தூக்கத்தின் கேள்வி....

Posted by அகத்தீ Labels:

 


தூக்கத்தின் கேள்வி....

 

 


'தூக்கம்' நாலே எழுத்துதான்

அது படுத்தும் பாடு

தூக்கம் வராமல் புரண்டு

படுப்பவரைக் கேளுங்குகள்

கதை கதையாய்ச் சொல்வார்கள்.

 

குழந்தை தூங்கும் நேரமே

சற்று ஓய்வு கிட்டும் தாய்க்கு

குழந்தை தூக்கத்தில் வீறிட்டால்

நெஞ்சக் குலை நடுங்கும் தாய்க்கு

 

தூக்கம் தொலைத்த இரவுகளை

பெண்களிடம் கேளுங்கள்

ஆயிரம் சோகப் பாட்டுகள்

பீறிட்டு வெளிப்படும்

 

பிய்த்துப் பிடுங்கும் வேலைகள்

தூக்கத்தை பிய்த்துப் போட்டுண்டு !

நெஞ்சை அரிக்கும் கவலைகள்

தூக்கத்தை எரித்து சாம்பலாக்கியது உண்டு

 

குறட்டை , பொறுப்பின்மை,

கொல்பசி ,நோய்நொடி , கடன் ,கவலை

தூக்கத்தைத் தின்றவைகளின்

பட்டியல் நீளும்

 

ஆயிரம் பிக்கல் பிடுங்கல் இருப்பினும்

அடித்துப் போட்டது போல் தூக்கம்

கடும் உழைப்பு தந்த பரிசு

 

ஆயிரம் வசதிகள் கொட்டிக் கிடப்பினும்

அரை நொடியும் மூட மறுக்கும் இமைகள்

அடங்காப் பேராசையின் அங்கம்.

 

இடம் மாறி படுத்தாலும்

நேரம் தவறி படுத்தாலும்

குடும்பத்தை பிரிந்தாலும்

படுத்தி விடும் தூக்கம் !

 

இரவுத் தூக்கம்

பகல் தூக்கம்

பணியில் தூக்கம்

பயணத்தில் தூக்கம்

 

'அவனுக்கு என்ன

படுத்ததும் தூங்கி விடுவான்'

ஆணோ பெணோ யாரோ

கேட்கும் வரம் இதுதான்

 

மீளாத் தூக்கம் வரும்வரை

தூக்கத்தோடு ஒவ்வொரு நாளும்

போராடும் முதுமை

வரமல்ல வாழ்க்கை !

 

யாசித்து இருப்போரிடம் வராமல்

மல்லுக்கட்டும் தூக்கம்

விழித்திருக்க வேண்டியோரிடம்

அழைக்காமல் ஒட்டிக் கொள்கிறது

 

தூங்குவதற்கென்று இரவு வருகிறது

தூங்கவிடாமல் பணிகள் துரத்துகிறது

உன் விழிப்பையும் தூக்கத்தையும்

நீயே தனித்து முடிவு செய்ய முடியுமா ?

 

பெற்றோர்கள் மண்றைக்கு நடுவே

பசி மயக்கத்தில் தூங்கும்

பாலஸ்தீனக் குழந்தையை

காஸா வெளியில் கண்ட பின்னும்

தூங்குமோ உலகின் மனசாட்சி !

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

24/07/25.


0 comments :

Post a Comment