சொல்.81

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .81 [ 26 /11/2018 ] சின்ன சின்ன மகிழ்ச்சியும் ,சின்ன சின்ன காயமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை .ஒவ்வொரு நாளும் இவற்றை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும் .எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையில் சுவராசியம் அடங்கி இருக்கிறது . பயணத்தின் போது எதிர் வரிசையில் அம்மாவின் தோளில் சாய்ந்தபடி அந்த பிஞ்சு பூவாய் விரிக்கும் புன்னகை பெருமகிழ்ச்சி . அலைபேசியில் எதிர்பாரா விதமாய் வந்து நலம் விசாரித்த பால்ய சிநேகிதன் தந்த மகிழ்ச்சி . பஸ்ஸைக் கோட்டைவிட்டுவிட்டு அலுவலகம் செல்ல தவித்து நிற்கையில் தானாக முன் வந்து ஸ்கூட்டரில் லிப்ட் கொடுத்து உதவிய நம் தெருக்காரர் தந்த திடீர் மகிழ்ச்சி .இப்படி ஏதேனும் சந்தோஷத் துளிகள் இன்றி எந்தவொரு நாளும் நகர்வதில்லை . வீட்டில் ஏதோ ஒரு அவசரத்தில் கோபத்தில் வீசிய ஒற்றைச் சொல்லின் உறுத்தல் .வீட்டில் ,அலுவலகத்தில் ,நண்பரிடையே ,உறவுகளிடையே ,சமூக ஊடாட்டத்தில் அன்றாடம் ஏற்படும் சின்னச் சின்ன உரசலின் காயங்கள் இல்லாமல் யாரெனும் நாட்களைக் கடத்தியதுண்டோ ? சின்ன சின்ன மகிழ்ச்சியை ரசிக்கவும் சுவைக்கவும் பெறுகிற பயிற்சியில்தான் இனிமையின் இழைகள் பின்னிக் கிடக்கின்றன .ஆயினும் அதில் மட்டுமே மயங்கிவிட்டால் வாழ்வின் மெய்யான விடுதலையை இனங்காணத் தவறிவிடுவோம் மின்மினி வெளிச்சத்தையே கடவுளின் பெரும் கருணையெனச் சொல்லிச் சொல்லி வாழ்வில் ஆழ அகலங்களை தரிசிக்கவிடாமல் தடுத்துவிடுவார்கள் . மின்மினியை ரசிக்கவும் சூரியனை உதிக்கச் செய்யவும் முயலுவதே வாழ்க்கையாகும் . அதேபோல் சின்ன சின்ன காயங்களை ஊதிப் புறந்தள்ளத் தெரியாவிடில் வாழ்க்கை நரகமாகிவிடும் . ஆயினும் சில காயங்கள் லேசாக இருப்பதுபோல் இருப்பினும் பெரும் பாதிப்பை உருவாக்கிவிடும் .ஆகவே எதைப் புறந்தள்ள வேண்டும் ,எதை எச்சரிக்கையோடு கையாள வேண்டும் என்பது வாழ்வில் பெரும் பயிற்சியாகும் . காயமோ சந்தோஷமோ சின்னதோ பெரிதோ அதனை எடைபோட்டு எதிர்கொள்ளும் பயிற்சியை பள்ளியிலோ கல்லூரியிலோ கற்க முடியாது . அனுபவ நெருப்பில் புடம் போட்டுத்தான் தேற வேண்டும் ! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment