சொல்.97

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .97 [ 20 /12/2018 ] எங்க அம்மாவுக்கு பேரன் மீது அதீத பாசம் .பேத்தியோடு சதா உரசல் இருக்கும் .எல்லா வீடுகளிலும் இதுபோல் காணலாம் .எல்லா பிள்ளையும் சமம் எனப் பேசினும் ஒரு பிள்ளைக்கும் இன்னொரு பிள்ளைக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கவே செய்யும் . பெண் அப்பா செல்லம் ;பையன் அம்மா செல்லம் . இப்படி இருப்பது சர்வசாதாரணம் . இதன் பொருள் இன்னொரு பிள்ளையை ஒதுக்குகிறார் என்றோ வெறுக்கிறார் என்றோ பொருளல்ல .ஆயினும் ஒருவித பாரபட்சம் ஏதோ ஒரு வகையில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் .இதனை தவிர்க்க வேண்டும் என பேசலாம் .எழுதலாம் ஆனால் வாழ்க்கை நெடுக இந்த பாரபட்சம் தொடரவே செய்யும் .ஏன் ? பொதுவாய் ஒரு குழந்தைக்கு சமூகவியலோ கணிதமோ ஆங்கிலமோ ஏதேனும் ஒன்றில் ஈர்ப்பு இல்லாமல் இருக்கலாம் .இன்னொன்றில் அதீத ஈடுபாடு இருக்கலாம் .இதனை அங்கீகரிக்கிற மாதிரி கல்வி முறை இல்லாதது பெருங்குறை .இதனால் குழந்தையின் பலமான பக்கம் வெளிப்படவோ பாராட்டுப் பெறவோ வழியின்றி பலவீனமான பக்கம் துருத்துவதும் , அது சார்ந்தே பிரச்சனைகள் முளைப்பதும் கண்கூடு . வீட்டிலும் அதுவே எல்லா குழந்தையும் ஒரே போல் இருக்காது .ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கும் .நாம் விரும்பியபடி இருப்பதையே நாம் ரசிப்பதும் ; நம் விருப்பத்துக்கு மாறாய் இருப்பதை குறை சொல்வதும் இயல்பாகிவிடுகிறது .நம் தேவைகளைப் பட்டியலிட்டு செய்கிற ரோபட்டு அல்ல குழந்தைகள் .எல்லோரும் இதனை ஒப்புக் கொள்வர் ஆயினும் நடைமுறையில் திணறல் இருக்கவே செய்யும் . குழந்தை வளர்ப்பு ,மேம்பாடு குறித்து எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் ,எழுதலாம் ,ஆனால் நம்மைவிட வேகமாய் குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள் . நேற்றைய குழந்தையும் ,இன்றையக் குழந்தையும் ,நாளையக் குழந்தையும் ஒன்றல்ல . ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையின் நல்லதையும் கெட்டதையும் உள்வாங்கி அடுத்த பாய்ச்சலுக்காக வருகிறார்கள் .என்பதை அறிந்தால் பிரச்சனை அல்ல .   “Your children are not your children./They are the sons and daughters of Life’s longing for itself./They come through you but not from you,/And though they are with you yet they belong not to you.” என்பார் கவிஞர் கலீல் ஜிப்ரான் . “உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்லர்/அவர்களே வாழ்வும், வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்./அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயன்றி/உங்களிடமிருந்து அல்ல/உங்களுடன் இருந்தாலும் அவர்கள்/உங்களுக்கு உரியவர்களல்லர்.” எனத் தொடங்கும் கலீல் ஜிப்ரானின் நெடிய கவிதையில் ஓரிடத்தில் சொல்லுவார் ” நீங்கள் அவர்களாக முயலலாம் ;/அவர்களை உங்களைப்போல/உருவாக்க முயலாதீர்கள்.” அவ்வளவுதான் . Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment