கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் உரையாடல் …
சாத்தானின் வெடிச் சிரிப்பில் கடுப்பான கடவுள் கோபத்தோடு
கத்தினார் ; “ அங்கென்ன சிரிப்பு வேண்டிக்
கிடக்கு ; இங்க ஒருத்தன் அவதிப்படுறது வேடிக்கையா போச்சா உங்களுக்கு…”
“ இல்லை ஆண்டவரே ! எங்களுக்காக சொல்லப்பட்ட அனைத்தையும்
உங்கள் செல்லப் பிள்ளைகள் செய்து கொண்டிருக்கிறார்கள் ; அதை யோசித்ததும் சிரிப்பு வந்துவிட்டது..”
என சாத்தான் புன்முறுவலோடு சொன்னார்.
“ எதையும் நான் செய்வதுமில்லை ; செய்விப்பதும் இல்லை .
நல்லதோ கெட்டத்தோ எதற்கும் நான் பொறுப்பல்ல ஆனாலும் என் தலையைத்தான் பக்தர்கள் உருட்டுகிறார்கள்
. என்ன செய்து தொலைக்க.” கடவுள் தன் கவலையைப் பிழிந்தார் .
“ சரி ! அப்பன் செய்த பாவம் பிள்ளைக்கு விடியும் என்றால்
; பிள்ளை செய்யும் பாவத்துக்கு அப்பன்தானே பொறுப்பேற்க வேண்டும் . மோடி ,அமித்ஷா ,
யோகி ,டிரம்ப் , நெதன்யாஹு , கார்ப்பரேட் சாமியார்கள் இப்படி எங்கும் ’தெய்வப் பிறவி’
என தம்மைச் சொல்லித் தெரியும் பிள்ளைகள் செய்வதற்கெல்லாம் நீங்கள்தானே பொறுப்பு ? இப்போது
எம் கண்களுக்கு பாவமூட்டையாக அல்லவா நீங்கள் தெரிகிறீர்கள் ?” சொல்லிவிட்டு சாத்தான்
மீண்டும் சிரித்தார் .
“ சரியாகத்தான் சொல்கிறாய் ! நீயும் கற்பிதம் .நானும் கற்பிதம்
. உன் மீது சுமத்தப்பட்ட அனைத்தையும் என் பெயரலாயே செய்து கொண்டிருக்கிறார்கள் ; என்
பெயரால்தான் அனைத்து அட்டூழியங்களையும் அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் . உன் பிள்ளைகளோ
உழைத்து நேர்மையாக வாழ முயற்சிக்கிறார்கள் ஆனால் அவர்கள் தான் பாரம் சுமக்கிறார்கள்
…” கடவுள் கண்கலங்கி நின்றார் .
“ ஆம் ! ஆண்டவரே ! நீயும் நானும் மட்டுமல்ல ; பாவம் ,புண்ணியம்
,சொர்க்கம் ,நரகம் ,தீட்டு ,புனிதம் எல்லாம் அவனவன் அடுத்தவனை மிதிக்க ஏமாற்ற உருவாக்கிய
கற்பிதங்களே !” சாத்தான் சொல்ல கடவுள் வேகமாக “ ஆம் .ஆம்.” என தலையாட்டினார்.
“ வரம் ,சாபம் எதையும் நாம் வழங்குவதில்லை .நம் பெயரால்
அவர்களே ஒருவருக்கொருவர் தீங்கு செய்து கொள்கிறார்கள் ! மனிதர்கள் செய்கிற அனைத்துக்கும்
நாம் வெறும் முகமூடி ; முகம் அல்ல .” இருவரும் கோரஸாக சொல்லிக் கொண்டிருக்கும் போது
“ ஸ்ரீ ஜெய் ராம்” கோஷம் கேட்க தங்களைக் காப்பாற்ற
கடவுளும் சாத்தானும் தலமறைவானார்கள் .
தங்களை காப்பாற்றிக்
கொள்ளக்கூட முடியாத கடவுள்களையும் சாத்தான்களையும் ; தன்னைக் காப்பாற்றும் தண்டிக்கும்
என நம்பி துக்கிச் சுமக்கும் மனிதனை என்ன சொல்லி அழைப்பது ?
சுபொஅ.
06/11/25
0 comments :
Post a Comment