சொல்.86

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .86 [ 1 /12/2018 ] என்னோடு நடை பயிற்சியில் ஓர் நண்பர் அடிக்கடி பங்கேற்பார் .அவர் தெலுங்கர் .நீண்டகாலம் தமிழ்நாட்டில் வேலைபார்த்ததால் தமிழும் அவருக்குத் தெரியும் .தெலுங்கு போலவே தமிழையும் பேசுவார் .அவர் என்னோடு நடை பயிற்சியில் பங்கேற்கிறபோதும் பாதி வழியில் உள்ள சாய்பாபா கோவில் வரையே வருவார் .சாய்பாபா கோவிலுக்கு அவர் செல்ல ;நான் நடை பயிற்சி தொடர்வேன் . அவர் ஒரு நாளும் என்னை கோவிலுக்கு அழைத்ததில்லை .நானும் அவர் கோவிலுக்கு போவதை கேள்வி கேட்பதில்லை .சில நாள் திரும்பிவரும் போது என்னோடு இணைவார் .அவர் மனைவியும் சில நாள் வருவதுண்டு . அப்போதும் இப்படித்தான் . ஒரு நாள் நடைபயிற்சி முடித்து திரும்பும் போது என்னோடு இருவரும் வந்தனர் .அன்று சனிக்கிழமை .நாளை எந்த சர்ச்க்குப் போவீர்கள் என அந்த சகோதரி கேட்க நான் சொல்லும் முன் அவர் கணவர் சொன்னார் . “ சார் ! சர்ச் ,மசூதி ,கோவில் எதுக்கும் போகமாட்டார் .அவர் ஓர் சோஷியல் ஒர்க்கர் .” இதனைக் கேட்டதும் அந்த சகோதரி சொன்னார் , “ அதுவும் சரிதான் . நாம கோவில் கோவில்னு அலைஞ்சு என்னத்தக் கண்டோம் .வேறு போக்கிடம் இல்லாமல் கோயிலே கதின்னு கிடக்கோம்…” அந்த சகோதரி வெடித்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்தவை . மெய்தானே ! பெரும்பாலான முதியோர்களின் வலியை ,மகிழ்ச்சியைப் பங்குபோடவும் வழியற்ற குடும்ப இறுக்கம் .முதியோர்களுக்கு மாலை நேர சரணாலயமாக கோவில்கள் மாறிப்போய்விட்டன . இது ஆன்மீகத்தின் வெற்றி அல்ல ;சமூக நலனில் நாம் காட்டும் அக்கறையின்மையின் எதிரொலி . கடவுள் நம்பிக்கையின் ஆணிவேர் சுயபாதுகாப்பின்மைதான் .மார்க்ஸ் சொன்னது வெறும் வார்த்தை அல்ல .அனுபவ நிஜம் . சகோதரியின் வார்த்தையே அதற்கு சான்று .சமூகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் போது கடவுள் நம்பிக்கையும் ஆட்டம் காணும் .இதைச் சொல்லுவதால் இப்போது நாத்திகப் பிரச்சாரம் வேண்டாம் என்பதல்ல . சமூகப் புரிதலோடு பக்குவமாய்ச் செய்ய வேண்டும் என்பதே ! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment