பழைய பெருங்காய டப்பா

Posted by அகத்தீ Labels:

 



 அவன் கிடக்கான்

பழைய பெருங்காய டப்பா

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?

ஒட்டிக் கொண்டிருந்த வாசமும்

காலவெளியில் கரைந்து போனதாலா ?

தாத்தா யானை மேல் வந்த கதையை

சொல்லியே சும்மா இருப்பதாலா ?

எப்படியோ விட்டுத் தொலை !

ஊத்தைச் சடலத்தை உப்பிருந்த பாண்டத்தை

தூக்கி எறியும்  வரை  சொல்லியே மனதை

சோர்ந்துவிடாமல் வைத்திருந்தால் சரிதான் !

 

[ ஒரு முதியவரின் பிலாக்கணத்தை கேட்ட பொழுதில் …]

 

சுபொஅ.

28/8/24.

 

 

 


அறிவியலின் சமூகவியல் பார்வையில் விடைதேடி…

Posted by அகத்தீ Labels:





அறிவியலின் சமூகவியல் பார்வையில் விடைதேடி…

AI தொழில் நுட்ப வருகையால் வேலைவாய்ப்பு பாதிக்குமா ? சமூகத்தில் எம்மாதிரி விளைவுகள் உருவாக்கும் ? மனித வாழ்விலும் உளவியலிலும் பண்பாட்டிலும் எம்மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் ? இப்படி எழும் கேள்விகளுக்கு விடை தேடிக்கொண்டிருக்கிறோம் . இச்சூழலில் இந்நூல் மிகுந்த கவனிப்புக்கு உரியது .

சோவியத் பதிப்பகமான ‘மீர்’ பதிப்பகத்தால் 1979 ல் வெளியிடப்பட்ட மொழிபெயர்ப்பு நூலே “நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்” . [ வெளியிடப்பட்ட ஆண்டை மனதிற் கொள்ளுங்கள் ] பாரதி புத்தகாலயம் மறுவெளியீடு செய்திருக்கிறது .இந்நூல் பல்வேறு ஆழமான சிந்தனைகளை “அறிவியலின் சமூகவியல்” சார்ந்து விதைக்கிறது .

இறுதியில் விஞ்ஞானம் மனித குலத்திற்கு ஆசிர்வாதமாக அமையுமா ? சாபத்தீட்டாக அமையுமா ? இக்கேள்வி இன்று முன்பைவிட வலுவாக ஓர் புறம் எழுப்பப்படுகிறது ; மறுபுறம் அறிவியல் கண்டுபிடிப்புகளின் வேகம் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது .

இக்கேள்விக்கான விடையை சோவியத் அனுபவத்தோடும் , ஜப்பானிய , அமெரிக்க அனுபவத்தோடும் ,அறிவியல் வரலாற்றோடும் பிசைந்து மார்க்சிய வெளிச்சத்தில் விளக்கம் தருகிறது இந்நூல் .

இந்த முக்கியமான நூலை ஒருவர் வாசித்து உள்வாங்க இதன் மொழியாக்கம் முழுத்தடையாக இருக்கிறது . சில இடங்கள் மட்டுமே பட்டென புரியும்படி இருக்கிறது . நான் முழுதாக வாசித்துவிட்டேன் ; முழுதாக உள்வாங்கினேன் எனச் சொல்ல முடியாது .அன்றைய மாஸ்கோ மொழிபெயர்ப்பை இன்றைக்கு சீர் செய்யாமல் வெளியிட்டிருப்பது விரும்பிய பயன் தராது .

இப்படிப்பட்ட குறைபாடுகள் இருப்பினும் இந்நூல் காத்திரமானது என்பதில் ஐயமில்லை . 12 அத்தியாயங்களில் அறிவியல் வளர்ச்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் மனித குலம் எழுப்பிய கேள்விகள் ; அதற்கான விடை தேடல் என விரிந்திருக்கிறது . அறிவியலால் மனித குலம் பெற்றுள்ள மகத்தான முன்னேற்றத்தை மிகச்சரியாக இனம் காட்டுகிறது .

“மனிதனது வாழ்க்கையைப் போன்றே மனித குலத்தின் வாழ்க்கையும் தியாகங்கள் இன்றி எண்ணிப் பார்க்க முடியாது .ஆனால் தியாகங்களின் முரண்பாடு என்னவெனில் ,அவற்றைவிடச் சிறந்த ஒன்றிற்காக அவை செய்யப்படுகிறன.லாபம் நஷ்டத்தை ஈடு செய்து விடுகிறது .” இப்படி சமாதானம் அடைய முடியுமா ?

செயற்கை மூளை ,இயந்திர மனிதன் வருகை எல்லோருக்கும் எல்லாவற்றையும் பெற்றுத்தரும் எனும் ஒரு சார்பு சமூகவியலாளர் பகற்கனவு கனவு காணும் போதே ,”தானியங்கி உற்பத்தி முறையானது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதோடு ; பிரச்சனைகளை தோற்றுவிக்கவும் செய்யும்” அல்லவா ?

‘அறிவு மரம்’ எத்தகையது ? எத்தனைக் கிளைகளைக் கொண்டது ? அது மேலும் மேலும் கிளைத்துக் கொண்டே போவதின் தேவை என்ன ? அறிவு என்பது சந்தைச் சரக்கா ? வெறும் தகவல் சேகர குவிப்பா ? சமூக பொறுப்பா ? இப்படி பல்வேறு கேள்விகளுக்கான விடை தேடலுக்கு இந்நூல் ஆதாரமாகும்.

வரலாற்று பொருள் முதல்வாத கண்ணோட்டத்தோடு சமூக மாற்றங்களும் அறிவியல் வளர்ச்சி பின்னிப் பிணைந்திருப்பதை இந்நூலில் மிகச் சரியாக பகுப்பாய்வாக சொல்லப்பட்டிருக்கிறது . உற்பத்திகருவிகளாகட்டும் , அறிவியல் தொழில் நுட்பம் ஆகட்டும் யார் கையில் ? லாபப்பிசாசுகள் கையிலா ? சமூகநலன் சார்ந்தோர் கையிலா ? இதுவே அடிப்படைக் கேள்வி . சமூகமாற்றத்தையும் அறிவியல் முன்னேற்றத்தையும் நம்பிக்கையுடன் பார்க்க இந்நூல் வழிகாட்டுகிறது .

இந்த நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ள ,நன்கு நமக்கு புரியும் ஒரு செய்தியை மட்டும் சுட்ட விளைகிறேன்.

“ விஞ்ஞான ,தொழில்நுணுக்க புரட்சி ,பெருவெள்ளம் போன்ற போன்ற தகவல் ஞானப் பெருக்கால் புதிய பிரச்சனைகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது .பள்ளிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் போதிக்கப்படும் அறிவு சுமார் பத்து ஆண்டுகளில் காலங்கடந்துவிடுகிறது [ ஒரு காலத்தில் அது மானிட ஆயுட் காலம் வரை போதுமானதாக இருந்தது ] என்று விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.காலத்திற்கு பின்தங்கிவிடாமலிருப்பதற்காக ஒவ்வொரு நிபுணரும் விற்பன்னரும் இன்று இடைவிடாது படிப்பதோடு தனது பாடத்தை திரும்பவும் கற்றாக வேண்டி இருக்கிறது ; நாளைக்கு இது எவ்வாறு இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?”

மேலே உள்ள பத்தியை நிறைவு செய்யும் போது , “வாழு !படி!” என இரண்டே சொல்லில் தேவையை சொல்லிவிடுகிறது

1979 ல் இந்நூல் வெளிவந்தது . சுமார் 45 ஆண்டுகள் கடந்துவிட்டன . சோவியத் யூனியன் தகர்ந்து விட்டது .இப்போது AI அச்சுறுத்துகிறது . இச்சூழலில் இந்நூலை அப்படியே மொழி பெயர்க்காமல் இதனை அடியொற்றி புதுப்பிக்கப்பட்ட நூலொன்று யாத்துத் தருவோர் தமிழ் சமூகத்துக்கு தொண்டு செய்தவர் ஆவார்.

நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள் , ஆசிரியர் : லி.வி.பாப்ரோவ் ,
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 280 , விலை : ரூ.300 /

சு.பொ.அகத்தியலிங்கம்.

மூளை வளர எதைச் சாப்பிடலாம்… ????

Posted by அகத்தீ Labels:

 


மூளை வளர எதைச் சாப்பிடலாம்… ????


நேற்று எங்க வீட்டில் மஞ்சள் பூசனிக்காய் என இன்றைக்கு சொல்லப்படும் கல்யாண பூசனிக்காய் கூட்டு .

அதை ருசிச்சு சாப்பிடும் போது ஏதேதோ நினைவுத் திரையில் ஓடியது .

பெங்களூர் வந்த போது எலக்ட்ரானிக் சிட்டி நீலாத்திரி நகரில் என்னோடு தினசரி நடை பயிற்சிக்கு வந்த நண்பர்கள் நினைவுக்கு வந்தனர் .

குசேலர் ,கான் பாய் , பரமேஸ்வரன் மூவரும் விடை பெற்றுவிட்டனர் .நான் பொம்மசந்திராவுக்கு குடிபெயர்ந்துவிட்டேன். பல்வந்த ராவ் உடல் நலிவுற்றுவிட்டார் . சுப்பிரமணியம் ,பானர்ஜி இருவரும் என்னைப் போல் இடம் மாறிவிட்டனர் .நான் இங்கும் துரைசாமி அங்கு அடுக்கக மொட்டைமாடியிலும் நடை பயிற்சி செய்கிறோம் .அலைபேசியில் பேசிக்கொள்கிறோம் .எப்போதாவது சந்திக்கிறோம்..

ஒரு முறை நடை பயிற்சி முடித்து வரும் போது ,மஞ்சள் பூசனிக்காய் வாங்கிக் கொண்டு திரும்பிய மறைந்த அன்பர் பரமேஸ்வரன் சொன்னார் ,

“ பாலக்காட்டு ஐயர்களுக்கு மூளை ஜாஸ்தி .ஏன்னு சொன்னா அவங்க நிறைய மஞ்சப் பூசனிக்காய் சாப்பிடுவாங்க…”

அப்போது அவரோடு நானும் துரைசாமியும் பல்வந்தராவும் வாதிட்டது நினைவுக்கு வந்தது . ஏனைய நண்பர்கள் உடன் சேர்ந்தனர்.

“ எங்க ஊர்ல வெண்டைக்காய் அதிகம் சாப்பிட்டால் மூளைக்கு நல்லதுன்னு சொல்வாங்க ….”

”மயிலாப்பூர் போனால் புடலங்காய் வாங்காத பார்ப்பனரையே பார்க்க முடியாது …. அங்கே புடலங்காய் மூளைக்கு நல்லதுன்னு சொல்வாங்க… ”

“ஞாபக சக்திக்கு வல்லாரை லேகியம் … அஸ்வகந்தா லேகிய எல்லாம் கேள்விப்படிருக்கோம்…”

“எது மூளை பலத்தை கூட்டும் ? மஞ்சள் பூசனியா ? வெண்டைக்காயா ? புடலங்காயா ? வல்லாரையா ? எது?”

“அட ! குண்டூசியில் இருந்து வானொலி , தொலைகாட்சி , ராக்கெட் , கம்யூட்டர் எல்லாமே கண்டு பிடிச்சது மாட்டுக்கறி சாப்பிடுகிறவங்கதான் … ”

“அப்போ மாட்டுக்கறிதான் மூளைக்கு பலமா ?”
“ஒவ்வொருவரும் அவரவர் துறையில் விபரமானவர்களே …”

அந்த விவாதம் அப்படி நீண்டதும் பரமேஸ்வரன் சொன்னார் , “ ஆளுக்கொண்ணு சொல்லலாம் .ஆனால் எல்லாருக்கும் மூளை இருக்கு சார் ! அதை பயன்படுத்துறதிலதான் வித்தியாசம் இருக்கு !”

ஆக ,அவர் உண்மையை மிகவும் நெருங்கிவிட்டார்.

ஆம் .மூளை எல்லோருக்கும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான் . தொடர் பயிற்சிதான் உங்களை கூர்மையாக்கும் . தொட்டனைத்து ஊறும் மணற்கேனியே மூளை.

“சரி ! கிட்னி , உடல் உறுப்பு மாற்று சிகிட்சை போல் மூளை மாற்று சிகிச்சை வருமானால் ….. நம்ம மூளைக்கு அதிகபட்ச விலை கிடைக்கும்” என்றார் பல்வந்த ராவ் .

“ஏன்?” என நாங்கள் கேட்க .

” பயன்படுத்தாமல் ப்ரெஸ்ஸா இருப்பது நம்ம மூளைதானே!” என்றார் .

“ஹா ஹா” என எல்லோரும் சிரித்து விடை பெற்றோம்.

மஞ்சள் பூசனிக்காய் கிளறிய ஞாபங்கள் இவை.

23/8/24.

இன்று சென்னை நாளாம் ...

Posted by அகத்தீ Labels:

 


இன்று சென்னை நாளாம் ...
எனக்கும் சென்னைக்குமான உறவை அசைபோடுகிறேன்.
என் அப்பா ,அம்மா ,அண்ணன் ,பிழைப்பு தேடி குமரிமாவட்டம் சுசீந்திரத்தில் இருந்து 1967 கடைசியில் சென்னை வந்துவிட்டனர் .தம்பியை சின்னப் பிள்ளை என்பதால் கூடவே அழைத்து வந்துவிட்டனர் . வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் வலியை சுமந்தபடி ...
நான் மட்டும் அக்கா வீட்டில் இருந்தபடி பத்தாம் வகுப்புபைத் தொடர்ந்தேன் .
1968 கோடை விடுமுறையில் என் அத்தானின் நண்பர் ஐயப்பன் என்பவரோடு சென்னைக்கு பயணப்பட்டேன் .
அப்போது குமரிக்கு ரயில் கிடையாது . பஸ் கூட நேரடியாகக் கிடையாது .ஆகவே நாகர்கோவில் டூ திருச்சி அதன் பின் திருச்சி டூ சென்னை என பஸ் பயணம் தான் .நான் வந்த பஸ் தாழையூத்து ரயில் கிராசிங்கில் நின்றபோது ஒரு ரயில் கடந்து போனது . முதன் முதலாய் ரயிலை நேரில் பார்த்தது அப்போதுதான்.
ஐயப்பன் என்பவர் மாமபலத்தில் அவர் தங்கி இருந்த அறைக்கு அழைத்துப் போய் குளிக்க வைத்து , நாலு பிரட் சாப்பிட வைத்தார் . எனக்கு காய்ச்சல் இல்லையே ஏன் பிரட் சாப்பிடச் சொல்கிறார் என நான் எண்ணிய காலம் அது .
பின் பஸ்ஸில் என்னை அழைத்துக் கொண்டு வந்து கிண்டி கிளாஸ் பேக்டிரியில் பணியாற்றிக் கொண்டிருந்த என் அப்பாவிடம் ஒப்படைத்தார் .
அப்பா அழைத்துக் கொண்டு போய் ஒரு கடையில் டீயும் பட்டர் பிஸ்கடும் வாங்கிக் கொடுத்தார் .பின் பேக்டிரி வாசலில் வாச்மேன் அருகே உட்கார வைத்துவிட்டார் . மதியம் அவர் கொண்டு வந்த புளிசாதத்தை எனக்குக் கொடுத்தார் .அப்போதுதான் அறிமுகமான மாடர்ன் பிரட்டை வாங்கி வந்து அவர் சாப்பிட்டார் .எனக்கும் பாதி கொடுத்தார் . மேனஜரிடம் பெர்மிசன் வாங்கி எனக்கு பேக்டிரியை சுற்றிக் காண்பித்தார் .எனக்கு பெருமையாய் இருந்தது .
ஆக ,முதன் முதல் ரயிலைப் பார்த்தேன் .பேக்டிரி பார்த்தேன் .மகிழ்ச்சி . மாலை வீடு திரும்புகையில் மின்சார ரயிலில் கிண்டி முதல் குரோம் பேட்டை வரை அப்பா அழைத்துப் போனார் .என் முதல் ரயில் பயணம். மகிழ்ச்சிக்கு கேட்கவா வேண்டும் .
குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் ஒரு குடிசைவீட்டில் வாழ்ந்ததே முதல் சென்னை அனுபவம் . குரோம்பேட்டை நேரு போர்ட் ஹைஸ்கூலில் 11 வது வகுப்பு படித்தேன் .கல்வி அதிகாரி அய்யன்பெருமாள் பிள்ளை எங்கள் ஊர்க்காரர். அவர்தான் அப்பள்ளியில் நான் சேர உதவினார் .
நான் முதன் முதல் பயணித்த மின்சார ரயில் மீட்டர் கேஜ் . அதனை ப்ராடுகேஜ் அகலரயில் ஆக்க வேண்டும் என கோரிக்கை முழக்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் வாலிபர் சங்கமும் ,மாதர் சங்கமும் இணைந்து ஒவ்வொரு ரயில் நிலையமாக ஆர்ப்பாட்டம் நடத்தியதும் ;கையெழுத்து இயக்கம் நடத்தியதும் ; எங்கள் கோரிக்கை வென்றதும் பின்னர் என் அனுபவம் ஆனது .
எனக்கு சுசீந்திரத்திலேயே பெரியார் மீது ஈர்ப்பு ஏற்பட்டாலும் , சென்னையில் 11 வது படிக்கும் போதே திமுக அரசியல் என்னை இழுத்தது . குரோம்பேட்டை ராதா நகரில் இருந்த அண்ணா நற்பணி மன்றம் என் மாலைநேர பொழுதுபோக்கானது .எல்லா பத்திரிகைகளையும் அங்குதான் படிப்பேன். அண்ணா இறந்த போது பள்ளி ஆண்டுவிழா மலரில் அண்ணா குறித்து நான் எழுதிய கட்டுரையே அச்சில் பார்த்த என் முதல் எழுத்து .
பின்னர் மெல்ல மெல்ல இடதுசாரி அரசியல் என்னை ஆட்கொண்டது .கம்யூனிஸ்ட் ஆனேன்.பழவந்தங்கலும் சைதாப்பேட்டையும் என் ஆரம்ப்கால அரசியல் களங்கள் .
நான் அன்று பார்த்த சென்னை இன்றில்லை . சென்னை எவ்வளவோ மாறிவிட்டது .
என்னை பெரிதும் செதுக்கியது சென்னையே !
சுபொஅ.
22/8/24

கேள்விக்கும் பதிலுக்கும்கூட ...

Posted by அகத்தீ Labels:

 


நான் நான் நான் என்கிற சுயநலத்தைவிட நாம் , நாங்கள்  என்கிற பொதுநலம் மேலானது அல்லவா ?

 

 “இல்லை”என்றோ “ஆம்” என்றோ பதில் சொல்லுவதிலும் சிக்கல் உண்டு .

 

அவர்  “நாம்” என யாரைச் சொல்லுகிறார் ? “ நாங்கள்” என யாரை அடையாளப் படுத்துகிறார் ?

 

 “நாம்” “நாங்கள்” என்பது சாதியைக் குறிக்கவா ? மதத்தைக் குறிக்கவா ?

 

கேள்விக்கும் பதிலுக்கும்கூட வர்க்க சாயம் , வர்ண சாயம் உண்டுதானே !

 

பேசுகிறவர் ,பேசுகிற காலம் ,பேசுகிற இடம் பேசுகிற நோக்கம்  இப்படி எழும்

எல்லா கேள்விக்கும் விடை தேடின் . பொருள் துலங்கும்

 

சுபொஅ.


அவரல்ல பைத்தியங்கள் ....

Posted by அகத்தீ Labels:

 






பைத்தியங்களிலே

அந்த மதம் இந்த மதம் என்பது உண்டோ ?

 

பையித்தியங்களில்

அந்த சாதி இந்த சாதி பாகுபாடு உண்டோ ?

 

பைத்தியங்களில்

அந்த இனம் இந்த இனம்  பிரிவினை உண்டோ ?

 

பையித்தியங்களில்

அந்த நாடு இந்த நாடு  வேறுபாடு உண்டோ ?

 

பின் ஏன் அவர்களைப் பைத்தியம் என்கிறீர்கள் ?

அன்புக்கு ஏங்குகிறவர்களை ஏன் ஒதுக்குகிறீர்கள் ?

 

மனச்சிதைவும் புறக்கணிப்பும் வரைந்த கோணல் ஓவியங்கள்

மானுடத்தை உங்களிடம் தேடிநிற்கும் ஏமாளிகள் !

 


அவரல்ல பைத்தியங்கள் எங்கும் எப்போதும்

வெறுப்பை விதைப்போரே  மெய்யான பைத்தியங்கள் !!

 

மெய்யான பைத்தியங்கள் மொய்த்திருக்கும் உலகில்

சுற்றி ஓர் முறை நீவிர் உற்றுப் பார்த்ததுண்டா ?

 

காரிய பைத்தியங்கள் ! நாற்காலி பைத்தியங்கள் !

லஞ்சப் பைத்தியங்கள் ! லாபப் பைத்தியங்கள் !

 

ஆன்மீகப் பைத்தியங்கள் ! ஜோதிடப் பைத்தியங்கள் !

ஆயுதப் பைத்தியங்கள் ! யுத்த பைத்தியங்கள் !

 

மதப் பைத்தியங்கள் ! சாதிப் பைத்தியங்கள் !

நுகர்வுப் பைத்தியங்கள் ! நூதனப் பைத்தியங்கள் !

 

எத்தனையோ பைத்தியங்கள் எங்கு பரவிநிற்க !

யாரை நீங்கள் பைத்தியம் என்கின்றீர் ! பைத்தியங்களே !

 

சுபொஅ.

13/8/24.


நான்தான் நான் என்பதை நிரூபிக்க…..

Posted by அகத்தீ Labels:

 



நான்தான் நான் என்பதை நிரூபிக்க…..

 

கைக்கு வந்து ரொம்ப நாளாச்சு . எப்படியோ தப்பிக்  கீழடுக்குப் போய்விட்டது .இன்று வேறு ஒன்றைத் தேட இந்நூல் சிக்கியது .வாசித்தேன் .எழுதுகிறேன்.

 

 “ தெரியுமா ! நம்ம நம்மதானா ,இல்லையா என்பதை கண்டுபிடிக்க அரசாங்கம் போலீசுக்கு உத்தரவு போட்டிருக்கு .அதனால் நான் ஸ்டேசனுக்கு போகணும்.”

 

“ ஸ்டேசனுக்குப் போகணுமா,நீங்களா ,ஏன் ?”

 

“ நான்தான் நான் என்பதை நிரூபிக்க.”

 

“ எதுக்காக ?”

 

“ அரசாங்கத்தின் உத்தரவு “ என்று சொல்லியவாறே தேநீர் கோப்பையை மேசையின் மேல் வைத்துவிட்டு சத்யபிரதன் மிக விரைவாக கிணற்றுப் பக்கம் போனான்.

 

மேலே உள்ள வரிகளைப் படித்த பின்னர் உங்களுக்கு ஒன்றுமே புரியவில்லையா ? உளறலாக உணர்கிறீர்களா ? ஏதோ தத்துவ கிறுக்கல் என நீங்கள் நினைக்கிறீர்களா ?

 

நினைக்கலாம் தப்பில்லை . ஆனால் ஒவ்வொரு சொல்லும் வலியின் வார்த்தைகள் .

 

தேபேஷ் ராய் [ 1936 -2020 ] கிழக்கு வங்களாத்தில் பிறந்து மேற்கு வங்காளத்தில் வாழ்ந்தவர் .இலக்கியவாதி.எழுத்தாளர் .சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் .  இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது அகதிகளாக வந்தவர்களின் வாழ்க்கை வலியை  “அகதிகள்” எனும் சிறுகதையாய் எள்ளல் மிக்க நடையில் அதி அற்புத புனைவாக்கி உள்ளார் .பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது .பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன.

 

சத்யபிரதன் , அவர் மனைவி அணிமா , மகள்A அஞ்சு மூவரைச் சுற்றித்தான் கதை . இவர்களின் பூர்வீகத்தைக் கண்டறிய காவல் நிலையத்தில் எழும் கேள்விகளே சிறுகதை ஆகி உள்ளது .

 

சத்யபிரதன் யார் ? அணிதா யார் ? அஞ்சு யார் ? எனாமுல் யார் ? அவன் நல்லவனா ? கெட்டவனா ? ஊர் ஏது ? இவர்கள் அசலா ? போலியா ? செத்துவிட்டவர்களா ? வாழ்பவர்களா ? எப்படி கண்டு பிடிப்பது ? எப்படி நிரூபிப்பது ? இப்படி இருக்குமா ? அப்படி இருக்குமா ? இவர் அவரா ? அவரும் இவரும் ஒன்றா ? அவர் வேறு இவர் வேறா ?இப்படி  ஒரு துப்பறியும் நிபுணர் போல் அலசி ,குழப்பி ,கேள்வி கேட்டு அகதிகளின் வாழ்க்கை வலியை நமக்கு கடத்தி விடுகிறது .இச்சிறுகதை .

 

மோடி அரசு குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிவிட்டது . இதனை அமலாக்க முனைந்தால் இந்த சிறுகதையை மிஞ்சும் ஆயிரம் கேள்விகளையும் வலிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும் . ஆகவே இச்சிறுகதையை வாசிப்பது குடியுரிமைச் சட்டத்தை வலுவோடு எதிர்க்க உணர்வூட்டும் !

 

 

 “நான் நான்தான் என்பதை நிரூபிக்கச் சொல்லும்” குடியுரிமைச் சட்டத்தை அமலாக்கினால் அதன் கொடூரவலி எப்படி இருக்கும் ? சொல்லவே முடியாது .இச்சிறுகதை அதனைத் தொட்டுக் காட்டுகிறது .முழுவதும் சொல்லில் அடங்கா… வலி … வலி … ரணம் …. ரணம்….

 

இந்த இடத்தில் என் அனுபவம் ஒன்றைச் சுட்டுவது பொருத்தமாயிருக்கும் . என் மகள் பெங்களூரில் இருந்த போது அவள் பணியாற்றிய பள்ளியில் 14 வயதே ஆன கதிஜா என்றொரு பெண் உதவியாளராக பணியாற்றி வந்தார் . எலக்ட்டிரானிக் சிட்டி அருகே சிக்காரிபாளையத்தைச் சார்ந்தவர் .அப்பெண்ணுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடும் நடந்தது .என் மகள் திருமணத்துக்குப் போய் வந்தாள் . என் மகள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டாள் .

 

கதிஜாவும் வேலையைவிட்டு நின்றுவிட்டாள்.அதன் பின் என் பேத்தியை பார்த்துக் கொள்ள கதிஜா பொறுப்பாளி ஆனாள் . காலையில் வந்தால் மாலைவரை என் மகள் வீட்டில் இருப்பாள் . என் பேத்தி அவள் பொறுப்பில்தான் .என் பேத்தி  அவளோடு ஒட்டிக் கொண்டாள் .கன்னடம் பேசக் கற்றது கதிஜாவிடம்தான் . கதிஜா பிறந்தது படித்தது எல்லாம் சிக்காரி பாளையம்தான்.

 

திடீரென்று போலிஸார் கதிஜாவையும் அவர் அம்மாவையும் மூன்று நாளில் ரயில் ஏற வேண்டும் என உத்தரவிட்டனர் .ரயில் டிக்கெட்டும் கொடுத்தனர் . எடியூரப்பா  [பாஜக] ஆட்சியில் வங்கதேச அகதி என வெளியேற்றப்பட்ட குடும்பத்தில் அதுவும் ஒன்றானது . கதிஜா அம்மாவுக்கும் வங்கதேசம் எங்கு இருக்கும் என்றுகூட தெரியாது .வங்கமொழி பேசும் முஸ்லீம் அவ்வளவுதான்.

 

கதிஜா என் மகளிடம் சொல்கிறாள் , “ அக்கா , ஊருக்கு போனதும் டவுண் பஸ் எதுன்னு கண்டு பிடிச்சு வேலைக்கு வறேன்…” ஆம் வங்கதேசம் எங்கிருக்கு ? அது வேறு நாடு எதுவும் தெரியாது .சிக்காரிபாளையம் தவிர வேறு எதுவும் தெரியாது .

 

இப்போது கதிஜா பேச்சு வந்தாலும் என் மகள் அவளை எண்ணிக் கண் கலங்குவாள் .

 

பிழைக்க இடம் பெயர்ந்தவர்களை  இனங்கண்டு வெளியேற்றுவது எவ்வளவு கொடுமையானது . வலி மிக்கது . இந்த சம்பவமும் இந்த சிறுகதையும் வெவ்வேறல்ல வலியின் பல முகங்கள் .

 

இந்த  “அகதிகள்” சிறுகதையை ஒவ்வொருவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்.

 

நன்கு மொழிபெயர்த்திருக்கிற ஞா .சத்தீஸ்வரனுக்கு வாழ்த்துகள் .

 

 

அகதிகள் , [32 பக்க சிறுகதை ]

ஆசிரியர் : தேபேஷ் ராய் ,தமிழில் : ஞா .சத்தீஸ்வரன் ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail :   bharathiputhakalayam@gmail.com   /    www.thamizhbooks.com

பக்கங்கள் : 32 , விலை : ரூ.25 /


வலதுசாரிகளின் கை ஓங்கும் காலத்தில்

Posted by அகத்தீ Labels:

 


வலதுசாரிகளின் கை ஓங்கும் காலத்தில் நாம் என்ன செய்யப் போகிறோம் ?

ஐரோப்பா , இந்தியா ,இலங்கை ,வங்கதேசம் சொல்லும் பாடம்.

 

இன்று ஐரோப்பாவில் தீவிர வலதுசாரிகள் எழுச்சி பெற்று வருவதும் , ஆட்சி அதிகாரம் அவர்கள் கைக்கு மாறி வருவதும் மிகுந்த கவலையளிக்கும் செய்தியாகும் . இரண்டாயிரங்களின் நடுப்பகுதியில் தொடங்கிய இப்போக்கு இன்று தீவிரப்பட்டுள்ளது . சோவியத் யூனியன் தகர்வுக்கு பின்னணியில் ,நவ தாராளமய உலகமய தனியார் மய கொள்கைகள் அமுலாக்கம்  தொடங்கிய பின்னணியில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது . பிரிட்டனில் தொழிற்கட்சியே வலதுசாரி சார்பு எடுப்பதை புரிந்து கொள்ள வேண்டும் . இது குறித்து  “காக்ககைச் சிறகினிலே ” மாத இதழில் ரூபன் சிவராஜ் என்பவர் எழுதியுள்ள ,” ஐரோப்பா: தீவிர வலதுசாரி எழுச்சியும் ஆட்சி அதிகாரமும்” கட்டுரை மிக முக்கியமானது. [ வாய்ப்புள்ளோர் அக்கட்டுரையைத் தேடி வாசிக்கவும்.]

 

அக்கட்டுரையின் இறுதிப் பத்தியில் அவர் குறிப்பிடுவது நம் கவனத்துக்கு உரியது ;

 

“ இது குறித்து ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியராகவும் ; தேசியவாதம் மற்றும் வலது கவர்ச்சிவாதம் சார்ந்த ஆய்வாளருமான எலிசபெட்டா காசினா வோல்ஃப் [ Eilsabetta Cassina Wolff ] விவரிக்கையில் , ஐரோப்பியாவிலுள்ள பல தீவிர வலதுசாரிக் கட்சிகளின் பொதுத்தன்மை என்பது ,அவை சிக்கலான காலங்களிற் தேசிய பழமைவாத நிகழ்ச்சி நிரலை முன்னிறுத்தி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக விளக்குகிறார் ,பயத்தில் வாழும் நடுத்தர வர்க்கத்திற்கு உறுதியான பிடிமானங்கள் அவசியமானவை .குடும்ப அமைப்பு ,தேவாலயம் ,மற்றும் தேசம் ,தேசியம் ஆகிய பாரம்பரியங்கள் மற்றும் பாரம்பரியக் கொள்கைகளில் அவர்கள் பிடிமானங்கள் வெளிப்படும் .அத்தோடு அவை நிரந்தரமான பெறுமானங்களையுடையவை என்றும் அவர் விளக்குகின்றார். மக்கள் ஆதரவை உருத்திரட்டி நெருக்கடிகளுக்கான தீர்வுத் திட்டங்களை முன்வைத்து நம்பிக்கையைக் கட்டி எழுப்புவதில் இடதுசாரிகளின் தோல்வியும் வலதுசாரிகளின் எழுச்சிக்கான துணைக்காரணி .தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான வலுவான முன்னணிகளைத் தட்டி எழுப்பும் திராணி இடதுசாரிகளிடத்தில் இல்லை என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.”

 

ஐரோப்பா குறித்தே இக்கட்டுரை பேசினும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வலது மதவாத மாற்றம் , இலங்கையில் சரியான அரசியல் சித்தாந்த தலைமைத்துவம் இல்லா மக்களின் தன்னெழுச்சிப் போராட்டம் , வங்க தேசத்தில் இப்போது நடந்தேறும் தன்னெழுச்சி கலவரம் எல்லாம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவையே . ஏகாதிபத்திய கொடுங்கரம் எல்லாவற்றிலும் ஒளிந்திருப்பதை நாம் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிவிட முடியாது . இந்தப் பின்னணியில் இன்று தீக்கதிரில் வெளிவந்த சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் எம் ஏ பேபி எழுதிய “இரும்புப் பெண்மணியின் வீழ்ச்சி! சாதனை படைத்த ஷேக் ஹசீனா மக்கள் உணர்வுகளை மதிக்கத் தவறினார் ” எனும் கட்டுரை மிக முக்கியமானது .அதில் இரண்டு பத்திகளை இங்கு நினைவூட்டுகிறேன்.

 

 “மாணவர் பிரதிநிதிகள் பரிந்துரைத்தபடி, எண்பத்து மூன்று வயதான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்காலப் பிரதமராகிறார். ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தற்காலிகமாக தஞ்ச மடைந்துள்ள ஷேக் ஹசீனாவின் கொள்கைகளை விமர்சித்து வந்தவர் முகமது யூனுஸ். இவர் கிராமிய வங்கி மூலம் ஏழைகளுக்கு சிறுகடன் வழங்கி, வறுமை ஒழிப்பில் உலக கவனத்தைப் பெற்ற மாதிரியை உருவாக்கியவர். விமர்சனங்களால் கோபமடைந்த பிரதமர் ஷேக் ஹசீனா, நிதிக் குற்றங்களுக்காக முஹம்மது யூனுஸை கைது செய்து, சிறையில் அடைக்க முயன்றது விவாதமானது.”

 

 

 “தற்போது நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ள சூழலில், வங்க தேசத்தில் என்ன வகையான அரசியல் மாற்று அமைப்பு உருவாகிறது என்பது மிக முக்கியமானது. வங்கதேசத்தில் உள்ள வலதுசாரி - தீவிரவாத சக்திகளால் தற்போதைய சூழ்நிலையை சுரண்ட முயற்சிக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியமான விசயம். வங்க தேச கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேற்கு பாகிஸ்தானைப் போல இல்லாவிட்டாலும், இராணுவம் ஆட்சியதிகாரத்தை தனது பிடிக்குள் கொண்டுவர ஆர்வமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் வங்கதேசத்திலும் காணப்படுகின்றன. ”

 

ஆக ,இன்றைய உலகில் தீவிர வலதுசாரிவாதம் முன்னுக்கு வந்துள்ள ஆபத்தை நெஞ்சில் நிறுத்தி ; பாசிச எதிர்ப்புப் போருக்கான விரிவான நிகழ்ச்சிநிரலையும் , ஐக்கிய முன்னணியையும் , பண்பாட்டு முன்னெடுப்புகளையும் , இளைஞர்கள் மாணவர்களைத் திரட்டுவதில் முன்னுரிமையும் வழங்க இடதுசாரிகள் வியூகம் அமைக்க வேண்டும் . அதில் ஏற்படும் தோல்விகளும் சறுக்கல்களும் வலதுசாரிகளுக்கே சாதகமாகும்.

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

09/08/2024, 


வெப்பம் இன்னும் தணிந்துவிடவில்லை

Posted by அகத்தீ Labels:

 





இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை

அந்த நம்பிக்கை மட்டும் போதாதே!

அதுவும் மெல்லத் தேய்ந்து வருகிறதே !

 

மானுடம் இன்னும் பட்டுப்போகவில்லை

மெய்தான் பெரும்துயரங்களூடே தலைநீட்டுகிறது

ஆயினும் அதன் குரலில் பழைய மிடுக்கு இல்லையே !

 

போராட்டத்தின் வெப்பம்  இன்னும் தணிந்துவிடவில்லை

சாம்பல் பூத்துக் கிடக்கிறது உண்மைதான்

ஊதி காட்டுத் தீ ஆக்கும் சக்தி யாருக்கும் இருக்கிறது ?

 

ஓராயிரம் வாய்கள் ஒன்றினைந்து  ஊதும் பொழுதில் 

பனிமூடிய கங்குகளும் யுகநெருப்பாய் எழுமே !

பாலஸ்தீனம்  உயிர்த்தெழுமே ! தோழர்கள் பறை முழங்க!

 

சுபொஅ.

07/08/2024.

 

 

 


போதையின் அரசியலும் சமூகச் சவால்களும்.

Posted by அகத்தீ Labels:

 





“ஒவ்வொரு நாளும்

சுமார் 700 பேருக்கு மேல்

போதைக்குப் பலியாகின்றனர்…”

 

போதையின் அரசியலும் சமூகச் சவால்களும்.

 

சு.பொ.அகத்தியலிங்கம்

 

[ காக்கைச் சிறகினலே ,இலக்கிய மாத இதழ் , ஆகஸ்ட் 2024 ல் இடம் பெற்ற கட்டுரை . உங்கள் பார்வைக்காக…. சற்று பெரிதுதான் .ஆயினும் , இதன் முக்கிய்த்துவம் கருதி முழுதாய் வாசிப்பீர்கள் என நம்புகிறேன்.]

 

 திரிபுராவில் போதை ஊசி மூலம் எய்டஸ் தொற்றுக்கு உள்ளாகி 47 உயர் கல்வி மாணவர்கள் பலியாகி இருக்கின்றனர். பாஜக ஆளும் மாநிலம் என்பதால் இச்செய்தியை ஊடகங்கள் விவாதிக்காது.

 

உலகெங்கிலும் 15- 64 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு ஆறுபேரிலும் ஒருத்தர் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்.

 

2017 கணக்குப்படி உலகெங்கும் போதையால் உயிரிழந்தோர் கணக்கு மட்டும் ஆண்டு தோறும் தோராயமாக இரண்டரை லட்சம் பேர். இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

 

அதாவது ஒவ்வொரு நாளும் சுமார் 700 பேருக்கு மேல் போதைக்குப் பலியாகின்றனர். ஒவ்வொரு மணி நேரத்திலும் சராசரியாக 30 பேருக்கு மேல் போதை காவு கொள்கிறது.இது பழைய கணக்கு. புதிய கணக்கு மேலும் அழவைக்கும்.

 

2021 கணக்குப்படி கிட்டத்தட்ட உலகெங்கும் 29,60,00,000 அதாவது 29 கோடியே அறுபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் போதைக்கு அடிமையாகி உள்ளனர் இந்த எண்ணிக்கை மேலும் கவலையளிக்கும் வகையில் அதிகரித்திருத்துக் கொண்டே இருக்கிறது.

 

1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய [தீர்மானம் எண் 42/112 / 7th டிசம்பர் 1987 ] தீர்மானத்தின் படி, ஜூன் 26 ‘உலக போதை ஒழிப்பு தினம்சடங்காக உலகெங்கும் கடைப் பிடிக்கப்படுகிறது.

 

உண்மையில் அக்கறை உள்ளோர் விழிப்புணர்வில் ஈடுபடுவதும் நடக்கிறது. பல்வேறு நாடுகள் கடும் சட்டங்கள்,கடும் தண்டனைகள், சர்வதேச உடன்படிக்கைகள் அனைத்தையும் மீறி போதை பொருட்கள் நடமாட்டம் உலகெங்கும் பருத்து வீங்கிக்கொண்டே போகிறது.

 

அமெரிக்க உளவுத்துறை முதல் இந்திய உளவுத்துறை வரை நீட்டி முழக்கி பேசுவதும் கைகட்டி வாய்பொத்தி மவுனமாய் துணைபோவதுமாய் சொல்லும் செயலும் வெவ்வேறாகவே இருக்கிறது.

 

விளைவு,உலக அளவில் ஆண்டு தோறும் தோராயமாக 4,00.00,00,00,000 டாலர் அதாவது நாற்பதாயிரம் கோடி டாலர் [ இதனை இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ.83.68 ஆல் பெருக்கிக் கொள்க ] இந்த போதைச் சந்தையில் புழங்குகிறது.உலக அளவில் 80 விழுக்காடு போதைப் பொருட்கள் சட்டவிரோதக் கடத்தல் மூலமே நடக்கிறது.

 

போதை என்றவுடன் நம்ம ஊர் டாஸ்மாக், கள்ளச்சாராயம்,விஷச்சாராயம் மட்டும் என எண்ணிவிடாதீர். இவற்றை எல்லாம் மிஞ்சும் கொக்கைன்,ஹிராயின்,கஞ்சா,அபின், போதை தரும் பான்பராக்,போதை தரும் ஒருவகை பீடா,போதை கலந்த ஐஸ்கிரீம் என பல உண்டு. [தமிழ் நாட்டிலும் மேல்தட்டு பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நடக்கும் பல கொடுமைகளுக்கு பின்னே இந்த போதை ஐஸ்கிரீம் இருப்பதை ஊடகங்கள் பேசுவதே இல்லை.]

 

இவை மட்டுமல்ல இதனினும் கொடிய எல் எஸ் டி,ATS [amphetamine and others செயற்கை இரசாயணம் மூலம் அதி போதை ஊட்டும் பொருட்கள் இதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.] போன்றவையே உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது.

 

இந்த போதையின் வரலாற்றை தேடித் துருவினால் சுமேரியன் நாகரீகத்தில் தொல் எச்சங்களில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மொசபொட்டோமியா நாகரீகத் தடத்தில் போதை உண்டு, ரிக் வேதத்திலேயே சோமபானம்,சுராபானம் உண்டு,கள்ளுண்ணாமை என வள்ளுவரும் வலியுறுத்த வேண்டி இருந்தது.

 

இயற்கையோடு மல்லுக்கட்டிய மனிதன் குளிரையும் நோக்காட்டையும் தாங்கிட இயற்கையாகக் கிடைத்த மூலிகை, பட்டை, பழங்கள் மூலம் அதிக ஆபத்தில்லாத போதையை உருவாக்கிக் கொண்டான். மிகவும் ஆபத்தான போதைகளை உற்பத்தி செய்ய வாசல் முதலாளித்துவ சுரண்டல்தான்.

 

இந்த போதை மருந்துகளை பயன்படுத்துவதைச் சுற்றியும், நெறிமுறை ஏதுமின்றி கையாள்வதைச் சுற்றியும் எண்ணற்ற சமூக மற்றும் ஒழுக்கச் சவால்கள் உருவாகியுள்ளன.” என்கிறார் அமெரிக்காவைச் சார்ந்த பிரட்லி பல்கலைக்கழக உளவியல் வல்லுநர் வில்லியம் கிளேன் ஸ்டெய்னர் பியொரியா [William Glenn Steiner Peoria] [ஆதாரம்: பிரிட்டானிகா]

 

மேலும் சொல்கிறார், “போதைப் பழக்கம் குறித்த மதிப்பீடுகள் நவீன உலகில் முரண்பட்டிருக்கின்றன. இதனால் இந்தப் பிரச்சனை மேலும் சிக்கலாகி விட்டது.சமூகம், மதம், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் போன்ற பல்வேறு காரணிகளால் அந்த மதிப்பீடுகள் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகின்றன. ஓர் ஒற்றை சமூகத்திற்குள்ளேயும்கூட போதை பழக்கம் குறித்த மதிப்பீடுகளும் கருத்துகளும் கணிசமான அளவு பல்வேறு முரண்களுடன்தான் உள்ளனஎன்கிறார்.

 

அவர் அமெரிக்க சமூகம் சார்ந்து சொன்ன போதிலும் இங்கும் அளவு கோலிலும், புரிதலும், போதைக்கு அடிமையானோரைக் கையாள்வதிலும் நிரம்ப மாறுபாடுகள் நிச்சயம் உள்ளன. இந்தியாவில் கஞ்சா,அபின் பயன்பாடு சாமியார் மடங்களில் மிக அதிகம்.அதிலும் அகோரி சாமியார்களின் வாழ்வும் கஞ்சா, அபினும் பிரிக்க முடியாதவை. .பா.சிந்தன் மொழியாக்கத்தில் திரேந்திர கே ஜா எழுதியஆன்மீக அரசியல்புத்தகம் வாசித்துப் பாருங்கள்.

 

பொதுவாகச் சொல்லப் போனால் 'யார் யார் போதைக்கு அடிமையாவார் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாதுஎன்கிறார் பிரிட்டன் உளவியல் வல்லுநர் பீட்டர் கிரின்ஸ்பூன் [Peter Grinspoon, MD] இதன் பொருள் இந்த பூமிப்பந்திலுள்ள யாரை வேண்டுமாயினும் யாருடைய வாழ்வை வேண்டுமாயினும் போதைப் பழக்கம் பாதிக்கக்கூடும். சுரங்க முதலாளியோ, லாரி டிரைவரை, வழக்கறிஞரோ, டாக்டரோ, துறவியோ, அதிகாரியோ யாராயினும் போதைப் படுகுழியில் விழலாம்.

 

மேலும் அவர் விவரிக்கும் போது சொல்கிறார், “தானும் 14 வயதில் வலிநிவாரண மருந்துகள் வழி போதைக்கு அடிமையானேன். அப்போது எனக்கு என் கல்வி,மருத்துவக் கனவு, குலப் பெருமை, மத பிடிமானம், சமூக மரியாதை, உடல் நலம் எதைப் பற்றியும் அக்கறை இல்லை. போதை மட்டுமே என்னை ஆட்டுவித்தது. ஆனால் என் குடும்பத்தினர்,நல்ல நண்பர்கள், வழிகாட்டிகள் உடன் இருந்து அக்கறை காட்டி அன்பைப் பொழிந்து உரிய சிகிட்சை அளித்து என்னை மீட்டனர். அதனால் இப்போது இத்துறையில் உளவியல் நிபுணராக நான் உங்கள் முன்பு நிற்கிறேன்.”

 

மேலும் ஒரு படி மேலே சென்று கேட்கிறார், ‘‘எல்லோருக்கும் என் போல் இப்படி வாய்ப்பு கிடைக்குமா?” அத்துடன் அழுத்திச் சொல்கிறார், “வறுமை, வீடின்றி நடைபாதையில் வாழும் அவலம், சமூக இழிவு போன்றவை போதைப் பழக்கத்தை மேலும் மரணக் கொடூரமாக்குகிறது [Poverty, homelessness, and social stigma make addiction more deadly] என்கிறார்.

 

கள்ளக்குறிச்சியில் 63 பேர் விஷசாராயம் குடித்து செத்ததும், குஜராத் உட்பட நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த கள்ள சாராய சாவுகளும் இந்த உண்மையை நமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

 

இந்த போதைப் பழக்கம் எந்த அளவில் சமுதாயத்தை சீரழிக்கிறது?

 

] மனித உடல் நலத்தை, உளவியலை மிகவும் கடுமையாகப் பாதிக்கிறது; ] அகால மரணங்களை அதிகரிக்கிறது; ] வன்முறையும் குற்றச் செயல்களும் அதிகரிக்க காரணியாகிறது; ] குடும்ப வாழ்வை நிம்மதியை சீர்குலைக்கின்றது; ] மாணவர்களின் கல்வியை எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குகிறது; ] போதைக்கு அடிமையானோர் உற்பத்தியில்/ உழைப்பில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கிறது இதனால் ஏற்படும் பாதிப்புகள் பல.

 

எடுத்துகாட்டாக 1] உடல் மற்றும் மூளை உழைப்புத் திறன் கணிசமாக வீழ்ச்சி அடைகிறது. 2] இதனால் உடல் நலம் பெரிதும் சீர்கெடுகிறது. 3] இதனால் உடல் நலம் சார்ந்த செலவுகள் அதிகரிக்கிறது. 4] இதனால் பணப்பற்றாக்குறையும் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. 5] இதனால் வேலை இழப்பிலும் சட்டச் சிக்கலிலும் மாட்ட நேரிடுகிறது. 6] இதனால் கல்வி முடங்குகிறது 7] இதனால் போதைகடத்தல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடத்தூண்டுகிறது. 8] வாழ்க்கை மொத்தமாக திசை மாறி குடும்பத்துக்கும் ஊருக்கும் நாட்டுக்கும் பயனற்ற வீனானதாக்குகிறது.

 

இத்தகையப் போதையை கொடும் குற்றச் செயலாக அறிவித்துவிடுவதின் மூலம் மட்டுமோ, அல்லது அதிகபட்சத் தண்டனை அளித்துவிடுவதின் மூலம் மட்டுமோ ஒடுக்கிவிடலாம் என்பது பேசவும் கேட்கவும் எளிதாக இருக்கலாம்; நடை முறையில் அவ்வளவு சுலபமானதல்ல. ஏனெனில் மதங்களைப் போலவே இந்த போதைப் பழக்கத்தையும் தங்கள் சுரண்டலைப் பாதுகாக்கும் கேடயமாக சுரண்டும் கூட்டமும் ஏகாதிபத்தியமும் கருதுகிறது.

 

Sex, Drugs, Violence அதாவது காமக் களியாட்டம், போதை மயக்கம், வன்முறை இவற்றில் சமூகத்தின் ஒரு பகுதியைத் திருப்பிவிடுவதன் மூலமே வறுமை, வேலையின்மை,சமத்துவமின்மை இவற்றால் தோன்றும் சமூகக் கொந்தளிப்புகளையும் புரட்சிகளையும் முடிந்த வரை தள்ளிப் போடவும் தவிர்க்கவும் முடியும்.அதைத்தான் ஆளும் வர்க்கம் விரும்புகிறது. ஆகவேதான் போதைக்கு எதிராக எப்போதும் நிழல் யுத்தம் மட்டுமே ஆளும் வர்க்கம் நடத்துகிறது.

 

அதன் ஒரு பகுதியாகத்தான், ஆப்கானிலிருந்து போதை கடத்தும் கும்பலுக்கும் தமிழ்நாட்டில் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக ஓர் அரசியல் வெடியைக் கொளுத்திப் போடுகிறார் ஆளுநர் நரி. இது ஓர் அரசியல் காய் நகர்த்தல் என்பதில் ஐயமில்லை.

 

ஆப்கான் மிக முக்கிய போதை மையம், கஞ்சா உற்பத்தியில் பெரும் பங்கை ஆப்கானிஸ்தான் வகிக்கிறது என்பதும் உண்மையே.ஆயின் ஒன்றிய அரசின் முழு ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு கிராம் போதைகூட இந்தியாவில் எங்கும் நுழைய முடியாது. மும்பை விமான வழி, குஜராத் துறைமுகம் வழிதான் கஞ்சா இந்தியாவில் நுழைகிறது.

 

கஞ்சா போதைப் பொருளல்ல மருந்துப் பொருள்தான்என சர்வதேச ஒப்பந்தத்தில் ஒன்றிய அரசும் கையெழுத்து இட்டுள்ளது. கஞ்சாவோடு சில வேதியல் பொருட்களைச் சேர்த்து செய்யும் போது மட்டுமே அது போதை பொருள்வகையில் அடங்குமாம்.

 

இதை எல்லாம் சொல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும் போதை வானிருந்து வந்து குதிப்பது போல் தமிழ்நாடு மீதான வன்மம் காட்டுவதுதான் ஆளுநர் ரவியின் சங்கித்தன அரசியல்.

 

இதில் வேடிக்கை என்னவெனில் ஆப்கானிலிருந்து கடத்தப்படும் கஞ்சாவின் மதிப்பு சுமார் ஐம்பது கோடி எனில்,அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் அதன் மூலம் 160 கோடி டாலருக்கு மேல் லாபம் ஈட்டி விடுகிறதாம்.அதாவது விளைவித்தவன் தவிட்டு விலைக்கு விற்க கடத்தல்காரர்களும் இடைத்தரகர்களுமே பணத்தில் புரள்கின்றனராம்.

 

ஆப்கான் 2017 ஆம் ஆண்டு மட்டிலும் 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 9,900 டன் கஞ்சாவை உற்பத்தி செய்ததாகவும்; இதன் மூலம் 400 பில்லியன் டாலர் ஆப்கனில் தலிபான் ஈட்டி இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

 

ஆப்கனை அதிபராய் அமெரிக்க பொம்மையாய் இருந்த அமிர் ஹர்சாய் என்பவர் மிகப்பெரிய கஞ்சா விவசாயி,போதை வியாபாரி. ஆப்கனை காப்பாற்ற எனச் சொல்லி அங்கு படை எடுத்த அமெரிக்க ராணுவத் தளபதிகள் அதிகாரிகள் சட்ட விரோத போதை வர்த்தக கூட்டாளியாகிப் போயினர்.விபரம் வெளிச்சத்துக்கு வந்ததும் பேருக்கு சிலருக்கு தண்டனை வழங்கிவிட்டு அவசர அவசரமாய் ராணுவத்தை அமெரிக்கா திரும்பப் பெற்றது.ஆனால் போதை வர்த்தக உறவு நீடிக்கிறது.இதை எல்லாம் ரவி பேசுவாரா? குஜராத் அம்பானி துறைமுகத்துக்கும் இந்த சட்டவிரோத போதை வர்த்தகத்துக்குமான தொப்புள்கொடி உறவை ரவி சொல்வாரா?

 

இந்த நேரத்தில் நினைவில் வரும் ஒரு செய்தி, 1989-90 ல் பனமா எனும் மத்திய அமெரிக்க நாட்டில் 27,000 சிப்பாய்களோடு அமெரிக்கப் படை புகுந்து இரண்டாயிரத்தும் மேற்பட்ட பனாமியர்களைக் கொன்று ஆக்கிரமிப்பு செய்தது. அதன் அதிபர் கஞ்சாக் கடத்தலில் ஈடுப்பட்டதாக ஒரு சாக்கு மட்டுமே இந்த ஆக்கிரமிப்புக்கு காரணமானது.

 

உலகின் போதை தங்கப் பிறை என்று அழைக்கப்படுகிற ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்கும்; போதை தங்க நாற்கரம் என அழைக்கப்படும் மியான்மர், தாய்லந்து, லாவோஸ், வியட்நாம் நாடுகளுக்கும் இடையே இந்தியா நசுக்குண்டு கிடக்கிறது. இப்படிச் சில நாடுகளைமட்டும் வகைப்படுத்துவதில் அமெரிக்க உளவுத்துறையின் கைவரிசையும் உண்டு, தாலிபான் போன்ற மதவாத பயங்கரவாத அமைப்புகளும் உண்டு. இதுபோல் ஆப்பிரிக்க நாடுகள், தென், மத்திய அமெரிக்க நாடுகள் மீதும் அமெரிக்க உளவுத்துறை வசை பாடுவதும் உண்டு. போதையைக் காரணம் காட்டி அருகிலுள்ள தீவுகளை ஏகாதிபத்தியம் ஆட்டையப் போட்டதும் உண்டு. இந்த அரசியல் தனி.

 

உலக போதை மண்டலங்களுக்கு இடையே நசுக்குண்டு கிடக்கும் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைகிறது. ஆங்காங்கு கொஞ்சம் கஞ்சா பயிரிட்டாலும் இந்தியா போதை மருந்துகளின் உற்பத்தி மையம் அல்ல; கைமாற்றும் கடத்தல் வழிப்பாதையே. கைமாற்றும் போது ஒழுகுகிற போதையின் பயன்பாடே இந்தியாவில் கவலையளிக்கும் விதத்தில் பெருத்துக்கொண்டே போகிறது.

 

இந்தியாவில் போதைப் பொருட்களின் நுழைவு வாயில் குஜராத் துறைமுகமும் மும்பை விமான நிலையமுமே ஆயினும் உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் மூன்றும்தான் இந்தியாவில் போதைப் பொருட்கள் அதிகம் உலாவும் இடமென ஒன்றிய மாநிலங்களவையிலேயே அமைச்சர் தெரிவித்தார்.

 

இதில் வேடிக்கையான ஒரு செய்தி, உலகெங்கும் இந்த போதை மருந்துகள் தயாரிப்பு, கடத்தல், விற்பனை இவற்றுக்கு உலகு தழுவிய மிகப்பெரிய வலைப்பின்னல் அமைப்பு இருக்கிறது. இதில் பெரும் கோடீஸ்வரர்களும் தாலிபான் போன்ற பயங்கரவாதிகளும். அமெரிக்க சிஐஏவின் கரங்களும் அரசு நிர்வாக இயந்திரமும் தொடர்பு கொண்டுள்ளனர். அதே போதில் இதன் மூலம் சாதாரண அடித்தட்டு ஏழைகள் ஏதோ ஒரு வகையில் வேலையும் கூலியும் பெறுகின்றனர். இப்படி வாழ்வாதாரத்துக்கு போதையை நம்பி இருப்போர் பல கோடிப் பேர் ஆவர். கிட்டத்தட்ட ஒரு பெரியவேலைச் சந்தையையும் தன்னகத்தே கொண்டிருக்கிறதுபோதை வர்த்தகம்.”

 

பாட்டி சொன்ன மந்திரவாதி கதையின் மர்ம முடிச்சைவிட நூறுமடங்கு பெரிய மர்ம முடிச்சைக் கொண்டது இந்த சட்டவிரோத போதைச் சந்தை.

 

இதற்கு மதம் இல்லை. நாடு இல்லை. மொழி இல்லை. எங்கும் பரவியிருக்கும் விஷச் செடி. எங்கும் நீக்கமற நிரம்பி இருக்கும் விஷச் செடி.

 

இதன் ஆழமும் அகலமும் தெரியாமல் இங்கே குண்டு சட்டிக்குள் உள்ளூர் அரசியலோடு போதையைக் கலந்து குறுக்கு சால் ஓட்ட முயல்கிறார்களே தவிர; போதைக்கு எதிரான விழிப்புணர்வும் அரசியல் உறுதியும் கிட்டத்தட்ட இந்தியாவில் எங்கும் இல்லை. இதுதான் சோகம். போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஓட்டம், ஒரு கோடி கை எழுத்து என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் [டி.ஒய்.எப்.] முன்னெடுக்கிறது. இடதுசாரி அமைப்புகள் ஆழ்ந்த அக்கறையோடு இதனைப் பேசுவதுபோல் இதரர்கள் பேசுவது இல்லையே?

 

பூரண மதுவிலக்கு”, “ஒரு துளி போதையில்லா மாநிலம்என்பதெல்லாம் வெறும் கற்பனைச் சரடுதானே தவிர சாத்திமான ஒன்றல்ல!

 

அரசியல் விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, பண்பாட்டு விழிப்புணர்வு, அறிவியல் பார்வை இவற்றை முன்னெடுப்பதே மாற்று பாதை கடினம்தாம் நெடியதுதான் வேறு மார்க்கம் இல்லை.

 

கடைசியாக ஒரு கேள்வி போதை குறித்து இணைய தளத்தில் ஆங்கிலத்தில் கொட்டிக் கிடக்கும் எண்ணற்ற ஆய்வு நூல்கள், கட்டுரைகள், தகவல் களஞ்சியங்கள் போல் தமிழில் எத்தனை வெளிவந்திருக்கின்றன? போதுமான தகவல் மற்றும் அறிவியல் வெளிச்சம் இல்லாமல் செய்யும் போதை எதிர்ப்பு பிரச்சாரம் நீர் மேல் எழுத்துதான்.

 

நன்றி : காக்கைச் சிறகினிலே , இலக்கிய மாத இதழ் ,ஆகஸ்ட் 2024.