தூரத்து சொந்தமாகிவிட்டேன்.

Posted by அகத்தீ Labels:

 






13/07/2024 சனிக்கிழமை அன்று தமுஎகச பொன்விழா ஆண்டு தொடக்க விழா மதுரையில் நடை பெறும் செய்தியை அறிந்து மகிழ்ந்தேன். தூரத்து சொந்தம் என்பார்களே அது போல தூரத்து ஆர்வலனாய் நெஞ்சம் நிறைந்து மகிழ்ந்து வாழ்த்துகிறேன்.

 

அவசரகாலத்தில் [1975-76 ] சிகரம் செந்தில் நாதன் ,தணிகைச் செல்வன் , இளவேனில் , என்.ஆர்.தாசன் ,கி,தா.பச்சையப்பன் ,சுப.செல்வம் போன்றோர்களோடு தோள் இணைந்து தமுஎச [அப்போது தமுஎகச அல்ல]வில் இயங்கிய நினைவுகள் பசுமையானவை .

 

சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியை பழவந்தங்கலில் நாங்கள் துவக்கி இயங்கிய காலம் அது . நான் ,உ.ரா.வரதராசன் ,அல.கந்தன் , தீனதயாளன் ,இளங்கோ என் அண்ணன் சு.பொ.நாராயணன் [ அப்போது அவர் செந்தில்நாதனின் டைப்பிஸ்ட் ]போன்றோர் தமுஎசவாக செயல்பட்டோம் .கவியரங்கம் ,பட்டிமன்றம் மறக்க முடியுமா ? பெரம்பூரில் டிஆர்இயு இளங்கோவும் வேறு சிலரும் கவின்கலைமன்றம் என்கிற பெயரில் நெல்வயல் சாலையில் நடத்திய பட்டிமன்றம் ,கவியங்கம் போன்றவற்றில் பங்கேற்றதை மறக்க முடியுமா ? மயிலாப்பூரில் எஸ்.கே.சீனிவாசனும் புதுவண்ணையில் கி.தா.பச்சையப்பனும் ,திருக்கழுகுன்றத்தில் தணிகையும் தமுஎச வை இயக்கினர் .நாங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். சிகரம் மாத  இதழில் என் கவிதைகள் வெளிவந்தன .சு.பொ.அலி என்பதுதான் தமுஎசவில் நான் செயல்பட்ட போது என் புனைப்பெயர் . [ அகத்திய லிங்கத்தின் முதல் எழுத்துகள் இணைந்து அலியானது ]

 

அவசராலத்தில் நாமக்கல்லில் நடைபெற்ற தமுஎச பயிற்சி முகாமில் நான் பங்கேற்றது சிறப்பான அனுபவம்   .  பயிற்சி முடிந்ததும் போலீஸார் கண்ணில் படாமல்  இரவு சேலத்திலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸில் ஜென்ரல் கம்பார்ட்மெண்டில் தோழர் .கே.முத்தையாவை பத்திரமாக அழைத்துக் கொண்டு சென்னை திரும்பியது ஓர் சாகசக் கதை போன்றது.

 

தோழர் இளவேனிலுக்கு பெண் பேசி முடிக்க தோழர்கள் கே.முத்தையா ,செந்தில்நாதன் உடன் நான் என மூவரும் சைதையிலிருந்து வேளச்சேரிக்கு அவசர காலத்தில் சென்று வந்த அனுபவம் தனி .

 

நான் சென்னை மாவட்ட தமுஎச இணைச் செயலாளராய் இயங்கிய காலத்தில் சென்னை நூலகக் கட்டிடத்தில் மாதந்தோறும் நடத்திய இலக்கிய சந்திப்பில் பேராசிரியர் கோ.கேசவன் ஆற்றிய உரைகள் பின்னர் “ மண்ணும் மனித உறவுகளும்” எனும் நூலாய் வெளிவந்தது .

 

கோலார் தங்கவயலுக்கு ச,செந்தில்நாதனுடன் நானும் சென்று இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற நினைவுகள் இனிமையானவை .

 

இந்திரா பார்த்தசாரதியின் “ குருதிப்புனல்” நாவலைச் சுற்றி மிகப்பெரிய விவாதம் நடந்தது . செந்தில்நாதன் , தணிகை ,இளவேனில் ,நான் எல்லாம் அந்நாவலை கடுமையாக விமர்சிக்கும் முகாம் , அஸ்வகோஷ் ,இளங்கோ நேர் எதிர். சூடு பறந்த விவாதம் . சிக்மண்ட் பிராய்டையும் அவர் தத்துவத்தையும் நான் அறிந்த காலம் அது .

 

கோவை நகராட்சி அரங்கில் நடைபெற்ற ஒரு தமுஎச மாநாட்டுக்கு இலங்கையைச் சார்ந்த க.சிவதம்பி சிறப்பு விருந்தினர் .அவரைக் கூட்டிவருவதும் திருப்பி அனுப்பி வைப்பதும் பாட்டாளி பதிப்பக பாண்டியன் மற்றும் கவிஞர் ஏ.தே ,சுப்பையா பொறுப்பு. நானும் கூடவே இருக்குமாறு பணிக்கப்பட்டேன். அவரோடு நீண்ட நேரம்  நாங்கள் உரையாடியது மிகப்பெரும் வாய்ப்பு . பெரிய அறிவுத் திறப்பு எனலாம் .

 

கோமல் சுவாமிநாதன் வரவேற்புக்குழு தலைவராய் இருந்து சென்னையில் நடத்திய மாநில மாநாட்டில் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்ட நினைவுகள் கண்முன் படமாய் ஓடுகின்றது.

 

அவசரகாலம் விலக்கப்பட்டு தீக்கதிர் 1977 ஆம் ஆண்டு மே தின சிறப்பிதழில்  முதல் பக்கத்தில் அரைப்பக்கம் “வாழ்க்கைப்  பாடலில் சில வரிகள்” எனும் தலைப்பில் கேஷுவல் லேபர்கள்  தினக்கூலிகள் பற்றி நான் எழுதிய கவிதையை தோழர் .கே.முத்தையா பிரசுரித்தார் . அப்போது நான் பெஸ்ட் அண்ட் கிராம்டன் லிப்ட் பேக்டரியில் கேஷுவல் லேபர் . அங்கு சிஐடியு சங்கம் . தோழர் .வி.பி.சிந்தன் தலைவர் . என் கவிதையை பேக்ட்ரி முழுக்க சுவற்றில் ஒட்டிவிட்டார் சங்கச் செயலாளர் கோபிநாத் . ஊதியத்துக்கான சம்பளப் பேச்சுவார்த்தை . தினக்கூலிகளை நிரந்தரம் செய்ய கோரியது சங்கம் .பட்டியலில் முதலில் இருந்த என் பெயரை தவிர்த்தால் எல்லோரையும் நிரந்தரமாக்குவோம் என நிர்வாகம் நிர்ப்பந்தம் .என் கவிதை எதிரொலி .அவன் கட்சி முழுநேர ஊழியராகப் போகிறான் .அவனை விட்டுவிடுங்கள் என்று வி.பி.சி சொல்லிவிட ஒப்பந்தம் கையெழுத்தானது . “ வேலை பறிபோனதும் “ “கட்சி முழுநேர ஊழியரானதுமே” என் கவிதைக்கு கிடைத்த முதல் விருதும் சிறப்பான பரிசும் அங்கீகாரமும் ஆகும் .என் கவனமும் ஈடுபாடும் வாலிபர் சங்கம் நோக்கி முழுமையாக  திரும்பிவிட்டது .தீக்கதிர் பணிக்கு மீண்ட பின் எழுத்துப் பணியில் அதிகம் ஈடுபடலானேன். வாலிபர் சங்கத்தில் இருந்த போது “ இளைஞர் முழக்கம்” ஆசிரியராய் இயங்கினேன். இலக்கிய ஆர்வமும் தொடரத்தான் செய்தது .

                       -

நான் சென்னையில் கலைஇலக்கிய அரங்கிற்கு பொறுப்பாக செயல்பட்ட காலத்தில்  “சென்னைக் கலைக்குழு” பிரளயன் பயிற்சி அளிக்க 13 கலைக் குழுக்கள் உதயமானது .  நெல்சன் மண்டேலா சேர்ந்திசைக்குழுவும்  , வெற்றி வளவனின் புதுயுகம் இசைக்குழுவும் முக்கியமானது .என் இணையர் ஆசிரியை பாடகராய் இசைக்குழுலில் இயங்கினார் .சில இசைப் பேழைகளில் அவர் பாடிய பாடலும் இடம் பெற்றது . அதில்  உருவான விடியல் கலைக்குழு தமிழகத்தில் பல ஊருக்கு சென்று வந்தது .

 

சொல்லச் சொல்ல நீளும் …

 

கடைசியாக திருப்பரங்குன்றத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றேன் .அதன் பிறகு தீக்கதிர் பணிச் சுமை .அ.குமரேசன் ,மயிலை பாலு ,நான் மூவரும் தமுஎச பணிக்கு போவதால் ஏற்படும் நெருக்கடியை தலைவர்கள்  சுட்டிக்காட்டியபின் தீக்கதிர் பொறுப்பாசிரியராக செயல்படும் நான் தமுஎகச விலிருந்து விடுபடுவது என்பது அமைப்பின் முடிவானது .அதன் பின் உறுப்பினராகக்கூட நான் அங்கு இல்லை. தூரத்து சொந்தமாகிவிட்டேன்.

 

எங்கிருந்தாலும் தமுஎகச பொன்விழா எனும் செய்தி அறிந்த மகிழ்வில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் என் நினைவுகளைப் பகிர்ந்தேன் ஆர்வக் கோளாறால்…

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

09/08/2024.

 

 

0 comments :

Post a Comment