சொல்.59

Posted by அகத்தீ Labels:




தினம் ஒரு சொல் .59[ 28 /10/2018 ]

நாம் தெருவில் அல்லது அடுக்ககத்தில் இருக்கும் சிலரோடு ஓட்டிக் கொண்டே இருப்போம் . சிலரோடு மறந்தும் சிரிக்கவோ பேசவோகூட மாட்டோம் . நட்பு அல்லது பகை என இரண்டே நிலைகளில்தான் பொதுவாக நம் பழக்கம் இருக்கிறது .அலுவலகத்திலும் /பணியிடத்திலும் அப்படித்தான். சில காலம் நகமும் சதையுமாய் சேர்ந்தே இருந்தோர் பின்னர் எதிரும் புதிருமாய் நிற்பதும் , முகங் கொடுக்கவே தயங்குவதும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்திருக்கும்.

நட்பு ,பகை என இரண்டைத் தவிர வேறுவகையான நிலை இருக்கவே முடியாதா ? ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் கோப தாபத்தில் பிரிந்தவர் பிரிந்தேதான் இருக்க வேண்டுமா ?காலம் எவ்வளவோ காயங்களை ஆற்றிவிடும் ; நாமே கடந்த காலத்தை யோசித்துப் பார்த்தால் நம் தவறுகள் உறைக்கும் ;இதற்காகவா பிரிந்தோம் என நாமே வருந்துவோம் .ஆனாலும் வீம்பும் ,ஈகோவும் ஒப்புக் கொள்ளவோ மீண்டும் சேரவோ தடையாகிவிடும் .எத்தனை நட்பை இப்படி இழந்திருப்போம் ?

நட்பில் உரசல் ஏற்பட்டால் உடனடியாக எதிர்நிலைக்குப் போகாமல் கொஞ்சம் விலகி இடைவெளி விட்டு இருக்கலாமே ! பகை நிலை எடுக்க வேண்டாமே ! கறுப்பு ,வெள்ளை இரண்டுக்கும் இடையில் எத்தனை நிற அடுக்குகள் . மனித உறவிலும் ஏன் இருக்கக்கூடாது ?தோழர் ,நண்பர் ,தெரிந்தவர் ,பழகியவர் , அண்டை வீட்டார் ,தெருக்காரர் ,ஊர்க்காரர், உறவுக்காரர் இன்னும் விதவிதமாய் உறவிருக்கலாமே .

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியரை ஒரு முறை ரயிலில் சந்தித்தேன் .இருவரும் உடன் இருந்தவரை எனக்கு அறிமுகம் செய்தனர் .அவர் அப்பெண்ணின் முன்னாள் காதலன் . மிக உயர்ந்த தளத்தில் உள்ள அந்தப் பண்பாடு என்னை வியக்க வைத்தது  . ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்பதால் பகைவராகத்தான் கருத வேண்டுமா என்ன ? நாம் இன்னும் வளர வேண்டியிருக்கிறது .

வியாபாரக் கூட்டாளியோ ,அரசியல் தோழரோ  தடம் மாறும் போது வலி அதிகம்தான் . மனித உறவைப் பேணிக்கொண்டே கொள்கைச் சண்டை நடத்துவதோ வியாபார போட்டியில் இறங்குவதோ இயலாததா என்ன ?

ஆம் .கறுப்பு ,வெள்ளை மட்டுமல்ல இடையில் பல வண்ணபேதம் இருக்கலாம் பிழையே இல்லை !!!
 Su Po Agathiyalingam




























































































0 comments :

Post a Comment