முகம் மாறிக்கொண்டே இருக்கிறது.

Posted by அகத்தீ Labels:

 


ரயில் மார்க்கமாக

சாலை மார்க்கமா

பயணப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்.

 

வழிநெடுக எங்கும்

ஒரு புறம்

இடித்துக்கொண்டே இருக்கிறார்கள்

இன்னொரு புறம்

கட்டுமானம் நடந்துக்கொண்டே இருக்கிறது.

 

நேற்று இருந்ததுபோல்

எதுவும் இன்று இல்லை

நகரமோ கிராமமோ

முகம் மாறிக்கொண்டே இருக்கிறது.

 

எல்லாம்

வளர்ச்சி என்கிறார்கள்

ஆனால் ஏனோ

மூச்சுத் திணறுகிறது.

 

சாதியம் தொலையாத வளர்ச்சி

வறுமை தொலையாத வளர்ச்சி

உச்சத்தை நோக்கி  ஒரு சிறு கூட்டம்

படு பள்ளத்தை நோக்கி பெருங் கூட்டம்

 

 

மலைக்கும் மடுவுக்கும் இடையில்

அல்லல் படும் மானுடம்

வளர்ச்சியின் இலக்கணம்

பாமரனுக்கும் புரியவே இல்லை.

பண்டிதன் ஏமாற்றுகிறான்

புள்ளிவிவரங்களால்…..

 

வழிநெடுக எங்கும்

ஒரு புறம்

இடித்துக்கொண்டே இருக்கிறார்கள்

இன்னொரு புறம்

கட்டுமானம் நடந்துக்கொண்டே இருக்கிறது.

 

சுபொஅ.

16/09/24.

 


பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலி

Posted by அகத்தீ Labels:

 


 

 


பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலி

 

” எத்தனை மனித வக்கிரங்கள் ஊர்ந்த மேனி இது . இன்று நீயுமா ?! வா என் அன்பே !” என்று முனங்கியபடியே கருநாகத்தை ஆரத்தழுவினாள் .அது அன்பாய் அவள் உதட்டில் ‘பச்’ என்று முத்தமிட்டது .

 

சமூகத்தால் கைவிடப்பட்டு  புற்று நோயில் அழுகிய பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணின் அந்திமக் காலத்தில்   இரண்டு இட்லிக்காக வேலியோரம் ஒதுங்கும் கோர வாழ்வை இந்நூலின்  “பசி கொண்ட இரவு” கதை சொல்கிறது . நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி அழவைக்கிறது .

 

இக்கதை இத்தொகுப்பில்  கடைசிக் கதை இது .

 

இக்கதையை வாசித்த போது புகழ்பெற்ற  “சாதத் ஹாசன் மாண்டோ” என் நினைவுக்கு வந்து போனார். இப்படி ஒதுக்கப்பட்டோர் வாழ்வில் ரணத்தை எழுத்தில் தந்தவர் ; உருது மொழி எழுத்தாளர் சாதத் ஹாசன் மாண்டோ .

 

கள்ளச் சாராயம் விற்கிற பெண் என எவ்வளவு இளக்காரமாகச் சொல்லி விடுகிறோம் . ஆனால் அவர்களின் வாழ்க்கை வலியை அறிவோமா ? ” இந்த மாந்தோப்பு வேலை எவ்வளவோ மேல் .எல்லா இடத்திலும் கோவிந்தன் மாதிரி பொறிக்கிப் பயல்கள் இருக்கத்தான் செய்றானுக…” இந்த வரிகளில் காறித் துப்பும் சமூக யதார்த்தம் ஆயிரம் ஹேமா கமிட்டி அறிக்கைகளில் சொன்னாலும் தீராது .ஆனால் சரோஜா வாழ்வு என்ன ஆனது .”பாக்கெட் சாராயம்” என்னும் கதையின் உறுத்தும் நிஜம் வாசிப்பவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறது .

 

கஞ்சா வழக்கில்  சிறையில் வாடும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான் எத்தனை சோகம் !  “காதல் என்னும் ஊழ்வினை” என்னும் கதை சமூகத்தின் இன்னொரு கோர முகத்தைக் காட்டும். அவள் பெயரோ ஜெயக்கொடி அவள் வாழ்வோ வெறும் கந்தல் துணி . செய்யாத குற்றத்துக்காக சிறைபட்டு , “அவளுக்கு [பெற்ற மளுக்கு ]யாராச்சும் சாப்பாடு கொடுத்திருப்பாளோ” எனக் கதறும் குரலை அமைதியாக் கடந்து போக முடியவில்லை.

 

 “ சீதை வேசியாக்கப்பட்டாள்” கதைத் தலைப்பே அதிர்வெடி . மனைவியை தவறாய்ப் புரிந்து சந்தேகிக்கும் கணவன் .சந்தேக நெருப்பில் தற்கொலை செய்து கொள்கிறான் . ”அம்மா ! சீதை! என் மகன் கொழுப்பெடுத்து செத்துப் போனதுக்கு நீ ஏம்மா வருத்தபடுற? …” என தலைகோதும் மாமியார் மானுடம் செத்துப் போகவில்லை என்பதன் சாட்சி.

 

கறுப்பு ஆடுகள் மலிந்த காவல் துறைக்குள் நேர்மையாய் இருக்கும் ஒருவன் ; அவனுக்குள்ளும் தலை விரித்தாடும் சாதியம் ; சந்தர்ப்ப சூழலை பயன்படுத்தி பெண்ணை வேட்டையாடும் சக காவல் மிருகங்கள்  “ மூன்றாம் நாளும் விடிந்தது” கதை காட்டும் சமூக இருட்டு நினைக்கவே பயமாக இருக்கிறது .

 

குடிகார கணவனால் நிம்மதியை இழக்கும் தாய் , தப்பி ஓடும் சிறுவன் ,அணைக்கும் சக அபலைக் கிழவி , உழைத்து வாழவும் விடாத சமூகம் என குத்திக் கிழிக்கும் கதை “ பூரணச் சந்திரன்.”

 

பிழைப்பு தேடி சென்னை செல்லும் பெண் எதிர்கொள்ளும் சிக்கலை யதார்த்தமாய் பேசி நம்மை உறைய வைக்கும் கதை “கனலி”

 

 “ ஏண்டா சடங்கானோம் ?” என வேணியை அழவைத்து , புயலில் சாகவிட்ட கொடுமை .மாதவிடாய் இயல்பானது . அதுவே  தீட்டு  என இந்திய சமூகத்தை ஆட்டிப் படைக்கும் பெருங்கூற்றாய்  ஆடுவதை சொல்லும் கதை “தீட்டு” .

 

“இத்தொகுப்பில் ஒப்பீட்டளவில் மனதை அழுத்தும் பெரிய துக்கம் எதையும் தராத மென்மையான கதை இது ஒன்றுதான்.”என ச.தமிழ்ச் செல்வனே சொல்லும் கதை “ மீனாட்சி அத்தை” ஒன்றுதான். ஆனால் அக்கதையிலும் கண்ணீரும் ஈரமும் உண்டு.

 

“இந்த சமூகத்திற்கு எது தேவையோ அதை எழுது அதனால் ஏற்படும் விமர்சனங்களைப் பற்றி கவலை கொள்ளாதே ,விமர்சனமே இல்லாத கதைகளை எழுத வேண்டுமென்றால் நீ எழுதுவதைவிட சும்மா இருப்பதே மேல் என்று திரும்பத் திரும்பச் சொல்லி எழுதத் தூண்டிய என் அன்புக் கணவர் ஜெயசீலன் என ‘ என்னுரையில் ‘ கி.அமுதா செல்வி குறிப்பிடுகிறார் .

 

சமூகம் பேசவே முகம் சுழிக்கும் அடித்தட்டு வாழ்வின் வலியை எழுத்தில் தருவது என்பது சவாலான செயல்தான் .  ‘பசி கொண்ட இரவு என்கிற சிறுகதைத் தொகுப்பிலுள்ள ஒன்பது  கதைகளையும் எழுத துணிச்சல் மட்டுமல்ல , எல்லையற்ற மானுட நேசமும், சமூகப் பார்வையும் , பெண்ணின் இதயமும் கண்ணும் வேண்டும் . அமுதா செல்விக்கு அது வாய்த்திருக்கிறது. ஆகவேதான் தன் முதல் கதைத் தொகுப்பிலேயே முத்திரை பதித்திருக்கிறாள் .

 

அடிதட்டு மக்களின் - விழிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை மட்டுமே கூர்ந்து நோக்கி ; பெண்ணின் வற்றா அன்புடன் கதைத் தொகுப்பை கொண்டு வந்திருக்கும் அமுதா செல்வியை வாழ்த்துகிறேன் . அவருக்கு தோள் கொடுக்கும் கணவர் ஜெயசீலனையும் வாழ்த்துகிறேன் . லட்சியத் தம்பதியராய் பல்லாண்டு வாழ்க நீவீர் ! உங்கள் எழுதுப் பயணம் மேலும் மேலும் தொடர்க இவ்வழியே !

 

வாசகர்களே ! உங்களுக்கு ஓர் சவால் !

கண் கலங்காமம் இத்தொகுப்பை உங்களால் வாசித்து முடிக்க முடியுமா ?

 

பசி கொண்ட இரவு ,

ஆசிரியர் : கி.அமுதா செல்வி ,

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949

E mail :     bharathiputhakalayam@gmail      /   www.thamizhbooks.com

பக்கங்கள் : 144 , விலை : ரூ.150 /

 

 

 சு.பொ.அகத்தியலிங்கம்.

16/09/24.

 

 

 

                                              

 


வெறும் வார்த்தை அல்ல...

Posted by அகத்தீ

 







வெறும் வார்த்தை அல்ல...

இறகு உதிரவில்லை
மாமலை சாய்ந்துவிட்டது.

வெற்றிடம் வெறும்
வார்த்தை இல்லை

எம் உயிர்த் தோழா !
யெச்சூரி எனும் நம்பிக்கையே !

நாங்கள் இழந்தது
தனி மனிதரில்லை

தத்துவ விளக்கன்றோ
அணைந்து விட்டது

சூழும் பகை முடிக்க
வியூகம் வகுக்கும் நேரத்தில்

பாழும் மரணம் வந்து
மறித்ததே எம் பாதையை!

உன்னை வார்த்தது மார்க்சியம்
மார்க்சியத்தை வாளாக்கினாய் நீ !

மாணவனாய் களம் வந்தாய்
மார்க்சிய ஆசானாய் வலம் வந்தாய்!

துணிச்சலின் முகவரி நீ !
சுடரும் அறிவுத் தீ நீ!

இடர்மிகு காலத்தில்
இயக்கத்தை வழி நடத்தினாய் !

கொந்தளிக்கும் கடலில்
மாலுமியை இழந்தோமே !

சுபொஅ.

மணிப்பூர்

Posted by அகத்தீ Labels:

 


மணிப்பூர்

 

 

கனவு எப்போது வரும் ?

தூக்கத்துக்காக

படுக்கையில் புரளும்போதா ?

தூக்கம் கலைந்து

சுகமாய் கிடக்கும் போதா ?

தூங்கியும் தூங்காமலும்

நெளிந்து கிடக்கும்போதா ?

ஆழ்ந்த தூக்கத்தில்

உலகை மறந்து கிடக்கும் போதா ?

நள்ளிரவு வருமா ?

அதிகாலை வருமா ?

பகலில் வருமா ?

கனவிலாவது

 “அச்சா தீன்..” பார்ப்பதெப்போ ?

 

சுபொஅ.

11/09/24.


வயதாக வயதாகத்தான்

Posted by அகத்தீ Labels:

 

வயதாக வயதாகத்தான்

தெரிகிறது

நாம் அறிந்தது கொஞ்சம் !

சரி தவறு என்பதும்

முதிர்ச்சியோடு சம்மந்தப்பட்டது

தனி நபர் முதிர்ச்சி மட்டுமல்ல

சமூக முதிர்ச்சியும்

பண்பாட்டு முதிர்ச்சியும்தான்

ஞானத் தேடலில் ஆயுள் கழியும்

நம் அனுபவத் தடத்தில் அடுத்த

தலைமுறை பாடம் கற்கும்

யுகந்தோறும் இதுதானே நடக்கும் !

