இதுவும் கடந்து போகும்...

Posted by அகத்தீ Labels:

 



உன் நினைவில்

யார் யார் வாழ்கிறார்கள் ?

உன் பெயரன் நினைவில்

யார் யார் வாழ்வார்கள் ?

 

உன் ஏழாவது தலைமுறை

உன்னை நினைவு வைத்திருக்குமா ?

உன் ஊரார் நினைவில்

உனக்கு இடம் உண்டா ?

 

பிறந்தவர் எல்லோரையும்

நினைவில் வைத்திருக்க முடியுமா ?

வரலாறு என்னை நினைவு வைத்திருக்க

வேண்டிய அவசியமில்லை என்றார்கள்

இன்னும் நம் நெஞ்சில் வாழ்ந்துகொண்டிருக்கிற

பிடல் காஸ்ட்ரோ  ,இஎம்எஸ் ,ஜோதிபாசு …

 

இந்த பிரபஞ்சத்தில்

பூமியே மிகச் சிறிய கடுகு …

இந்த பூமியில் நீயார் ?

உன் இடம் யாது ?

கொஞ்சம் யோசித்தால்

பெருமூச்சே மிஞ்சும் ..

 

எந்த நொடியிலும் யார் வாழ்வும்

முடிந்து போகலாம்

வாழ்கிற காலம் வரை

அன்பு செய் ! அன்பு செய் !

மானுட இனத்தை அன்பு செய் !

இயற்கையை நேசி !

இதயமும் மூளையும் திருப்தி கொள்ள

வாழ முனைந்து நில் !

 

உன் நினைவில்

யார் யார் வாழ்கிறார்கள் ?

உன் பெயரன் நினைவில்

யார் யார் வாழ்வார்கள் ?

 

சுபொஅ.

30/7/24.

 

 

 

 


இன்றைய முதியவரின் சிக்கல் :

Posted by அகத்தீ Labels:

 



இன்றைய முதியவரின் சிக்கல் :

 

நேற்றின் முதியவர் யாரேனும் உறவினர் /நண்பர் வீட்டுக்கு செல்ல நேரிட்டாலோ அல்லது அவர்கள் தம் வீட்டுக்கு வந்தாலோ அவர்களிடம் கேட்க நிறைய கேள்விகள் இருந்தன …

 

செளக்கியமா ? சுகர் பிரஸர் இல்லையே !

ஊரில் மழை எல்லாம் எப்படி ? விவசாயம் எப்படி இருக்கு ?

கோவில் கொடை முடிஞ்சிடிச்சா ?

பணி ஓய்வுக்கு பிறகு பொழுது எப்படிப் போகுது ?

பென்சன் ஒழுங்கா வருதா ?

பொண்ணுக்கு /பையனுக்கு கல்யாணம் ஆயிடிச்சா ?

பேரன் பேத்திகள் எத்தனை ?

பையன் என்ன படிக்கிறான் / எங்கு வேலை செய்யுறான் ?

உங்க மச்சான் வீட்டில / தங்கை வீட்ல / தம்பி வீட்ல எல்லோரும் சவுக்கியமா ?

நம்ம பாட்சா / பார்த்திபன் எப்படி இருக்கான் ?

 

இப்படி கேள்விகள் வந்து கொண்டே இருக்கும் .

 

அத்துடன்….

 

நல்லா உடம்ப பார்த்துக்கோ / நல்லா படி /சீக்கிரம் குழந்தை பெற்றுக்க / வேலை தேடிக்கோ / சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ இப்படி ஒவ்வொருவரிடமும் சொல்ல நிறைய உபதேசங்களும் கைவசம் இருந்தன.

 

இன்றைய முதியவருக்கோ …

 

இப்போது காலம் மாறிவிட்டது … சந்திப்புகள் அருகிவிட்டன . எப்போதாவது சந்தித்தால்கூட நலம் என்பதுக்கு மேல் விசாரிக்க எதுவும் இல்லை . சந்தித்ததில் மகிழ்ச்சி எனச் சொல்வதைத் தவிர வேறு வார்த்தைகளில்லை .  டிவி மெகா தொடரில் /அலைபேசி அழைப்பில் மூழ்கிவிடவே நேரம் போதவில்லை …

 

அதுமட்டுமல்ல ஒருவர் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா / பிள்ளை பெற்றுக் கொள்ளலாமா கூடாதா  / படிக்கணுமா வேண்டாமா / வேலை கிடைத்ததா இல்லையா  / என்ன மாத்திரை சாப்பிடுகிறார் / என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்….

 

இப்படி எதை எதையோ துருவி துருவி கேட்க நீ யார் ? அவரவர் விருப்பம் / அவரவர் தேர்வு . அதை நீ ஏன் நோண்ட வேண்டும் ? அதனால் உனக்கு என்ன பயன் ? அவர்கள் சொந்த விவகாரத்தை நோண்டி நுங்கெடுக்க உமக்கென்ன அதிகாரம் ? இப்படி ஆயிரம் கேள்விகள் எழுகின்றன .

 

குசலம் விசாரிக்கவும் உரையாடவும் பழைய செக்கு மாட்டு தடத்தை விடவும் முடியாமல் , புதியன எவையென தெளிவும் கிடைக்காமல்  இன்றைய முதியோர் படும் துயர் அதிகம் .

 

இன்ப துன்பங்களில் ஒருவருக்கு ஒருவர் பங்கேற்பது என்பது வெறும் சடங்காக மாறிக்கொண்டிருக்கிறதோ ?

 

வந்தோம் பார்த்தோம் போனோம் என்பதுதான் சந்திப்பு என்றாகிப் போகிறதோ ?

 

அலைபேசியில் மணிக்கணக்காய் உரையாடிக் கொண்டே இருக்கிறார்களே ! அப்படி என்னதான் பேசுவார்கள் ?

 

உரையாடல்களிலும் உறவாடல்களிலும் புதிய தடம் உருவாகிக் கொண்டு இருக்கிறதோ ? முதியோர் அதில் அன்னியப்பட்டு நிற்கிறார்களோ ?

 

[ அண்மையில் முதியோர் சிலரோடு உரையாடிய போது அவர்கள் வெளிப்படுத்திய கவலைகள் என் வழி பதிவாகி இருக்கிறது .அவ்வளவுதான்..]

 

 

சுபொஅ.

25/07/2024


சிக்கலின் முடிச்சை அறியாமல் தீர்வை நெருங்க முடியாது….

Posted by அகத்தீ Labels:

 



 


 

சிக்கலின் முடிச்சை அறியாமல் தீர்வை நெருங்க முடியாது….

 

காலநிலைமாற்றம் ,புவிவெப்பமயமாதல் குறித்த  சூற்றுச்சூழல் அக்கறையோடு அறிவியல் பார்வையோடு எழுதப்பட்ட 28 கட்டுரைகளின் தொகுப்பே “சமகால சுற்றுச்சூழல் சவால்கள்” எனும் இந்நூல். இத்துறையில் ஆரம்பப்பள்ளி மாணவனான நான், வாசித்து அறிந்த சிலவற்றை இங்கு பகிர விரும்புகிறேன்.

 

கதாநாயகன் /வில்லன் , தேவர்கள்/அசுரர்கள் ,பாவம் /புண்ணியம் , தீட்டு/புனிதம்  என எதிரெதிர் நிலைகளை கட்டமைத்து பேசுவதும் எழுதுவதும் புரிந்து கொள்வதும் சுலபம் . ஆயின் சுற்றுச்சூழல் சார்ந்து அப்படி பேசிவிடவும் முடியாது . எழுதிவிடவும் கூடாது .

 

சுற்றுச் சூழல் சவால்கள் மிகவும் சிக்கலானது. இதனைப் புரிந்து கொள்ள தட்டையான பார்வை ஒருபோதும் உதவாது .இந்நூலில் உள்ள 28 கட்டுரைகளையும் வாசிக்கும் போது நூறு கோணங்கள் புலப்படுகின்றன . ஒரு பக்கம் எவ்வளவு கடுமையான சூழலில் சிக்கி இருக்கிறோம் , இனி மனித குலம் அவ்வளவுதான் எனத் தோன்றுகிறது . மறு பக்கம் கடுமையான முடிச்சுதான் ஆயின் அவிழ்க்க முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.

 

ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்வை நோக்கி நகர்த்தும் மனிதகுலம் ; ஒவ்வொரு தீர்விலும் புதிய பிரச்சனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது . ஆயினும் அங்கே முடங்கி விட முடியாது முயன்று முன்னேறி புதிய தீர்வை நோக்கி நகர வேண்டி இருக்கிறது . மீண்டும் புதிய பிரச்சனைகள் … இப்படித்தான் வளர்ச்சியும் இருக்கும் அறிவியலும் இருக்கும் …

 

 

ஓசோன் படலத்தில் ஓட்டை என்கிற பிரச்சனை ஓங்கி இருந்த 2000 ஆம் ஆண்டு நான் ஒரு பத்திரிகையாளர் குழுவில் சீனா சென்றிருந்தேன் அங்கு உரையாடும் போது சீனர்கள் சொன்னார்கள் “ ஓசோன் படலம் ஓட்டைவிழுவது உண்மைதான் ;ஆயினும் மீள முடியும் . இயற்கை தீர்வையும் தன்னுள் கொண்டுள்ளது.நாம் கொஞ்சம் திருந்தினால் போதும் “ நாங்கள் நம்பவில்லை . சீனா அதீதமாகப் பேசுகிறது என்றே கருதினோம். இந்த தொகுப்பில் த.வி.வெங்கடேஸ்வரன் கட்டுரையை வாசிக்கும் போது தெளிவு கிடைத்தது .

 

புவி வெப்பமயமாவதில் இருந்து மீள மரம் நடும் விழாக்கள் ,சூரிய ஆற்றல் மின்சார பரப்புரை என பொதுவாய் நாம் பேசும் எளிய தீர்வுகள் மட்டுமே முழுமையானதுமல்ல சிக்கலில்லாததுமல்ல என்பது இந்நூலை வாசிக்கும் போது தெளிவாகிறது .

 

“இஸ்திரி செய்யாத கசங்கிய ஆடையை அணிவது குற்றம் அல்ல ;தவறும் அல்ல. ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் காலநிலை மாற்றத்தை தடுப்பதில் நாமும் பங்கு வகிப்போம் எனக் கூறுவது ஏமாற்றுவேலை” என த.வி.வெங்கடேஸ்வரன் கூறியிருப்பது மிகை அல்ல .உண்மை .

 

மீண்டும் பழமைக்குச் செல்வோம் , கோவணம் உடுப்போம் போன்ற வாதங்கள் சிக்கலின் இறுக்கத்தை முடிச்சை அறியாமல் மேம்போக்காகப் பேசுகிறவையே . அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியால் உண்டான பிரச்சனைகளுக்கு தீர்வை , கற்பனையாகவோ பழமையான முறையிலோ கட்டமைத்துவிட முடியாது , மாறாக அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றத்தில் சுற்றுச்சூழல் பார்வையை இணைத்தே தீர்வு காண முடியும் என்பதை இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் நிறுவுகின்றன .

 

பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு ,உடை ,வாழ்விடம் ,கல்வி ,வேலைவாய்ப்பு ,குடிநீர் போன்றவற்றை அளிக்கத் திட்டமிடும் போது நாம் இயற்கையை பகைத்துக் கொண்டு இதனை செய்துவிட முடியாது .

 

“ அறிவியல் விரோத சூழல் அடிப்படைவாதிகளையும்,ஆளும் வர்க்கங்களின் வளர்ச்சி மற்றும் சூழல் தொடர்பான மக்கள் விரோதக் கொள்கைகளையும் அம்பலப்படுத்த இத்தகைய விவாதம் உதவும்.” என வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியிருப்பது இந்நூல் முழுமைக்கும் பொருந்தும்.

 

இன்னும் சொல்லப் போனால் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி செயற்கை நுண்ணறிவு போன்றவை சூற்றுச்சூழல் மாசுகேட்டை துல்லியமாய் அறியவும் அளக்கவும் விடை காணவும் எப்படி உதவுகின்றன என்பதையும் ஓர் கட்டுரை சொல்லுகிறது .

 

பொதுவாய் மரபணு தொழில் நுட்பம் ஆபத்தானது என்பது பொதுபுத்தியில் உறைந்துள்ளது .ஆயின் அதே மரபணு மாற்ற தொழில் நுட்பம் அதீத வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் தாவரங்களை உருவாக்கவும் பயன்படுத்த முடியும் என்கிறது ஒரு கட்டுரை .

 

“ வருங்காலத்தை நேர்மறை எண்ணங் கொண்டு நவீன தொழில் நுட்ப உதவி கொண்டு எதிர்கொள்வோம்.புவி சூட்டைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபடுவோம்.” என டி.திருநாவுக்கரசு சொல்வது நம்பிக்கை அளிக்கிறது .

 

சிள் வண்டுகள் ,பறவைகள்  இவற்றுக்கும் காலநிலை மாற்றத்துக்கும் புவி வெப்பமாதலுக்கும் உள்ள தொடர்புகள் நாம் அறிய வேண்டிய செய்தி .சாலை நடுவிலுள்ள டிவைடர்களில் புதர் வளர்க்க சொல்லும் போது . பொதுவாய் என்ன தோன்றும் , புளு பூச்சி அதிகரிக்கும் என்றே தோன்றும் . ஆயின் அவை செய்யும் நன்மைகள்  அறிவோமா ? காடு வளர்ப்போம் எனச் சொல்லும் போதே அயல் படர் உயிரினங்களின் ஆபத்தை உணர்ந்தோமா ? சுற்றுச் சூழலுக்கு பெரிதும் தீங்கு செய்கிறவர் யார் ஆனல் அதன் சுமை யார் மீது சுமத்தப் படுகிறது என்பதை கவனிக்காமல் நகர்ந்துவிட முடியுமா ? வளர்ந்த நாடுகளும் பெருமுதலாளிகளும்தான் சுற்றுச்சூழல் சீர்கேட்டின் முதன்மைக் குற்றவாளி என்பதை கணமும் மறக்கலாமா ? “பழங்குடிகள் – வனம் – சுற்றுச்சூழல்” குறித்து இத்தொகுப்பில் ஒரு கட்டுரை சேர்த்திருக்கலாமே ? ஏன் தவறவிட்டுவிட்டார்கள் ?

 

கடல் சார் சவால்கள் ,நெகிழி சவால்கள் ,வேளாண் சவால்கள் ,நிலத்தடி நீர் சவால்கள் ,நகர்மய சவால்கள் ,போக்குவரத்து சவால்கள் ,ஒளி மாசு  என பல்வகையில் சூற்றுச்சூழல் நெருக்கடிகளை இந்நூல் பேசுகிறது . “ நீலம் இல்லாவிட்டால் பச்சை இல்லை” என்கிறார் அறிவியலாளர் சில்வியா எர்ல் . கடலைப் பாதுகாக்காமல் புவியின் சூழலை மேம்படுத்த முடியுமா ? நெகிழிகள் மூலம் அதுவும் மக்கா நெகிழிகள் மூலம் சூழ்ந்துள்ள பேரபாயம் இன்னும் இந்திய சமூகத்தின் பொது புத்தியில் உறைக்கவே இல்லையே எப்படி சரி செய்வது ?

 

பொதுவாய் சூற்றுச்சூழல் தூய்மைவாதிகள் மார்க்சியத்தை எதிராக நிறுத்துவார்கள் .ஆனால் மார்க்சியம்தான் சுற்றுச்சூழல் குறித்த மெய்யான அக்கறை கொண்டிருக்கிறது . ஒருதலைப் பார்வையை கொள்ளாமல் ஒருங்கிணைந்த பார்வையைத் தருகிறது .அதனை உள்வாங்க இந்நூல் உதவுகிறது .

 

இந்நூலின் கடைசி கட்டுரையில் ஆயிஷா நடராஜன் சுற்றுச்சூழல் குறித்த முக்கியமான ஒன்பது ஆங்கில நூல்களை அறிமுகம் செய்திருக்கிறார் .வாய்ப்புள்ளோர் அவற்றை தேடி வாசிக்கலாம்.

 

இந்நூலை வாசிக்கும் போது பல்வேறு புதிய சொற்களை நாம் அறிந்தாக வேண்டி இருக்கிறது .அவற்றை எல்லாம் நினைவில் வைத்திருப்பது சுலபமல்ல . ஒரு முறைக்கு இரு முறை வாசிப்பதும் , அந்தக் கலைச் சொற்களை அடிக்கோடிட்டு வைத்து தேவைப்படும் போது திருப்பிப் பார்ப்பதும் அவசியமாகிறது .

 

இவையனைத்தும் சுற்றுசூழல் நெருக்கடியின் பல்வேறு முகங்களை முனைகளை சிக்கல்களை நமக்கு புரிய வைக்க மூயற்சிக்கின்றன . பிரச்சனைகளும் எளிதல்ல .தீர்வுகளும் எளிதல்ல .பிரச்சனைகள் ஒரே நாளில் வெடித்ததல்ல காலவெளியில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்தவற்றின் எதிர்வினைகளாகும் .தீர்வு ஒரே நாளில் ஒரே கஷாயத்தில் கிடைத்துவிடாது . நெடிய போராட்டம் .அறிவியல் பார்வையுடன்தான் போராடியாக வேண்டும் .அதற்கு இந்நூல் வழி ஒரு திறப்பு உருவாகட்டும் !

 

பெருகும் மக்கள் தொகைக்கு வாழ்வளித்துக் கொண்டே புவியைக் காப்பாற்றி அடுத்த தலைமுறையிடம் கையளிக்க நாம் நேற்கொள்ள வேண்டிய போராட்டத்தில் இந்நூல் ஒர் தொடக்க ஆயுதமாகட்டும் !

 

சமகால சுற்றுச்சூழல் சவால்கள் , [bookday.in சுற்றுச்சூழல் மலர் ]

தொகுப்பாசிரியர்கள் : எஸ் .விஜயன் , த.வி.வெங்கடேஸ்வரன் , ஆயிஷா நடராஜன் ,செ.கா ,ஸ்ரீகுமார் ,டயானா

வெளியீடு : பாரதி புத்தகாலயம் , தொடர்புக்கு : 044 24332924 / 8778073949,

E mail :    bharathiputhakalayam@gmail.com  /  www.thamizhbooks.com

பக்கங்கள் : 272 , விலை : ரூ.400 /

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்

25/07/2024.

 


மணலை வடமா திரிச்சேன்

Posted by அகத்தீ Labels:

 



[ முதல் நாலுவரி நேற்று எழுதி பதிந்தது . இன்று மேலும் எட்டு வரிகளோடு பதிகிறேன் .கண்டிப்பா இதுல பட்ஜெட் அரசியல் ஏதும் இல்ல சாமி !]

 

மணலை வடமா திரிச்சேன்

தேரு நகரலை சாமி - கடல்

நுரையில அல்வா கிண்டினேன்

வயிறு நிறையல சாமி !

 

காற்றுல கணக்கை எழுதினேன்

ஓடி அடையல சாமி! –சும்மா

கனவுல கல்யாணம் பண்ணினேன்

குழந்தை பொறக்கல சாமி !

 

மந்திரத்தில மரத்தை நட்டேன்

தோப்பு விளையல சாமி – ஆள

சமுத்திரத்தில நடக்க வச்சேன்

மூழ்கிப் போச்சே சாமி !

 

சுபொஅ.

24/07/2024.

 

 

 

 

 

 


நினைவுச் சங்கிலி ஆங்காங்கே

Posted by அகத்தீ Labels:

 





நினைவுச் சங்கிலி

ஆங்காங்கே

அறுந்துகிடக்கிறது .

 

மனத்திரையில்

முன்னும் பின்னுமாய்

காட்சிகள் நகர்கின்றன

 

திடீரென யாரேனும்

பழைய குளத்தில்

கல்லெறிந்து விடுகின்றனர்

 

அதுவும் மரணங்கள்

நினைவுக் குட்டையைக்

கலக்கிவிடுகின்றன

 

அப்போது மேலெழுந்த

நினைவுகளைக் கேட்க

காதுகள் தயாராய் இருக்கின்றன

 

பதுங்கி இருந்த நினைவுகள்

பேசி முடித்தப்பின்னரே 

வரிசையாய் முண்டியடிக்கின்றன

 

இணையம் போல் கையிருப்பு

அனைத்தையும் கொட்டிவிடுவதில்லையே

நம் இதயம் .நம் மூளை.

 

சுபொஅ.

19/07/24.

 

 


ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

Posted by அகத்தீ Labels:

 

 “ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதாண்டா வளர்ச்சி”

என்று பட்டுக்கோட்டை பாடிய வரிகள் குழந்தைகளுக்கானதுதான். ஆயின் இன்று சில முதியவர்களை பார்க்கும் போது இதையே பாடத் தோன்றுகிறது .

 

முதுமை என்பது வெறுமே வயதோடு சம்மந்தப்பட்டதல்ல .முதிர்ச்சி உடலுக்கு வரும் போது உள்ளமும் முதிர்ச்சி அடைய வேண்டும், சிந்தனையும் முதிர்ச்சி அடைய வேண்டும் ,பண்பாடும் முதிர்ச்சி அடைய வேண்டும் . அப்போதுதான் கொண்டாடப்பட வேண்டிய முதுமையாக அது இருக்கும் .கிட்டத்தட்ட எல்லோரும் தோற்றுப் போகிற இடம் அதுதான்.

 

பக்குவமாதல் எனில் முடங்கிப் போதலும் அல்ல ; எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தலும் அல்ல .  புரிந்து வழிவிடுதலும் ,புன்னகைத்து தட்டிக் கொடுத்தலும் ,புதிய முயற்சிகளுக்கு நம்பிக்கை தருதலும் ,கேட்காதவரை எதுவும் சொல்லாதிருத்தலும் , கேட்டபின் சொன்னாலும் அதையேதான் அவர்கள் செய்ய வேண்டுமென எதிர்பார்க்காதிருப்பதும் அடங்கும் .

 

ஒவ்வொருவருக்கும் மூளை இருக்கிறது .ஒவ்வொருவரிடமும் அவருவருக்கான நியாயத் தராசும் இருக்கிறது . இதனை ஏற்றால் முதுமையோ இளமையோ உறவும் நட்பும் நீடிக்கும் நிலைக்கும் !!

 

[ இப்படி கருத்து கந்தசாமியாய் உளறாதிருப்பதும் முதுமையின் தேவைதானே !]

 

சுபொஅ.

 

‘வீட்டுக்கு ஒரு கடை’

Posted by அகத்தீ Labels:

 


 

 ‘வீட்டுக்கு ஒரு கடை’

ஒவ்வொரு தெருவிலும்

 யார் வகுத்த திட்டம் ?

பிழைப்பின் நிமித்தமோ ?

 

காய்கறிக் கடையில்

கருவாடும் கரம் மசாலாவும்

பெட்டிக் கடையில்

சுடச்சுட பஜ்ஜியும் போண்டாவும்

 

குட்டி டெக்ஸ்டைல் கடையில்

குடையும் செருப்பும்

பூக்கடையில் கீரைக்கட்டும்

டிபன் செண்டரில் பேன்ஸிஐட்டமும்

 

கலந்து கலந்து கடை திறந்தும்

கொள்வாரின்றி குந்தி இருந்து

குட்டி போட்ட வட்டிக் கடனில்

கைமாறி  கைமாறி  முகம்மாறி

 

தொலைந்து போனவர்களையும்

தொலைந்து கொண்டிருப்பவர்ளையும்

எந்தக் கணக்கில் வரவு வைப்பது ?

’ அச்சா தீன்’ கனவுக் கணக்கிலா ?

 

சுபொஅ.

14/07/24.

 

 


Posted by அகத்தீ Labels:

 




 

போராட்டக்காரனின் சுயகதை மட்டுமல்ல ..

 

“ இணுங்கு” என்கிற தலைப்பைப் பார்த்ததும் இது ஓர் நாவல் என்றுதான் நினைப்பார்கள் . முதல் மூன்று அத்தியாயங்களை படிக்கும் போதும் ,கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் போதும் ; அதே எண்ணம்தான் மேலிடும் . ஆயின் இது சுயசரிதை என்பதுதான் ஆச்சரியமளிக்கும்.

 

மலைகளின் மீது காதல் கொண்ட ஒருவரின் எழுத்தாய் நூல் தொடங்கி வற்றா அந்தக் காதலோடு இந்நூல் நிறைவு பெறுகிறது .

 

தோழர் போஸ்பாண்டியன் பூர்வீகம் ராமநாதபுரம்தான் எனினும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தலையார் தேயிலைத் தோட்டம் . தேவிகுளம் ,பீர்மேடு ,மூணாறு ,இடுக்கி என இவரின் கால் நடந்து கடந்த மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை எழில் இவர் நெஞ்சோடு கலந்த நூலில் அருவியாய் வழிந்தோடுகிறது .பூகோள விவரிப்பு அம்மண்ணின் மைந்தர் என பறை சாற்றுகிறது .  “ஓய்வறியா பயணக் காதலன்” என்பதை இந்நூலை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர் .

 

இவரின் தந்தை தீவிர காங்கிரஸ்காரர். அக்னிதத் என்கிற பட்டப் பெயரிலே அறியப்பட்டவர் . முற்போக்கான வீட்டுச் சூழல் .தந்தை ஊரார் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் . தாய் தாயம்மாள்  தந்தை சீனிச்சாமி என்ற அக்னிதத்தும் ஆசிரியப் பணியில் இருந்தனர்.வீட்டு சூழலே சுதந்திர சிந்தனைக்கும் பொது வாழ்வுக்கும் ஊக்கம்தருவதாக இருந்தது .

 

போஸ்பாண்டியன் படிக்கும் போதே இந்திய மாணவர் சங்கப் போராளி , பின்னர் வங்கிப் பணிக்கு வந்த போது அதே போர்க்குணம் தொடர செயல்பட்டவர் . வங்கி மேலாளர்கள் பொதுவாய் நிர்வாகத்துக்கு ஆதரவாய் இருக்கும் போது  இவர் ஊழியர்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தவர் . பாண்டியன் கிராம வங்கியின் போர்க்குணமிக்க தொழிற்சங்க வரலாற்றில் சில ஏடுகளை தன் சுயசரிதையோடு புரட்டிக் காட்டியுள்ளார் போஸ்பாண்டியன் .

 

அடுத்து மிக முக்கியமானது அறிவொளி இயக்கத்திலும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்திலும் இவர் ஆற்றிய பணிகளும் பெற்ற அனுபவங்களும் நினைத்து மகிழ்வதற்கானது மட்டுமல்ல .உலகுக்கு உரக்கச் சொல்லப்பட வேண்டிய செய்தியும்கூட .  

 

“முக்கியமாக அறிவொளி இயக்கம் மக்களிடம் கல்வியறிவோடு சேர்த்து ,தலைமைப் பண்பையும் உருவாக்கியது .அறிவொளி இயக்கம் செயல்படத் துவங்கிய பிறகே கிராமங்களிலும் ஊராட்சிகளிலும் சுய உதவிக் குழுக்களின் தலைவராக பெண்கள் முன்னிலை பெறுவது அதிகரித்தது . அறிவொளியின் சாதனையாக ,இந்த முப்பது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பெண்கல்வி அடைந்திருக்கும் உச்சத்தை சுட்டிக்காட்ட முடியும் . அறிவொளி இந்த மாபெரும் முன்னேற்றத்தின் நம்பிக்கை ஊற்றாக இருந்தது “  என போஸ் பாண்டியன் கூறியிருப்பதை அசை போட்டுப் பார்க்கிறேன். அறிவொளி காலத்தின் தினமலர் ஏடு தினசரி அறிவொளி இயக்கத்தின் மீது சேறுவாரி இறைத்ததையும் இடதுசாரி கம்யூனிஸ்ட் புரட்சிப் பிரச்சாரம் செய்வதாக எழுதி குவித்ததையும் நான் இணைத்துப் பார்க்கிறேன். அறிவொளி இயக்கம் செய்த சாதனை இன்னும் விரிவாக ஆழமாக ஆய்வு பூர்வமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தும் வேண்டுகோளும் ஆகும் .

 

இவரின் அன்பு மனைவி இந்திரா மேல்நிலைப் பள்ளி ஆசிரியை .ஆசிரியர் போராட்டங்களில் பங்கேற்றவர் . குடும்பமே இணைந்து களத்தில் நின்றிருப்பது பாராட்டுக்குரியது .

 

அண்மையில் நானும் என் இணையரும் பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் செல்ல நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணப்பட்ட போது அதே பெட்டியில் தோழர் போஸ்பாண்டியன் குடும்பமும் பயணித்தது .நான் அவரை கடந்துசெல்லும்  போது எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே என யோசித்து கேட்க , இருவரும் கைகுலுக்கி பழைய நினைவுகளில் மூழ்கினோம் . நூல் எழுதிக் கொண்டிருப்பதாய் அப்போது சொன்னார் .

 

தோழர் மாதவராஜ் அணிந்துரையும் , கார்த்திக் புகழேந்தியின் அன்புரையும் வாசிக்கும் போது கூடுதல் நெகிழ்வு உண்டாகிறது .

 

நூலில் ஒரு குறை. போஸ்பாண்டியன் அவர் மனைவி ,தந்தை ,தாய் உள்ளிட்ட குடும்ப புகைப்படங்கள் சிலவற்றையும் சில போராட்டப் படங்களையும் இணைத்திருக்கலாம் .ஏனெனில் வரலாற்று ஆவணத்துக்கு இவை அவசியமல்லவா ?

 

வாசிப்பீர் ! இது ஓர் போராட்டக்காரனின் சுயகதை மட்டுமல்ல ..நாம் அறிய வேண்டிய வரலாற்று நினைவூட்டலும்கூட …

 

இணுங்கு , [ ஒரு போராட்டக்காரரின் நினைவுக் குறிப்புகள்]

ஆசிரியர் : P.S.போஸ்பாண்டியன் ,

வெளியீடு : SIBA ,எண்- 8 வது தெரு , சிபா இல்லம் , அஜீஸ் நகர் , அருப்புக் கோட்டை -626101 . தொடர்புக்கு : 91 94866 67510 .பக்கங்கள் : 142  , விலை : 200 /

 

 

 

 

சு.பொ.அகத்தியலிங்கம்.

11/07/2024.

 

 

 

 

 


புதுவைத் தொழிலாளிக்குக் கோவைத் தொழிலாளியின் கடிதம்!

Posted by அகத்தீ Labels:

 




புதுவைத் தொழிலாளிக்குக்

கோவைத் தொழிலாளியின் கடிதம்!

 

கவிஞர் தமிழ் ஒளி

 

[  புதுவையை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆண்டுகொண்டிருந்த போது 1936 ஆண்டு ஜூலை மாதம் பஞ்சாலைத் தொழிலாளர்களும் இதரர்களும் வேலை நேரத்தை எட்டு மணி நேரமாகக் குறைக்கும் படியும் , உழைப்புக் கேற்ற ஊதியம் கேட்டும் போராடினர்.

 

ஜூலை 30 ஆம் நாள் போராட்டக்காரர்கள் மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் போலிஸ் படையை ஏவி தாக்குதல் தொடுத்தது .துப்பாக்கிச் சூடு நடத்தியது . 12 தொழிலாளர்கள் உயிர்பலியாகினர் .

 

 

அதே புதுச்சேரியில் சிலர் தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகம் விளைக்க எட்டப்பர் ஆகியதும் வரலாறு .இது கண்டு கொதித்து எழுந்து கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதை .

 

ஆண்டு தோறும் இந்நாள் தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது . 1949 ஆம் ஆண்டு ”முன்னணி” ஏட்டில் கவிஞர் தமிழ் ஒளி எழுதிய கவிதை பிரசுரமானது . அன்றைய அரசியல் சூழலோடு இணைந்த இக்கவிதை வரலாற்றை நமக்கு நினைவூட்டுகிறது .தொழிலாளி வர்க்க உணர்வு ஊட்டுகிறது .]

 

தோழனே, 1936 ஜீலையில் -

 

கார் கடலும் வாயடங்க, காற்றும் விசை குறைய

ஊர் முழுதும் உன்னுடைய உத்வேகப் போராட்டம்!

 

அன்று,

 

சங்காரம் செய்திடுவேன்என்றெழுந்த சர்க்காரை

சிங்கப் படைபோலே சீறி யெதிர்த்தடித்து

ரத்தப் புனல்சிந்தி நாளெல்லாம் போர்செய்தாய்

யுத்தக் கடைசியிலே உன்னுடைய வெற்றியொலி!

 

உனது தியாகத்தால்,

 

பெற்ற உரிமையின்று பேடிகளின் சூழ்ச்சியினால்

குற்றுயிராய்ப் போகும் கொடிய நிலைகண்டு

நெஞ்சு கொதித்து நிலைகுலைந்து சோகித்தாய்!

அஞ்சாத உள்ளம் அயர்வில் விழலாமோ?

 

நாங்கள்,

 

முப்பதுநாள் முப்பதுநாள் முப்பதுநாள் போர் தொடுத்தோம்!

அப்பன் இறந்தான்; அமுதனைய தாய் மடிந்தாள்!

கன்னத்தில் பாலூறும் தேனூறும் கைக்குழந்தை

தன்னைக் கொலை செய்தார் தாயின் விழி முன்னே!

 

அன்றைக்கு,

 

எங்கள் குடிசைகளில் எமன் கூத்து! சாக்காடு!

வெங்குருதி வெள்ளம்! மரண வெடியோசை!

சூழ்ந்த இருளில், தியாகச் சுடர் எடுத்தோம்!

சூழ்ந்த இருள் தன்னைச் சுட்டெரித்தோம் தியாகத்தால்!

சங்கம் அளித்திருந்த சாகாத ஒற்றுமையால்

அங்கத்தில் ஊற்றெடுத்த ஆற்றல் பெருக்கால்

குடிசைகளைக் கோட்டைகளாய்க் கொத்தளமாய் மாற்றி

ஒடித்தோம் பகையெலும்பை! உண்மைப் புகழ் பெற்றோம்!

 

எனினும்,

 

தோல்வியெனும் பள்ளத்தைத் தோண்டி வைத்தார், வஞ்சகர்க்கு

வால்பிடித்துப் போட்டி வளர்க்கின்ற பாதகர்கள்!

 

அதனால்

 

எண்ணற்ற துன்பங்கள் இன்னும் தொடர்ந்தனவே!

கண்ணீர் உலரவில்லை! காயங்கள் ஆறவில்லை!

ரத்தம் சொரிந்த உடல் இன்னும்நல மாகவில்லை!

முத்தம் பொழிந்து, முதுமையென்றால் வேண்டாத

கசப்பாய் வெறுக்கவைத்த காதல் மனைவி

தசைகிழித்த குண்டு தாக்குதலால் மண்சுவர்கள்

வாய்பிளந்து நின்ற வடுவின்னும் மாறவில்லை!

வாய்விட்டுச் சொல்லாத சோகவடிவம் இவை!

 

இத்தனையும்,

 

கண்டு மலைத்தோமா? கையலுத்துப் போனோமா?

பண்டுதொட்டுப் பாட்டாளி வர்க்கப் படையெதுவும்

தோல்விப் படுகுழியில் தூர்ந்தொழிந்து போனதுண்டோ?

கால் தடுக்கி நின்றதுண்டோ? காரியத்தில் தாழ்ந்ததுண்டோ?

குகைக்குள் அகப்பட்ட கோவை முதலாளி

தொகையாக எம்மைத் தொலைக்கஆள்குறைப்பு

வேலைப்பளுவென்று வேட்டுக் கிளப்புகிறான்!

ஆலைக் கரும்பெனஎம் அங்கம் பிழிகின்றான்!

 

அவன் தலைக்கு மேல்,

 

வெடித்துவிட்ட பாறை விழுந்தருணம்! மற்றோர்

அடியெடுத்து வைக்குமுனம் ஆள்நிலைமை என்னாமோ?

புதுவை முதலாளி போக்கிவிட்ட தூதர்

எதுகண்டு போய்ச் சொல்ல இங்கு வருகின்றார்!

சாவோலை கொண்டு செல்ல தந்தி, தபால் உண்டு!

பாவோலை தீட்டுதற்குப் பத்திரிகை பக்கமுண்டு!

பின்னர் எதற்கந்தப் பேதையர்கள் இங்குற்றார்?

தின்னும் புலையெச்சில் சோற்றுக் கடன்தீர்க்கும்

நன்றியெண்ணி வந்தனரோ நாய்போன்ற தன்மையினால்?

 

நன்று நன்று தூதுவரே! நாமுரைத்தல் கேளுங்காண்;

யாருக்கு நீங்கள் பிரதிநிதி? அஃதன்றி

யாருக்கு நீங்கள் அமைத்திட்ட சங்கங்கள்?

போட்டியிடச் சங்கம் வைத்தால் பொல்லா எமதூதன்

போட்டியிடும் வழக்கம் பூதலத்தில் உண்டன்றோ!

 

இந்த சரித்திரம் தெரியாதா?

 

நீங்கள் படித்ததெல்லாம் சோற்று நிகண்டுகளும்

வாங்குகின்ற லஞ்சம் வளர்க்கும் சரித்திரமும்

 

அதுவுமன்றி,

 

தேசீயக் காங்கிரஸூம் சோஷலிச தீரர்களும்

பேசியதைக் கேட்டும் பெரியகுபேர்துரையின்

செல்வாக்கைக் கண்டும், சிரத்திற்கு மேல்தொங்கும்

கல்பாறை தன்னைக் கவனிக்க நேரமின்றி

ஆடைகுலைய அவசரமாய் ஓடிவந்தீர்!

பாடைகுலையாதோ? பாவி அவன் மாளானோ?’

என்ற அமங்கலச் சொல் எங்கும் ஒலிக்குங்கால்

நின்றுதான் வந்தீரா? நேர்வதையார் கண்டார்கள்?

வந்த வழிபார்த்துச் செல்லுங்காண்! வையத்தில்

எந்த மனிதர்க்கும் துன்பம்வரில் இப்படித்தான்!”

 

புதுவைப் பாட்டாளி வர்க்கமே!

 

உன்னுடைய கைகளிலே எஃகின் உரமுண்டு!

மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு!

சோஷலிசம் பேசிச் சுரண்டலுக்குக் கால்பிடிப்போர்

வேஷங் கிழித்தெறியும் வீரமுண்டு; வன்மையுண்டு!

அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக!

இன்றைக்கே போர் முரசம் எண்டிசையும் கேட்கட்டும்!

 

நாங்கள்,

 

இங்கு வருகின்ற எண்ணற்ற தாக்குதலை

சங்காரம் செய்வோம்! ‘ஜயங்கொண்டார்

 

ஆகிடுவோம்!ஆகையால் நீ தளர்வுறாதே

 

முன்கை எடுத்திடுவாய்! முன்னேறித் தாக்கிடுவாய்!

நின் பெருமை வாழ்க! நிலைபெறுக சோஷலிசம்!

 

முன்னணி– 1949