உரைச் சித்திரம் : 13.

Posted by அகத்தீ Labels:

 

உரைச் சித்திரம் : 13.

 


கல்வி கரையில ; பொருள்நனி கொடுப்போருக்கு…

 

 

கல்வியின் பெருமை சங்க இலக்கியத்தில் நிறைய சொல்லப்பட்டிருக்கும் ? அவற்றைக் கொண்டு அக்காலத்தில் எல்லோருக்கும் தடையற்ற கல்வி கிடைத்தது என்றோ , எல்லோருக்கும் ஒரே போல் கல்வி கிடைத்தது என்றோ கருத முடியுமா ? நிச்சயம் முடியாது .

 

அந்தக் கல்வி என்பதுகூட இன்று நாம் வகுக்கும் வரையறை சார்ந்ததா ? இல்லவே இல்லை .அன்றையத் தேவையும் அன்றைய சமூக அமைப்பும் சார்ந்ததே ! அப்படித்தான் இருக்கவும் முடியும் . நம் ஆசையை எல்லாம் நேற்றின் மீது ஏற்றி வாசிக்க முடியாது ;கூடாது .

 

கல்வி என்பது ஒவ்வொரு சமூகத்தின் வர்க்க வர்ண ஆதிக்கத் தேவை சார்ந்ததே . நேற்றும் அப்படித்தான் .இன்றும் அப்படித்தான் .

 

இவற்றை மாற்ற போரிடும் நமக்கு , நேற்றைய சங்க இலக்கியத்தில் கூறியுள்ள கல்விப் பார்வை சிலவற்றை அறிதல் தேவையாக இருக்கிறது .

 

ஒருவனுக்கு செல்வத்தைப் போல் வலிமையுடையது வேறில்லை. ஆம் செல்வம் அவ்வளவு வலிமை தரும் . ஆயினும் ,கல்வியைப் போல் துணையாவதும் பிறிதில்லை. அப்படியாயின் செல்வமும் கல்வியும் கூட்டுச் சேர்ந்தால் அதன் ஆற்றல் அதிகம் அல்லவா ? வறுமையைப் போல் ஒருவருக்கு துன்பமானது வேறு எதுவும் இல்லை. வறுமை வந்தால் கல்வியும் இல்லை எனச் சொல்லலாமோ ? பிச்சை கேட்டு வருவரோக்கு இல்லை என்று கூறாமல் ஈதலைப் போல் திட்பமானதும் வேறு இல்லையாம். ஆக வறுமை இருந்தது . பிச்சை எடுத்து வாழ்ந்தோரும் பிச்சை ஈந்து வாழ்ந்தோரும் இருந்தனர் இல்லையா ?

 

நான்மணிக்கடிகையில் விளம்பி நாகனார் பாடிய பாடலை [29] கேட்டபோது மேலே சொன்னவையே என்னுள் எழுந்த உணர்வு .

 

அது ஒரு புறம் இருக்கட்டும் . எப்போது கற்க வேண்டும் ? எப்படிக் கற்க வேண்டும் .

 

ஒருவர் எவ்வளவு கற்க வேண்டும் என்பதற்கெல்லாம் எல்லை கிடையாது . ஆம் ,கற்பதற்கு கரை இல்லை . எவ்வளவு வேண்டுமானலும் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் கற்கலாம் . ஆனால் சிக்கல் என்ன வெனில் நம் வாழ்நாள் மிகக்குறைவு .வாழும் நாளிலும் எத்தனை நாள் நோய் நொடியின்றி இருப்போம் ? யாராலும் சொல்லவே முடியாது . பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் அன்னப்பறவை தண்ணீரை நீக்கி பாலை மட்டும் பருகுமாம் .இப்படி ஒரு கற்பனை சமூகத்தில் நீண்டநாள் உள்ளது . ஆயினும் அது போன்ற ஓர் திறமையை வளர்த்துக் கொண்டு எதையோ படித்து காலத்தை ஓட்டாமல் ; அறிஞர் தெளிந்துரைத்த நல்ல நூல்களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும் என்கிறது நாலடியார்.

 

அப்படிக் கற்றால் என்ன பயன் ? இதனையும் நாலடியார் சொல்கிறது .

 

இப்பிறவியில் இவ்வுலகில் நாம் வாழும் வாழ்வு இம்மை வாழ்வு . செத்த பிறகு சொர்க்கம் நரகம் என வாழும் வாழ்வு மறுமை வாழ்வு . இந்த நம்பிக்கை அன்றும் இருந்தது .இன்றும் இருக்கிறது .எனவேதான் நாலடியார் அழுத்திச் சொல்கிறது ; இந்த இம்மை வாழ்வில் கல்வி பெரும் பயன் .தரும் எனவே படி ..சொர்க்க வாழ்வுக்காகப் படி எனச் சொல்லவில்லை . இந்த உலகில் நல்லபடி வாழ படி என்கிறது . அதுமட்டுமல்ல நீ படித்த கல்வியை இன்னொருவருக்கு நீ கற்றுக்கொடுத்தாலும் குறைந்து போய்விடாது ,மாறாக புகழைத்தான் கொண்டு வரும் .எவ்வளவு காலம் இருந்தாலும் கல்வி கெட்டுப் போகாது . எத்தனை பிறவி எடுத்தாலும் அறியாமை எனும் நோயைக் குணமாக்கும் மாமருந்து கல்வியே !

 

இக்கல்வி ஆண்களுக்கு மட்டுமே உரியது என்கிற செய்தியும் தொல்காப்பியத்தில் உண்டு .இரு பாலருக்கும் உரியது என நாலடியார் சொல்லும் .

 

குஞ்சி யழகு என்பது ஆண்களின் சிகை அழகைக் குறிக்கும் அவ்வழகும் , பட்டு கரை வைத்த உடையின் அழகும் , பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசியதால் பொலியும் அழகும்  நிச்சயம் பேரழகுதான் .ஆயின் அதைவிட எல்லாம் மகாப்பேரழகு எது தெரியுமா ? இது அறம் ,இது ஒழுக்கம் என நடுநிலை நின்று தனக்குதானே உணரும் அறிவைக் கொடுக்கும் கல்வியே அனைத்திலும் மிக்க பேரழகாகும் என்கிறது நாலடியார். இதன் வழி இருபாலருக்கும் கல்வி என்கிற கருத்தோட்டம் உள்ளுறையாக சொல்கிறது நாலடியார் .

 

திருக்குறளில் பெண்கல்வி வலியுறுத்தப்படவில்லை என வாதிடுவோரும் உண்டு ; இல்லை இரு பாலருக்கும் பொதுவானதாகவே கல்வி அதிகாரம் சொல்லப் பட்டிருக்கிறது என்பாரும் உண்டு .வள்ளுவன் வாழ்ந்த காலத்தோடுதான் சேர்த்துப் பார்க்க வேண்டும் .

 

இக்கல்வி இல்லாவிடில் என்னவாகும் ? ஒளவையார் மூதுரையில் சொல்கிறார் .

 

அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது மரம் .நிறைய கிளைகள் . இலை ,பூ என பசுமையாய் ஓங்கி நிற்கிறது . ஆனால் அது மரம் அல்லவாம் . ஒளவையார் சொல்கிறார் . அப்படியாயின் எது நல்ல மரம் ? கற்றோர் நிறைந்த சபையில் நீட்டப்பட்ட ஓலைச் சுவடியை வாசித்து பொருள் சொல்ல முடியாமலும் ; அடுத்தவர் சொல்லும் குறிப்பை அறிய முடியாமலும் நிற்கிறானே நெடுமரம் என்கிறார் ஒளவையார் . மொத்தத்தில் படிக்காதவன் நெட்டை மரம் என்கிறார் .

..

 

இப்போது இந்த உரைச் சித்திரத்தின் முதல் இரண்டு பத்தியை மீண்டும் படியுங்கள் .அன்றைய கல்வி எல்லோருக்குமானதா ? உயர் குலத்தில் பிறந்தவனே ஆசிரியர் ஆகமுடியும் என கோடு போட்டது நன்னூல் எனும் இலக்கண நூல் ; மேலும் யார் யார் மாணக்கராக இருக்கலாம் என்பதையும் அந்நூல் கோடிகாட்டியுள்ளது.

 

 

 தன் மகன், தன்னுடைய ஆசிரியர் மகன், அரசன் மகன், மிகுதியாகப் பொருள் பணம் கொடுப்பவன், தன்னை வழிபாடு செய்பவன், தான் சொல்லும் கருத்தினை விரைவில் கற்றுக் கொள்ளும் அறிவு உடையவன் ஆகியோர் மட்டுமே மாணாக்கர் ஆவதற்குத் தகுதியுடையோர் என நன்னூல் வரையறுத்துவிட்டது .  எல்லோருக்கும் கல்வி” என்கிற இன்றையக் கனைவைக்கூட அன்றைக்கு காணவில்லையே !

 

 

 

கல்வியின் பெருமையை சங்க இலக்கியம் ஓங்கி முழங்கியதும் பேருண்மை .அக்கல்வி எல்லோருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் சமூகச் சூழல் அன்றைக்கு இல்லை என்பதும் பேருண்மை .

 

 

ஆம் . கல்வி கரையில என்றதும் உண்மை ; கல்விக்கு கரை கட்டியதும் உண்மை; . பொருள் நனி கொடுப்போர்க்கே கல்வி என்றதும் உண்மை .

 

 

 “எல்லோருக்கும் கல்வி” இந்த ஜனநாயக யுகத்திலேயே சவாலாக இருக்கும் போது சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வின் பெருமையைப் போற்றியது தமிழ் சமூகம் என்பது சாதாரணச் செய்தி அல்லவே !

 

 

கல்வியைப் போற்றினோம் ; வாசலை அகலத் திறந்தோமா ? கேள்வி இதுதான்.

 

 

திருவின் திறலுடையது இல்லை ஒருவற்குக்
கற்றலின் வாய்த்த பிறஇல்லை - எற்றுள்ளும்
இன்மையின் இன்னாதது இல்லைஇல் என்னாத
வன்கையின் வன்பாட்டது இல். . . . .

 

நான்மணிக்கடிகை [29]- விளம்பி நாகனார் 

 

கல்வி கரையில! கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்

ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகின் தெரிந்து.

 

நாலடியார் :135

 

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்

தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்

எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

 

நாலடியார் : 132.

 

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.

 

நாலடியார் : 131.

 

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.

 

ஒளவையார் எழுதிய மூதுரை :13.

 

தன்மகன் ஆசான் மகனே மன்மகன்

 பொருள்நனி கொடுப்போன் வழிபடுவோனே

 உரைகோ ளாளற்கு உரைப்பது நூலே ”  

 

 

நன்னூல்

 

 

கல்வியைப் போற்றினோம் ; வாசலை அகலத் திறந்தோமா ?

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

10/6/2022.




 

0 comments :

Post a Comment