துரோகத்தின் வழிதான்

Posted by அகத்தீ Labels:

 

வரலாறு நெடுக

துரோகத்தின் வழிதான்

வெற்றிக்கனி கைமாறுகிறது

அவர்களின் பெயர்

எட்டப்பன் ,விபீடனன் ,

எடப்பாடி ,சந்திரபாபு நாயுடு,

நிதீஷ்குமார் இப்படி

 எது வேண்டுமானாலும் இருக்கலாம்.

குடிஉரிமைச் சட்டம் , வஃபு சட்ட திருத்தம்

எது வேண்டுமானாலும் இருக்கலாம்..

எதிரிகளை எதிர்கொள்வதற்கு

முதல் நிபந்தனையே

துரோகத்தைக் கிள்ளி எறிவதுதான்.

 

சுபொஅ.

03/04/25.

வல்லரசு

Posted by அகத்தீ Labels:



வல்லரசு 

ராமர் கோயில்
சீத்தா கோயில்
அனுமார் கோயில்
கும்பமேளா
இந்தியா வல்லரசாகிறது !
AI , சூப்பர் கம்ப்யூட்டர்
என பிலீம் காட்டுகிறது சீனா !
வேதத்தில் இல்லாதது
எதுவும் எமக்குத் தேவை இல்லை !
இன்னும் கட்ட வேண்டிய கோயில்கள்
பட்டியலை எடு !
பாரத் மாத்தாகி ஜே !
ஜெய்ஸ்ரீ ராம் !
சுபொஅ.
12/03/25 .

தோல்வி மகிழ்ச்சி

Posted by அகத்தீ Labels:

 

தோல்வி மகிழ்ச்சி

நேற்றும் தோற்றேன்
இன்றும் தோற்கிறேன்
நாளையும் தோற்பேன்
பேத்தியிடம்
தோற்கும் விளையாட்டு
சலிப்பதே இல்லை.
சுபொஅ.

நம் வாழ்க்கையைப் போல ...

Posted by அகத்தீ Labels:

 


நம் வாழ்க்கையைப் போல ...

இலைகளை மொத்தமாய்
உதிர்த்து நிற்கிறது
மரம்
பசுமை
துளியும் இல்லை
ஆயினும்
இன்னும் சில
இலைகளும் பூவும்
காய்ந்து சருகாய்
ஒட்டி இருக்கிறதே மரத்தில்
வசந்தத்தின் நம்பிக்கையில்
நம் வாழ்க்கையைப் போல ...
சுபொஅ.
18/03/25

எளிதல்ல...

Posted by அகத்தீ Labels:

 


எளிதல்ல...

நினைத்தவுடன்
சட்டையை
மாட்டியும் மாட்டாமலும்
வாசற்படியைத் தாண்டும் நான்
குளிருக்கேற்ற
உடை அணிகலன்களுடன்
புறப்படுவது ஒன்றும்
அவ்வளவு எளிதாக இல்லை
அந்நிய மண்ணில்...
சுபொஅ.
21/03/25 வர்ஜீனியா
நேரம் இரவு 7.18

மலராடை..

Posted by அகத்தீ Labels:

 மலராடை..

நேற்றுவரை
எலும்பும் நரம்புமாய்
காய்ந்து நின்ற மரங்களுக்கு
ஒற்றை இரவில்
வண்ண மலராடையால்
சிங்காரித்து விட்டது யார் ?
வசந்த்தத்தின் வருகை
இயற்கையின் மாயஜாலமோ!

சுபொஅ.
26/03/25 காலை .9.45.
வர்ஜீனியா

சமூகநல உதவிகள் குறித்து

Posted by அகத்தீ Labels:

 

 


 

நான் இங்குள்ள [வர்ஜீனியா ] நூலகத்திற்குச் சென்ற போது கண்ணில் தட்டுப்பட்ட புத்தகம் ”Give People Money: How a Universal Basic Income Would End Poverty, Revolutionize Work “ இதனைப்  புரட்டும் போது இந்தியாவைப் பற்றியும் உள்ளதாகப் பட்டது .வீட்டிற்கு எடுத்து வந்து மேய்ந்தேன் . சில செய்திகள் அதிர்ச்சி ஊட்டின .

 

’இலவசம்’ ,’ஒசி’ ’ ரேவடி [revadi] ’ என நம்நாட்டில் மோடியாலும் மேல்தட்டு அறிவுஜீவிகளாலும் , தினமலர் போன்ற விஷப் பத்திரிகைகளாலும் கேலியும் கிண்டலும் செய்யப்படும் சமூகநல உதவிகள் குறித்து ,   அதன் தேவை குறித்து பேசிய நூல் என்பதால் ஈர்த்தது .

