நம்மை சுற்றி சுற்றி………………….

Posted by அகத்தீ Labels:

 


நம்மை சுற்றி சுற்றி………………….

 

குறுக்குசால் ஓட்டுவது” என்றொரு சொற்றொடர் உண்டு . அதாவது நீ ஒன்றை பேசும் போது திசை மாற்றி வேறொன்றாக திரிப்பது . பொதுவாக இதனை எதிரிகள்தான் செய்வார் . ஆனால் சில நேரம் நண்பர்கள் இப்படிச் செய்யும் போது மிகவும் வருத்தம் மேலிடும் .ஏனெனில் நாமும் அதே தொணியில் பதில் சொல்ல முடியாது அல்லவா ? அப்படி ஒரு சங்கடம் அண்மையில் நேர்ந்தது .

 

பொதுவாக தோழர்  சுபவி யோ அவரது குழுவினரோ பேசுவதை பலநேரங்களில் பகிர்ந்து இருக்கிறோம் . பாசிச எதிர்ப்பு போரில் ஆயுதமாக்கி இருக்கிறோம் . தற்போது சிபிஎம் செயலாளர் ப.சண்முகம் ஆணவக்கொலைக்கு எதிராக பேசும் போது , காதல் திருமணம் சாதிமறுப்பு செய்வோரை ஆணவக்கொலை செய்யும் சூழலில் அப்படி செய்வோர் எங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்தலாம் என்று சொன்னார் . அவர் பேசுகிறபோது அதற்கு இப்போது ஏற்பாடு இல்லை என்று சொன்னது ஆணவக் கொலைக்கு எதிரான சட்டத்தைத்தான் . அவர் எங்கேயும் ‘ சுயமரியாதைத் திருமணம்’ என்று சொல்லவே இல்லை .அப்படி இருக்க தமிழகத்தில் சுயமரியாதைத் திருமணச் சட்டம் இருப்பது சண்முகத்துக்கு தெரியாதா என நீட்டி முழக்கி ஒரு சகோதரி வீடியோ வெளியிட்டுள்ளார் . சொல்லாத ஒன்றை சொன்னதாகச் சொல்லி பதில் சொல்வது முறையல்ல . சகோதரியின் மாமா கம்யூனிஸ்ட் என்றும் அவர் காதல் திருமணத்திற்கு எதிராக இருந்தாரென்று பதிவிட்டிருக்கிறார் . உண்மையாக இருக்கலாம் . சிபிஎம் கட்சியில் இப்படிபட்ட சம்பவங்கள் எங்கேனும் நிகழ்ந்தால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . நானும் என் அண்மைப் பதிவொன்றில் இதனைச் சுட்டியுள்ளேன் . திமுக ,தி.க கட்சிகளும் இப்படி சில தர்ம சங்கடங்களை சந்தித்திருக்கும் . நம் சமூக அமைப்பில் சாதி உணர்வை ஒழிப்பதென்பது இடைவிடா தொடர் போராட்டமே ! அதை சகோதரியும் ஒப்புக் கொள்கிறார் .ஆயினும் சண்முகத்தையும் சிபிஎம் யும் தனிமைப்படுத்தி தாக்க முயல்வது தோழமைக்கு அழகா ? நட்போடுதான் இப்போதும்  கேட்கிறோம்.

 

இப்போது நீயா நானாவின் நாய் விவாதம் பேசுபொருளாகி இருக்கிறது . அது ஒரு ரிக்கார்டட் அண்ட் எடிட் ஷோ தான் . நெடுங்காலமாகவே இப்படித்தான் நடந்து வருகிறது . மொழிப் பிரச்சனை குறித்த ஓர் விவாதத்தை வெளியே வரவிடாமலே சங்கிகள் தடுத்தனர் என்பது அண்மைச் செய்தி .மறக்க முடியுமா?  நீயா நானா தலைப்பும் விவாதமும் எப்போதும் பட்டிமன்ற பாணி  ஒரு வெகுஜன ஊடகத்தின் சமரச வழியே ! அதில் கொஞ்சம் முற்போக்கு சாய்மானம் சில வேளை தென்படலாம் . அதற்கு மேல் செல்ல முடியாது ஏனெனில் அந்த நிகழ்ச்சி விளம்பரதாரரை சார்ந்து வாழ்வதே . நாய் விவாதத்திலும் அதுவே . அரசின் அலட்சியப் போக்கு தொண்டு நிறுவன ஊழல் போன்ற பலவற்றை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டோர் மீது அனுதாபத்தோடு மட்டுமே அணுகியது . வெறிநாய் ரேபிஸ் நாய்க்கு எதிரான கோபமாக குவிமையமாக்காமல் பொதுவான நாய் எதிர்ப்போர் ஆதரிப்போர் என மாற்றியது இதெல்லாம் கார்ப்பரேட் மீடியா ஸ்டைலே . ஆனால் நாய்கடியால் பாதிக்கப்பட்டோரின் கோபம் ஆக்ரோஷமாக வெளிப்பட்டுவிட்டது நல்ல அம்சம். இப்போது விலங்கபிமானிகளான தொண்டு நிறுவனப் புள்ளிகள் தங்கள் பேச்சு எடிட் செய்யப்பட்டுவிட்டது முழுவீடியோ போடுக என கூக்குரல் போடுவதும் , நீதிமன்றம் போவதும் அவர்களின் தோல்வியைப் பறை சாற்றுகிறது . அந்த ஷோ ’எப்போதுமே எடிட்டட் ஷோதான்’ என தெரியாமலா வந்தார்கள் ? அவ்வளவு அப்பிராணிகளா அவர்கள் ? நம்பமுடியவில்லை … நம்பமுடிய வில்லை…

 

யூ டியூப்பர்களின் ,டிவிக்களின் அரசியல் பரபரப்பு பேச்சுகளின் தரம் கவலை அளிக்கிறது .ஒற்றைவரி , ஒற்றைச் சொல் , அங்கும் இங்கும் வெட்டி ஒட்டிய துண்டுப் படங்கள் இவைதான் நம்மை பரபரப்பாக அரசியல் சமுதாய பிரச்சனைகளை பேசவைக்கும் எனில் சமூகத்தின் மீதான் அக்கறை அல்ல அது ; முழுக்க முழுக்க நாம் எதை பார்க்க வேண்டும் எதைப் பேச வேண்டும் எப்படி சிந்திக்க வேண்டும் என நமக்கு கடிவாளம் போடும் கார்ப்பரேட் யுக ஆளும் வர்க்க கருத்துத் திணிப்பு நாடகமே ! எங்கும் இப்போது நடப்பது அதுவே !

 

ஆக , உண்மையை ஊடகங்களில் தேடுவது தரையில் மணலில் விழுந்த ஊசியைத் தேடுவதே !

 

சுபொஅ.

03/08/25.

 


0 comments :

Post a Comment