பிளாஸ்டிக் குப்பைகளும் … கம்ப்யூட்டர் சவால்களும் ..

Posted by அகத்தீ Labels:

போகி கொண்டாட மட்டுமா ? கொஞ்சம் யோசிக்கவும் செய்யுங்களேன்… “டிஜிட்டல் உலகம்” எனக் கேட்பதும், செயல்படுவதும் இனிதுதான். ஆனால் அது தள்ளும் குப்பை பற்றி நம்மில் எத்தனை பேர் கவலைப்படுகிறோம்?

பிளாஸ்டிக் குப்பைகளும் … கம்ப்யூட்டர் சவால்களும் .. சு.பொ.அகத்தியலிங்கம் நெகிழி, கணினி என தூய தமிழில் எழுதவே விருப்பம். ஆயினும் மக்களிடம் பெரிதும் புழங்கிவிட்ட பெயர்ச் சொற்களை அப்படியே பயன்படுத்தல் பிழை இல்லை. தேவையும்கூட. பொறுத்தருள்க! பஸ்சில் ரயிலில் பயணிக்கும் போது பார்வையை ஜன்னல் வழியே வீசினால் வழிநெடுக ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைத் திட்டுகளை தீவுகளைப் பார்க்கலாம் ; சுற்றிலும் வழிந்தோடும் சாக்கடையும் மொய்த்து அப்பும் கொசுவும் நம்மை உறுத்தும் . “பூமித்தாய் /முதுமை எய்துவிட்டாளோ! /தேசமெங்கும்/ பிளாஸ்டிக் பைகள்” எனக் கவலைப்படுகிறார் கவிஞர் தமிழ்தாசன். அதைவிட்டால் ரியல் எஸ்டேட் மனை ஒதுக்கீடுகள் பச்சை வயல்களின் கல்லறையாகக் காட்சி தரும் . பசுமை விரைவாய் நம்மிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கிறது . லாபவெறியில் நாம் எங்கே போகிறோம்? சரி! உலகம் நேரான பாதையில் போகிறது; நாம் மட்டும் குறுக்குப் பாதையில் போகிறோமா என்று யோசித்தால்;அப்படி ஒன்றுமில்லை தீமை பயக்கும் பாதையில் பயணிப்பதில்தான் ‘உலகத்தோடு ஒட்டஒழுகுகிறோம்’. உலகமே பிளாஸ்டிக் குப்பைகளின் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகள் பசிபிக் பெருங்கடலில் குப்பைத் தீவாக உருவெடுத்துள்ளது. ஹவாய் தீவுகள் முதல் ஜப்பான் வரை இந்த குப்பைத் தீவு உருவாகியுள்ளது. கடலில் ஏற்படும் சுழல் நீரோட்டத்தின் காரணமாக பிளாஸ்டிக் குப்பைகள் திரண்டு உருவான இக்குப்பை தீவு அமெரிக்க நாட்டை விட இரு மடங்கு பெரியது! இத்தீவு நீர் மட்டத்திற்கு கீழ் இருக்கிறதாம். உலகமே பெரும் குப்பைத் தீவாக இன்னும் 100 ஆண்டுகளில் மாறிவிடும் அபாயத்தை இந்தத் தீவு சொல்கிறது. இப்படி ஒரு கட்டுரையில் வேதனைப்படுகிறார் சுப்ர பாரதிமணியன் . மொத்தப் பெட்ரோலியத்தில் 5 விழுக்காடு பிளாஸ்டிக் உற்பத்திக்காகப் பயன்படுகிறது. உலக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் முதல் பத்து இடங்களில் இந்தியாவும் உள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் பெரிய தொழிலாக முன்னணியில் நிற்கிறது பிளாஸ்டிக் தொழில். “பெண்சிசு கொலையைப் போல மன்னிக்க இயலா பெரிய குற்றம் மண்சிசு கொலை” என கவிஞர் குமுறுவது நியாயமே! தற்போது பிளாஸ்டிக் தடை பற்றி அரசு உரக்கப் பேசுகிறது .ஆனால் அது மிகவும் மேலோட்டமானது . பிளாஸ்டிக் பைகளை தடை செய்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்கிற மாயத் தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் பை தடைக்கு நாம் எதிரி அல்ல .சிறு வியாபாரிகளின் மீது பாயும் அரசு ,பெரும் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொதி பற்றி வாய் திறப்பதில்லை. ஏன்? பிளாஸ்டிக் பை பற்றி வாய்கிழியப் பேசும் , கட்டுரை எழுதும் பலர் மின்னணுக் குப்பை (இ வேஸ்ட்) பற்றி வாயையே திறப்பதில்லை. ஏன்? உபயோகப்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், செல்போன், டிவி உள்ளிட்டவை மின்னணுக் குப்பையாகும். உலகெங்கும் சுமார் 4.5 கோடி டன் மின்னணுக் குப்பைகள் ஆண்டுதோறும் குவிகின்றன. இதில் 70 சதம் இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. மின்னணு குப்பைகளை கையாளுவதில் இந்தியா 178 நாடுகளில் 155 வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது .இதனால் சுகாதார நிலையில் 127 வது இடத்துக்கும், காற்று மாசில் 174 வது இடத்துக்கும், தண்ணீர் மாசுபடுவதில் 124 வது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது. மின்னணுக் குப்பைகளைக் கிளறி தரம் பிரிக்கும் வேலையில் இந்தியாவில் மட்டும் 14 வயதுக்கு உட்பட்ட 4.5 லடசம் குழந்தைக் தொழிலாளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்க்கைத் தரமும் நோய்களும் சொல்லும் தரமன்று. இந்தியாவில் பெங்களூரு, மும்பை, தில்லி, சென்னை, பூனா, கொல்கத்தா, சூரத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மின்னணு குப்பைகளின் தலைநகராகத் திகழ்கின்றன என்கிறது மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை. 2012ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8 லட்சம் டன் மின்னணுக் குப்பைகள் குவிந்துள்ளன. இது உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. இன்னும் பல மடங்கு குவிந்துள்ளதே மெய்.பெங்களூருவில் ஒவ்வோர் ஆண்டும் 20 ஆயிரம் டன் மின்னணுக் குப்பை சேர்ந்துவருவதாக அசோசெம் அமைப்பு தெரிவிக்கிறது. இந்திய அளவில் மின்ன ணுக் குப்பைகள் உருவாக்கத்தில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இவை எல்லாம் பழைய கணக்கு இப்போது இது இரட்டிப்பாகிவிட்டதே மெய். சென்னையில் ஒவ்வொரு நாளும் சேரும் மின்னணுக் குப்பைகளில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை பழைய கம்ப்யூட்டர்கள்.தமிழகத்தில் மட்டும் 2011ம் ஆண்டு கணக்கின்படி, 28,789 டன் மின் குப்பைகள் சேர்ந்துள்ளது. இதில் 60 சதவீதம் பழுதடைந்த கம்ப்யூட்டர் கழிவுகள்தானாம். சென்னை சுற்றுப் பகுதிகளில் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 பெரிய நிறுவனங்களும், 100 சிறு, குறு தொழில் நிறுவனங்களும் உள்ளன.இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 789 டன் மின்கழிவுகள் உருவாகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் நிலைமை சீரடையவில்லை. மேலும் மேலும் மோசமடைந்துள்ளது. அரசு கணக்குகூட சொல்வதில்லை. இவற்றை முறையான மறுசுழற்சி மூலம் அகற்றினால் மட்டுமே மக்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சென்னையில் அங்கீ காரம் பெற்ற மறுசுழற்சி மையங்கள் வெறும் 18 மட்டுமே உள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு பின்னும் இன்றும் இதே நிலைதான். அதிலும் சென்னை மாநகராட்சி அந்நிறுவனங்களுக்கு சரியான ஒத்துழைப்பு தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதற்கு காரணம், இந்த மின்கழிவுகளை அகற்றுவதில் பிளாஸ்டிக் குப்பைத் தொழிலில் ஈடுபடுவோர் சிறு முதலீட்டில் தொழில் செய்வோராக உள்ளதுதான். இவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உதிரி பாகங்களை பிரித்தெடுத்துவிட்டு, மற்றவைகளை இரவு நேரங்களில் ஒதுக்குப்புறங்களில் வைத்து எரித்துவிடுகின்றனர். இவ்வாறு மின்கழிவுகளை எரிக்கும் போது வெளியாகும் டயாக்சின் என்ற அமிலம் பொதுமக்களுக்கு சுவாச நோய்களை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஒவ்வாமையால் ஏற்படும் தோல் நோயும் வேகமாகப் பரவுகிறது. மேலும் காரீயம், குரோமியம் 6, பெரிலியம், கேட்மியம் உள்ளிட்ட பல வேதிப்பொருட்கள் வெளிப்படுகிறது. இதனால் உடல் உறுப்புகள் மட்டுமின்றி டிஎன்ஏ மூலக்கூறுகளும் பாதிக்கப்படும் அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையை பொறுத்தவரை ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு வேளைகளில் இதுபோன்ற மின்கழிவுகளை எரிப்பதாக கூறப்படுகிறது. இங்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் ஊராட்சி பகுதிகளில் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் பிளாஸ்டிக் குப்பை தொழிலில் ஈடுபடுவோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மின்கழிவுகளில் 5 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்கள் கடும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்று மாசுகட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது. மின்னணு குப்பைகளை மறு சுழற்சி செய்ய அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளில் தொழில்நுட்பங்கள் உள்ளன. அதேநேரம், 10 சதவீதம் மட்டுமே முறையாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. எஞ்சியவை இந்தியா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் பெங்களூரு, தில்லி ஆகிய நகரங்களில் மட்டுமே மின்னணுக் குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதிகள் ஒரளவு உள்ளது. அதுவும் யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே உள்ளது. எனவே சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழக அரசு மற்றும் மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அந்த பெரும் சவாலைக் கண்டு கொள்ளாமல் வெறுமே பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை என சொல்லிவிட்டு தன் தார்மீகப் பொறுப்பைக் கைகழுவுகிறது. இந்தியாவில் தூக்கியெறியப்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 500 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அசோசெம் தெரிவித்துள்ளது. தமிழகமும் அதில் பெரும் பங்கு வகிக்கும் .இந்த உண்மை தமிழக அரசுக்கு உறுத்தவே இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம் . “டிஜிட்டல் உலகம்” எனக் கேட்பதும், செயல்படுவதும் இனிதுதான். ஆனால் அது தள்ளும் குப்பை பற்றி நம்மில் எத்தனை பேர் கவலைப்படுகிறோம்? “மூச்சு திணறுதப்பா பூமிக்குஅவள்முந்தியில்பிறந்த சந்ததிகள் நாமொரு முடிவெடுக்க வேண்டாமா?” நன்றி : வண்ணக்கதிர் ,தீக்கதிர் , 13/01/2019.

0 comments :

Post a Comment