சொல்.67

Posted by அகத்தீ Labels:



தினம் ஒரு சொல் .67 [ 9 /11/2018 ]
ஆடம்பரம் தவிர்ப்பீர் . இந்த உபதேசத்தைக் காலங் காலாமாகக் கேட்டு வருகிறோம் . எது ஆடம்பரம் ? நேற்றின் ஆடம்பரம் இன்றின் தேவையாகிவிட்டதே ! ஆடம்பரத்தின் அளவுகோல்தான் எது ?

வானொலிப் பெட்டியும் கல்லுவீடும் நெல்லுச் சோறும் ஆடம்பரமாக இருந்த காலம் ஒன்று உண்டு . பிளாக் அண்ட ஒயிட் டிவி ,கலர் டிவி ,சாதா மொபைல் ,ஐ போண் ,லேப் டாப் ஒவ்வொன்றும் ஆடம்பரமாயிருந்து பின் அத்தியாவசியமாய் மாறிப்போனதே ! எப்படி ஆடம்பரத்தைத் தீர்மானிப்பது ?

ஆடம்பரத்தில் அளவுகோல் ஆளுக்கு ஆள் , ஊருக்கு ஊர் ,காலத்துக்கு காலம் ,மாறிக்கொண்டே இருக்கும் .வர்க்கம் ,வர்ணம் ,சாதி ,வயது ,பாலினம் ,கிராமம் ,நகரம் ,நவீன கண்டுபிடிப்புகள் என ஒவ்வொன்றும் ஆடம்பரம் எதுவென கட்டடளை இடுமே !வரையறையை மாற்றிக் கொண்டே இருக்குமே !

முன்பு டிமாண்ட அண்ட் சப்ளை என்கிற ரீதியில் தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யப்பட்டது .அப்போது ஆடம்பரம் என்பதின் பொருள் வேறு .இப்போது முதலாளி எதை உற்பத்தி செய்கிறானோ அதனை வாங்கிக் குவிக்கும் நுகர்வோராக வெகுமக்களை கட்டமைக்கிறது .தொலைகாட்சியும் இதர ஊடகங்களும் 24 x 7 மணி நேரமும் அதற்கே சேவை செய்கிறது . ‘நுகர்வெனும் பெரும்பசி’யில் மனிதகுலம் சிக்கித் தவிக்கிறது .இப்போது ஆடம்பரம் என்பதன் பொருளே வேறு .

எது தேவை ? எதற்குத் தேவை ? ஏன் தேவை ? பணத்திற்கான வாசல் எது ? இப்படியான கேள்விகளூடேதான் ஒவ்வொருவரும் எது ஆடம்பரம் என்பதை முடிவு செய்ய இயலும் . “ இது இல்லாவிட்டால் என்ன இழப்பு ஏற்பட்டுவிடும் ? சமாளிக்கவே முடியாதா ?” இக்கேள்வியே ஆடம்பரத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான கேள்வி .

வட்டிக்கு வாங்கி பட்டாசு வெடிப்பது ஆடம்பரம் . மாறிடும் உலகோடு தன்னை புத்தாக்கம் செய்ய முனைவது ஆடம்பரமாகிடுமா ? ஆடம்பரம் என்பதின் எல்லை காலம் தோறும் மாறும் .நீளும் .ஆயினும் , நுகர்வெனும் பெரும் பூதத்தின் வாய் கரும்பாய் அரைபடாது வாழப்பழகுவதே அறிவுடைமை !!!
Su Po Agathiyalingam



0 comments :

Post a Comment