எழுத்துக்கும்
வாழ்க்கைக்கும் இடையே ….
ஒரு எழுத்தாளர்
மனைவியின் வெள்ளந்தியான பேட்டியை காணொளியில் பார்த்தேன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும்
உள்ள இடைவெளி பளிச்சென புலப்பட்டது . இது விதி விலக்கல்ல . படைப்பாளியை ஓரம் தள்ளிவிட்டு
படைப்பைப் பார்க்க வேண்டிய சூழலே மிகுந்துள்ளது .
’பெரிய மனிதர்கள்
‘ /எழுத்தாரோ / அரசியல் தலைவரோ /கல்வியாளரோ பிரபலமானவரோ யாராயினும் பேச்சுக்கும் செயலுக்கும்
இடைவெளி இருக்கத்தான் செய்கிறது . அதனால் எல்லோருமே போலி என சொல்லிவிடமுடியுமா ? ஏன்
உங்கள் வீட்டில் என் வீட்டில் நம் இதயத்தை எண்ணத்தை ஸ்கேன் செய்ய முடியுமானால் ஒவ்வொரு கணவன் மனைவிக்குள்
புதைந்து கிடக்கும் உண்மைகள் பூகம்பமாய் வெடிக்கக் கூடும் . ஆகவே அந்த ’பெரிய மனிதர்கள்’
அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட முடியுமா ?சிக்கலான கேள்விதான்.
முற்போக்காளராய்
/ சாதி ,மத மறுப்பாளராய் /பகுத்தறிவாளராய் / கம்யூனிஸ்டாய் /போராளியாய் /புரட்சிக்காரராய்
/ அறிவியலாளராய் வாழ ஆசைப்படுவதும் ; அதற்காக பேசுவதும் ; எழுதுவதும் ; செயல்படுவதும்
ஒரு வகையில் எளிதானது . ஆயின் சொந்த வாழ்வில் தனிப்பட்ட முறையில் சறுக்கலோ / வழுக்கலோ
இல்லாமல் வாழ்வது மிகப் பெரிய சவால் .
ஏனெனில் உன்னைச்
சுற்றி உள்ள உலகின் அழுக்குகளும் கசடுகளும் கிருமிகளும் உனக்குள்ளும் நிறைய இருக்கும்
. அதிலிருந்து மீள உனக்குள்ளும் ,உன்னோடு வாழ்பவரோடும் பிறரோடும் நீ நடத்த வேண்டிய
போராட்டமும் ; அவர்கள் உன்னோடு மோதிக்கொண்டே இருப்பதும் தொடர்கதை . இந்தப் பயணத்தில்
நீ எந்த அளவு உறுதியோடு நிற்க முயல்கிறாய் என்பதே முக்கியம் ; வெற்றி தோல்வி குறிப்பிட்ட
அக புற சூழலோடும் சுய முயற்சியோடும் இணைந்தது .
நூறுசதம்
புனிதமானவரோ புரட்சிகரமானவரோ யாருமில்லை . ஆனால் கால ஓட்டத்தில் முட்டி மோதி மேம்பட்டுக்கொண்டே
இருப்பவரைத்தான் நாம் கொண்டாட முடியும் .வாழ்க்கையில் இழுப்பில் தன்னை இழந்து கொண்டே
இருப்பவரை அடையாளம் காண வேண்டும் . அடையாளம் காட்டவும் வேண்டும் . இதுவும் தவிர்க்க
முடியாததே !
நாத்திகர்
என்பதாலேயே கோட்சேவை ,சாவர்க்கரை கொண்டாட முடியுமா ? புலால் மறுப்பாளர் என்பதால் ஹிட்லரை
,மோடியை ,அமித்ஷாவை கொண்டாட இயலுமா ? முடியுமா ?
’இறந்த தன்
மனைவியின் ஆவியுடன் பேசுகிறேன்’ என்று சாகும்வரை சொல்லிக் கொண்டே இருந்த மூடநம்பிக்கையைச் சுமந்து மறைந்த நீதிபதி கிருஷ்ணய்யரின்
அரிய சமூகநீதித் தீர்ப்புகளை சமூக பங்களிப்பை நிராகரிக்க முடியுமா ? கவிஞர் கண்ணதாசனின்
தனிப்பட்ட வாழ்வை , அவர் அங்கும் இங்கும் தாவிக்கொண்டே இருந்ததை , நாளைக்கு ஒன்று பேசியதை
சுட்டி அவர் பாடல்களின் வலிமையை இனிமையை நிராகரிக்க முடியுமா ? இளைய ராஜாவின் அரசியல்
தத்துவச் சறுக்கலை விமர்சிப்பதும் அவர் இசையை ரசிப்பதும் தவிர்க்க முடியாததுதானே !
மேற்கத்திய
சமூகம் Open society அதாவது திறந்த சமூகம்
அங்கே எதையும் மூடி மறைப்பதில்லை , ஒவ்வொருவரும் அவர் செய்கையை மூடிமறைப் பதில்லை
.அங்கே எழுத்தாளரோ தலைவரோ வெளிப்படையாகவே வாழ்கின்றனர் . புரிவது எளிது .ஆகவே படைப்போ
கருத்தோ மட்டுமே அளவு கோலாகும் .அங்கேயும் தலைவர்கள் சுய சறுக்கல் பொது விமர்சனத்தில்
இருந்து தப்புவதில்லை .
இங்கு நாம்
மூடுண்ட சமூகத்தில் வாழ்கிறோம் . ஹிப்போகிராட் சொசைட்டி Hypocrite
Socity .இங்கே முதுக்கு பின்னால்
ஒன்று முகத்துக்கு நேராக ஒன்று என்கிற தவறான பண்பாட்டுக்கூறு எங்கும் வியாபித்துள்ளது
. ஆகவேதான் படைப்பைபோ படைப்பாளரையோ எடை போடுவது சவாலாக உள்ளது . மேலும் சமூக வரலாற்றுப்
பின்புலத்தோடு காலநிரலோடு எதையும் ஒப்பிட்டுப்
பார்க்காமல் எதோ ஒரு துண்டு துக்காணிச் செய்தியையோ அல்லது கத்திரிக்கப்பட்ட துண்டு
வார்த்தைகளையோ வைத்து மயிர் பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம்.
யாராயிருப்பினும்
ஒருவரின் தனிப்பட்ட சமூக பங்களிப்பை , தனிப்பட்ட பலவீனங்களை , தவறுகளை எல்லாம் கூட்டிக்
கழித்து கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி எடைபோடலே இயங்கியல் அணுகுமுறை . இதுவே சமூக விஞ்ஞான
அளவுகோல் . இதை புரிந்து ஏற்பது சுலமமல்ல . மேலோட்டமாய் ஏற்பதும் நிராகரிப்பதுமே பொது
புத்தியாய் உள்ள சூழலில் யாரொருவரையும் எடை போட புத்தியைத் தீட்ட வேண்டும் .வேறு வழியில்லை
.
சுபொஅ.
0 comments :
Post a Comment