சொல்.85

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .85 [ 30 /11/2018 ] நுனிப்புல் மேய்வது என்றொரு சொல்வழக்கு உண்டு. நம்மில் பலர் அந்த ரகமே .மேலோட்டமாய் பார்த்துவிட்டு எல்லாம் தெரிந்தது போல் கதை அளப்பதில் நம்மை யாரும் மிஞ்ச முடியாது .எல்லோரும் எல்லாவற்றிலும் நிபுணராக இருக்கவும் முடியாது ; அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஆனால் ஒன்றை அரைகுறையாய் தெரிந்துவிட்டு அது குறித்த நிபுணர் போல் பேசக்கூடாது . ஒரு சம்பவம் பற்று தலைப்புச் செய்தியைக் கேட்டுவிட்டு அதைப் பற்றி அலசுவது மிக ஆபத்தானது . எடுத்துக்காட்டாக , “ கள்ளக்காதலுக்கு இடையூறாய் இருந்த கணவனை வெட்டிக் கொண்ற மனைவி .” இச்ச்செய்தி உண்மையா ? பொய்யா ? என்ன நடந்தது ? போலீஸ் தரப்பு சொன்னதைத் தவிர வேறு ஏதும் தெரியுமா ? ஆனாலும் அப்பெண்ணை புழுதிவாரி தூற்றிவிடுகிறோம் . கள்ளக்காதல் என்ற வார்த்தையே எவ்வளவு தவறானது என்பதை உணர்ந்தோமா ? அடுத்து இன்னொரு செய்தி . “ கள்ளக்காதலனோடு கையும் களவுமாய் பிடிபட்ட மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் .” இங்கும் அதே கேள்விகளே . செத்தது ஆணாக இருப்பினும் ,பெண்ணாக இருப்பினும் கூசாமல் “கள்ளக்காதல்” என்கிற ஒற்றைச் சொல்லில் அனைத்து பழியையும் பெண் மீதே சுமத்திவிடுவது எவ்விதத்தில் நியாயம் . போலீஸ் வழக்கை எளிதாக முடிக்க , உண்மைக் குற்றவாளியை தப்பவிட ,இப்படி கதை கட்டிவிட்டால் போதும் எல்லோரும் நம்பிவிடுவர் .ஏனெனில் இங்கு ஆணாதிக்க சமூக உளவியல் மேலோங்கி உள்ளது . இவ்வாறு ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் நூற்றுக்கு தொண்ணூறு யாரையோ காப்பாற்ற வலிந்து புனையப்பட்ட பொய் வழக்கே . எளியவருக்கு நீதியும் மறுக்கப்படும்தானே ! தலைப்புச் செய்தியை பார்த்தோ ,அல்லது முகநூலில் வரும் ஓரிரு வரிகளை வைத்தோ அனைத்தையும் அறிந்ததாய் காட்டிக்கொள்ள முயலுவது மகாபேதமை .முழுதாய் தெரிய முயலுங்கள் அல்லது கொஞ்சம் காத்திருங்கள் இன்னொரு பக்க விவாதமும் வரட்டும் . நீங்கள் கேள்விப்பட்டது எதுவும் சரியாகவும் இருக்கலாம் ; பிழையாகவும் இருக்கலாம் .நுனிப்புல் மேயாமல் கொஞ்சம் மெனக்கெட்டு உண்மையைத் தேடலாமே ! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment