வட்டார வழக்குகள் : மறு பரிசீலனை தேவை.

Posted by அகத்தீ Labels:

 


வட்டார வழக்குகள் : மறு பரிசீலனை தேவை.

 

 

“ திருநெல்வேலி என்றாலேயே அல்வாவும் ‘ஏல’ என்ற சொல்லும்தான் என்பது போன்ற தோற்றம் உள்ளது.அதிலும் ‘ஏல’ என்ற சொல் பயன்பாடு மக்கள் தொடர்பு சாதனங்களில் மிகவும் செயற்கைத் தனமாக உள்ளது.”- இப்படி தோழர் வீ.பழனி “தாமிரபரணி தீரத்து சிறுகதைகள்” நூலில் குறிப்பிட் டிருப்பது மிகையல்ல . உண்மையே .நான் என்னுள் அசைபோட்டேன் ;

 

நான் 1967-68 களில் 11 வது வகுப்பு படிக்க குமரி மாவட்டத்திலிருந்து சென்னை வந்தேன் .வகுப்பறையில் சக மாணவர்கள் என் பேச்சை கேலி செய்தனர் . அதிலும் என் ஆங்கில உச்சரிப்பு உச்சபட்ச கேலிக்குரியதானது . அப்போது ஏற்பட்ட கூச்சத்தின் விளைவு இன்றுவரை ஆங்கிலத்துக்கும் எனக்கும் இடைவெளி .ஆனால் தமிழ் என் ஆர்வத்தை கிளர்த்திவிட்டது . என்னிடம் இருந்த நாஞ்சில் வாடை மெல்ல மெல்ல குறைந்தது . 1967 தொடங்கி 2013 வரை சென்னை திருவள்ளூர் என வாழ்ந்து விட்டதின் பலன் அது .

 

நாஞ்சில் நாட்டு மொழி வழக்கு மிகவும் வித்தியாசமானது . நாஞ்சில் நாடு முழுவதும் ஒரேப் போல் இருக்காது .குறிஞ்சி ,முல்லை ,மருதம், நெய்தல் என நானிலமும் உள்ள மாவட்டம் . அகத்தீஸ்வரம் ,தோவாளை தமிழ் ஒரு மாதிரி இருக்கும் , கலகுளம் ,விளவங்கோடு தமிழ் ஒரு மாதிரி இருக்கும் . குளச்சல் கடலோர மக்களின் தமிழ் முற்றிலும் வேறு வகையில் இருக்கும்.

 

பேச்சும் நடையும் உருவமும் இவர் குமரி மாவட்டத்துக்கு உரியவர் எனக் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் இன்று குமரி மாவட்டத் தமிழே பெரிதும் மாறி இருக்கிறது . எங்கும் பரவி இருக்கும் குமரி மாவட்டத்துக்காரர்கள் மூலமும் ,நவீன ஊடகங்கள் வழியும் நிறைய சொற்கள் புழக்கத்துக்கு வந்து விட்டன . பழைய சொற்கள் பல வழக்கொழிந்து போகின்றன .பழக்க வழக்கங்களிலும் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன .

 

எல்லா வட்டார வழக்குகளும் அப்படித்தான் . சென்னைத் தமிழ் என சினிமா கொச்சைப் படுத்தியது அல்ல சென்னைத் தமிழ் . மாநகரில் வியாபாரம் ,தொழில் ,அரசியல் வழி பலவேறு பண்பாடுகளுடனும் மொழிகளுடனும் ஊடாடியதால் அது சார்ந்த சொற்களும் உரையாடல்களுமாய் விரிந்து ஜனநாயகமானதுதான் சென்னைத் தமிழ் .

 

ஆரம்ப காலங்களில் எழுத்துத் துறையிலும் திரைப்படத்துறையிலும் தஞ்சை வட்டாரம் கோலோச்சியதால் அந்த வட்டாரத் தமிழே நல்ல தமிழ் என்றும் ஏனையவை எல்லாம் வட்டார வழக்கென்றும் சொல்லும் அளவுக்கு  மாறிவிட்டது .

 

ஒரு கட்டத்தில் அந்ததந்த வட்டார பெருமிதம் பேச திரைப்படங்களும் நாவல் சிறுகதைகளும் முயன்ற போது அது சாதிய வழக்காறுகளாகவும் திரிந்தன.  மிகைப் படுத்தப்பட்டன  . தஞ்சைத் தமிழும் அப்படியே !

 

உலகமயமமாக்கலும் ,தாராளமயமாக்கலும்,தனியார்மயமாக்கலும் நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஆங்கிலம் கலந்த தமிழை பொதுப் பாணியாய் வியாபார நிமித்தம் திணித்து ; அதை நம் இயல்பாக்கி விட்டது . மறுபுறம் வட்டார பெருமிதத்தை சாதிய பெருமிதத்தைக் காட்ட    டி வியும்  , சினிமாவும் , தகல் தொடர்பு ஊடகங்களும் படைப்புகளும் மிகைப்படுத்தி செயற்கைத் தனமாய் வட்டார வழக்கைப் பேசுகின்றன.

 

 

ஆக ,வட்டார வழக்கில் சாதியமும் உண்டு . வட்டார வழக்கில் நல்ல தமிழ்ச் சொற்களும் உண்டு .சொலவடை பழமொழிகளில் பெண்ணடிமைத்தனம் ,சாதியம் , மூடத்தனம் சார்ந்தவையும் உண்டு அனுபவத் தழும்பேறி யவைகளும் உண்டு . எல்லாவற்றையும் பெருமிதத்தோடு கொண்டாடுவதும் பிழை .கண்ணை மூடிக்கொண்டு நிராகரிப்பதும் பிழை .காலத்திற்கு ஏற்றவை எவை எவை என கண்டு தெளிவதும் தொடர்வதும் நல்லது .ஆகாதனவற்றை ஆழக்குழி தோண்டி புதைப்பதும் தேவை .

 

கலப்படமில்லாத சுத்த சுயம்புவான மொழியோ ,பண்பாடோ ,பழக்க வழக்கங்களோ எங்கும் எப்போதும் இல்லை .கொள்வதும் கொடுப்பதும் நடந்து கொண்டேதான் இருக்கும் . சமூகத்தின் வளர்ச்சியோடும் வீழ்ச்சியோடும் மொழியும் ஏறி இறங்கும் .சமூகம் கைவிடும் மொழி காணாமல் போய்விடும் . எத்தனை ஆயிரம் கோடி கொட்டி அழுதாலும் பிழைக்காது .எடுத்துகாட்டு சமஸ்கிருதம் .

 

பேச்சு வழக்கிலும் அறிவியல் முன்னேற்றம் தொழில் வர்த்தக தொடர்பு சார்ந்தும் மொழி கலப்புக்குள்ளாகும் . மொழி கலப்பு நூறு சதம் பிழையுமல்ல ; நூறுசதம் சரியுமல்ல . எந்தச் சொல்லைக் கொள்வது எதை மறுப்பது என்பதில்தான் மொழியின் உயிர்ப்பு தொடரும்.

 

பெயர் சொற்களை மொழிபெயர்ப்பது வீண் . வினைச் சொற்களைப் புறக்கணித்து வாக் பண்ணி ,ஸ்மைல் பண்ணி ,குக் பண்ணி ,மியூசிக் பண்ணி , டைரக்ட் பண்ணி ,ரீட் பண்ணி  இப்படி பண்ணித் தமிழாக்குவது மொழியைக் கழுத்தை நெரித்துக் கொல்வதாகும் .தொலை காட்சியும் ஊடகங்களும் இந்தக் கொலையில் முக்கிய பங்காற்றுகிறது .

 

டிவி ,தொலைகாட்சி ,சினிமா ,தகவல் தொடர்பு சாதனங்கள் லாபத்தை மையமாகக் கொண்டே இயங்குவதால் அதில் நம் மொழியும் பண்பாடும் செழுமையுறும் என எதிர்பார்ப்பது பலன் தராது .

 

பேச்சு வழக்கில் இனிமை சேர்ப்போம் குமரி,நெல்லை ,கோவை,தஞ்சை ,விழுப்புரம் ,கடலூர் ,சென்னை ,மலைகள் ,கடலோரம் எங்கும் புழங்கும் இனிய பேசுமொழியை  ஒன்றாய் கலந்து வளமாக்குவோம் ,வலிமைகூட்டுவோம் !

 

பெளதீகம் ,இரசாயணம் , ஜியோமதி என்றால் இந்த காலத்துப் பிள்ளைகளுக்குத் தெரியாது .அழகிய தமிழில் இயற்பியல் ,வேதியல் ,வரைகணிதம் என புழக்கத்திற்கு வந்துவிட்டது . அருமையாய்  வணக்கம்சொல்வதை விடுத்துநமஸ்காரம்என காராமாவது சங்கித்தனமே ! அவர்களே ! வாங்க போங்க என மரியாதை கலந்த நம் மொழி இருக்க ஜீ !ப்ரோ ! என்றெல்லாம் ஒட்டு சேர்ப்பது அருவருப்பாய் இருக்கிறது .

 

இலக்கண சுத்தமான மொழியை யாரும் பேசுவதில்லை . பழகு தமிழ் , இனிய தமிழ் , சொல்வளம் மிக்க தமிழ் , வலிமையான தமிழ் , வானமளந்த அனைத்தும் அறிந்த தமிழ்  நம்மிடம் இருக்க அதில் தேவையற்றவற்றைக் கலக்கலாமா ? யோசிப்பீர் !

 

வாழ்க எம் தமிழ் ! வல்லமை மிக்க வாழ்வியல் மொழி !

சுபொஅ.

 

 

 

 

 


0 comments :

Post a Comment