அறிவியலின் சமூகவியல் பார்வையில் விடைதேடி…

Posted by அகத்தீ Labels:





அறிவியலின் சமூகவியல் பார்வையில் விடைதேடி…

AI தொழில் நுட்ப வருகையால் வேலைவாய்ப்பு பாதிக்குமா ? சமூகத்தில் எம்மாதிரி விளைவுகள் உருவாக்கும் ? மனித வாழ்விலும் உளவியலிலும் பண்பாட்டிலும் எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் ? இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறோம் . இச்சூழலில் இந்நூல் மிகுந்த கவனிப்புக்கு உரியது .

சோவியத் பதிப்பகமான ‘மீர்’ பதிப்பகத்தால் 1979 ல் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூலே “நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்” . [ வெளியிடப்பட்ட ஆண்டை மனதிற் கொள்ளுங்கள் ] பாரதி புத்தகாலயம் மறுவெளியீடு செய்திருக்கிறது .இந்நூல் பல்வேறு ஆழமான சிந்தனைகளை “அறிவியலின் சமூகவியல்” சார்ந்து விதைக்கிறது .

இறுதியில் விஞ்ஞானம் மனித குலத்திற்கு ஆசிர்வாதமாக அமையுமா ? சாபத்தீட்டாக அமையுமா ? இக்கேள்வி இன்று முன்பைவிட வலுவாக ஓர் புறம் எழுப்பப்படுகிறது ; மறுபுறம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது .

இக்கேள்விக்கான விடையை சோவியத் அனுபவத்தோடும் , ஜப்பானிய , அமெரிக்க அனுபவத்தோடும் ,அறிவியல் வரலாற்றோடும் பிசைந்து மார்க்சிய வெளிச்சத்தில் விளக்கம் தருகிறது இந்நூல் .

இந்த முக்கியமான நூலை ஒருவர் வாசித்து உள்வாங்க இதன் மொழியாக்கம் முழுத்தடையாக இருக்கிறது . சில இடங்கள் மட்டுமே பட்டென புரியும்படி இருக்கிறது . நான் முழுதாக வாசித்துவிட்டேன் ; முழுதாக உள்வாங்கினேன் எனச் சொல்ல முடியாது .அன்றைய மாஸ்கோ மொழிபெயர்ப்பை இன்றைக்கு சீர் செய்யாமல் வெளியிட்டிருப்பது விரும்பிய பயன் தராது .

இப்படிப்பட்ட குறைபாடுகள் இருப்பினும் இந்நூல் காத்திரமானது என்பதில் ஐயமில்லை . 12 அத்தியாயங்களில் அறிவியல் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் மனித குலம் எழுப்பிய கேள்விகள் ; அதற்கான விடை தேடல் என விரிந்திருக்கிறது . அறிவியலால் மனித குலம் பெற்றுள்ள மகத்தான முன்னேற்றத்தை மிகச்சரியாக இனம் காட்டுகிறது .

“மனிதனது வாழ்க்கையைப் போன்றே மனித குலத்தின் வாழ்க்கையும் தியாகங்கள் இன்றி எண்ணிப் பார்க்க முடியாது .ஆனால் தியாகங்களின் முரண்பாடு என்னவெனில் ,அவற்றைவிடச் சிறந்த ஒன்றிற்காக அவை செய்யப்படுகிறன.லாபம் நஷ்டத்தை ஈடு செய்து விடுகிறது .” இப்படி சமாதானம் அடைய முடியுமா ?

செயற்கை மூளை ,இயந்திர மனிதன் வருகை எல்லோருக்கும் எல்லாவற்றையும் பெற்றுத்தரும் எனும் ஒரு சார்பு சமூகவியலாளர் பகற்கனவு கனவு காணும் போதே ,”தானியங்கி உற்பத்தி முறையானது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடு ; பிரச்சனைகளை தோற்றுவிக்கவும் செய்யும்” அல்லவா ?

‘அறிவு மரம்’ எத்தகையது ? எத்தனைக் கிளைகளைக் கொண்டது ? அது மேலும் மேலும் கிளைத்துக் கொண்டே போவதின் தேவை என்ன ? அறிவு என்பது சந்தைச் சரக்கா ? வெறும் தகவல் சேகர குவிப்பா ? சமூக பொறுப்பா ? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடை தேடலுக்கு இந்நூல் ஆதாரமாகும்.

வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்தோடு சமூக மாற்றங்களும் அறிவியல் வளர்ச்சி பின்னிப் பிணைந்திருப்பதை இந்நூலில் மிகச் சரியாக பகுப்பாய்வாக சொல்லப்பட்டிருக்கிறது . உற்பத்திகருவிகளாகட்டும் , அறிவியல் தொழில் நுட்பம் ஆகட்டும் யார் கையில் ? லாபப்பிசாசுகள் கையிலா ? சமூகநலன் சார்ந்தோர் கையிலா ? இதுவே அடிப்படைக் கேள்வி . சமூகமாற்றத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் நம்பிக்கையுடன் பார்க்க இந்நூல் வழிகாட்டுகிறது .

இந்த நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ள ,நன்கு நமக்கு புரியும் ஒரு செய்தியை மட்டும் சுட்ட விளைகிறேன்.

“ விஞ்ஞான ,தொழில்நுணுக்க புரட்சி ,பெருவெள்ளம் போன்ற போன்ற தகவல் ஞானப் பெருக்கால் புதிய பிரச்சனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது .பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் போதிக்கப்படும் அறிவு சுமார் பத்து ஆண்டுகளில் காலங்கடந்துவிடுகிறது [ ஒரு காலத்தில் அது மானிட ஆயுட் காலம் வரை போதுமானதாக இருந்தது ] என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.காலத்திற்கு பின்தங்கிவிடாமலிருப்பதற்காக ஒவ்வொரு நிபுணரும் விற்பன்னரும் இன்று இடைவிடாது படிப்பதோடு தனது பாடத்தை திரும்பவும் கற்றாக வேண்டி இருக்கிறது ; நாளைக்கு இது எவ்வாறு இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?”

மேலே உள்ள பத்தியை நிறைவு செய்யும் போது , “வாழு !படி!” என இரண்டே சொல்லில் தேவையை சொல்லிவிடுகிறது

1979 ல் இந்நூல் வெளிவந்தது . சுமார் 45 ஆண்டுகள் கடந்துவிட்டன . சோவியத் யூனியன் தகர்ந்து விட்டது .இப்போது AI அச்சுறுத்துகிறது . இச்சூழலில் இந்நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் இதனை அடியொற்றி புதுப்பிக்கப்பட்ட நூலொன்று யாத்துத் தருவோர் தமிழ் சமூகத்துக்கு தொண்டு செய்தவர் ஆவார்.

நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள் , ஆசிரியர் : லி.வி.பாப்ரோவ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 280 , விலை : ரூ.300 /

சு.பொ.அகத்தியலிங்கம்.

0 comments :

Post a Comment