 

இந்த நூலில் அமெரிக்காவில் பென்சிலோவியா மாநிலத்தில் கிக் வொர்க்கர்ஸ் [ GIG WORKERS ] எனப்படும் வீடு தேடி உணவு மற்றும் பொருட்கள் விநியோகிக்கும் தொழிலாளர்கள் , டாக்சி டிரைவர்கள் வாழ்க்கைப் பாட்டை வாசிக்கும் போது இந்திய நிலைமை கண்ணில் தெரிந்தது . எங்கும் உழைப்பாளர் பாடு துயரம்தான் .

 

இந்நேரதில் நான் கேள்விப்பட்ட செய்தி : கல்லூரிக்கு போவதில் அமெரிக்கர் நிலை முழுவிபரமும் ஆராயப்பட வேண்டும் .அங்குள்ள பண்பாட்டுச் சூழல் 18 வயதிலேயே உழைத்து  வாழும் கட்டாயம் . திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் சூழல் அதிகம் . 18 வயதிலேயே பெண்கள் குழந்தையோடு தனித்து வாழும் நிலை அதிகம் .கருக்கலைப்பு இங்கு சட்டவிரோதம் எனவே வேண்டாத பிள்ளையை சுமந்து திரியும் அவலம் . ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பது போல் இங்கு பகட்டும் நவீனமும் ஒரு புறம் அடியாழத்தில் மனிதத் தன்மை அற்ற வாழ்க்கை ஒரு பகுதியினருக்கு. உடையிலும் வாழ்க்கையிலும் நவீனமான ஆண்களின் பார்வையில் பாலின சமத்துவம் இல்லாத ஒன்றாகிறது . இங்கே பெண்கள் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம் என்கின்றனர் இங்குள்ளோர் .

 

நூல் பற்றி பேச வந்தேன் எங்கோ போய்விட்டேன் . இந்நுல் மக்களுக்கு நேரடியாக நிதி உதவி செய்வது பற்றி பேசுகிறது . கென்யா உட்பட பலநாடுகளில் இது பயன் தந்திருப்பதாகவும் இந்தியாவில் அமலாக்கத்தில் கோளாறு உள்ளதாகவும் சொல்கிறது .இந்தியாவில் உதவி சரியான நபர்களுக்கு உதவி போய்ச் சேர்வதில்லை என இந்நுல் சொல்கிறது .பெரும்பாலும் அரவிந்த் சுப்பிரமணியன் கூற்றே ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது . குஜராத் போன்ற மாநிலங்களே ஆய்வு செய்யப்படுகிறது .ஆதர் அட்டையின் நோக்கம் குழப்பம் இதில் பேசப்படுகிறது . சத்துணவு திட்டம் முதல் மகளிர் உரிமைத் தொகை வரை ஒரு கள ஆய்வு செய்திருந்தால் தமிழ்நாடு பெரிதும் பயன்பட்டது தெரிந்திருக்கும் . [ 2017 ல் இந்நூல் வந்துவிட்டது எனவே வாய்ப்பு குறைவே ]

 

சமூக நலத் திட்டங்கள் சோஷலிச திட்டமல்ல ; ஆயின் முதலாளித்துவ சமூக அமைப்புக்குள் சற்று கைத்துக்கி விடும் திட்டங்களே . தமிழ்நாட்டில் எம் ஜி ஆர் சத்துணவு திட்டத்தை அமுலாக்கிய போது  நான் மதிக்கும் தலைவர்கள் சிலரே கடுமையாக விமர்சித்ததை நான் அறிவேன் . அத்திட்டத்தை ஆதரித்துப் பேசி நான் விமர்சனத்தை எதிர்கொண்டேன் . இன்று கட்சியின் பார்வை மேம்பட்டுள்ளது . திரிபுராவும் மேற்கு வங்கமும் சமூக நலத் திட்டங்களில் போதிய கவனம் செலுத்தாதது பெரிய பலவீனம் .கேரளம் சமூக நலத் திட்டங்களை நன்கு கையாள்கிறது . இந்நூலை மேய்கையில் என்னுள் வந்து போன எண்ணங்கள் இவை .

 

இந்நூல் பற்றி  அமேசன் கூறும் வரிகள் கீழே !

 

 

 


[ AI மூலம் மொழியாக்கம் செய்யப்பட்டு பின்னர் என்னால் தமிழாக்கம் செய்யப்பட்டது .]

 

அதிகரித்து வரும் சமத்துவமின்மை, நீடித்த வறுமை மற்றும் திகைப்பூட்டும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றின் யுகத்தில் ; ‘அனைவருக்குமான குறைந்த பட்ச  அடிப்படை வருமானம் UBI [universal basic income ] - ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்படும் உதவித்தொகை’ இவை ஏன் அவசியமாகிறது என்பது பற்றிய ஒரு அற்புதமான  உலகளாவிய பார்வை கொண்ட அறிக்கையே இந்நூல் .

 “எந்த எதிர்பார்ப்புமின்றி ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் உங்கள் வங்கிக் கணக்கில்  1,000 டாலர்  டெபாசிட் செய்தால்….” இப்படி கற்பனை செய்து பாருங்கள்,  [ தமிழ் நாட்டில் இப்போது ரூ.1000 / மகளிர் உரிமைத் தொகை இவ்வாறு போடப்படுகிறது . இந்நூல் கற்பனை செய்தது 2017 ல் ]

 

இது பைத்தியக்காரத்தனமாகத் தெரியும். ஆனால் இது நம் காலத்தின் மிகவும் ஈர்ப்பு மிக்க மற்றும் சூடான விவாதத்திற்குரிய கொள்கை யோசனைகளில் ஒன்றாக மாறியுள்ளது.

 

எதிர்காலவாதிகள், தீவிரவாதிகள், சுதந்திரவாதிகள், சோசலிஸ்டுகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், பெண்ணியவாதிகள், பழமைவாதிகள், பெர்னி ஆதரவாளர்கள், வளர்ச்சி பொருளாதார வல்லுநர்கள், குழந்தை பராமரிப்பு தொழிலாளர்கள், நலன்புரி உதவி பெறுபவர்கள் மற்றும் இந்தியா முதல் பின்லாந்து வரை, கனடா முதல் மெக்சிகோ வரை அரசியல்வாதிகள் அனைவரும் யுபிஐ பற்றி பேசுகிறார்கள்.

ஒரு பக்கம் வெளிச்சம் ஊட்டும் மறுபக்கம்  ஆத்திரமூட்டும் இந்தப் புத்தகத்தில், பொருளாதார எழுத்தாளர் அன்னி லோரி UBI இயக்கத்தை பல கோணங்களில் ஆராய்கிறார். பூமியில் உள்ள ஏழை மக்களை ஒரு யுபிஐ எவ்வாறு உயர்த்துகிறது என்பதைப் பார்க்க அவள் கென்யாவுக்கு பயணம் செய்கிறாள் . ஒரு யுபிஐ பூமியில் உள்ள ஏழை மக்களை எவ்வாறு வறுமையிலிருந்து உயர்த்துகிறது என்பதைப் பார்க்க கென்யாவிற்கும், ஏழைகளை எவ்வாறு திறமையற்ற அரசாங்க திட்டங்கள் தோல்வியடைகின்றன என்பதைப் பார்ப்பதற்கும் இந்தியாவிற்கும், யுபிஐயின் அறிவார்ந்த வம்சாவளியை விசாரிக்க தென் கொரியாவிற்கும், மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித உழைப்பின் தேவை இல்லாத உலகத்தை எதிர்பார்த்து யுபிஐ விமானிகளுக்கு நிதியளிக்கும் தொழில்நுட்ப ஜாம்பவான்களை சந்திக்க சிலிக்கான் பள்ளத்தாக்கிற்கும் அவர் பயணம் செய்கிறார்.

 

முரண்பாடான நோக்கங்கள், சங்கடமான செலவுகள், மிகுந்த சூழலிலும் எவரும் இலவசமாக எதையும் பெறக்கூடாது’ என்ற ஆழமான கருத்தோட்டம் கடுமையாக  வேரூன்றிய  சமூகத்தில் ; மிகவும்  பரந்த இக் கொள்கையின் சாத்தியக்கூறுகள் மற்றும் இயக்கம் எதிர்கொள்ளும் சவால்களை  நூலாசிரியர் லோரே ஆராய்கிறார். முடிவில், இந்த புதிரான கொள்கை நமது மிகவும் சிக்கலான பொருளாதாரப் பிரச்சினைகள் சிலவற்றைத் தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளது என்பதை அவர் காட்டுகிறார், அதே நேரத்தில் குடியுரிமை குறித்த ஒரு புதிய பார்வையையும், கொந்தளிப்பு மற்றும் வியப்புகள் நிறைந்த இந்த யுகத்தில் நமது சமூகத்திற்கு உறுதியான அடித்தளத்தையும் வழங்குகிறார்.

 

”Give People Money: How a Universal Basic Income Would End Poverty, Revolutionize Work “

ANNIE LOWERY 

 

A brilliantly reported, global look at universal basic income—a stipend given to every citizen—and why it might be necessary in an age of rising inequality, persistent poverty, and dazzling technology.

 

Imagine if every month the government deposited $1,000 into your bank account, with nothing expected in return. It sounds crazy. But it has become one of the most influential and hotly debated policy ideas of our time. Futurists, radicals, libertarians, socialists, union representatives, feminists, conservatives, Bernie supporters, development economists, child-care workers, welfare recipients, and politicians from India to Finland to Canada to Mexico—all are talking about UBI.

 In this sparkling and provocative book, economics writer Annie Lowrey examines the UBI movement from many angles. She travels to Kenya to see how a UBI is lifting the poorest people on earth out of destitution, India to see how inefficient government programs are failing the poor, South Korea to interrogate UBI’s intellectual pedigree, and Silicon Valley to meet the tech titans financing UBI pilots in expectation of a world with advanced artificial intelligence and little need for human labor.

 

Lowrey explores the potential of such a sweeping policy and the challenges the movement faces, among them contradictory aims, uncomfortable costs, and, most powerfully, the entrenched belief that no one should get something for nothing. In the end, she shows how this arcane policy has the potential to solve some of our most intractable economic problems, while offering a new vision of citizenship and a firmer foundation for our society in this age of turbulence and marvels.

 

 

 

எல்லா சாலைகளையும்....

Posted by அகத்தீ Labels:

 


எங்கு நோக்கினும்

எல்லா நேரமும்

 எல்லா சாலைகளையும்

உடைத்துக் கொண்டே இருக்கிறார்கள் .

ஏதோ ஒரு காரணம்

சொல்வதற்கு இருக்கிறது .

 

குழந்தைகளும்

முதியவர்களும்

வாகனம் ஓட்டிகளும்

அர்ச்சனை செய்யாத நாளில்லை .

தூசும் தும்பும் எல்லோரையும்

தும்மவிட்டு வேடிக்கை பார்க்கிறது !

 

சாலை போடும் முன்பே

எல்லா குழாய்களையும் தண்டுவடங்களையும்

புதைக்க ஒரு வழிவகை செய்யக்கூட

உங்கள் திட்டமிடலில் இடமில்லையா ?

 

கோளாறு மூளையிலா ?

பண ஆசையிலா ?

 

சுபொஅ.

01/03/25.


பாவங்கள் செய்வது பாவமல்ல

Posted by அகத்தீ Labels:

 


பாவங்கள் செய்வது பாவமல்ல

பரிகாரம் செய்யாமலிருப்பதுதான் பாவம் !

 

ஞாயிறு தோறும்

பாவமன்னிப்பு கேட்கலாம் …

 

 எப்போதாவது ஒரு முறை

மகா கும்பத்தில் முங்கி எழுந்தால்

மூன்று ஜென்ம பாவமும்

முற்றாகத் தொலையும்

 

மண்டியிட்டு தொழுது மன்றாடினால்

பாவம் கரைந்தே போகும்

 

பாவங்கள் செய்வது பாவமல்ல

பரிகாரம் செய்யாமலிருப்பதுதான் பாவம்!

 

புரியவில்லையா ?

 

பாஷ்யம் சொல்கிறேன் ..

 

அட ! விளக்கம் சொல்கிறேன் அப்பு !

 

 

ஊழல் செய்வது பாவமல்ல

ஊழல் செய்தோர் பாஜகவில் சங்கமிக்காதிருப்பதே பாவம் !

 

மதக் கலவரம் செய்வது பாவமல்ல

மதக்கலவரம் செய்வோர்

‘ஜெய் ஸ்ரீ ராம்’ சொல்லாதிருப்பதே பாவம் !

 

தேசத்தை சூறையாடுவது பாவமல்ல

சங்கி சாக்கடையில் பன்றியாய்

கிடந்து மகிழாமல் இருப்பதே பாவம் !

 

முட்டாளாய் இருப்பது பாவமல்ல

சனாதனத்தை மூச்சுக்கு முன்னூறு முறை

வியந்தோதாது இருப்பதே பாவம் !

 

பாவங்கள் செய்வது பாவமல்ல

பரிகாரம் செய்யாமலிருப்பதுதான் பாவம் !

 

சுபொஅ.

23/02/25.

 

 

 

 


உழைக்கும் பெண்களின் நெடிய போராட்டப் பயணம் : ஓர்ஆய்வு

Posted by அகத்தீ Labels:

 



 உழைக்கும் பெண்களின் நெடிய போராட்டப்  பயணம் : ஓர்ஆய்வு  

 

நர்மதா தேவி எழுதிய “ பெண் : அன்றும் இன்றும்” நூல் எனக்குத் தாமதமாகத்தான் கிடைத்தது .கிடைத்த பின்னும் இரண்டு வாரங்கள் வேறு சில பணிகள் காரணமாக இந்நூலைப் புரட்ட முடியவில்லை . கடந்த மூன்று நாட்களில் படித்து முடித்தேன் .தாமதமாயினும் இந்நூலை படிக்காமல் இருந்ததைவிட  இப்போதேனும் படித்ததற்காக மிகவும் மகிழ்கிறேன் .  “better late than never” இல்லையா ?நீங்களும் இன்னும் படிக்காவிடில் இனியும் தாமதிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுகிறேன். பலர் நூல் அறிமுகம் எழுதிவிட்டதால் நான் சுருங்கச் சொன்னால் போதுமல்லவா ?

 

பாலின சமத்துவம் , பெண் விடுதலை , ஆணாதிக்கம் ,பெண்ணியம்  இந்த சொற்கள் வெளிப்பார்வைக்கு மிகவும் பொதுவானவை .ஆனால் அமெரிக்கவின் ஒரு மேல்தட்டு பெண்கள் குழுவினர் இச்சொற்களைச் சொல்லும் பொருளுக்கும் , இங்கே  இராமநாதபுரத்திலோ தர்மபுரியிலோ ஓர் விவசாயக் கூலிப் பெண் சொல்வதற்கும் ஒரே பொருளில்லை . அவரவர் வர்க்கப் பார்வை அச்சொற்களின் மேல் இயல்பாக ஒட்டிக் கொள்ளும் .

 

இச்சொற்களின் பொருளும் விரிவும் கூர்மையும் காலந்தோறும் மேம்பட்டு வருவதை வரலாற்றுப் போக்கில் பார்ப்பவர்கள் நிச்சயம் உணர முடியும் . நான் சார்ந்திருந்த இயக்கத்திலும் சரி , எனக்கும்  சரி1980 களில் இருந்த பார்வையும் , 1990 களில் இருந்த பார்வையும் பத்தாண்டுகளுக்கு முன்னால் இருந்த பார்வையும் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றமும் சாதாரணமாய் வந்ததில்லை . உள்ளும் புறமும் நடந்த கடும் போராட்டத்தின் விளைவே .

 

இந்நூலில்  பாட்டாளி வர்க்கப் பார்வையில் வரலாறு நெடுக உழைக்கும் பெண்கள் பட்ட பாட்டினையும் அதற்கு எதிராக மெல்ல எழுந்து ஓங்கிய போராட்ட அலைகளையும் பெற்ற வெற்றிகளையும் நுட்பமாக ஆய்வு செய்து அழகு தமிழில் நமக்குத் தந்திருக்கிற தோழர் நர்மதா தேவியை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

 

எட்டு பகுதிகளாக 40 அத்தியாயங்களில் இந்நூல் விரிந்திருக்கிறது . முதல் பகுதி  ” குடும்பம்- தனிச் சொத்து – அரசு இவற்றின் தோற்றம்” குறித்து எங்கெல்ஸ் எழுதிய நூலினை அடியொற்றி எளிமையாய் ஓர் அறிமுகம் செய்கிறது .அடுத்த பகுதி ’ஸ்வீட் கேப்டலிசத்தின்’ உண்மை முகத்தை தொழிற்புரட்சி காலந்தொட்டு படம் பிடிக்கிறது . முதலாளித்துவம் தன் லாபவெறிக்காகாக பெண்களை எப்படிக் கையாள்கிறது என்பதன் விரிவான சித்திரமாக உள்ளது . முதலாளித்துவத்தின் இரட்டை வேடமும் சுரண்டலை அதிகப்படுத்தவே என்பதை இந்நூல் நிரூபிக்கிறது .

 

காலனி இந்தியாவில் உழைக்கும் பெண்கள் நிலை ; சுதந்திர இந்தியாவில் உள்ள நிலை , சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி இவற்றை பகுதி நான்கும் பகுதி ஐந்தும் விவரிக்கிறது . குடிமகனுக்கு பெண்பால் என்ன ? மிகச் சரியான கேள்வி . நீதிக் கட்சியைச் சார்ந்த டி.எம்.நாயர் தமிழ்நாட்டு உழைக்கும் பெண்கள் குறித்து கூர்மையான தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார் என்பதை பல எடுத்துக் காட்டுகளுடன் இந்நூலில் சுட்டி இருப்பதைக் கண்டேன் ; வழக்கமாக நம் வகுப்புகளில் இது சொல்லப்படாத செய்தி .

 

சோஷலிசமும் பெண்களும் எனும் நுட்பமான பொருள் குறித்து ஆறாவது பகுதி நிறைய தகவல்களோடு வெளிச்சம் போடுகிறது . ஆதியில் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள்ளேயும் பாலின சமத்துவத்தை ஏற்காதவர் கை ஓங்கி இருந்ததையும் நுட்பமாக நடத்திய கருத்துப் போராட்டத்தையும் இந்நூல் பேசுகிறது .

 

என் நினைவுகள் பின்னோக்கி அசைபோட்டன .அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கங்கத்தின் முதல் அகில இந்திய அமைப்பு மாநாடு சென்னையில்  தாசப் பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் 1981 ல் நடைபெற்ற போது அந்த மாநாட்டு அரங்கத்தின் பணிகளை ஒருங்கிணைக்கும் பணியை எனக்கு கட்சி வழங்கி இருந்தது . அம்பத்தூர் தோழர் சுந்தர்ராஜூம் இந்திய மாணவர் சங்கத் தோழர் விஜயகுமார் போன்ற தோழர்களும் இணைந்து செய்தோம் .

 

அப்போது கட்சித் தலைவர்கள் பலருக்கே பெண்சமத்துவம் குறித்த புரிதல் குறைபாடு உடையதாக இருந்தது . தோழர் மைதிலி சிவராமன் ,பாப்பா உமாநாத் , ஷாஷாஜி கோவிந்தராஜன்  போன்ற தோழர்கள் புரிதலை ஆண் தோழர்களுக்கு  ஏற்படுத்த பட்ட பாட்டினை நான் நேரில் பார்த்தவன் . மாநாட்டின் போது தோழர் மைதிலி சிவராமன் கண்கலங்கியதையும் தோழர் ஏ.பாலசுப்பிரமணியன் தன் தோளில் சாய்த்த்து மைதிலியை தேற்றி , “ பெண் சமத்துவத்துக்காக கட்சிக்குள்ளும் போராடத்தான் வேண்டும் . வேறு வழியில்லை . தோழர் கொலந்தாய் , கிளாரா ஷெட்கின் பற்றி எல்லாம்  உங்களுக்கு நான் சொல்லித் தர வேண்டியதில்லை … நம் நாட்டில் மநுநீதி எல்லோர் மண்டையிலும் இருக்கிறது ..கம்யூனிஸ்டுகளும் விதி விலக்கல்ல .. போராடுங்கள் கட்சி உங்களோடு இருக்கிறது .படிப்படியாக காய் நகர்த்துவோம். ..” என்றார் .

 

பின்னர் ஓர் சிஐடியு மாநாட்டில் தோழர் பி .டி.ரணதிவே சொன்னார் , “ நாம் மேடையில் பெண்சமத்துவம் பேசுகிற புரட்சியாளர்களாக இருக்கிறோம் ,வீட்டில் மோசமான இந்துக் கணவர்களாக இருக்கிறோம் .”  இதனை பல கூட்டங்களில் அவர் திரும்பத் திரும்ப சொல்லியதை நான் கேட்டிருக்கிறேன் .

 

 

இந்திய வரலாற்றில் வீரஞ்செறிந்த தெலுங்கானா போராட்டம் ,வொர்லி பழங்குடி மக்கள் போராட்டம் , கையூர் போராட்டம்  ,பொன்மலைப் போராட்டம் என கனல் மணக்கும் நினைவுகளோடு உணர்ச்சியை உசுப்பி வீரத்தை விதைக்கிறது ஏழாவது பகுதி . இப்பகுதியில் பாபா உமாநாத் ,கே.பி.ஜானகியம்மா , ஷாஷாஜி , ஜானகியம்மாள் ,லட்சுமி அம்மாள் ,ருக்மணி அம்மாள் போன்ற தலைவர்களைப் பற்றிய குறிப்புகள் நன்று . ஆயின் மைதிலி சிவராமன் பற்றி ஒருவரியில் கடந்துபோனது சரியல்ல . அவரின் தத்துவார்த்த புரிதலும் சென்னையில் பெண் தொழிலாளர்களைத் திரட்ட அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதும் கொஞ்சம் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து .

 

குறிப்பாக இந்துத்துவத்தின் கையில் ஆட்சி அதிகாரம் சிக்கி இருக்கும் சூழலில் பாலின சமத்துவத்துகான போராட்டம் எவ்வளவு முக்கியமானது கடுமையானது என்பதை எட்டாவது பகுதி விளக்குகிறது . மிகச் சரியாக ஒவ்வொரும் அறிய வேண்டிய- போராட வேண்டிய செய்தி அவை . பெரியாரின் பெண்ணியப் பார்வை இங்கு சரியாகச்  சுட்டப்பட்டிருக்கிறது .இன்றைய தேவை கருதி அதனை இன்னும் அதிகம் விரிவாகச்  சொல்லி இருக்கலாமோ ?

 

இந்நூல் மிகுந்த ஆழமான ஆய்வு நூல் . ஆகவே நிறைய புள்ளிவிவரங்கள் தவிர்க்க முடியாதவைதான் .எனினும் புள்ளிவிவரங்களை சற்றுக் குறைத்து அவற்றை பிடல் காஸ்ட்ரோ பாணியில் உணர்ச்சி யூட்டும் விதத்தில் சொல்லி இருக்கலாமோ ? இது என் ஆசை . நூலின் பிழை அல்ல.

 

பாலின சமத்துவம் குறித்த பல்வேறு பார்வைகள் திரிபுகள்  அதிதீவிர போக்குகள் உலகெங்கிலும் உள்ளன .இந்தியாவிலும் உண்டு .அவை குறித்து ஓர் அறிமுகமும் , பாட்டாளி வர்க்கப் பார்வையே சரி என்பதின் விளக்கமும் இன்னொரு பகுதியாக அடுத்த பதிப்பில் சேர்க்கலாமே ! இதுவும் என் ஆசையும் யோசனையும்தான் .அது இல்லாவிடிலும் நூலுக்கு எந்த குறைவும் இல்லை .

 

பெண் அன்றும் இன்றும்  ,  ஆசிரியர் : நர்மதா தேவி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் ,தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

E mail :     bharathiputhakalayam@gmail      /    www.thamizhbooks.com

பக்கங்கள் : 512 , விலை : ரூ.520  /

 

சுபொஅ.

17/02/25.

 

[நேற்றே 16/02/25 இந்த நூல் அறிமுகத்தை எழுதிவிட்டேன் .சரி பார்த்து வெளியிட அவகாசம் இல்லை . பெருமிதத்தோடு 51 வது ஆண்டாக சிபிஎம் கட்சி உறுப்பினர் புதுப்பித்தல் கிளைக் கூட்டத்துக்கு செல்ல வேண்டி இருந்தததால் தாமதமாக இன்று 17/02/25 வெளியிடுகிறேன் . ]

 

 

 

 


காதல் இல்லா உலகம் பாழ் !

Posted by அகத்தீ Labels:

 



காதல் இல்லா உலகம் பாழ் !

 

காதல் இல்லா உலகம் பாழ் !ஆதாம் யோவாள் காதல் இயல்பானது .அன்பானது .நேர்மையானது . ஆதிக்காதல் எல்லா நாட்டிலும் அப்படித்தான் . ஒவ்வொரு காதலும் அப்படித்தான் இருக்க வேண்டும் .

 

காதல் எல்லா காலத்துக்குமானது . காதல் எல்லா தேசத்துக்குமானது . காதல் எல்லா உயிர்களுக்குமானது . காதல் எப்போது யாரிடம் ஏன் வருகிறது என யாராலும் எங்கும் கணித்துச் சொல்லவே முடியாது .

 

புறநானூற்றுக் காதலும் , திரைப்பட காதலும் ஒன்றல்ல . முந்தையதில் அன்பும் இயல்பும் பொங்கி வழிந்தது .பிந்தையதில் மிகை இருக்கிறது ; உண்மை விலகி நிற்கிறது . காதலில் காமம் உண்டு .காமம் மட்டுமே காதல் இல்லை .காமம் இல்லாமலும் காதல் இல்லை .காமம் இருப்பது மட்டுமே காதல் இல்லை . புறநானூற்றுக் காதலுக்கு வாசலைத் திறப்பீர் !

 

பிப்ரவரி 14 மட்டுமா காதலர் தினம் ? சித்திரை முழுநிலவு காதலர் கொண்டாட்ட நாளல்லவா ? ஆடி 18 காதலர் மகிழ்ந்து நீராடி மகிழும் நாளல்லவா ? எத்தனையோ காதல் கொண்டாட்ட நாட்கள் சங்க இலக்கியத்தில் உண்டே ! காதலை எதிர்ப்போருக்கு நம் பண்பாட்டின் ஆணிவேர் சல்லிவேரே காதல் என்பது தெரியாது.அவர்கள் மூட மத வெறியர் .சாதி வெறியர் .ஆணவக்காரர் .அவர்களைச் சுண்டு விரலால் தூக்கி எறிவீர் !

 

காதல் இல்லா உலகம் பாழ் ! வள்ளுவனைவிட காதலை போற்றியவன் எவன்? காமத்துப் பால் யாத்த அவனுக்கு காவியுடை கட்டும் கயவர்கள் என்றும் காதலின் எதிரிகளே ! மானுடத்தின் எதிரிகளே !

 

ஆதிக் காதலில் நிரம்பி இருந்த பாலின சமத்துவம் காலவெளியில் காணாமல் போனது . சொத்துடைமை தந்த ஆணாதிக்கம் பெண்மையை நசுக்கிப் போட்டது .காதல் வெறும் பெயர்ச் சொல்லானது . காமமும் பெண் மீது திணிக்கப்பட்ட கடமையுமே வினைச் சொல் ஆனது . அடிமைத்தனத்துக்கு பண்பாடென பட்டுக் குஞ்சரம் கட்டப்பட்டது . திருமணம் என்பது அதன் அங்கீகார முத்திரை ஆனது . காதல் தொலைந்து போனது .

 

 

சமூகத்தின் பேதம் மிகு கழுக்குப் பார்வையை , இராட்சச விலங்கை ,சாதி மத அகழியைத் தாண்டியும் காதல் பூ மலர்ந்து கொண்டே இருக்கிறது . மதம் பிடித்த சாதிய வெறி பிடித்த நாய்கள் காதலுக்கு எதிராய் குரைத்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆணவக் கொலை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள் !

 

 நேற்றையக் காதல் புனிதமானது , இன்றையக் காதல் வெறும் உடல் பசிஎன்கிறார்கள் . ”நாடகக் காதல்என்கிறார்கள் . “லவ்ஜிகாத்என பழிதூற்றி கொலை செய்கிறார்கள் ! பண்பாட்டை பெண் யோணியில் பூட்டி வைக்கிறார்கள் !ச்சேத்தூமானுடம் தலைகுனிந்து நிற்பதை தம் வெற்றி எனக் கொக்கரிக்கின்றனர் .

 

காதலுக்கு புனிதப் பட்டம் தேவை இல்லை ; காதல் இயல்பானது என்பதைப் புரிந்தால் போதும் .ஒன்றை வரலாறு நெடுக கண்டு தெளிகிறோம் ; ‘ தடைகளை மீறுவதுதான் காதல் . போர்க்களத்திலும் காதல் மலரும். சிறையிலும் காதல் பூக்கும் .காதல் எல்லை தாண்டும் . காதல் வேலியை உடைக்கும் . அதுதான் காதலின் வலிமை .

 

ஆனால் ஒன்று ! ஒரு வகையில் நேற்றும் இன்றும் காதல் ஒன்றல்லதான் ; காதல் மேம்பட்டிருப்பதைப் புரிந்து கொள்வீர் !  சமத்துவமும் அன்பும் நீர்த்துப் போக எதிர்பார்ப்பு பொய்யாகும் போது ; பல்லைக் கடித்துக்கொண்டு  கொடுமையை சகித்துக் கொண்டு வாழ்ந்து தொலைப்பது இன்றையக் காதலில் சாத்தியமில்லை . இன்றைய பாலின சமத்துவ எல்லை விரிந்து கொண்டே போகிறது .குடும்ப ஜனநாயகம் புரிதலின் விதி ஆகிறது.

 

சிறுபான்மை பெரும்பான்மை தேர்தல் கணக்கல்ல குடும்ப ஜனநாயகம் . வலிமையே அனைத்தையும் தீர்மானிக்கும் எனும் அதிகார சூத்திரமல்ல குடும்ப ஜனநாயகம் . ஒவ்வொருவர் கருத்துக்கும் உரிமைக்கும் உணர்வுக்கும் உரிய இடமளித்து அன்பின் முழு பரிணாமமாய் விரிவதே குடும்ப ஜனநாயகம் .

 

அங்குதான்  ஆதாம்யோவாள்  காதலுக்குஅடுத்த காதல் இதுவெனச் சொல்ல முடியும் ’. தும்மியதுக்கு எல்லாம் கசந்து காதல் பிரிந்து போக வேண்டும் என்பதும் பிழையே ! நரகத்தில் உழன்றாலும் காதல் பிரியக் கூடாது என்பதும் பிழையே !வாழ்வதற்குத்தான் காதல் .கொல்வதற்கு அல்ல . கொலை எண்ணம் தலைதூக்கின் அது காதலே அல்ல .எங்கிருந்தாலும் வாழ்க என்கிற அன்பு மனமே காதல் !

 

மேடையில் பாலின சமத்துவம் புரட்சி பேசும் பலரும் வீட்டில் அப்படியே இருந்துவிடுவதில்லை . பழகிப்போன ஆணாதிக்கம் அவ்வப்போது தலைநீட்டவே செய்யும் . அதற்கு எதிராய் உள்ளுக்குள் போராடுவது ஒன்றும் எளிதல்ல . காலம் தொடர்ந்து பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது .

 

காதலும் உழைப்பும்தான் மானுடத்தின் ஆதார சுருதி . காதலும் உழைப்பும் கவுரவிக்கப்படாத தேசத்தில் மானுடம் மெல்லச் சாகும் !காலம் காறி உமிழும்!

 

நாளையக் காதல் ஆதிக்கம் இல்லாததாய் ; அன்பால் பிணைந்ததாய் ; சமத்துவம் மிக்கதாய் ; குடும்ப ஜனநாயகத்தை உள்வாங்கியதாய் ; இரு பாலருக்கும் பொறுப்பும் உரிமையும் மிக்கதாய் ; அவரவர் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதாய் மலர்க !

 

காதல் போற்றுதும் ! காதல் போற்றுதும் ! காலந்தோறும்  மேலும் செழித்து , மேலும் செம்மையாகி காதல் ஓங்கிட வாழ்த்துதும் யாமே !

 

காதல் செய்வோம் !

குரோதத்துக்கு எதிராய் அன்பை முன்மொழிவோம் !

அன்பு செய் ! காதல் செய் !

 

சுபொஅ.

14/02/25.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் “ - ஏங்கெல்ஸ்

வாசித்து விட்டீர்களா ? அவசியம் வாசியுங்கள் !!!