 

சுபொஅ.


மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் கற்றுத் தரும் இரண்டு நூல்கள்.

Posted by அகத்தீ Labels:





மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் கற்றுத் தரும் இரண்டு நூல்கள்.

 

பாலஸ்தீனம் குறித்த இரண்டு நூல்கள் அண்மையில் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டுள்ளன .

 

1] “பாலஸ்தீனம் ”  - தோழர் வெ.சாமிநாத சர்மா எழுதியது .1939 ல் வெளிவந்தது .2024 ல் மறுபதிப்பு கண்டுள்ளது .

2] “ பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும் ?” -  இ.பா.சிந்தன் எழுதியது . தற்போது [2024 ல்] வெளியிடப்பட்டது .

 

85 ஆண்டு கால இடை வெளியில் வந்துள்ளன இரண்டு நூல்கள் .

 

முதல் நூலில் 1938  வரையிலான வரலாற்றில் எப்படி எல்லாம் பாலஸ்தீன மக்கள்  வஞ்சிக்கப் பட்டுள்ளனர் என்பதையும் ; இஸ்ரேல் எனும் யூத நாட்டை பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணில் ஏகாதிபத்தியம் எப்படித் திணித்தது என்பதையும் ; ஜியோனிசத்தின் தோற்று வாயையும் நுட்பமாக வரைந்து காட்டி இருக்கிறார் வெ.சாமிநாத சர்மா .

 

85 ஆண்டுகளில் நிலமை சீரடையவில்லை .மாறாக மேலும் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் பாலஸ்தீனம் ஆளாகி உள்ளது  என்பதையும் ; ஏகாதிபத்தியங்களின் இதயமற்ற காய் நகர்த்தகளையும் இஸ்ரேலின் வஞ்சகமும் குரூரம் கொண்ட ஜியோனிச போக்கு எப்படி உச்சத்தை எட்டி இருக்கிறது என்பதையும் இ.பா.சிந்தனின் நூல் எடுத்துக் காட்டுகிறது .

 

பாலஸ்தீன விவகாரத்தில் இந்தியா முதலில் காட்டிய அரசியல் உறுதி எப்படி மெல்ல மெல்ல தளர்ந்து இப்போது இஸ்ரேலின் கூட்டுக் களவாணியாய் கூட்டுக் கொடூரனாய் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்நூல் சொல்கிறது .

 

இரண்டு நூல்களின் உயிர் சரடும் ஒன்றுதான் . சாதாரண வாசகரை நோக்கி எளிமையாக சுருக்கமாகப் பேசுவதுதான் இரண்டு நூல்களுக்கும் கூடுதல் சிறப்பு .மொழி நடையில் இரண்டுக்குமான கால இடைவெளி வெளிப்படும் . 85 ஆண்டுகாலத்தில் ஜீயோனிசம் ஆழக்கால் பதித்து மூர்க்கமாயிருப்பதையும்; ஏகாதிபத்தியம் கூட்டாளி ஆயிருப்பதையும் நூல் சொல்கிறது .

 

 

[ வழக்கமாக நூல் அறிமுகம் செய்யும் போது நூலில் இருந்து சில செய்திகளை நான் எடுத்துச் சொல்வேன் .இம்முறை அப்படிச் செய்யவில்லை . ஏனெனில் நீங்களே முழுதாய் வாசித்து உள்வாங்க வேண்டும் என்பதால் ]

 

இந்த இரண்டு நூல்களையும் வாசிப்பது என்பது பாலஸ்தீனப் பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும் என்பது மட்டுமல்ல ; இங்கே இந்தியாவில் இந்துத்துவ மதவெறியர் பேசும் குரலும் இஸ்ரேல் ஜியோனிசத்தின் குரலும் ஒருப்போல் இருப்பதை உணரவும் இந்நூல் உதவுகிறது .

 

ஏகாதிபத்திய எதிர்ப்பும் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பும் இன்றைய காலகட்டத்தின் தேவை என்பதும் ; அது சீழ்பிடித்த முதலாளித்துவ [Crony capitalism] எதிர்ப்பின் இன்னொரு முகம்தான் என்பதும் இந்நூல் சொல்லும் பாடம் .

 

நாம் எந்த ஒரு பிரச்சனையையும் ஆழமாகப் புரிந்து கொண்டால்தான் ; நம்முடைய எதிர்ப்பு கூர்மையும் வலுவும் கொண்டதாகும் . அதற்கு இந்நூலை அவசியம் படியுங்கள் ! பரப்புங்கள் !

 

மோதி மிதிக்கவும் முகத்தில் உமிழவும் இளைய தலைமுறைக்கு அரசியல் உறுதி வேண்டும். அதற்கு இந்நூல் வாசிப்பு முதல் அடிவைப்பாக ஆகட்டும் ! நம் குரல் வலுக்கட்டும்.

 

1]பாலஸ்தீனம்  ,  ஆசிரியர் : தோழர் வெ.சாமிநாத சர்மா,

பக்கங்கள் : 80 , விலை : ரூ.80 /

2] பாலஸ்தீனம் : நம்மால் என்ன செய்ய முடியும் ? , ஆசிரியர் : இ.பா.சிந்தன் ,

பக்கங்கள் : 144 , விலை : ரூ.140 /

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
E mail : bharathiputhakalayam@gmail.com / 
www.thamizhbooks.com

சுபொஅ.

05/09/24.




மாண்பமை நீதிமான் அவர்களே !

Posted by அகத்தீ Labels:

 



மாண்பமை நீதிமான் அவர்களே !

 

இயேசு ,அல்லா ,ராமன் ,ஜெகநாத்

இன்ன பிற கடவுள்களை எல்லாம்

பிரபஞ்சத்தை விட்டு கடத்த ஆணையிடுங்கள் !

 

குறைந்த பட்சம்

இடைக்கால தடையாவது

உடனே பிறப்பியுங்கள் !

 

அவர்கள் ஆண்டுக் கணக்காய்

பாலஸ்தீனக் குழந்தைகளை

ஏறெடுத்து பார்க்கவும் மறுக்கிறார்கள் !

 

அவர்கள் சோமாலியா குழந்தைகளுக்கு

எந்த அரிசியிலும்

பெயர் எழுத மறுக்கிறார்கள் !

 

தன் கண்ணெதிரே நடக்கும்

பாலியல் வன்புணர்வை தடுக்காமல்

கண்டு களிக்கிறார்கள் !

 

ஆதிக்க கொடுஞ்சிறையில்

பாட்டாளி தோழர்களுக்கு

கடைக்கண் திறக்கவும் மறுக்கிறார்கள் !

 

மதம் பிடித்த மனிதர்களின்

மனிதமற்ற வன்முறைகளை

ஆசீர்வதித்து மகிழ்கிறார்கள் !

 

வல்லான் வகுத்ததே வாய்க்காலென

அவர்கள் பக்கமே சாய்ந்து

அறம் கொல்கிறார்கள் !

 

அச்சமும் அறியாமையும் அடிமைத்தனமும்

உச்சத்திற்கொண்டு வாழ்வதே

ஏழைக்கு விதிக்கப்பட்டதென நம்பச் சொல்கிறார்கள் !

 

இன்னும் இன்னும் சொல்லச் சொல்ல நீளும்

அத்தனை கொடுமைகளுக்கும்

சாட்சியாய் , கல்லாய் நிற்கிறார்கள் !

 

மாண்பமை நீதிமான் அவர்களே !

அருள்கூர்ந்து…

 

 

இயேசு ,அல்லா ,ராமன் ,ஜெகநாத்

இன்ன பிற கடவுள்களை எல்லாம்

பிரபஞ்சத்தை விட்டு கடத்த ஆணையிடுங்கள் !

 

குறைந்த பட்சம்

இடைக்கால தடையாவது

உடனே பிறப்பியுங்கள் !

 

சுபொஅ.

03/09/24.

 

 



வாழ்வின் வலியை பொதிந்த கவிதைகள்

Posted by அகத்தீ Labels:

 




வாழ்வின் வலியை பொதிந்த கவிதைகள்

நாமறிந்த திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியின் ஆறாவது கவிதைத் தொகுப்பு “ நினைவில் மிளிரும் ஜிமிக்கிக் கம்மல்” .

”கைவிட்ட
பலூன் மேலே போவதைத் தவிர
வழியில்லை.
அது பலூனுக்குத்
தெரியாது
கையில் இருக்கும் வரை.”

“ ஒவ்வொரு முறையும்
மரணம் வரை
உப்பி நிற்கிறது.”

இப்படி பலூன் இவரது கவிதையில் வாழ்வியல் பேசுகிறது .

“ ஒவ்வொரு ரயிலிலும்
யாரோ ஒருவரின் பசி வருகிறது.”

“அணில் ஏறிய மரமென
தடமின்றி மறைந்தும்
கழுவிக் கவிழ்த்திய பாத்திரங்கள்
காலத்தில் ஏராளம்.”

இப்படி வாழ்வின் வலியை பொதிந்து கவிதை தருகிறார்.

”இவ்வுலகில் பசியோடு
ஒரு பிள்ளை இருப்பதைச் சொல்ல பள்ளிக்கூட
மதிய உணவுத் தட்டொன்று
மிதந்து நகரின் மையத்தில் போகிறது .”

நகரத்து வெள்ளத்தை விவரிக்கும் கவிதையை இப்படித்தான் முடிக்கிறார்.

“ சைக்கிளில் பயணித்து
டீசல் விலையேற்றப்
போராட்டத்தில்
கலந்துகொண்ட
ஒரு மனிதன்
என்னைத் தோழர் என்று அழைத்தார்.”

தனக்காக அல்ல பிறருக்காக வாழ்பவன்தானே தோழர் .

“மேலே வரும் தகுதியுடைய
உனது கோப்புகளை
சத்தமின்றி கீழே எடுத்து வைக்கும்
மர்மக் கைகள் நிறைந்த உலகில்
நேர்மையாக இரு !”

இப்படி யதார்த்தத்தை பகடி செய்கிறார் .

நூல் நெடுக பல நெற்றியடி வரிகளோடு கவிதைகள் தந்த தோழர் சீனு ராமசாமிக்கு வாழ்த்துகள் .

நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல் . ஆசிரியர் : சீனு ராமசாமி
வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949
E mail : bharathiputhakalayam@gmail.com / www.thamizhbooks.com
பக்கங்கள் : 160 , விலை : ரூ.160 /

சுபொஅ.

03/09/24

அவசரமாய்....

Posted by அகத்தீ Labels:

 



அவசரமாக எழுந்து

அவசரமாக குளித்து

அவசரமாக காலை உணவருந்தி

அவசரமாக ஓடி

அவசரமாக பஸ் ஏறி

அவசரமாக அலுவலகம் போய்

அவசர அவசரமாக வேலை செய்து

அவசரமாக வீடு திரும்பி

அவசரமாக இரவு சாப்பாட்டை முடித்து

அவசரமாய் புணர்ந்து

அவசரமாய் உறங்கி…

மீண்டும் அவசரமாய் …

 

இப்போது

அவசரமாய் விடைபெறத் துடிக்கிறான்/ள்

முதுமையின் அவசரம் அறியாமல்

நோய்மை  சாவகாசமாய் வதைக்கிறது…

 

[ இது யாருடைய தனிப்பட்ட அனுபவமும் அல்ல ; பொது அனுபவம்.]

 

சுபொஅ.

02/09/24.

 


வாழை

Posted by அகத்தீ Labels:

 



மலையாளத்தில் சங்கம்புழா எழுதிய “ வாழக்குலா” காவியம் பெரிதும் வியந்து பாராட்டப்படும் . அறிஞர் அண்ணா எழுதிய “ செவ்வாழை” பெரும் வீச்சில் சென்ற்டைந்த ஓர் சிறுகதை . சோ. தர்மன் தானும் “ வாழையடி” என சிறுகதை எழுதி இருப்பதால் களத்தில் வந்து குதித்திருக்கிறார் .நம் பார்வையில் படாத இன்னும் பல இலக்கிய பதிவுகள் இருக்கக்கூடும் . வாழை விவசாயத்தை சுற்றி இன்னும் நிறைய நிறைய பல கோணங்களில் பேசும் இலக்கியப் படைப்புகள் வரவேண்டும். ஆரோக்கியமான போட்டி நல்லதே !

திரை உலகில் ” வாழை” முத்திரை பதித்துவிட்டது . மாரி செல்வராஜுவின் சொந்த அனுபவமும் ஓர் உண்மைச் செய்தியும் பின்னிப் பிணைந்த ஓர் திரைக்காவியம் வாழை. வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் வலி , கனவு ,ஆசை ,திறமை எல்லாம் நுட்பமாக அனுபவ முத்திரையோடு பதிவாகி இருக்கிறது .

படத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சின்னம் காட்டப்படுகிறது . அதை பச்சை குத்திய பெண் எல்லாம் வந்துள்ளதால் கம்யூனிஸ்டுகள் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாய் சிலர் விமர்சனம் செய்கிறார்கள் . எனக்கு அந்த மயக்கம் எல்லாம் இல்லை . பட்டுக்கோட்டையின் பாடலொன்றில் செங்கொடி வந்தபோது மாற்றி எழுதச் சொன்ன , ஏவிஎம் தான் செங்கொடியாய் காட்டிய சிவப்பு மல்லி எடுத்தது ; ஏன் ? லாபம் வருமெனில் எதையும் விற்பார்கள் முதலாளிகள் . ஆக வாழையை நான் வரவேற்க சிவப்பைக் காட்டுவது காரணமல்ல.

சிவனணைந்தானும் அவன் நண்பன் இருவரும் படத்தில் உயிர் சரடாய் உள்ளனர் . இருவரையும் சூப்பர் மேனாகக் காட்டாமல் சிறுவர்களின் குறும்பும் , சுட்டித்தனமும் , சண்டையும் நட்புமாய் உலவவிட்டிருப்பதும் பாராட்டுக்குரியது . இருவரும் படத்தில் தங்கள் நடிப்பாற்றலை பிரகாசிக்கச் செய்துள்ளனர் .

அழுகாச்சி காவியமாகிவிட்டது என்பது சிலரின் விமர்சனம் . துன்பவியல் படைப்புகளுக்கு உயிர்துடிப்பு அதிகம் ; ஆயினும் வலிந்து ‘சுபம் மங்களம்’ என முடிக்கும் திரையுலக சூத்திரச் சிமிழை மீறி நிற்பது திரைப்படத்தில் பலவீனமல்ல ;பலம்.

நானும் என் இணையரும் வாழை பார்த்தோம் . இருவருக்கும் பிடித்துவிட்டது .என் இணையர் எப்போது நெட்டில் வரும் மீண்டும் பார்க்கணும் என்கிறார்.

இன்று நகர் புறங்களில் வாழும் குழந்தைகள் அமேசனில் , இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் போட்டா எல்லாம் வந்துரும் என்று நினைக்கிறார்கள் . புழுங்கலரிசி தனிச் செடி என்பார்கள் . ஆனால் நாம் உண்ணும் ஒவ்வொன்றின் பின்னாலும் எவ்வளவு உழைப்பு எவ்வளவு வலி எவ்வளவு வியர்வை எவ்வளவு கண்ணீர் எவ்வளவு கொடுமை எவ்வளவு சுரண்டல் இருக்கிறது என்பதை அறிய மாட்டார்கள் . அவர்களுக்கு பாடம் சொல்ல வேண்டி இருக்கிறது .இன்னும் பல வாழைகள் தழைக்க வேண்டும் .உழைப்பின் வலி சொல்லப்பட வேண்டும் .

வாழைப் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் ! சிறுவர் தொழிலாளியாக நடித்த பொன்வேல் ,ராகுல் இருவரையும் தனித்து பாராட்டுகிறேன். இருவரும் படிப்பிலும் முத்திரை பத்தித்து முன்னேற வாழ்த்துகள் !

சுபொஅ.