சும்மா கிடந்த சொல்லை எடுத்து 4.. கணக்கு மீறி

Posted by அகத்தீ Labels:








சும்மா கிடந்த சொல்லை எடுத்து - 4 




கணக்கு மீறித் தின்ற கனத்த ஆடு




சு.பொ.அகத்தியலிங்கம்

“பறவைகளோடும் சிப்பிகளோ டும் சிறுபல்லிகளோடும் நரிகளோ டும் பென்குவின் பிரதிநிதிகளோடும்  / நான் பேசுவதற்கு முடிந்திருக்குமெ னில் ..” எனத்தொடங்கும் ‘ விலங்கு நெறி’ எனும் நெடுங்கவிதையில் ஓரி டத்தில் “ எனக்கு எப்போதும் பேச நேர்ந்ததில்லை நவநாகரிக விலங்குக ளோடு” எனக் குத்திக்காட்டுவார் பாப்லோ நெருடா.

அக்கவிதையில் ஆடு, நாய், குதிரை, குளவி, , முயல், தவளை, கொசு, சிலந்தி , எருமை என அவர் பாகுபாடு காட்டாமல் உரையாட விரும்பினார்; அதன் காரணமும் சொன்னார் . “ எதைக் கண்டறிய வந் தேனோ  /அதை அறிந்து கொள்ளா மல் / இந்தப் பூமிக்கோளத்தைவிட் டுப்  /போகமாட்டேன் ” என்கிற பொருள் பொதிந்த பிரகடனம் பாப்லோ நெருடாவின் அந்த நெடுங் கவிதையின் இறுதிப் பகுதியில் இடம் பெறும்.ஆதி மனிதன் தொட்டு இன்று வரை விலங்குகளை பறவைகளை மனிதன் குறியீடாகப் பயன்படுத் தியே வந்துள்ளான் .

பாம்பைக் காமத்தின் குறியீடாய்க் காணும் வழக்கம் உலகில் பலநாடுகளில் உண்டு. நீதி நெறிக்கதைகளாகட்டும் குழந்தைகள் இலக்கியமாகட்டும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தனித்துவமான இடம் உண்டு. காதலையும் இயற்கையையும் போல விலங்குகளும் கவிஞர்களின் குருதியோடு கலந்தவை போலும். பாப்லோ நெருடாவின் இளைய தோழன் பட்டுக் கோட்டையின் பாடல்களில் இவை நீக்கமற நிறைந்திருக்கின்றன. முந்தைய வாரங்களில் குருவிகளிடம் காகங் களிடம் பாடம் கற்கச்சொன்ன பட்டுக்கோட்டையைக் கண்டோம்.மனித குணங்களையே விலங்குக ளோடு ஒப்பிட்டுத் தீர்மானிப்பதும் தொடர்ந்து பட்டுக்கோட்டை தீர்ப்பு வழங்குவதும் அபாரம்.

“ உறங்கையிலே பானைகளை
உருட்டுவது பூனைக்குணம் – காண்பதற்கே
உருப்படியாய் இருப்பதையும்
கெடுப்பதுவே குரங்குக்குணம் - ஆற்றில்
இறங்குவோரைக் கொன்று
இரையாக்கல் முதலைக்குணம் - ஆனால்
இத்தனையும் மனிதனிடம்
மொத்தமாக வாழுதடா ! ” (சக்கரவர்த்தித் திருமகன் - 1957)


அடேயப்பா ! மிருதுவாயிருக்கும் மென்மையாய் நடக்கும் பூனை; ஆனால் அது திருடும் . குரங்கு நம்ம மூதாதையர். ஆனால் அதற்கு எதுவும் அவசரம்; பிய்த்து எறிந்துவிடும்; வைத்து அழகு பார்க்காது. மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. இவை மொத்தமாய் இருக்கும் மனிதன் எப்படி இருப்பான் ?மனிதனை சிரிக்கும் விலங்கென் றும் சிந்திக்கும் மிருகமென்றும் சமூகவியலாளர்கள் கூறுவர். அந்த மனிதக் கூட்டம் என்ன செய்யுது ? “அடுக்குப் பானை போன்ற / வாழ்வை துடுக்குப் பூனை உடைக்குது ” (பாச வலை 1956), இது ஒரு பாடலின் கடைசி வரிகள். ஆமாம். வாழ்க்கை ஒன்றோடொன்று தொடர்புடை யது. ஒன்றின் மீது மற்றொன்றாய் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது . அதனை அடுக்குப் பானையோடு ஒப்பிடுகிறார் பட்டுக்கோட்டை. இந்த உவமையை ரசிக்க அடுக்குப் பானை பற்றி தெரிந்திருக்க வேண்டும். .

இன்றைய நகர இளைஞர்களுக்கு இந்த எடுத்துக்காட்டு சித்தரிப்பு புரியுமோ ? அன்று பிளாஸ்டிக் பொருள்கள் வீடுகளை ஆக்கிரமிக் காத காலம். ஒரு மண்பானையில் அரிசி, இன்னொன்றில் புளி , இன் னொன்றில் கருப்பட்டி , இன்னொன் றில் பருப்பு, இன்னொன்றில் கேழ் வரகு இப்படி பானைகளை ஒன்றின் மேலொன்றாய் அடுக்கி வைத்திருப் பார்கள். ஒவ்வொன்றிற்கும் தனித்தனி மூடி இருக்காது. மேலே உள்ள பானைக்கு மட்டுமே மூடியிருக்கும். பூனை தட்டிவிட்டால் எல்லாம் விழுந்து சிந்தி சிதறிவிடும். அது தன் தேவைக்கு இப்படி இழுத்துப்போட எல்லோருக்கும் சிக்கலாகிவிடும். சிலரின் சுயநல குணமும் அப்படித் தான். இதே பாடலில் முன் பத்தி யொன்றில் கூறுவார்;

“கணக்கு மீறித் தின்றதாலே / கனத்த ஆடு சாயுது- அதைக்  /கண்ட பின்னும் மந்தையெல்லாம்  /அதுக்கு மேலே மேயுது” இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெரும்கூட்டு இருக்கிறது என்கிறார் பட்டுக்கோட்டை. இப்படி இலைமறைவு காய்மறைவாய் சொன்னால் போதாது என்று கரு தினாரோ என்னவோ அடுத்து ஓங்கி மண்டையில் நறுக்கெனக் குட்டுகிறார்.“ பணக்கிறுக்குத் தலை யிலேறிப் / பகுத்தறிவு தேயுது- இந்தப்  /பாழாய்ப் போற மனிதக் கூட்டம் / தானாய் விழுந்து மாயுது”

அடே 1957 ல் சொன்னார் 2014 லும் நிலைமை திருந்திவிடவில் லையே ! பணக்கிறுக்கு சமூகத்தை என்னமாய் ஆட்டுவிக்கிறது ! “காசே தான் கடவுளடா ! அந்தக் கடவுளுக் கும் இது தெரியுமடா” என்று பாடு கிறானே ! “ காசு மணி துட்டு பணம் பணம் ”என வெறிபிடித்து ஓடுகிறானே !ஆடுகிறானே . “  கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் அய்யோ பாவம் காசிருந்தால் வாங்கலாம் அய்யோ பாவம் ”என கண்ணதாசன் சும்மாவா சொன்னான் ? இந்தப் பணவெறி திருடச் சொல்லுது !

ஆனாலும் எல்லா திருடனையும் சமூகம் ஒரே மாதிரி குற்றவாளியாய் பார்க்குதா ? இல்லையே ! “ பட்டப் பகல் திருடர்களைப்  /பட்டாடை கள் மறைக்குது – ஒரு  /பஞ்சையைத் தான் எல்லாஞ் சேர்ந்து / திருட னென்றே உதைக்குது” என்றானே பட்டுக்கோட்டை .

இதுதானடா சமூக லட்சணம் !பூனைக்குணம் , குரங்குக் குணம், முதலைக்குணம் எல்லாம் மொத் தமாய் இருக்கும் இந்த மனிதக் கூட்டத்தின் மந்தை உளவியல் கண்டு மனம் நொந்தார் . ஆட்டுக்கும் இந்த நாட்டுக்கும் ரொம்பக் கூட்டிருக் குன்னு சொன்னவராச்சே ! விவகாரத் தைப் பல்லை உடைத்துக் கையில் கொடுப்பதுபோல் தந்துவிடுகிறார்.

“ புரளி கட்டிப் பொருளைத் தட் டும் சந்தை .– பச்சை /புளுகைவிற்றுச் சலுகை பெற்ற மந்தை. – இதில்  /போலிகளும் காலிகளும் பொம் மலாட்டம் - ஆடுகின்ற விந்தை சொன்னால் நிந்தை..” இப்படி நிலைமையைச் சொன்ன தோடாவது நின்றாரா ? இல்லை .

தொடர்ந்து பாடுகிறார் “ உப்புக் கல்லை வைரம் என்று சொன்னால் – நம்பி / ஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால் – நாம்  /உளறி என்ன கதறி என்ன ? / ஒன்றுமே நடக்கவில்லை தோழா – ரொம்ப நாளா …”.ஒரு வகையில் நம்பிக்கை வறட் சியைச் சொல்வதுபோல் தோன்றும்; மறுபுறம் இடித்துரைத்து விழிக்கச் செய்யும் உத்தியாக இருப்பது உற்று நோக்கின் புலப்படும் .

ஒரு கவிதையில் வைரமுத்து சொல்வார்:
“விலங்குகள் நம்மினும்
மானமுள்ளவை

யானையின் காலில்
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை
பூனைக்கு எலிகள்
பல்லக்குச் சுமந்ததில்லை
கரடிக்கு மான்கள்
கால்பிடித்து விட்டதில்லை

ஒன்று
சுதந்திரத்தின் வானம்
இல்லை
மரணத்தின் பள்ளம்
இடைப்பட்ட வாழ்க்கைவிலங்குக்கில்லை-- -- ---

காட்டுக்குள்
மூட நம்பிக்கையில்லை
அங்கே
நெருப்புக் கோழி கூடத்
தீமிதிப்பதில்லை”

பட்டுக்கோட்டையின் விலங்கு, பறவைக் காதலும் ஆழமானது அல்லவா ? கழுகு, பெருச்சாளி, நரி, காளை, இப்படி விலங்குகள், பறவைகள் எல்லாம் பட்டுக் கோட்டை பாடலில் உயிர்பெற்று நம்மைப் பகடி செய்யும் ; இயற்கையும் வாழ்க்கையைச் சொல்லித்தரும் . வரும் வாரங்களில் பார்ப்போம் !

நன்றி :தீக்கதிர் இலக்கியச்சோலை 26 -05-2014

படைப்பாளியின் உள்மனதை ஊடுருவி..

Posted by அகத்தீ Labels:






படைப்பாளியின் உள்மனதை ஊடுருவி…..




சு.பொ. அகத்தியலிங்கம்

பஷீர் தனிவழியிலோர் ஞானி ,
ஆசிரியர் : பேராசிரியர் எம்.கே.ஸாநு,
தமிழில் : யூமா வாசுகி,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ தெரு, தேனாம் பேட்டை,
சென்னை - 600 018.
பக் : 304, விலை : ரூ.180

பஷீரின் வாழ்க்கை குறித்து மலையாளத்தில் எண்ணற்ற புத்தகங்கள் வந்துவிட்டன; குறிப்பாக பஷீர் எழுதிய நூல்களின் எண்ணிக்கையைவிட பஷீர் பற்றிய நூல்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் பி.கே.பிரதாபச்சந்திரன். ஆயினும் அதிகாரப்பூர்வமான ஒரு வாழ்க்கை வரலாறு இல்லாதது முற்றிலும் ஒரு குறையாகவே இருந்தது. நிரப்ப முடியாத பள்ளம் என்று நம்மிடையே ஒரு சொற்பிரயோகம் உண்டல்லவா, அப்படிப்பட்ட ஒரு பள்ளத்தைத்தான் இந்தப் புத்தகம் நிரப்புகிறது என்கிறார் பி.கே.பிரதாபச்சந்திரன். இதுமிகைக் கூற்றல்ல என்பதை இந்நூலை வாசிக்கும் யாரும் ஒப்புக்கொள்வர்.

“ பாத்துமாவின் ஆடு”, “என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” இந்த இரு மலையாளப் படைப்புகள் குறித்து ஒரளவு இலக்கிய அறிமுகம் உடைய தமிழ் வாசகர்கள் அனைவரும் அறிவர். இந்த உன்னதப் படைப்புகளைத் தந்த வைக்கம் முகம்மது பஷீர் என்ற இலக்கிய ஆளுமை தமிழ் வாசகர்களுக்கு புதியவர் அல்ல ; ஆயினும் அவரின் இந்த வாழ்க்கைக் கதை முற்றிலும் வித்தி யாசமானது . படைப்பாளியின் உள்மனதை திறந்து காட்டும் அரிய முயற்சி.இந்நூல் மூன்று பாகங்களைக் கொண்டது .

முதல் அத்தியாயம் பஷீரோடு நம்மை கைகுலுக்க வைக்கிறது. அதிலும் பஷீரும் கடவுளும் என்ற அத்தியாயத்தை படித்த போது இன்றைக்கு அதை மட்டுமே தனிக்கட்டுரையாகப் பிரபலப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதில் வரும் கிட்டச்சோகனின் நிகழ்வு மனித வாழ்வில் இயல்பாய் உறைந்திருக்கும் மதநல்லிணக்கத்தின் குறியீடு. பஷீரின் உம்மாவுக்கு பாகமாகக் கிடைத்த தோட்டத்தில் உள்ள எட்டிமரத்தை விற்க நினைக்கின்றனர். அங்கே எதிரே குடியிருக்கும் கிட்டச்சோகன் பாம்பு முதலிய விக்கிரகங்களை வைத்து வழிபட்டுவருவதை அறிந்து உம்மாவிற்கும் முடிவை கைவிடுகிறார். கிட்டனின் நம்பிக் கையை மதிக்கிறார்.

ஈழவர்களிலும் அடிநிலையில் வைக்கப்படுகிறார்கள் சோகன் என்கிற பிரிவி னர். கிட்டச்சோகன் அவ்வகையினன். அன்று எந்த சமூகப் பாதுகாப்பும் அற்ற கிட்டச்சோகனை ஒதுக்கினால் யாரும் ஆட்சேபித்திருக்கமாட்டார்கள். ஆயினும் உம்மா கண்ணியமாக அவரது நம்பிக்கை உணர்வை மதித்து நடத்தினார். ஒரு நாள் கிட்டச் சோகன் செத்துவிடுகிறான். சிலநாட் களுக்கு பிறகு அவன் மனைவி உம்மாவிடம் அந்த எட்டிமரத்தை இப்போது விற்கலாமே என்று சொன்னதுடன்; சோகன் சாவதற்கு முன்னால் அந்தச் சிலைகளை தன் வீட்டு மரத்தடியில் வைத்து விட்டதாகவும் கூறுகிறார். மதநலிணக்கமும் நாகரீகமும் கை குலுக்குகின்றன. அது போல் பஷீர் நூலொன்றை பாடபுத்தகமாக்க கம்யூனிஸ்ட் அரசு முயன்ற போது கடும் எதிர்ப்பெழுந்தது. அந்த எதிர்ப்புக்கு மதச்சாயம் பூச சிலர் முயன்ற போது பஷீர் அதற்கு உடன்படா மல் அது அரசியல் எதிர்ப்பென புறந்தள்ளியதும் சரியான அணுகுமுறையாகும்.

இதுபோன்ற சுவை யான ஆழமான செய்திகளைச் சொல்லும் முதல் பாகம்.முதல் பாகத்தில் அவரது சுதந்திரப் போராட்ட அனுபவம் உயிர்த்துடிப்புடன் பதிவாகியிருக்கிறது. அத்துடன் அவர் ஊர்சுற்றியாய் தேசம் முழுவதும் சுற்றித்திரிந்து பெற்ற அனுபவச் செழுமை நன்கு வெளிப்படுகிறது. ராகுல சங்கிருத்தியாயனின் ஊர்சுற்றிப் புராணம் ஒருவகை கிளர்ச்சியான அனுபவம் தரும். இங்கு பஷீரின் இன்னொரு வகையான அனுபவம் நம்மை ஈர்க்கும். ஆழ்ந்த புத்தகப் படிப்பு ஒரு வகையான அறிவு தீபத்தைச் சுடரச் செய்யும். எங்கும் அலைந்து திரிந்து - பல தரப்பட்டோர்களோடு ஊடாடி உறவாடி பெறும் ஞானமே தனி. பஷீருக்கு இரண்டும் வாய்த்தது என்றும் சொல்லலாம். அதைவிட இரண்டு வாய்ப்பையும் உருவாக்கிக் கொண்டார் என்பதே பொருத்தம்.

இரண்டாம் பாகம் பஷீர் என்ற எழுத்தாளர் உருவான கதையைச் சொல்கிறது . பஷீரின் கதைகள் எல்லாமே அவரின் அனுபவங்கள் தான். ஆனால் அனுபவங்களை அப்படியே நகலெடுப்பவரல்ல பஷீர். அதற்கு உயிர் கொடுக்கும் வித்தைதான் பஷீரின் எழுத்துத்தவம். “ என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது” கதை மட்டுமே அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதப்பட்டது. மற்றெல்லா கதைகளையும் அடித்து திருத்தி மாற்றி மாற்றி எழுதியவர் பஷீர் . ஆம், தான் எழுதுவதுதான் எழுத்து என கதைத் தொழிற்சாலையாக அவர் ஒரு போதும் திகழவில்லை .

சிலையைச் செதுக் குவது போல், சித்திரம் தீட்டுவதுபோல் சிரத்தையோடு செயல்பட்டார் என்பதோடு அதற்காக பிரசவ அவஸ்தையை அனுபவித்தார். அந்த அனுபவம் இரண்டாவது , மூன்றாவது பாகங்களில் விரவிக்கிடக்கிறது .சுத்தசுயம்புவாக பஷீரை நூலில் படம்பிடித்துக் காட்டவில்லை . தனிமனித பலம் பலவீனங்களோடு அவர் சித்தரிக்கப் பட்டிருக்கிறார். அவரது சக இலக்கிய வட்டம் முக்கியமானது. பி.கே.பாலகிருஷ் ணன், போஞ்ஞிக்கரை ராபி, எம்.பி.கிருஷ்ணபிள்ளை, பெருன்னதாமஸ், பொற்றே காட், கேசவ்தேவ், தகழி, ப்ராக்குளம் பாசி இன்னும் பலர் அவரின் சபையில் உண்டு. அவர்களின் வாக்குமூலங்கள் கடிதங் கள் மூலம் பஷீரின் குணச்சித்திரம் கறுப்பு வெள்ளையாக இந்நூலில் தீட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கேசவ்தேவோடு பஷீருக்கு ஏற்பட்ட நட்பும் உரையாடலும் தொழிலாளி வர்க்கத்திற்காக இலக்கியம் படைக்கவேண்டும் என்கிற உறுதியை அவருள் விதைத்து. அதேசமயம் ஒவ்வொரு படைப்பையும் முடிந்தவரை வசீகரமாக்குவதற்கான சிந்தனை பஷீரின் இலக்கிய வாழ்வில் நிரந்தரமாக இருந்ததை நூலாசிரியர் பொருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார்மூன்றாவது பாகம் கொஞ்சம் அவரின் சொந்த வாழ்க்கையைப் பேசும். திருமணத்தைப் பேசும். அவரின் புத்தகக்கடை முயற்சிகளைப் பேசும். அதற்கும் மேல் அவரின் குடும்ப விவகாரங்கள் நூலை ஆக்கிரமிக்கவில்லை.

அவர் பொதுமனிதன். அவரது வாழ்க்கையினை அந்த எல்லையின் வரம்பிலிருந்தும்; அதே நேரத்தில் குறுக்குவெட்டாய் அந்தப் படைப்பாளியின் மனோ உலகத்தை உடைத்துக் காட்டுவதிலும்; அதற்குக் களமான சூழலை விவரிப்பதிலும் இந்நூல் வெற்றிபெற்றுவிட்டது. சப்தங்கள் நூல் உருவாக்கிய சர்ச்சை, பாத்துமாவும் ஆட்டுக்குட்டியும் உருவாகிய பின்னணியும் வலியும். இப்படி படைப்பின் ஊற்றை காட்டுகிறது இந்நூல் . மேலும் அந்த படைப்பின் வீச்சையும் நம்மை உணர வைக்கிறது . 33 புத்தகங்களுக்கும் 12 விருதுகளுக்கும் சொந்தக் காரரான இவர் தனிமையின் உபாசகர் என்பதும்; பெரும் கூட்டங்களிலிருந்து ஒதுங்கியிருக்கவே பிரியப்பட்டார் என்பதும் மிக முக்கியச் செய்தி.

அது மட்டுமல்ல ஒரு முறைக்கு இருமுறை மனநோய் சற்று அதிகமாகி சிகிச்சை பெற்றதும் அறிய வேண்டிய செய்தி.இவர் தன் எழுத்துக்களில் கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்தபோதும் கேரளத்தில் கம்யூனிஸ்டுகள் அதைப் பொருட்படுத்தாமல் இவரது எழுத்துகளைக் கொண்டாடினர் என்பது அடிக்கோடிடவேண்டிய செய்தி. அது போல் புலமைக் காய்ச்சலின்றி சக எழுத்தாளர்களோடு உரையாடுகிற உயர்பண்பு மேலோங்கி இருந்தது என்பதும் கற்க வேண்டிய பாடம் . பஷீர் இறை நம்பிக்கையாளர் . இஸ்லாம் மீதும் குரான் மீதும் காதல் கொண்டவர் . ஆனால் மனிதகுலத்தின் மீது மாறாக் காதலை மட்டுமே இவரின் எழுத்துகள் வெளிச்சம் போட்டன . சமூகத்தின் இருண்ட பகுதிகளை இவரது எழுத்து காட்சிப்படுத்திய போதும் விமர்சித்த போதும் அதில் மானுட அன்பே ஓங்கி நின்றது . அவரது எழுத்து வெற்றியின் சூட்சுமம் இதுவே. இதனை இந்நூலின் போக்கோடு நெடியின்றி தந்துள்ளார் ஆசிரியர் .

“சிக்கலான ஒரு தனித்தன்மைதான் பஷீருடையது .மேல்தளத்தில் தெரிகிற குறும்புகளும் தமாஷ்களுக்கும் கீழே நிறைய நன்மையும் ஆன்மிகமும் கருணையும் அவரில் மலர்ச்சியுடனிருந்தன. அதனால்தான் சமூகம் கொண்டாடுகிற ஆசாரப் பிரக்ஞையில் அதில் ஏமாற்றுக்குத் தானே இடம் அவர் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை . அவருக்குள் ஒரு எதிர்ப்பாளர் இருந்தார். ‘அனர்க நிமிஷம்’ நிகரற்ற நொடி எனும் நூலில் ‘அனல் ஹக்’ படிப்பவர்களால் அந்த மர்மமான மனதிற்குள் எட்டிப் பார்க்கலாம். அந்த உள் உலகம் ஒருவரை தனித்தவராக்குகிறது . ‘ தனிமையின் தீரம் ’ என்னவென்று அவரால்தான் அனுபவித்தறிய முடியும் . அதையும் அறிய முயன்றபடிதான் நான் சம்பவங்களைத் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தியிருக்கிறேன்” என்கிறார் நூலாசிரியர் எம்.கே.ஸாநு. ஆம் பஷீரின் மனோ உலகம் இந்நூலின் ஊடும்பாவுமாய் பின்னப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.

நன்றி : தீக்கதிர்  , புத்தகமேசை , 25 -5-2014.

குறிப்பு : தீக்கதிரில் இந்த மதிப்புரை வெளியான போது  யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு குறித்து எதுவும் சொல்லாது விட்டுவிட்டேன் . இத்தவறினை காலையில்  பி.கே.ராஜன் சுட்டிக்காடியதும் உறைத்தது . வருந்தினேன் . யூமா வாசுகியை அலைபேசியில் அழைத்து என் மன்னிப்பைக் கோரினேன் . ஆனால் ஒன்று , மொழிபெயர்ப்பு என்ற உணர்வே எனக்கு ஏற்படாமல் மொழிபெயர்த்தது அல்லவா இந்த தவறுக்குக் காரணம் .

தோற்கவே கூடாத கொள்கை ... வெறும் வார்த்தை அல்ல..

Posted by அகத்தீ Labels:

தோற்கவே கூடாத கொள்கை... வெறும் வார்த்தை அல்ல...

சு.பொ.அகத்தியலிங்கம்

“ பொதுவுடைமைக் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்ந்து பதினெட்டு இடங்களில் நின்று, ஒவ்வொன்றும் இரண்டு லட்சம் வாக்குகள் பெற்றிருக்கின்றன. அரை விழுக்காடு இனி எந்தத் தலைவரும் கூட்டணியில் இடம் தரமாட்டார்கள். இதயத்தில் மட்டுமே இடம் தருவார்கள். தோற்கவே கூடாத ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு தோற்றுக் கொண்டிருக்கிறார்கள். நோய் என்னவென்றே அவர்களுக்குத் தெரியவில்லை.” இது பழ. கருப்பையா தினமணி ஏட்டில் “ சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவர் ” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இடம் பெற்றுள்ள வரிகள்.

அதில் கடைசி இருவரிகளை மீண்டும் படியுங்கள். இது “ தோற்கக்கூடாத கொள்கைகள்” என ஒப்புக் கொண்டதற்கு நன்றி! தோல்வியின் காரணங்களை கட்சி நிச்சயம் பரிசீலிக்கும். குறைகளையும். விரைந்து முன்னேறும். தேர்தலோடு எல்லாம் முடிந்து போவதில்லை. இதனை பழ.கருப்பையா அறிவது அவசியம். அவர் மட்டுமல்ல மத்தியில் ஆட்சியைப் பிடித்தக் கூட்டமும் இதுபோல்தான் பிதற்றிக் கொண்டிருக்கிறது.

நுனிகொம்பர்களே! கூத்தாட வேண்டாம்.வானுள்ள வரையும் மண்ணுள்ள வரையும் நீங்கள் தான் என மக்கள் தீர்ப்புசொல்லவில்லை. இந்த வெற்றி காலவரை யறைக்கு உட்பட்டதே! தோசையைத் திருப்பிப்போடுவது போல் அடுத்தமுறை மக்கள் திரும்பமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?நான் பிறந்த ஊரில் தெருவுக்கு தெரு சுடலைமாடன் சாமி இருப்பார்.

அந்த சுடலைமாடனுக்கு எதிரே ஒரு சிறு கல்லிருக்கும். அதனை எதிர்மாடன் என்பர். ஆண்டுதோறும் கொடையின் போது எதிர்மாடனுக்கு படையல் உண்டு. எதிர்மாடன் இல்லாத சுடலைமாடன் ஊரை அழித்துவிடுவார் என்று என் அம்மா பாட்டி எல்லோரும் சொல்வர். அவர்களின் நம்பிக்கை அது. ஆனால் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சி முக்கியம். இப்போது மத்தியிலும் மாநிலத்திலும் அதுவே பிரச்சனை. எதிர்க்கட்சிகளின் பாத் திரத்தை வகிக்க வேண்டிய ஊடகங்கள். கார்ப்பரேட்டுகளின் கைப்பாவை ஆகிவிட்டன. மக்களும் ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் தேவையை உணரவில்லை. அதனால்தான் தன் வாக்கை ஜெயிக்கிற கட்சிகளுக்கே போடவேண்டும் என நினைக்கிறார்கள். எங்களை நல்லவர்கள் கொள்கைப் பற்றாளர்கள் என்பதை ஒப்புக் கொள்ளும் மக்கள் கூட தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கும் போது அளிக்கும் வாக்கு பயனற்றது எனக் கருதுகிறார்கள்.

மேலும் தேர்தலையே இறுதி புகலிடமாகக் கருதாததால் போராட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தேர்தல் முன் தயாரிப்புகளைச் செய்யத் தவறிவிடுகின்றனர். மலைகள் மோதும்போதும், அலைஅடிக்கும் போதும் இடையில் வருபவர் நசுங்குவது இயல்பே! இவற்றினால் கொள்கை தோற்றுவிட்டதாகக் கூறமுடியாது.

சோவியத் யூனியனின் தகர்வு எவ்வளவு பெரிய துயரத்தை நெருக்கடியை கொண்டுவந்திருக்கிறது என்பதை உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆம் இந்தியாவிலும் இடதுசாரிகளின் பின்னடைவு நல்லதற்கல்ல என்பதை அரசியலின் பாலபாடம் அறிந்தோரும் ஒப்புக்கொள்வர்.

ஆயினும் வலது கோடியிலிருக்கும் ஆட்சியாளர்களை எதிர்க்க எல்லோரும் இனி இடதுசாரிகள் குரலில் பேச வேண்டியது காலத்தின் கட்டாயம். `ஹிட்லர் முதலில் மக்களின் ஏகோபித்த ஆதரவோடுதான் வெற்றி பெற்றான். ஆனால் அவன் பாசிசத்தை முறியடிக்க சோவியத் யூனியனும் கம்யூனிஸ்டுகளும் 2 கோடிக்கும் அதிகமானோரை உயிர்த்தியாகம் செய்யவேண்டியிருந்தது. இது வெறுமே வரலாற்றுச் செய்தி மட்டுமல்ல. வரலாற்றுப் பாடமும் கூட.
ஒற்றையாளாய் நிற்க நேரினும் சமரசமற்றப் போரினைத் தொடர்பவர்களே கம்யூனிஸ்டுகள். பாலூட்ட முயலும் போது குழந்தை மார்பைக் கடித்துவிட்டது என்பதற்காக குழந்தையின் தலையைக் கடிக்காதவளே தாய்.அதுபோல் மக்களிடம் மாளாநேசம் கொண்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்கள் பணியும் ஓயாது. போராட்டங்களும் நிற்காது . லட்சியமும் தோற்காது. தோற்கவிடவும்மாட்டோம். ஆயிரம் முறை விழினும் ஆயிரத்தோராவது முறை எழுவோம். வெல்வோம். “ தொலைந்த வெளிச்சம்” எனும் கவிதையில் கல்யாண்ஜி சொன்னவைகளை அசைபோட்டுப் பார்க்கிறேன்.

“ கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்து திரும்பும் முன்
அணைந்துவிடுகின்றது
முதல் விளக்குகளுள் ஒன்று
எரிகிற போது பார்க்காமல்
எப்போதுமே
அணைத்த பிறகு தான்
அதை சற்று
அதிகம் பார்க்கிறோம்
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தை விட
அணைந்த பொழுதில்
தொலைத்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.”

இதுதான் மெய்யான மாற்றை கனவுகாணும் பெரும்பாலோர் உள்ளக்கிடக்கை.

நன்றி : தீக்கதிர் 24 -05 -2014

அர்த்தமுள்ள வாழ்வு ...

Posted by அகத்தீ Labels:




அர்த்தமுள்ள வாழ்வு ...

தோழர் ஆர் உமாநாத் மறைவு . ஒரு லட்சியவாதியின் தொடர் ஓட்டம் முடிந்தது . அதே தீப்பந்தத்துடன் தடைதாண்டி பயணம் தொடர உறுதிகுலையா போராளிகள் இன்னும் இன்னும் வந்துகொண்டே இருப்பர்..

உமாநாத் வயது 93 . கல்லூரி காலம் தொட்டு பொதுவாழ்வில் ஈடுபட்டவர் . லட்சிய உறுதி குன்றா அவரின் வாழ்க்கை வரலாற்றை 2000 ஆண்டில் நான் எழுதிய தருணங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது . அந்நூலின்அர்த்தமுள்ள வாழ்வுஎன்ற  கடைசி அத்தியாயத்திலிருந்து சில பத்திகள் கீழே ...

நாட்டுக்காக சமூகத்திற்காக உழைப்பாளி வர்க்கத்திற்காக ஏற்றுக்கொண்ட உன்னத கம்யூனிச லட்சியங்களுக்காக ..

*  9 ஆண்டுகள் 6 மாதங்கள் ஆக மொத்தமாக 3465 நாட்கள் சிறையில் வாடினார் ..

*  7 ஆண்டுகள் அதாவது 2555 நாட்கள் தலைமறைவாக வாழ்ந்துள்ளார் ..

*  தலைமையேற்ற போராட்டக் களங்கள் , உண்ணாவிரதங்கள் , சந்தித்த தாக்குதல்கள் ..  அளவிலடங்கா ..

* சுமார் 75 ஆண்டுகால பொதுவாழ்வில் பல லட்சம் மணி நேரம் மக்களுக்காகப் பேசி இருக்கிறார் . அவர் குரல் நாடாளுமன்றம் , சட்டமன்றம் ,ஆலைவாயில் , தெருமுனை , வீதிகள் , கருத்தரங்குகள் ,பேரவைகள் , மாநாடுகள் , குழுக்க்கூட்டங்கள்  என ஒலித்தது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராளி குரலாய் ஒலித்தது .

*  7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் .

*  தன் வாழ்நாளில் சோவியத் யூனியன் , மக்கள் சீனம் , ருமேனியா , பல்கேரியா , ஆஸ்திலேரியா , ரோமாபுரி , யுகோஸ்லேவியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுவந்தார் .

*  கட்சி உறுப்பினராய் தொடங்கி அரசியல் தலைமைக்குழு உறுப்பினராய்த் உயர்ந்தார்.

இப்படி கம்ப்யூட்டரில் அவரைப் பற்றி புள்ளிவிவரங்கள் தொகுக்கலாம் . உமாநாத் அதில் மட்டும் வாழவில்லை .

தான் ஏற்றுக் கொண்ட சோஷலிச லட்சியத்தை உடனடியாக அடைய முடியாது . நீண்ட நாள் ஆகும் . உழுவதும் , விதைப்பதும் , களை எடுப்பதும் , உரமடிப்பதுமே தம்பணி . அறுவடைப் பலன் அடுத்த தலை முறைக்கு உரியது .

ஒரு வேளை இன்னொரு தலைமுறையோ , இரண்டு தலைமுறையோகூடக் காத்திருக்க நேரிடலாம் . நம்பிக்கை கீற்றை நோக்கி சோர்வின்றி பயணப்பட தெளிந்த சிந்தனையும் - திடங்கொண்ட நெஞ்சமும் - பார்வையில் புதுமையும் - பயணத்தில் உறுதியும் வேண்டும் . அந்த லட்சியக் கனவுகளுக்காக நிகழ்கால வாழ்வை மெழுகுவர்த்தியாய் எரித்துக் கொள்ளவேண்டும் . வெற்றிப் புன்னகைக்காக தலைமுறை தலைமுறையாய் தவம் நோற்க வேண்டும் . அர்ப்பணிப்பின் முழுப்பொருளே அந்தலட்சிய தவத்தில்அன்றோ உள்ளது .

[ இந்த வரிகள் இன்று எழுதியதல்ல 2000 ல் எழுதியது . தோழர் ஆர் . உமாநாத்தின் ஒப்புதலோடு எழுதப்பட்ட வரிகள் .இன்றும் பொருந்துகிறது . ]

தோழர் . ஆர் .உமாநாத் என்கிற மனிதனின் - தோழனின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாய் - லட்சியதவ  வாழ்வாய் - பார்வை புதிதாய் - பயணம் நெடிதாய்..

இந்த நொடிவரை தொடர்ந்தது .

இனி நாம் தொடர்வோம் !

- சு.பொ.அகத்தியலிங்கம் .