சொல்.84

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .84 [ 29 /11/2018 ] தோற்றத்தையும் மிடுக்கையும் தொடர்ந்து காப்பாற்றுவது தேவையாக இருக்கிறது .ஆள் பாதி ஆடை பாதி என்பது மட்டுமல்ல மீசை ,மற்றும் தலைக்கு சாயம் பூசுதல் உள்ளிட்டவை நமக்கே ஒரு நம்பிக்கையைத் தரும் .எனவே நான் தொடர்ந்து முடிக்கு கருப்புச் சாயம் பூசுகிறேன் என ஒருவர் அண்மையில் பதிவிட்டிருந்தார் . அவர் பார்வையோ செயலோ தவறன்று . தாரளாமாகச் செய்யலாம் .நான் என் முடிக்கு சாயம் பூசுவதில்லை . இந்த முதிய தோற்றமும் கம்பீரமே எனக் கருதுகிறேன் .இதுவும் பிழையில்லை . குழந்தைப் பருவம் ,மாணவப் பருவம் ,வாலிபப் பருவம் ,நடுத்தர வயது என ஒவ்வொன்றும் கம்பீரமே .அதே போல்தாம் முதுமையும் . எல்லா பருவத்தையும் போல் முதுமையும் அதற்குரிய குறை நிறைகளோடு அமைவதே .அதனை அதன் இயல்போடு ஏற்பதே எப்போதும் இனிது .வலிந்து இளமையை அதற்குள் திணிக்க வேண்டாமே ! ஆனால் இயன்றவரை உங்கள் சிந்தனையை அப்டேட்டட்டாக புதுப்பித்துக் கொண்டே இருங்கள் .அதற்காக புதியன தேடித் தேடி படித்துக் கொண்டே இருங்கள் .அது உங்களின் மதிப்பையும் மரியாதையும் உயர்த்தும் .இளைஞர்களுக்கு வழிவிட்டும் , கைகொடுத்து தூக்கிவிட்டும் மகிழுங்கள் அது உங்கள் முதுமைக்கு அழகு சேர்க்கும் . உங்கள் தோள் மீது சாய்ந்து தங்கள் வேதனைகளைப் பங்கு போட்டுக் கொள்ள முடியும் ; உங்களிடம் எதையும் மனம் திறந்து பேசி ஆலோசனைகளைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை உங்களால் உருவாக்க முடிந்தால் உங்கள் முதுமை பொருள் பொதிந்ததாகும் . உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசுங்கள் அல்லது பூசாமலிருங்கள் .அது தனிப்பட்ட விருப்பம் .ஆனால் அழகும் அர்த்தமும் மிக்க முதுமைக்கு உங்களை நீங்களே தயார் படுத்துவது எல்லாவற்றையும்விட மிக மிக முக்கியம் . Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment