சொல்.96

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .96 [ 15 /12/2018 ] என்னிடம் குவிந்து கிடக்கும் புத்தகங்களை என்ன செய்வது ? ஏற்கெனவே மூன்று முறை என்னுடைய சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை நூலகம் அமைக்கக் கொடுத்தேன் . பெற்றுச் சென்றவர்கள் அதனை எந்தக் குப்பையில் வீசினார்கள் எனத் தேடிக்கொண்டிருக்கிறேன் . மீண்டும் என்னிடம் புத்தகங்கள் குவிந்து விட்டன . என் மகள் , “ அப்பா ! நீங்கள் எழுதின புத்தகங்கள் ஒரு செட் கொடுங்கள்!” எனப் பெற்றுச் சென்றார் ,மகனுடன் இருப்பதால் நான் வைத்திருப்பேன் என்கிற நம்பிக்கையில் அவன் இருக்கலாம் .என்னிடம் சில புத்தகப் பிரதிகள் இல்லை என்பதும் உண்மை .எனக்குப் பிறகு என் பிள்ளைகளுக்கு என் புத்தக சேகரம் உதவுமா ? பாதுகாப்பார்களா ? படிப்பார்களா ? பயன்படுத்துவோர் யாருக்கேனும் கொடுத்துவிட்டால் என்ன ? நானும் எழுத்தாளர் கமலாலயனும் கூட இப்படி அடிக்கடி பேசிக்கொள்வோம் .முடிவெடுக்கவில்லை .குழப்பத்தில் நாட்கள் நகர்கின்றன . அடுத்த தலைமுறை நிச்சயம் புத்தகங்களைத் தேடுவார்கள் .ஐயமே இல்லை .அறிவைத் தேடும் யாரும் புத்தகங்களைத் தேடாமல் இருக்க முடியாது .ஆனால் வடிவம் மாறிப்போகும் “டிஜிட்டல் வடிவில் நமது புத்தக அலமாரியை” உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் . இதனை ஒவ்வொருவரும் தனியாகச் செய்ய முடியாது .அதற்கு ஒரு இயக்கம் தேவை .நமது இடதுசாரி முகாமிலிருந்து வந்த படைப்புகளை தேடித்தேடி டிஜிட்டலாக்கும் வேலையை எப்போது தொடங்கப் போகிறோம் .இலங்கையில் இம்முயற்சி தமிழர்களிடையே உண்டு .இங்கு விருப்பு வெறுப்பின்றி அனைத்து முற்போக்காளர் மற்றும் இடதுசாரிகள் நூல்களனைத்தும் டிஜிட்டல் ஆக்கப்பட வேண்டாமா ? வீட்டு நூலகம் என்பது சும்மா வாங்கிக் குவித்துக் கொண்டே போவது மட்டுமல்ல ; அவ்வப்போது கழித்தல் வேலையும் நடத்தியாக வேண்டும் .வீட்டு நூலகம் இடத்தை அடைத்து தூசும் தும்புமாய் இருப்பதைவிட இல்லாமலிருப்பதே மேல் . ஆகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனு உங்கள் நூலகத்தை சீர் செய்யுங்கள் .உங்களுக்கு இனி தேவைப் படாததை அடுத்தவருக்கு தந்து விடுங்கள் .ரெபரென்ஸ் புக்ஸ் எனப்படும் வழிகாட்டும் நூல்களைத் தவிர பிறவற்றை அவ்வப்போது கழித்துவிடலாம் . ஆம் , புதுப்பித்துக் கொண்டே இருக்கத்தானே புத்தகங்கள் ? Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment