[ஆகஸ்ட் மாத “காக்கைச் சிறகினிலே..” இதழில் வெளிவந்துள்ள கட்டுரை
இது .]
ஆன்மீகம் என்ற சொல்லுக்கு பின்னே…….
சு.பொ.அகத்தியலிங்கம்.
ஆன்மீகம்
என்ற சொல் போல் மிகவும் மலினப்படுத்தப்பட்ட ; மிகவும் கொச்சைப் படுத்தப்பட்ட வெறொரு
சொல் இருக்குமா என்பது சந்தேகமே . இதனை நீருபிக்க நாத்திகவாதிகளின் எழுத்துகளோ பேச்சுகளோ
தேவை இல்லை . தங்களை ஆன்மீகவாதிகள் என்று பிரகடனப்படுத்திக் கொள்வோர் வாக்கு மூலங்களே
போதும் . இதில் எல்லா மதத்தவரும் ஒருப்போல்தான் இருக்கின்றனர் .
குறிப்பாக
இரண்டு கோணங்களில் இதனை அலசலாம் . ஒன்று , ஆன்மீகவாதிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக்
கொள்ளும் சந்நியாசிகள் ,உபந்யாசிகள் , பிரச்சாரர்கள் பேச்சையும் எழுத்தையும் தொகுக்க
ஆரம்பித்தால் அது முரண்பாடுகளின் மூட்டையாக பல்லிளிக்கும் . அவை தன்னைத்தானே அம்பலப்படுத்திக்
கொள்ளும் . மீண்டும் சொல்கிறோம் மதம் எதுவாயினும் நிலைமை இப்படித்தான் . ஆயினும் ,
“ எங்கள் மனம் காயப்பட்டுவிட்டது” என அவர்களின் சிஷ்யகோடிகள் கூப்பாடு போடக்கூடும்
என்பதால் அவை குறித்து இங்கு பேசப்போவதில்லை
.அவை உங்கள் தனிப்பட்ட நம்பிக்கை என விட்டுவிடுகிறோம்.
இரண்டாவது
, ஆன்மீக இதழ்களாக மாதந்தோறும் அல்லது வாரந்தோறும் வெளிவரும் ஏடுகள் மற்றும் காட்சி
ஊடகங்களை ஆய்வு செய்தாலே ஆன்மீகத்தை மிகவும் கேலிக்குரியதாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள்
இவர்களே என்பது வெட்டவெளிச்சமாகும் . பெரும்பாலான ஆன்மீக இதழ்கள் ”இந்து இதழ்”களாகவே முழுதாய்த் தங்களை வெளிப்படுத்திக்
கொள்கிறது . தங்களை பொதுவானவர்கள் எனக் காட்ட ஓரிரு பக்கங்களில் பிற மதம் குறித்துப்
போகிற போக்கில் சில துணுக்குகளை வீசுவதோடு சரி ! ஆக , இவ்வேடுகள் தோற்றத்திலேயே ஆன்மீகம்
என்ற முகமூடியைக் கழற்றிவிட்டு மத பிரச்சார ஏடாகவே வெளிப்பட்டுவிடுகிறது . கிறுத்துவ
,இஸ்லாமிய,இதர மத பிரச்சார ஏடுகளிலும் ஆன்ம பலம் மிக்க மானுடரை உருவாக்கும் நோக்கம்
இருப்பதில்லை ; ‘மதம் பிடித்த மனிதனை’ உருவாக்கவே
மெனக்கிடுகிறது .
ஆன்மீக ஏடுகளை
,காட்சி ஊடகங்களை முன்வைத்து இங்கு நான் சில கேள்விகளை முன்வைக்கிறேன் .அவற்றை முன்வைத்து
நீங்களே உங்களுக்கு விருப்பமான மேற்படி ஏடுகளில் அல்லது காட்சி ஊடகங்களில் பதிலைத்
தேடுங்கள் ! ஆய்வுக்கு உட்படுத்துங்கள்! நான் கூறுவது சரியா பிழையா என்பது தெளிவாகிவிடும்.
1] கஷ்ட நிவர்த்திக்கு
பரிகார ஸ்தலங்கள் ,பரிகார பூஜைகள் ,பரிகாரச் சடங்குகள், தொழுகைகள் ,பிரார்த்தனைகள்
,ஜெபங்கள் என வாராவாரம் பல்வேறு யோசனைகளை முன்வைக்காத ஊடகம் ஏதேனும் உண்டா ? இவற்றை
பட்டியல் போட்டால் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பலநூறு யோசனைகள் - தப்பு தப்பு பல ஆயிரம்
யோசனைகள் முன் மொழியப்பட்டிருக்கும் அல்லவா ; அவற்றில் எது சரி , எது தவறு , என்பதை
ஏதேனும் வழியில் ஆய்வு செய்து பட்டியிலிட முடியுமா ?
2] அவற்றைக்
கடைபிடித்தும் இன்னும் பக்தர்கள் முழுவதும் ஏதேனும் பிரச்சனைகளில் சிக்கி தடுமாறுவது
ஏன் ? குறிப்பாக உடனே வேலைகிடைக்க , கல்யாணம் ஆக , பணக்கஷ்டம் தீர ,கடனில் இருந்து
விடுதலை பெற , நோயிலிருந்து விடுபட என அன்றாடம் உலுக்கும் ஆயிரம் பிரச்சனைகளுக்கு இவ்வளவு
எளிய பரிகாரங்களும் நிவாரணங்களும் முன்மொழியப்பட்டும்
; பக்தியும் இவற்றில் நம்பிக்கையும் கொண்டு
பின்பற்றும் கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து பிரச்சனைகளில் உழல்வது ஏன் ? ஒற்றைக் கலாச்சாரம்
ஒற்றைப் பண்பாடு ஒற்றை மொழி என உளறுவோர் ”ஒற்றைப் பரிகாரத்தை” முன்மொழியலாமே ! அதைச்
செய்யாமல் வாராவாரம் புதுசு புதுசாக குழப்புவது யார் ? ஏன் ?
3] ஒவ்வொரு
கோயிலுக்கும் ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு கடவுளுக்கும் விஷேச சக்தி இருப்பதாகவும்
, அந்த குறிப்பிட்ட சாமியை குறிப்பிட்ட முறையில் வழிபடுவோர் அந்த குறிப்பிட்ட பிரச்சனையிலிருந்து
விடுபடுவதாகவும் வாராவாரம் எழுதுகின்றன அவ்வேடுகள் . அவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஒரே பிரச்சனைக்கு நூறு சாமிகளை ஒரே ஏடு எழுதியிருக்கும்
; புரட்டிப்பார்த்தால் பட்டியல் நீளும் . அதில் எது உண்மை,, எது பொய் ,எது சக்தி மிக்கது
,எது டுப்பாக்கூர் என கூற முடியுமா ? அல்லது வெறும் விளம்பரச் செய்திகள்தாமா அவை ?
அந்தந்த சாமிக்காவது தனக்கு இப்படிப்பட்ட ’விஷேச பவர்’ இருக்கிறது என்பது தெரியுமா
? ஏன் இந்த கேலிக்கூத்து ?
4] புராண
கதைகளாக வாராவாரம் வெளியிடுகிற அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒவ்வொன்றைக் குறித்தும்
நூறு பொய் இருக்கும் . அவற்றிற்கும் இன்றைய நவீன வாழ்க்கைக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும்
ஏதாவது சம்மந்தம் உண்டா ? அவற்றில் எத்தனை ஆபாசக் கதைகள் இருக்கும் ? அதை எல்லாம் கூச்சநாச்சமின்றி
எப்படி எழுதவும் பேசவும் முடிகிறது ?
5] மகான்கள்
வாழ்வில் நடந்ததாக இவ்வேடுகள் எழுதிக் குவித்த செய்திகள் எதற்காவது தக்க ஆதாரம் உண்டா
? ஒரே கதையை வெவ்வேறு மகான்கள் வாழ்வில் நடந்தாக வெவ்வேறு இடங்களில் எழுதி வைத்துள்ளவற்றை
மறுக்க முடியுமா ? சரி ! இப்படி எழுதி வைக்கிற செய்திகளில் எத்தனை ஆன்மீக மேம்பாட்டுக்கு
உகந்தவை சொல்ல முடியுமா ; அவை பொய்மையையும் போலிபிம்பத்தையும் கட்டமைப்பதைத் தவிர உருப்படியாய்ச்
செய்தது என்ன ?
6] ஆன்மீகம்
என்பது மதம் சார்ந்தததா ? மனித விடுதலை சார்ந்ததா ? இந்த ஏடுகள் எழுத்தும் பார்வையும்
மதம் சார்ந்து இருக்கிறதா , மனித விடுதலை சார்ந்ததாக இருக்கிறதா ? ஆன்மீக குருக்களிலும்
மனித குலம் முழுவதையும் அன்பால் குளிப்பாட்டிய
மனிதகுல விடுதலைக்காக அர்ப்பணித்த சிலர் உண்டு .அவர்கள் சார்ந்து எழுதும் போதாவது
மனிதகுலத்தை வாரி அணைக்கும் வெள்ள அன்பு இவ்வேடுகளில் வெளிப்பட்டது உண்டா ? அவர்களை வெறும் கருவேப்பிலையாகப் பயன்படுத்தல் அன்றி வேறு
நோக்கில் எப்போதேனும் சொன்னது உண்டா ?
7] ”இதை இதைச்
செய்யலாம் இதை இதைச் செய்யக்கூடாது” என இவ்வேடுகளில் பட்டியல் போட்டு பக்தர்களை குறிப்பாக
பெண்களை மிரட்டி எழுதுவதில் ஏதேனும் வரைமுறை உண்டா ? இப்படி ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு
பிரிவும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் போட்ட பட்டியலைத் தொகுத்தால் ஒன்றுக்கொன்று முரணாக
அல்லவா இருக்கும் ? இன்றைய அறிவியல் வளர்ச்சி காலத்தில் ,ஆணும் பெண்ணும் உழைத்து வாழும்
யுகத்தில் , கல்வி அறிவு மேம்பட்டிருக்கும் காலத்தில் , அறிவியல் அன்றாடம் புதிய சாளரங்களைத்
திறந்திருக்கும் சூழலில் , இவ்வேடுகள் போடும் பட்டியலுக்கும் வாழ்க்கை அனுபவத்திற்கும்
ஏதேனும் சம்மந்தம் உண்டா ?
8] இவ்வேடுகள்
சுட்டும் ஆன்மீகம் இதுதான் என ஒரு இலக்கணத்தை வரைந்து காட்ட முடியுமா ? மூடநம்பிக்கைகளை
மட்டுமே அவ்வேடுகள் விதைத்தன எனக் கூறுவதில் பிழை இருக்க முடியுமா ? மதம் ,சாதி இவற்றின்
பெயரால் மனிதகுலம் அடித்துக் கொண்டு சாவதை தடுத்து நிறுத்த , “எல்லோரும் இறைவனின் பிள்ளைகள்
; எல்லோரும் அன்பு செய்து வாழ்வீர் !” என வலியுறுத்த இவ்வேடுகள் ஒரு துரும்பையேனும் எப்போதேனும் கிள்ளிப்
போட்டது உண்டா ?
இப்படி கேள்விகள்
நீண்டு கொண்டே போகும் . நீங்களே நூறு இதழ்களை சேகரித்து இவற்றுக்கும் இதுபோல் நீங்கள்
எழுப்பும் கேள்விகளுக்கும் விடை காண முயல்வீர் ! ஆய்வு செய்வீர் !
அப்போது
, ஆன்மீகம் என்ற சொல் போல் மிகவும் மலினப்படுத்தப்பட்ட ; மிகவும் கொச்சைப் படுத்தப்பட்ட
வெறொரு சொல் இல்லை என்பதை இந்த ஆன்மீக வியாபாரிகள் வழியே நீங்கள் கண்டடைவீர்கள் ! ஆன்மீக
வியாபாரத்தின் வீச்சும் ,செழிப்பும் ,கொள்ளை லாபமும், மோசடியும் , திருட்டும் உங்களைத்
திடுக்கிடவைக்கும் . இவை வெறும் வார்த்தை அன்று. .உண்மை .உண்மை . உண்மை .
நன்றி : காக்கைச்
சிறகினிலே , 2025 ,ஆகஸ்ட் இதழ்
0 comments :
Post a Comment