சொல்.91

Posted by அகத்தீ Labels:

தினம் ஒரு சொல் .91 [ 10 /12/2018 ] திருமண வாழ்வு தனிமனிதரின் சுயத்தைக் கொண்றுவிடுகிறது என்கிற கருத்து தற்போது வலுவான விவாதமாக எழுந்து , குடும்ப அமைப்புக்கு எதிரான வெடி குண்டாகிக் கொண்டிருக்கிறது . ஒவ்வொருவருக்கும் சுயவிருப்பம் ,சுய உரிமை ,சுயமரியாதை ,சுயதேடல் போன்ற அனைத்துக்கும் வாழ்வில் உரிய அங்கீகாரமும் இடமும் தேவை .இவை கவனிப்பாரற்ற அனாதையாக குடும்ப வாழ்வில் ஆக்கப்படுவதே ஆகப் பெரிய சோகம் .அதிலும் குறிப்பாக பெண்கள் தன் சுயம் பற்றி யோசிப்பதே தான்தோன்றித்தனம் என்கிற அளவுக்கு சமூக உளவியல் மாசுபட்டுக் கிடக்கிறது . ராஷ்டிரிய சுயம் சேவக் எனப்படும் ஆர் எஸ் எஸ் என்கிற பாசிச அமைப்பு தன் அமைப்பில் பெண் உறுப்பினரை அனுமதிப்பதில்லை .ஏனெனில் பெண்களுக்கு சுயம் கிடையாது என்பது அதன் பிற்போக்கான மதவாத தத்துவம் . ராஷ்டிரிய ஸ்திரி சமிதி [ ஆர் எஸ் எஸ்] எனும் துணை அமைப்பில் சேர்த்துவிட்டு ஏய்ப்பர் . மதம் ,சாதி ,இன வாத அமைப்புகளெல்லாமும் பெண்ணின் சுயத்தை அங்கீகரிக்காமல் மூடி மறைத்துப் பேசுவையே ! வேடிக்கை என்னவெனில் இதுபோன்ற பிற்போக்கு தீய சக்திகளுக்கு உரம் தருவதாகவே சமூக உளவியலில் ஊறிப்போயுள்ள ஆணாதிக்க மனோபாவமும் ,பெண்களின் சுயத்தை மறுதலிப்பதும் அமைந்து விடுகின்றன .ஆகவே ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் “எனக்கென்று என்ன இருக்கிறது ?” என்கிற கேள்வி பெண்களிடம் வலுவாகிக் கொண்டிருக்கிறது . ஒவ்வொருவரும் தான் விருப்பப்படி வாழ்ந்தால் குடும்பம் என்ன ஆகும் ? நொறுங்கிப் போகாதா ? இப்படி கேள்வி எழுப்பி பிரச்சனையின் ஆழத்தைக் காண மறுப்பதே பெரும் தீங்காகும் . ஒத்த நலன் ,ஒத்த குணம் ,ஒத்த வாழ்வு என எல்லாவற்றிலும் ஒரே போல் உள்ளவர் மட்டிலும் கூடி வாழ்வது என்பது வெறும் கனவு.ஒரு போதும் கை கூடாது . ஒரு தம்பதியர் தம் திருமண நாளையொட்டி முகநூலில் பதிந்த வாசகம் இது , “ A great marriage is not when the ‘perfect couple’ comes together. It is when an imperfect couple learns to enjoy their differences. ” ஆம் .மெய்தானே ! ஒத்த தம்பதியர் மட்டுமே சேர்ந்து வாழல் சாத்தியமோ ? பொருத்தக் குறைகளோடு – குறை நிறைகளோடு இணைந்து வாழ்ந்து இன்ப வாழ்வு நடத்தக்கூடாதோ ? சுயத்தை இழக்காமலும் குடும்ப வாழ்வின் சுகத்தை இழக்காமலும் வாழ்கிற ஜனநாயக உளவியலை வளர்ப்போமே ! Su Po Agathiyalingam

0 comments :

Post a Comment