எல்லாம் சரியாய் இருக்கிறது - ஆயின்

Posted by அகத்தீ Labels:

 



எல்லாம் சரியாய் இருக்கிறது - ஆயின்
எதுவும் சரியாக இல்லை.
எல்லாம் அமைதியாக இருக்கிறது -ஆயின்
எதுவும் அமைதியாக இல்லை.
எல்லாம் நியாயமாக நடக்கிறது -ஆயின்
எதுவும் நியாயமாக நடக்கவில்லை.
எல்லாம் கடவுள் சித்தம் - ஆயின்
எதுவும் கடவுள் சித்தம் இல்லை .
சுபொஅ.

நீ தேசபக்தனாகிட எளிய வழி

Posted by அகத்தீ Labels:

 

நீ தேசபக்தனாகிட எளிய வழி

 

சாப்பிட மட்டுமே வாயைத் திற

அப்போதும்

நீ எதைச் சாப்பிட வேண்டும் என்பதை

”அவர்களே” தீர்மானிப்பர் . சரிதானே !

 

பதில் சொல்ல ஏன் வாயைத் திறக்கிறாய் ?

 “ஆம்.” ,”இல்லை” என்பதற்கு

தலையாட்டினால் போதுமே அப்போதும்

 “அவர்கள்” சொல்லுகிறபடி ஆட்டினால் போதுமே !

 

பணிவு என்பதும் அடிமைத்தனம் என்பதும்

வேறுவேறு என ஏன் தப்பாக நினைக்கிறாய் ?

அதுவே இது .இதுவே அது  அறிவாய் இதை

அடிமைத்தனம் சுகமானது எனச் சொல்!! .

 

அவர்களால் அவர்களுக்காக அவர்களே ஆளுவதே

அரசு என்பதை இன்னுமா அறியாமலிருக்கிறாய் ?

பிறக்கும் போது நீ எதைக் கொண்டுவந்தாய்

போகும்போது நீ எதை கொண்டு போகப்போகிறாய் ?

 

அழுது  கொண்டே பிறந்தாய் அழுது அழுதே சாகு

உனக்கு விதிக்கப்பட்டதை நீ ஏற்றுக்கொள்

ஆண்டவன் அனுகிரகமோ ஆட்சியின் அனுசரணையோ

அவர்களுக்கு மட்டுமே என்பதை அறியாயோ ?

 

தவறியும் முணுமுணுக்காதே ! தவறியும் வாயைத் திறக்காதே !

தவறியும் முஷ்டியை உயர்த்தாதே ! தவறியும் கண் சிவக்காதே !

தவறியும் சிந்திக்காதே ! தவறியும் கரம் கோர்க்காதே !

தவறியும் போர்க்குணத்தோடு எழுந்து நின்றுவிடாதே !

 

சுபொஅ.

தற்கொலை நேரம்….

Posted by அகத்தீ Labels:








தற்கொலை நேரம்….

பேய்களின் சக்கரவர்த்தி
வழிநெடுக முட்களையும் இருட்டையும்
ஒருசேர திணித்துக் கொண்டே இருந்தது.

கொஞ்சம் இரக்கமுள்ள பேய்கள்
மின்மினிப் பூச்சியையாவது விட்டுவைக்கலாமே
என மெல்ல முணுமுணுத்தது .

அங்கே என்ன சத்தம் என்கிற அதட்டலில்
முணுமுணுப்பு காணாமலே போய்விட
மயாண அமைதி இருட்டுக்கு துணையானது .

சக்கரவர்த்திப் பேயின்
விழிகளை நேரில் சந்திக்கவும் பயந்து
தேவதைகள் ஒழிந்து கொண்டன.

அகோர பசி கொண்ட சக்கரவர்த்திப் பேய்
வனம் ,வளம் ,அறிவு ,அன்பு அனைத்தையும்
இரத்த கவிச்சியோடு உண்டு களித்தது .

சுடுகாடான காட்டில் அழுகையும்
பற்கடிப்பும் ஒப்பாரியும் மாரடிப்பும்
நிரந்தரமாய் குடியேறியது

பிரார்த்தனைகளுக்கும் வேண்டுதல்களுக்கும்
அருள்பாலிக்க முடியாமல்
கடவுள்கள் தற்கொலை செய்துகொண்டனர் .

பேய்களின் ராஜ்யத்தில் எமக்கென்ன வேலை என
கடவுள் தற்கொலைக் குறிப்பில் எழுதியதை
சக்கரவர்த்தி பேய் வெற்றி என அறிவித்தது

எல்லாவற்றையும் விட மனிதம் வலுவானது என
சூரியோதயம் தெளிவாய்ச் சொன்னது
துவங்கியது சக்கரவர்த்திப் பேயின் தற்கொலை நேரம்.

சுபொஅ.