சொல்.61

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .61 [ 30 /10/2018 ]

அவர்  ‘GENTLE MEN’  ‘ஜெண்டில் மேன்’ என சிலரைப் பற்றிச் சொல்கிறோம் .அடுத்து கொடுக்கும் விளக்கம் நம் தலையைச் சுற்ற வைக்கும்.  “அவர் எந்த வம்பு தும்புக்கும் போகமாட்டார் .” அதோடு நின்றாலாவது பரவாயில்லை . அதற்கும் மேலே சென்று சொல்வர்  “தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார் .” ஆக சுற்றி என்ன நடக்குது என்கிற அக்கறையின்றி தன்னைப் பற்றி மட்டுமே யோசிப்பவர் எப்படி ஜெண்டில் மேன் ஆக முடியும் ?

ஆங்கிலத்தில் அதனை புரிந்து கொள்வதற்கும் நடப்பில் நாம் புரிந்து கொள்வதற்குமே வேறுபாடுண்டு . அடுத்தவர் விஜயத்தில் தேவையற்று மூக்கை நுழைக்காமல் ; சொன்ன சொல்லைக் காப்பாற்றி ,ரெச்பான்சிபில் சிட்டிஜனாக பொறுப்பான குடிமகனாக இருப்பதையே ஜெண்டில் மேன் என  வெளிநாட்டவர் அர்த்தப்படுத்துவர். இங்கு தலைகீழாக உள்ளது . என்ன செய்வது ?

யாரும் நம்மை எதுவும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக , எல்லோரிடமும் நல்ல பிள்ளையாய் பேர் வாங்க வேண்டும் என்பதற்காக , எதையும் கண்டும் காணாமல் நழுவுகிற மனிதராக  ‘ஜெண்டில் மேனாக’ வாழ்வதைவிட கேவலம் வேறெதுவும் இல்லை . நடுநிலை என்பதெல்லாம் சுத்த ஏமாற்று ! நீங்கள் எந்தப் பக்கம் என்பதே வரலாறு நெடுகக் கேள்வி!

இங்கு தேவை நாம் புரிந்து கொண்டிருக்கிற ஜெண்டில் மேன்கள் அல்ல .சமூகத்தில் நடக்கும் அநீதிகள் ,அக்கிரமங்கள் கண்டு பொங்குகிற மனிதரே , சாதி மத வேறுபாடின்றி , ஆண் பெண் வேறுபாடின்றி சக மனிதரை நேசிக்கிற ,மதிக்கிற மனிதரே , நமக்குத் தேவை . இவரை கலகக்காரர் ,புரட்சிக்காரர் ,முற்போக்காளர் ,பிழைக்கத் தெரியாதவர் , என எப்படி வேண்டுமானலும் அழையுங்கள் .ஆனால் அவரே நமக்குத் தேவை .

காந்தி பொம்மை அல்ல நமக்குத் தேவை . அநீதிக்கு எதிராய் உரக்கப் பேசுகிற - கூர்ந்து கேட்கிற – நெருப்பாய் விழிக்கிற மனிதரா , இல்லை ‘ஜெண்டில் மேனா ” நீங்கள் யார் ? முடிவு செய்து விடுங்கள் !!!
Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment