சொல்.100 நிறைவு

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .100 [ 23 /12/2018 ] நிறைவு . ஒவ்வொருவரும் ஒரு தனியாள் . அதேவேளை குடும்ப உறுப்பினர் ,ஒரு பணியாளர் ,சமூக உறுப்பினர் எல்லாவற்றுக்கும் பொருந்திப் போகிற போராட்டமே வாழ்க்கை ஆகிறது . ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றுக்கு தீர்ப்பு சொல்லும் நீதிமானாகவும் ; இன்னொரு இடத்தில் பதில் சொல்ல வேண்டியவராக குற்றம் சாட்டப்பட்டவராகவும் நிற்கிறோம் . நூறு சதம் யோக்கியன் என்று யாரும் நேற்றும் இல்லை .இன்றும் இல்லை .நாளையும் இருக்கப் போவதில்லை .ஒவ்வொருவரும் குறை நிறைகளோடுதான் பிறந்தோம் .வளர்ந்தோம்.வாழ்கிறோம் . ஆகவேதான் வள்ளுவரும் சொல்வார் “ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே / செல்லும்வாய் எல்லாம் செயல்” அதாவது இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் இடைவிடாது அறச்செயலைச் செய்க என்றார் . ‘இயன்றமட்டும்’ என்பதால் பிரச்சனை இல்லை .முயற்சிக்கலாம் ஆனால் எது ‘அறச்செயல்’. ‘அறவழி’ என்பதே பெரும் கேள்வி . வேதம் படித்தான் என்பதற்காக சம்புகன் தலையை ராமன் சீவிய மநுஅறமா ? கட்டிய மனைவியை நெருப்பில் இறக்கிய ராம அறமா ? மனைவியை வைத்து சூதாடிய தரும அறமா ? தன் கணவருக்கு தீங்கிழைக்கப்பட்டது என்பதால் ஒன்றுமறியா அப்பாவிகளையும் எரித்த கண்ணகி அறமா ? அப்போதும் பசு ,பார்ப்பான் என பிரித்து ஏனையோரை எரித்த சிலம்பறமா ? வஞ்சகத்தால் கர்ணனை வீழ்த்திய கிருஷ்ண அறமா ? காலந்தோறும் அறம் என்பது மாறிக்கொண்டே வந்திருக்கிறது .எல்லா மதத்திலும் எல்லா இடத்திலும் இத்தகைய அறமே முன்மாதிரியாய்ச் சொல்லப்படுகிறது . இவை எதுவும் அறமல்ல எனத் தெளிவதே அறத்தின் பாலபாடம் . ஒடுக்குமுறைக்கு எதிராய் ஓங்கி ஒலிக்கும் குரலே அறம் . உழைப்பைப் போற்றும் உழைப்போரை உயர்த்தும் எதுவும் அறமே ! சாதி ,மத வேலி உடைத்து மனிதம் போற்றல் அறமே ! பாலின சமத்துவம் பேணிட முயலுதல் அறமே ! வெள்ள அன்பால் மானுடம் தழுவல் அறம் !அன்பெனப்படுவது யாதெனில் நிபந்தனை அற்றது ,வேலிகளற்றது , பிரதிபலன் எதிர்பாராதது எனத் தெளிதல் அறம் . தனிமனிதனாய் – குடும்ப மனிதனாய் – பணியிட மனிதனாய் –சமூக மனிதனாய் எங்கும் அறம் ,அன்பென வாழத் தலைப்படலே வாழ்வின் பொருள் .இது சொல்வது எளிது . நடைமுறை சவாலானது . ஒல்லும் வகை எல்லாம் மாற்றங்களூடே இந்த சவாலை எதிர் கொண்டு வாழப்பழகு ! மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வை ! வேறென்ன இனியும் சொல்ல .சரிதானே !!! நிறைந்தது எம் சொல் . [ நாளை பின்னுரையாய் ஓர் வேண்டுகோள் முன்வைப்பேன் .] Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment