சொல்.90

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .90 [ 5 /12/2018 ] எனது ஆச்சி /பாட்டி மண்ணெண்ணை ஸ்டவ்வில் சமைத்தால் சாப்பிட மாட்டார் .உடலுக்கு கேடு என்பது அவர் வாதம் .விறகடுப்பே கதி என்று கிடப்பார் .எங்க அம்மா கேஸ் அடுப்புக்கு மிகவும் பயந்தார் . வெடித்துவிடும் என மிரண்டார் . பழக்கப்படுத்த பெரும்பாடு பட்டோம் . என் தாத்தா போட்டோ எடுக்கவே விடமாட்டார் .எங்கள் சிறு வயது படமெல்லாம் அபூர்வம் . ஆயுள் குறைந்துவிடும் என்பது வாதம் . எனது உறவினர் ஒருவர் காச நோயால் அவதியுற்ற போதும் எக்ஸ்ரே எடுக்கச் சொன்னோம் . அவர் ஒப்புக் கொள்ளவில்லை .பிடிவாதம் பிடித்தார் . சிரமப்பட்டே எக்ஸ்ரே எடுத்தோம் .எக்ஸ்ரே எடுத்தால் உயிருக்கு ஆபத்து என்பது அவர் பயம் . வீட்டுக்கு மின்சாரம் முதன் முதலில் வந்த போது ஒரு மரக்கட்டை ஸ்கேல் மூலமே சுவிட்சைப் போட வேண்டும் என கறாரான உத்திரவு . மின்சார விளக்கு வெளிச்சம் கண்ணைப் பாதிக்கும் என்பது என் தாத்தாவின் அச்சம் . பேன் காற்றில் படுத்தால் உடம்பு வலிக்கும் என்பது பாட்டியின் முடிவு . இன்று நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றையும் யோசித்துப் பாருங்கள் . அறிவியல் தொழில் நுட்ப உதவி இன்றி இப்போது ஒரு நாளையேனும் ஓட்ட இயலுமா ? ஆன்மீகம் பேசும் எவரும் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை வைத்து பழைய கற்காலத்தில் வாழுவதில்லை ; அறிவியலின் சாதனைகளை ஒவ்வொரு நொடியும் நுகர்ந்த படியேதான் ஆன்மீகம் பேசித்திரிகிறார்கள் ! ஆனாலும் இப்போதும் சிலர் நம் முன்னோர்கள் முட்டாள்களில்லை என ஆரம்பித்து நம்மை கடந்த காலத்துக்குள் விரட்டி அடிக்க முனைகிறார்கள் .முன்னோர் என்பதன் வரையறை என்ன ? தாத்தா காலமா ? அவர் தாத்தா காலமா ? இப்படியே எவ்வளவு தூரம் பின்னோக்கி போக வேண்டும் ? ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையைவிட ஓரடியேனும் முன்னேறி உள்ளனர் .நாம் நம் மூதாதையர் தோளில் இருந்தே உலகைப் பார்க்கிறோம் .அவர்களுக்குத் தெரியாதது நமக்குத் தெரியும் . நம்மைவிட நம் பேரப்பிள்ளைகள் மேலும் அறிவர் .முன்னேறுவர் .நம்மை பின்னுக்கு இழுக்க முனைவோரால் நம் முன்னேற்றம் சற்று தாமதமாகலாம் .ஒரு போதும் தடுக்கவே முடியாது .முன் செல்வோம். Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment