சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக்

Posted by அகத்தீ Labels:

 



      


                                                                                                                                    

சாதியத்துக்கு எதிரான மனிதத்தைக்         

கற்பிக்க அல்ல கற்க ஒரு கையேடு.                    

 

நான் கல்வியாளனும் அல்ல , ஆசிரியனும் அல்ல ;  ஆயினும் ‘சமூக ஜனநாயக் கையேடு ‘ எனும் நூல் கிளர்த்திய ஆர்வத்தில் நாலு நல்ல வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன் . காரணம் இந்நூல்  செய்திருக்கிற பிரகடனமும் ; அதற்கொப்பச் செயல்வடிவம் கொடுத்திருப்பதும்தான் .       

 

ஆம் .” சாதிய வன்கொடுமைகளின் தோற்றுவாய் எது ? சாதிய  வன்கொடுமைகள் நிகழாமல் எவ்வாறு தடுப்பது ? சாதிய வன்கொடுமை     நிகழ்ந்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன ? என்பன குறித்து ஒரு புரிதலைப் பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் ,ஆசிரியர்களுக்கும் , ஊழியர்களுக்கும் ஏற்படுத்துவதே இக்கையேட்டின் நோக்கம் .” என்கிற பிரகடனப் படுத்திய தம் நோக்கத்தை நிறைவேற்ற கடும் உழைப்பை நல்கி இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது . வாழ்த்துகள் .

 

21 அத்தியாயங்கள் . ஒவ்வொன்றும் எந்தெந்த வயதினருக்கு என்கிற நுட்பத்துடன் ; ஆசிரியர்களின் பாடத்திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது . காலிஃப்ளவர் ,முட்டைக் கோஸ் ,நூக்கல்  என காய்களின் பரிணாம அறிவியலோடு சாதியை நன்கு உருவகப்படுத்தி “ நாம் ஒருத் தாயின் பிள்ளைகள்’ என அறிவுறுத்தும் அழகிய கதை வடிவம் முதல் அத்தியாயத்திலேயே முத்திரை பதித்துவிட்டது .      

 

பொதுவாய் இந்நூல் உரையாடல் வழி கற்பிக்கவே அல்ல கற்கவே [ முன்னுரையில் விளக்கம் உள்ளது ] மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது . இரத்தம் , அணுக்கள் ,மரபணு ,நடசத்திரத் துகள்கள் என பல்வேறு அறிவியல் செய்திகளோடு சாதி மறுப்பையும் நன்கு பிசைந்து வலியுறுத்தி உள்ளது மிக முக்கியமானது. கூர்மையானது .  

          

அதுபோல் அரசியல் சட்டம் சார்ந்து பல செய்திகளை மாணவர்களின்   நெஞ்சில் பதிய வைக்க முயலுவது நன்று . “சகோதரத்துவம் இல்லை எனில் சுதந்திரமும் சமத்துவமும் அர்த்தமற்ற சொற்கள்.” எனும் பாபா சாகேப்             அம்பேத்கரின் கருத்துக்கு இந்நூல் வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறது .   வென்றிருக்கிறதா என்பதை கல்வியாளர்கள்தாம் சொல்ல வேண்டும் .    

   

அண்மையில் ’biason காளமாடன்’ என்றொரு திரைப்படம் பார்த்தேன் .அதில் ஒரு இடத்தில் பள்ளியில் மாணவர்களிடையே கபடிப் போட்டி நடக்கையில்  ஆசிரியர் ஒவ்வொரு மாணவன் கையிலும் கட்டி இருந்த சாதிக் கயிற்றை கத்திரியால் வெட்டி எறிகிற காட்சி  அமைக்கப்பட்டிருந்தது .நாம் செல்ல வேண்டிய தூரத்தை அது எனக்குச் சொன்னது ? இந்நூலில்’வீதியில் விளையாட சாதி எதற்கு ?’ , ’நாம் பார்வையாளர்களாக அல்ல பகுத்தறிவாளர்களாக’  [ இருப்பதிலேயே பெரிய அத்தியாயம் இதுதான் ] என்கிற அத்தியாயங்களைப் படிக்கிற போது அப்படக்காட்சி என்னுள் வந்து போனது .  

 

என் நெஞ்சைக் கவர்ந்த எங்க ஊர்க் கவிஞர் கவிமணி தேசிய விநாயகத்தின் எளிய ஆயினும் ஆழமான கவிதை வரிகள் தொடங்கி கவிஞர் தமிழ் ஒளி வரை பல கவிஞர்களின் வீரியமிக்க வரிகள் ஆங்காங்கே அர்த்தச் செறிவுடன் பொருந்தி மிளிர்கின்றன . நன்று .

 

ஆழ்ந்த படிப்பறிவுமிக்க பலரின் பொறுப்பான பங்களிப்பாய் இந்நூல் மலர்ந்துளது . ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள் . பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபுவின் சீரிய முயற்சியை எவ்வளவு பாராட்டினும் தகும் .

 

 

அதேநேரத்தில் , சாதிய மறுப்பு போலவே பள்ளியிலேயே வேரூன்ற வேண்டிய இன்னொரு சிந்தனை ‘ பாலின சமத்துவம்’ . இந்நூல் அதிலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டுமல்லவா ?                    

 

நடைமுறையில் இந்நூலில் பயன்பாடு , எதிர்கொள்ளும் சவால்கள் , விமர்சனங்கள்  இவை பற்றி எல்லாம் பேசுவது , இத்துறையில் பணியாற்றும் சமூக ஆர்வம் மிக்க செயல்பாட்டாளர்களின் கடமையும் பொறுப்புமாகும் . நான் இப்போது தூரத்துப் பார்வையாளனே !

 

சமூக ஜனநாயக் கையேடு Manual  for Social Democracy  , பொதுப் பள்ளிக்கான மாநில மேடை , தொடர்புக்கு : spcsstn2025@gmail.com ,9445683660 ,பக்கங்கள் : 136 , விலை : ரூ.300 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம் .

17/11/25 .

 


0 comments :

Post a Comment