நேற்று பயணத்தில் ஓர் காட்சி .சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

Posted by அகத்தீ Labels:

 

நேற்று பயணத்தில் ஓர் காட்சி .

சிறு துரும்பும் பல்குத்த உதவுமாம் ….

 

நான் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறேன் . என் அருகில் நடுத்தர வயதை எல்லாம் கடந்துவிட்ட ஊழியர் ஒருவர் அமர்ந்திருக்கிறார் .  அநேகமாக பணிஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கலாம் .நெற்றி நிறைய திருநீற்றுப் பட்டை . நடுவில் சந்தனம் . கையில் இருக்கும் பை அவர் ஓர் அரசு ஊழியர் எனச் சொல்லாமல் சொன்னது . ஒன்றரை  மணி நேரம் அவரோடு பயணம் .

 

 ஒவ்வொரு நூறடிக்கும் இடது பக்கமோ வலது பக்கமோ திரும்பி கன்னத்தில் போட்டுக் கும்பிடுகிறார் . ‘ வெளியூரா ?’ என என்னிடம் கேட்டுவிட்டு , என் பக்கம் திரும்பி கும்பிட்ட சாமியின் பெயரைச் சொல்கிறார் . நாலய்ந்து கும்பிடு முடிந்த பின் அடுத்து வருகிற சாமி குறித்து முன் தகவல் தரத் தொடங்கிவிட்டார் .

 

அவர் நம்பிக்கை .அவர் உரிமை . நான் சொல்ல என்ன இருக்கிறது . ஆனாலும் நான் எங்கேயும் கும்பிடாமல் இருப்பது அவருக்கு உறுத்தலாகிறது .

 

“ சார் ! கிறிஷ்டியனா ? ”

 

இல்லை என தலையாட்டினேன் . இதுவரை நான் அவரிடம் ஒரு வார்த்தை பேசவில்லை .

 

“ நீங்க முஸ்லீமா இருக்க முடியாது , தொப்பியோ தாடியோ இல்லை.”

 

“ தலையாட்டி .புன்னகைத்தேன்…” ; வேறென்ன செய்வது ?

 

“ எல்லாமே பகவான்தான் சார் ! அவங்க அவங்க நம்பிக்கை அவங்கஅவங்களுக்கு…” இப்படி அவர் சொன்னதும் லேசாக சிரித்து வைத்தேன் . அப்போதும் பேசவில்லை .

 

“ சார் ! அடுத்து அந்த எடத்தில இரண்டு நிமிஷம் நிக்கும் சார்… அங்க உயரமான சாமி  சிலை இருக்கு சார் ! பஸ்லில் இருந்து பார்த்தாலே சாமி தெரியும் … எல்லோரும் கும்பிடுவாங்க … ரொம்ப சக்தி உள்ள சாமி …. ரொம்ப பவர் ஃபுள்…  வேண்டிக்கிட்டா நிச்சயம் நிறைவேறும்…”

 

இதுவரை பேசாமல் இருந்த நான் மெல்ல வாய் திறந்தேன் , “ அப்போ நீங்க இதுவரை கும்பிட்டது எல்லாமே சக்தி குறைவாக உள்ள சாமிகளோ….”

 

நான் கேட்டதும் , “ அப்படி இல்லை சார் ! ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கு, ஆனால் இவருக்கு ’ஃபுள் பவர்’ [அழுத்திச் சொன்னார்] இருக்கு… அதத்தான் சொன்னேன் … நான் ஒரு சாமிய விடமாட்டேன் … சிறுதுரும்பும் பல்குத்த உதவும் … சார் … ஒண்ணையும் விடக்கூடாது..”

 

அவரின் அப்பிராணித்தனத்தைப் பார்த்து சிரித்துவிட்டேன் .

 

அவர்  , “ சார் ! சிரிக்காதீங்க … ஆபத்துக்கு ஒரு சாமி இல்லாட்டா ஒரு சாமி உதவுவாரு சார் !”

 

தொடர்ந்து வழிநெடுக பல ’சிறுதுரும்புகளை’ கும்பிட்டுக் கொண்டே  சுட்டிக்காட்டிக்கொண்டே வந்தார் … நான் பேசாமல் மனதுக்குள் சிரித்தபடி பயணித்தேன் .

 

வழியில் ஒரு தர்க்காவையும் மேரிமாதாவையும்கூட கும்பிட்டார் . அதுவும் அந்த ’சிறு துரும்பு’ கணக்காக இருக்கும் போலும் …

 

ஓய்வு காலக் கணக்கும் வாழ்க்கைக் கணக்கும் ஒத்துப் போகாமல் ; பிரச்சனைகளின் கனம் தாங்காமல் தத்தளிக்கும் அவர் ஏதேனும் துரும்பைப் பிடித்தாவது கரையேறிவிடலாம் என எண்ணுகிறாரோ என்னவோ ! பலர் அப்படித்தான் .

 

இவர்களைப் போன்றோரோடு உரையாட அறிவு மட்டும் போதாது கொஞ்சம் பாச உணர்ச்சியும் தேவை அல்லவா ?

 

[ சேலம் ஆத்தூர் பயண அனுபவம் ]

 

சுபொஅ.

11 /12 /25 .

 

 

 

 


0 comments :

Post a Comment