாநில உரிமைகள் மறுப்பு , மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் ,பெண்கள் தலித்துகள் பழங்குடியினர் வாழ்வுரிமை போன்ற வேறுபலவும் இந்நூலில் போதிய இடம் பெறாவிட்டாலும் அவற்றையும் இணைத்தே பார்க்க வேண்டும். இந்து ராஷ்டிரம் அமைப்பதை நோக்கி வேகமாக முன்னேறும் பாசிச கூட்டத்தை தேர்தல் களத்திலும் தத்துவக் களத்திலும் எதிர்கொண்டு முறியடிக்க இந்நூலை ஆயுதமாக்குவீர் !

 

இந்நூலாசிரியர் சிறந்த அறிஞர் . அவரே சொல்வது போல் ”அவருக்கோ அல்லது இவருக்கோ எதிரியுமல்ல ஆதரவாளருமல்ல” .இவர் மனைவி நிர்மலா சீத்தாராமன் ஒன்றிய நிதியமைச்சர் என்பது அவர் தனிப்பட்ட தேர்வு .அவ்வளவுதான் .

 

நூல் வாசித்தபின் என் இதயத்தையும் மூளையையும் கசக்கிக் கொண்டிருக்கும் பரகால பிரபாகரின் ஓர் வாக்கு மூலத்தோடு நிறைவு செய்கிறேன்.

 

“பெரும்பான்மைவாதத் திட்டத்திற்கு எதிரான அரசியல் சக்திகள் இவ்வளவு கடினமாகவோ அல்லது தெளிவான கொள்கையுடனோ அல்லது அவர்களின் நம்பிக்கையில் பாதியை வைத்தோகூட உழைத்ததில்லை . கடந்த பல ஆண்டுகளாக நகர ,மாவட்ட ,கிராம அளவுகளில் பொறுமையுடனும் கடுமையாகவும் தொடர்ந்தும் தத்துவார்த்தப்  பணி செய்யும் ஊழியர்கள் இடதுசாரிகள் ,காங்கிரஸ்  மற்றும் பிற கட்சிகளில் இல்லை . இக்கட்சிகள் ஒரு தேர்தலில் இருந்து மறுதேர்தலுக்குத் தூக்கத்தில் பயணிப்பதைப் போல் நடக்கிறார்களே தவிர  ,இடைப்பட்ட காலத்தில் உறுதியான ஒருமுகப்பட்ட தத்துவார்த்தப் பணிகளைச் செய்வதில்லை.”

 

ஆம் .நம் துன்ப துயரத்தின் மூலவேர் இதுவன்றோ !

 

 

புதிய இந்தியா எனும் கோணல் மரம்,

நெருக்கடியில் உள்ள ஒரு குடியரசு பற்றிய கட்டுரைகள் ,

ஆசிரியர் : பரகால பிரபாகர் , தமிழில் : ஆர் .விஜயசங்கர் ,

வெளியீடு : எதிர் வெளியீடு , தொடர்புக்கு : 04259 226012 / 9942511302

E mail : ethirveliyedu@gmail.com  , www.cthirveliyedu.com

பக்கங்கள் : 320 . விலை : ரூ.399/

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

18/2/2024.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


குரங்குகளே ! மன்னியுங்கள்!

Posted by அகத்தீ Labels:

 



குரங்குகளே ! மன்னியுங்கள்!

 

 

குரங்குகளே !

என்னை மன்னியுங்கள்!

உங்களை

அவர்களோடு ஒப்பிடுவதற்காக !

 

தாவுவது உங்கள் இயல்பு

துரோகம் நீங்கள் அறியாதது

 

பிய்த்தெறிவது உங்கள் குணம்

வெறுப்பும் வெறியும் உங்களுக்கு கிடையாது

 

என் பாட்டி சொன்னார்

குல்லாவைக்கூட நீங்கள் திருடவில்லை

விளையாட்டாக எடுத்தீர்கள்

திருப்பி தந்துவிட்டீர்கள்!

 

உங்கள் வாலில் தீப்பந்தம்

நீங்களே கொளுத்தியதல்ல …

அது புராணப் புளுகு  !

 

குரங்குகளே !

என்னை மன்னியுங்கள்

உங்களை

அவர்களோடு ஒப்பிடுவதற்காக !

 

குரங்குகளே !

இங்கே பாருங்கள் !

மதவெறி மாந்தி

அதிகாரத் திமிரோடு

வாலில் நெருப்போடு

குடிசைகள் ,பஞ்சுமூட்டைகள்

புத்தகக் கிடங்குகள் ,

அடுத்தவர் வழிப்பாட்டிடங்கள் ,

உண்ணும் உணவு

உடுத்தும் உடை

எங்கும் தாவித்தாவி

எரித்துக் கொண்டே இருக்கிறது

மதவெறி அதிகாரக் குரங்கு !

 

வெறி தலைகேறி

வாலில் நெருப்போடு

பெட்ரோல் தொட்டியில்

குதிக்கும் நாள் நெருங்கிவிட்டது !

 

குரங்குகளே !

என்னை மன்னியுங்கள்

உங்களை

அவர்களோடு ஒப்பிடுவதற்காக !

 

சுபொஅ.

13/2/2024.


அன்புமிக்க தோழர் சோழ .நாகராஜ் அவர்களுக்கு ,

Posted by அகத்தீ Labels:

 



அன்புமிக்க தோழர் சோழ .நாகராஜ் அவர்களுக்கு ,

 

 

வணக்கம் ,

 

“பெரியார் : பிராமணர்களின் எதிரியா ?” எனும் தங்களின் நூல் கிடைத்தது . மகிழ்ச்சி . 2022 இறுதியில் வெளிவந்தது என நினைக்கிறேன் .தாமதமாகப் பெற்று படித்தேன். தாமதமாயினும் இப்போதேனும் வாசித்தது மகிழ்ச்சியே !

 

உங்களுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை உங்கள் நூல்வழி உணர்ந்தேன்.  மாணவப் பருவத்திலேயே பெரியாரை பின் தொடரத் தொடங்கி மார்க்சிஸ்டானார்வர்கள் நாம் இருவருமே . பெரியார் இன்னும் தேவைப்படுகிறார் என்கிற கருத்திலும் நாம் இருவரும் உடன்படுகிறோம். இதன் காரணமாகவே  சிலர் என்னோடு ஒருவித ஒவ்வாமையை தொடர்ந்து கடைபிடிப்பதும் உண்டு .

 

உங்கள் நூல் காலத்தின் தேவை . எந்த ஒரு ஆளுமையாயினும் கால ஓட்டத்தில் எதிரும் புதிருமான அரசியல் களத்தில் அவ்வப்போது எதிர்வினையாற்ற சொல்லியவை பல உறுத்தலாகவும் பல உவப்பாகவும் இருக்கும். இது இயல்பு . எனவே எந்த ஒரு மேற்கோளையும் அவர் சொல்லிய சூழலில் இருந்து தனித்துப் பார்த்தால் முழு உண்மை விளங்காது . அந்த ஆளுமை தன் ஆயுள் காலம் முழுவதும் ஆற்றிய பணியில் மேலோங்கி இருந்தது எது என்பதே கேள்வி . அளவுகோல் அதுவே ஆகும்.

 

சானாதன எதிர்ப்பு , பெண்ணுரிமை , மூடநம்பிக்கை எதிர்ப்பு ,சமூகநீதி ,பகுத்தறிவுச் சிந்தனைகள் பெரியாரின் ஆகப்பெரும் பங்களிப்பாகும் . அதனைச் சார்ந்தே  “பார்ப்பனிய எதிர்ப்பு” என்பது பெரியாரின் வழியானது .பிராமணியம் என்ற சொல்லாடல் பெரியாரிடம் இல்லை .  பழந்தமிழ் இலக்கியத்திலும் இல்லை . நீங்கள் தலைப்பில் ’பிராமணர்களின்.. ’ என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பது இன்றைய சூழலுக்கு ஏற்ற நடைமுறை உத்தி .பிழையில்லை.

 

[பார்ப்பனியம் என்ற சொல்லையே இழிவாகக் கருதி தம்மை பிராமணர் பிராமணியம் என்று சொல்ல விரும்பும் மேட்டுக்குடியினர் ஆதிக்க வெறியினர் செயலில் எனக்கு உடன்பாடில்லை .நிற்க !]

 

இந்நூலில் தாங்கள் சொல்லிய பல செய்திகள் நான் அறிந்தவையே .ஆனால் அதனை தக்க முறையில் பயன்படுத்தி உங்கள் வாதத்துக்கு மெருகூட்டியிருப்பது சிறப்பாக இருக்கிறது .

 

சிருங்கேரி சங்கராச்சாரியார் கடிதமும் பெரியார்  பதிலும் , காந்தியார் கொலையுண்ட போது , ராஜாஜி : துவேஷமும் நேசமும் ,பார்ப்பனத் தோழர்களுக்கு ஆகிய அத்தியாயங்கள் காத்திரமானவை .மிகச் சரியாகப் பயன்படுத்தி வாதத்தை முன்னெடுத்திருக்கிறீர்கள் . உங்கள் பேசுபொருளுக்கு அது நன்றாகப் பொருந்தியுள்ளது .

 

வேதமறுப்பு என்பது தமிழ் மண்ணில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது . அதை நீங்களும் சுட்டி இருக்கிறீர்கள் . அந்த பாரம்பரியத்தின் நீட்சியாகவும் நவீன தேவைக்கு ஏற்பவும் பார்ப்பனிய எதிர்ப்பை அதிதீவிரமாக முன்னெடுத்ததுதான் பெரியாரின் தனித்துவம் .அதில் அவர் வெற்றியும் பெற்றார் . இந்நூலில் அதனை இன்னும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாமோ என நான் நினைக்கிறேன்.

 

பொதுவாய் நாத்திகம் பேசுகிறவர்கள் ஓர் குறுகிய வட்டதிற்குள் முடக்கப்படுவதே உலக வழக்கு . ஆயின் அறுவை சிகிட்சை கத்தி போன்று கூர்மையாக நாத்திகம் பேசி வெகுஜன திரளின் அங்கீகாரம் பெற்றவராய் திகழ்வது எளிதல்ல ;பெரியாரின் வெற்றியின் பின் இருந்த தமிழர் சமூக உணர்வு கொஞ்சம் பேசப்பட்டிருக்க வேண்டும்.

 

இதனை நன்கு உணர்ந்தவர்கள்தாம் தோழர்கள் ஏ.பாலசுப்பிரமணியம் , எம்.ஆர்.வெங்கட்ராமன் ,கே.முத்தையா போன்ற மார்க்சிஸ்ட் தலைவர்கள் .வாலிபர் சங்கத்தில் நான் பணியாற்றத் துவங்கிய போது என் உரைகளில் பகுத்தறிவு வாதம் தூக்கலாக இருக்கும் . அதனால் ஒரு சாராரின் கடும் விமர்சனத்துக்கு ஆளான போது என்னைத் தட்டிக்கொடுத்து தொடர்ந்து அப்படிப் பேச ஊக்கமளித்தவர்கள் அவர்கள் . மநுதர்மத்தை விமர்சித்து நான் எழுதிய கட்டுரையை தீக்கதிரில் வெளியிடச் செய்து என்னை அங்கீகரிக்கச் செய்தவர்கள் .

 

அரசியல் களத்தில் பெரியாரும் கம்யூனிஸ்டுகளும் இணைந்து பணியாற்றிய நிகழ்வுகளும் உண்டு ; முரண்பட்டு மோதிய நிகழ்வுகளும் உண்டு . தங்கள் நூலில் 95 ஆம் பக்கத்தில் அப்படி ஒரு நிகழ்வைச் சுட்டி இருக்கிறீர்கள் .இப்படி நிறையச் சொல்லலாம். இன்று பொது தளத்தில் பாசிசத்தை வீழ்த்த இணைந்து செயல்பட வேண்டிய காலகட்டம் . இதனை உணராத மதி கெட்ட சிலர் எதை எதையோ உளறித் திரியலாம் . ஆயினும் காந்தி ,அம்பேத்கர் ,நேரு ,பெரியார் போன்ற ஆளுமைகளை மறுவாசிப்பு செய்து ஜனநாயகப் போரில் துணைகோடல் அவசியத் தேவை .அதற்கு உங்கள் நூலும் உதவும். நம் கட்சியிலும் உள்ள தோழர்கள் உங்கள் நூலைப் படித்தல் அவசியம்.

 

இந்து வேறு ,இந்துத்துத்துவா வேறு ,மதநம்பிக்கை வேறு மதவெறி வேறு என பாசிச எதிர்ப்பு அணிதிரட்டலில் புரிதல் மேலோங்கி வருதல் போல பார்ப்பனிய எதிர்ப்பு பார்ப்பன எதிர்ப்பல்ல ; பார்ப்பனிய எதிர்ப்பே இந்துத்துத்துவ எதிர்ப்பின் குவிமையம் என்கிற புரிதல் மேம்பட உங்கள் நூல் போல் நிறைய வர வேண்டும்.

 

வாழ்த்துகள்,

 

தோழன்,

சுபொஅ.

10/02/24.


வாழ்வின் வலிகளைச் சொல்லும்…… ……

Posted by அகத்தீ Labels:

 


தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்தோர் கண்ணீர் துடைக்க இதுபோல் இடதுசாரி அமைப்புகள் ஏதேனும் உண்டா எனும் பெருங்கேள்வி நூலை வாசித்து முடிக்கும் போது என்னுள் எழுந்தது .

 

 


 

வாழ்வின் வலிகளைச் சொல்லும்…… ……

 

 

 

ஒரு நாள் என் அடுக்ககத்தில் நடை பயிற்சி முடிந்து உட்கார்ந்திருக்கும் போது ஒரு சகோதரி தன் தங்கை வெளிநாடு சென்றுவிட்டதை பெருமை பொங்கச் சொன்னார் .  “நாங்களும் சீக்கிரம் போய்விடுவோம் .இந்த நாட்டில் யார் இருக்க முடியும் ?” எனக் கேட்டுவிட்டு நகர்ந்தார் . [ மேல் அடுக்கு மத்திய தர மனோநிலை இது ]

 

 

அமெரிக்கக் கனவோடு அல்லது ஓரளவுபணி பாதுகாப்போடு வெளிநாடு செல்லுவோர் ஓர் வகை . இவர்களின் கனவும்கூட எந்த நேரமும் இடிந்து போய்விடக்கூடிய வஞ்சகமான அரசியல் சமூக பொருளாதார சூழலே எங்கும் கவிந்துகொண்டிருபது கவலை அளிக்கிறது . இந்நூல் அவர்களின் வாழ்வைப் பேசவில்லை .மாறாக அரபு தேசங்களில் பிழைப்பு தேடி சென்று ஏமாந்த , தோற்ற மனிதர்களின் வாழ்வைப் பேசும் நூல் .

 

 

காணாமல் போன தன் மூத்த சகோதரனைத் தேடி துபாய் சென்ற அமானுல்லா கான் , காலகதியில் தன் பெயருக்கு ஏற்ப வாழ்வைத் தொலைத்தவர்களின் மீட்பாளனாய் மாறிய கதை இது .அமானுல்லா என்றால் பாரசீகத்தில் மீட்பர் என்று பொருளாம் .

 

 

இது சுயசரிதை அல்ல . ஆனால் சுயசரிதை மாதிரி  . நினைவுக்குறிப்புகளா , ஆம் என்றும் சொல்லலாம் .ஆனால் அதுமட்டுமல்ல .இது நாவல் அல்ல நாவல் மாதிரி .சிறுகதைத் தொகுப்பும் அல்ல .ஆனால் 23 அத்தியாயங்களும் 23 சிறுகதைகதைகள்தான் ஆனால் பெருங்கதைகள் . பெருந்துயரம்.  இது வாழ்வின் வலிகளைச் சொல்லும் நூல் .இதனை நீங்கள் எப்படி அழைத்தால் என்ன ?

 

 

 “ இந்த தோற்கடிக்கப்பட்ட மனிதர்கள் யாரும் தங்களைத் தாங்களே தோற்கடித்தவர்கள் அல்லர். அவர்கள் அனைவரும் யாரோ ஒருவரின் நலன்களுக்காகவும் ஆதயங்களுக்காகவும் தோற்கடிக்கப்பட்டவர்கள் .” எனும் அமானுல்லா கானின் வாக்குமூலம் பொய்யல்ல .உண்மை .உண்மையைத் தவிர வேறல்ல .

 

 

முதல் நான்கு அத்தியாயங்கள் அமானுல்லாகானின் வாழ்வின் வலியும் இதயமும் பேசும் . 11 மற்றும் இறுதி அத்தியாயமும் அப்படித்தான் . மீதி 17 அத்தியாயங்களும் பிறரின் வலிகள் சிறுகதைகளாய் பதிவாகி உள்ளன .அமானுல்லாகான் சாதி ,மதம் ,கடவுள் போன்றவற்றை துறந்தவன் .மானுடத்தை நேசிப்பவன் . அப்படியே வத்சலாவைத் துணிந்து திருமணமும்  செய்து கொண்டவன். இதய அறுவை சிகிட்சை செய்து கொண்டவன் . இதயத்தை ஒரு போதும் தொலைக்காதவன்  .

 

 

சுனைனா எனும் பெண் தன் குடும்பத்தை மீட்க அரபுதேசம் போய் அங்கு பாலியல் தொழிலாளியாக்கப்பட்டார் .அவரை அதிலிருந்து மீட்டு அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த கதை .மும்தாஜின் கதையும் ,ஜெசி கதையும் இதுபோல்தான். நான் இளைஞனாக இருந்த போது புஷ்பா தங்கதுரை எனும் புனைப்பெயரில் வேணுகோபால் எழுதிய சிவப்பு விளக்கு கதைகளை ஓர் வார இதழில் படித்துள்ளேன் .அதில் கண்ணீரைவிட கவர்ச்சியே ஓங்கி நிற்கும் .இளமையின் ஹார்மோன்கள் அதைப் படிக்கத் தூண்டின . இங்கு எழுதப்பட்டவையோ கவர்ச்சி அல்ல கண்ணீரே முட்டி நின்றது . அந்த வலி நம்மையும் தொற்றிக்கொண்டது .

 

 

வாழ்வின் நெருக்கடி சூழலில் பிறந்து விட்ட குழந்தைகள் சட்ட விரோதமானவை .எனவே கைதுக்கு பயந்து பலவருடம் வெளி உலகையே அறியாமல் ஒற்றை அறைக்குள் வாழ நேர்ந்த அந்தக் குழந்தைகளின் கதை ; அப்துல்லாவின் மகளும் ,பாபுவின் குழந்தைகளும் வாசிப்பவரை தூங்க விடாது . 14 வருடம் அறைக்குள்ளே மட்டும் வாழும் ஒரு குழந்தையைப் பற்றி யோசித்தால்கூட நெஞ்சு அடைக்கும் .

 

 

அயலக மண்ணின் விசா காலம் முடிந்த பின்னர்  அல்லது வேறு ஏதேனும் சூழலில் சிக்கி வாழ்வை இழந்தோரின் வலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை . ஆயின் அவை மானுடத்தின் வலிகள் .இந்த வலிகளை உணர்வோரும் உதவிக்கு ஓடுவோரும் இன்னும் இந்த மண்ணில் இருக்கின்றனர் .இன்னும் மீதமிருக்கிறது மானுடம் எனும் நம்பிக்கையை இந்நூல் பதிவு செய்கிறது .

 

 

சாதி ,மதம் ,கடவுள் நம்பிக்கை எல்லாவற்றையும் மீறியது வாழ்வில் வலியும் , உதவும் மானுடமும் நூலின் காத்திரமான செய்தி இது .

 

 

“எவ்வளவு மனிதர்கள் எவ்வளவு விதவிதமான கதைகள் .அவர்களுக்கு மாமருந்தாய் சுட்டெரிக்கும் பாலையில் தாகம் தீர்க்க வந்த பாலைச் சுனைநீர் அமானுல்லா .” என்கிற அ.கரீம் வார்த்தை மெய் .

 

 

 “ இந்த நினைவுக் குறிப்புகளில் புதைந்து கிடப்பது தனிமையான ஒரு தலைபட்சமான சாட்சியமல்ல .சிறைச்சாலைகள் ,விபச்சார விடுதிகள் ,புகலிடங்களில் இருந்து ஒரு காலத்தில் அமானுல்லாகானுக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தன . அவர்களை கைவிடாமல் ,அமானுல்லாகான் அவர்களின் அழுகையை பின் தொடர்ந்தார் .இந்நூலில் உள்ள அனைத்துப் பாத்திரங்களும் அதனைப் பின்பற்றிய வாழ்க்கை முறைகளிலிருந்து உருவானவை.” என்கிறார் நூலாசிரியர் . ஆம். ஒவ்வொன்றாய் சொல்ல இயலாமல் கண்ணீரை துடைத்துக் கொண்டே கடந்து செல்கிறேன் நான் .

 

 

கேரளாவில் இருந்து அரபு தேசங்களுக்கு சென்றவர்கள் அதிகம் . கேரளத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் அரபின் எண்ணை டாலர் தினார் வாசம் இருக்கும் .வலியும் இருக்கும் .

 

 

அங்குள்ளோரின் வலியை போக்க  “ஹர்ஜா இந்தியா அசோசியேஷன்” இடதுசாரி அமைப்பான ”மாஸ் ஹர்ஜா” என இரண்டு முக்கிய அமைப்புகள் உண்டு . அதனோடு பயணப்பட்ட அமானுல்லாகானின் நினைவுச் சித்திரமே இந்நூல் .

 

 

தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்தோர் கண்ணீர் துடைக்க இதுபோல் இடதுசாரி அமைப்புகள் ஏதேனும் உண்டா எனும் பெருங்கேள்வி நூலை வாசித்து முடிக்கும் போது என்னுள் எழுந்தது .

 

 

மலையாள ஊடகங்கள் போல் தமிழ் தொலைகாட்சிகளும் ஊடகங்களும்  இப்படி புலம் பெயர்ந்தவர் மீட்க துயர்துடைக்க தங்கள் ஊடகங்களை ஒரு கருவியாக்கி இருக்கிறார்களா ? [ ஈழத் தமிழ் அகதிகள் பிரச்சனை தனி அரசியல் .அதனை இதனோடு குழப்ப வேண்டாம்.]

 

சுனில் லால் மஞ்சாலும் மூடு இந்நூலை தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.தமிழ் படைப்பை வாசிப்பதைப் போல் நான் உணர்ந்தேன் என்கிறார் உதயசங்கர். உண்மைதான்.அழுகைக்கு மொழி ஏது ?

 

 

 

அமானுல்லாவின் ஞாபகங்கள் பாலைச் சுனை

ஆசிரியர் : தீபேஷ் கரிங்புங்கரை ,

தமிழாக்கம் : சுனில் லால் மஞ்சாலுமூடு ,

வெளியீடு :பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com

பக்கங்கள் :192 , விலை : ரூ. 200 /

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

08/02/2024.